You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ்': மதுரையில் மாமியார் - மருமகள் இடையே என்ன நடந்தது?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
"இதோ, நான் உயிரோடு உங்கள் கண் முன் நிற்கிறேன். ஆனால், நான் இறந்துவிட்டதாகக் கூறி எனது மருமகள் போலியான ஆவணங்கள் மூலம் வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலரும் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்" எனக் கூறுகிறார் 62 வயதான மூதாட்டி முத்துப்பிள்ளை.
மதுரை, சிக்கந்தர் சாவடி முனியாண்டி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பிள்ளை. இவர் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு ஒன்றை அளித்திருந்தார்.
அதில், 'உயிரோடு இருக்கும் தன்னை இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.
பின்னணி என்ன?
பிபிசி தமிழிடம் பேசிய முத்துப்பிள்ளை, "எனது கணவர் சின்னசாமி கடந்த 2017-ஆம் ஆண்டு உயிரிழந்தார். எனக்கு ராமசாமி, பெருமாள் என இரண்டு மகன்கள். இதில் பெருமாள் கடந்த மார்ச் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கும் அவரது மனைவி சுந்தரிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது" என்கிறார்.
"இந்த சுந்தரி என்பவர்தான் நான் இறந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, எனது மகன் பெருமாளுக்கு தாய், தந்தை இல்லை எனவே தான் தான் வாரிசு என வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். போலி இறப்புச் சான்றிதழையும் அவர் சமர்ப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்திற்கு கோவில் பாப்பாகுடி கிராம நிர்வாக அலுவலரும் முறையாக விசாரிக்காமல் ஒப்புதல் அளித்துள்ளார்."
"நான் இறந்துவிட்டேன் என 6 பேர் சாட்சியமும் அளித்துள்ளனர். எனது மகன் பெருமாள் பெயரில் உள்ள நகைகள் மற்றும் நிலத்தை அபகரிக்கவே இந்த மோசடி நடந்துள்ளது" என்கிறார் அவர்.
இது தொடர்பாக பேசிய முத்துப்பிள்ளையின் மூத்த மகன் ராமசாமி, "எனது தம்பி பெருமாள் பெயரில் 7 சவரன் நகைகள் வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. அதை மீட்பதற்காக என் அம்மா வங்கியை அணுகியபோது, அவர் இறந்துவிட்டதாக சுந்தரி என்பவர் வங்கியில் தெரிவித்துள்ளார் என வங்கி அதிகாரிகள் கூறினார்கள். இது அம்மாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது" என்கிறார்.
அதன் பிறகு தான் கிராம நிர்வாக அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு தங்களுக்கு கிடைத்ததாக அவர் கூறினார்.
"2017இல் எனது அப்பா இறந்தபோது, அவருக்கு இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் பெற பல நாட்கள் அலைந்தேன். ஆனால், இங்கு உயிரோடு இருக்கும் என் அம்மா இறந்துவிட்டார் என்று வாரிசுச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கப்பட்டு, அதற்கு கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதலும் அளிக்கப்பட்டுள்ளது." என்கிறார் ராமசாமி.
கோவில் பாப்பாக்குடி கிராம நிர்வாக அலுவலர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், முத்துப்பிள்ளையின் மகன் பெருமாளுக்கு நான்கு வாரிசுகள் என்றும் அதில், அவரது தாய் தந்தையான முத்துப்பிள்ளை- சின்னசாமி ஆகியோர் இறந்துவிட்டனர் என்றும், பெருமாளின் மனைவி சுந்தரி மற்றும் ஒரு மகன் ஆகிய வாரிசுகள் உயிரோடு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மகன் 11 வயது சிறுவன் என்பதால், சுந்தரி தான் பெருமாளின் வாரிசு என்ற அடிப்படையில் அவர் வாரிசு சான்று கோரி வட்டாட்சியருக்கு விண்ணப்பித்துள்ளார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு 6 பேரின் சாட்சியங்கள் பெறப்பட்டு, கிராம நிர்வாக அலுவலர் அந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
"இந்த அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் முறையிட்டோம், ஆனால் 'முத்துப்பிள்ளை இறந்துவிட்டதாக உங்கள் ஊர்க்காரர்கள்தான் சாட்சியம் அளித்துள்ளார்கள். இதில் எங்கள் தவறு ஏதும் இல்லை எனக் கூறினார்" என்கிறார் ராமசாமி.
இது தொடர்பாக கோவில் பாப்பாக்குடி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. ஆனால், அவர் பதிலளிக்கவில்லை.
கோவில் பாப்பாக்குடி கிராம உதவியாளர் (தலையாரி) மதிவாணன் பிபிசி தமிழிடம் அளித்த விளக்கத்தில், "சுந்தரி அளித்த ஆவணங்களின் அடிப்படையில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. விண்ணப்பத்தில் சுந்தரியின் ஆதார் கார்டு இணைக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் கள ஆய்வும் செய்யப்பட்டது" என்றார்.
"சுந்தரி வழங்கிய தகவல்கள் தவறானவை என கண்டறியப்பட்டதும், அவரின் மீது அலங்காநல்லூர் காவல்நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் சார்பாக புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றும் அவர் கூறினார்.
ஆனால், "கிராம நிர்வாக அலுவலர் முறையாக கள ஆய்வு நடத்தாமல் சுந்தரியின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். அப்படியென்றால் உயிரோடு இருக்கும் ஒரு நபர் இறந்துவிட்டார் என யார் வேண்டுமானாலும் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து சான்றிதழ் பெற முடியுமா? எனவே கிராம நிர்வாக அலுவலர் மீதும் விசாரணை நடத்த வேண்டும். இதைத் தான் மதுரை மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கையாக வைத்துள்ளோம்" என்கிறார் முத்துப்பிள்ளை.
இது தொடர்பாக விளக்கமளித்த மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், "முத்துப்பிள்ளை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது" என்று தெரிவித்துள்ளது.
வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி?
தமிழ்நாட்டில் வாரிசு சான்றிதழை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு வழிகளிலும் பெறலாம். இதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.
- இறப்புச் சான்றிதழ்
- விண்ணப்பதாரரின் ஆதார் அட்டை / அடையாளச் சான்று
- முகவரிச் சான்று
- குடும்ப அட்டை
- அனைத்து வாரிசுகளின் ஆதார் அட்டைகள்
- சுய உறுதிமொழிப் பத்திரம்
- உறவு முறை சான்று (திருமணச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்றவை)
இதுகுறித்து பிபிசியிடம் விளக்கிய ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சுப்பிரமணியம், ''முன்பு படிவம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதில் எந்த வாரிசின் பெயரும் விடுபட்டுவிடக்கூடாது. அவர்களின் பெயர், வயது, ஆதார் எண் ஆகியவற்றுடன், இறந்தவருக்கு வேறு மனைவி, குழந்தைகள் இல்லை என்பதற்கான உத்தரவாதக் கடிதம் ஆகியவற்றையும் இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும். அதை கிராம நிர்வாக அலுவலருக்கு வட்டாட்சியர் அனுப்புவார்."
"கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் நேரில் களஆய்வு செய்து, துணை வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்புவர். அவர் அதைப் பரிசீலிப்பார். இறுதியில் வட்டாட்சியர் அந்த வாரிசு சான்றிதழை வழங்குவார். இப்போது ஆன்லைன் முறையில் சில மாற்றங்கள் வந்துள்ளன.'' என்றார்.
''சில விண்ணப்பங்களில் வாரிசுகள் வெளியூரில் இருப்பதாகத் தெரிந்தாலும், வேறு மனைவிகள் இருப்பதாக களஆய்வில் தெரியவந்தாலும், தகவல்களை உறுதிப்படுத்த இயலாததால் நீதிமன்றத்தை அணுகி, வாரிசு சான்றிதழ் பெற்றுக்கொள்ளவும் என்று நிராகரித்து விடுவோம். அதை வைத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து வாரிசு சான்றிதழ் தர நீதிமன்றம் உத்தரவிட்டால் அந்த சான்று வழங்கப்படும்.'' என்றார் சுப்பிரமணியம்.
''இப்போது ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் போதே, வாரிசுதாரர்கள் குறித்து அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். அத்துடன் அதில் ஒரு பிரமாணப்பத்திரம் இருக்கும். அதில் 'நாங்கள் தந்துள்ள தகவல் அனைத்தும் உண்மை என்றும், அதில் ஏதாவது சட்டச்சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தாங்களே பொறுப்பு' என்றும் கையெழுத்திட்டு அதையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இ சேவை மையம் மூலமாக ஆன்லைனில் அனுப்பும் விண்ணப்பம் நேரடியாக கிராம நிர்வாக அலுவலருக்கே சென்று, அவர் களஆய்வு செய்வார்.'' என்றார்.
''அதன்பின்பு வருவாய் ஆய்வாளர் களஆய்வு செய்து இருவரும் பரிந்துரையை துணை வட்டாட்சியருக்கு அனுப்புவார்கள். அவர் அதைப் பரிசீலித்த பின்பு, வட்டாட்சியரால் வாரிசு சான்றிதழ் வழங்கப்படும். மனைவி, குழந்தை இல்லாதவர்களுக்கு இரண்டாம் நிலை வாரிசுகள் விண்ணப்பிக்கும்போதும், இரண்டாவது மனைவி, மூன்றாவது மனைவி விண்ணப்பிக்கும்போதும் அவை பற்றிய தகவல்களை உறுதி செய்ய இயலாதபட்சத்தில் அதை நிராகரித்து விடுவோம். அதை வைத்து அவர்கள் நீதிமன்றத்தை அணுகுவர்.'' என்றார் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் சுப்பிரமணியம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு