அம்மாவை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றிய நபரை தேடி நாடு கடந்து சென்ற மகன் - கண்டுபிடித்தது என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"அவர்கள் அவ்வளவு நுட்பமானவர்களாக இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் அவ்வளவு புத்திசாலிகளாக இருப்பார்கள் என்றும் நினைக்கவில்லை... அது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது".

தனது தாயைக் காதல் மோசடியில் குறிவைத்த நபரைத் தேடி கார்லோஸ் பாராகன் நைஜீரியா சென்றபோது, திறமையான மோசடியாளரை எதிர்கொள்ள போகிறோம் என்றே அவர் எதிர்பார்த்தார்.

அவரது தாயை ஏமாற்றிய மின்னஞ்சல்கள், அந்த நபர் கூறியபடி சிரியாவில் இருந்த அமெரிக்க ராணுவ வீரரிடமிருந்து வரவில்லை என்றும், நைஜீரியாவில் இருந்து வந்ததாகவும் ஒரு ஐபி முகவரி மூலம் தெரியவந்திருந்தது.

ஆனால், ஒரு திறமையான குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்குப் பதிலாக, நைஜீரியாவின் 'யாஹூ பாய்ஸ்' குறித்து புரிந்துகொள்ளும் நான்கு ஆண்டுகால பயணத்தில் கார்லோஸ் ஈடுபட்டார்.

கல்வி வாய்ப்புகள் குறைவாகவும், பணமின்றியும், வாழ்க்கையில் அதிக வாய்ப்புகள் இல்லாமலும் இருக்கும் இளம் மோசடியாளர்கள்தான் பெரும்பாலும் 'யாஹூ பாய்ஸ்' என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த அனுபவம், தனது தாயைக் குறிவைத்த நபர் குறித்த கார்லோஸின் முன்முடிவுகளை மட்டுமல்லாமல், நவீன உலகில் தனிமை ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அவரைச் சிந்திக்க வைத்தது.

பிரையனுடனான உறவு

கார்லோஸ் தனது தாயை வலிமையான, சுதந்திரமான பெண்ணாக விவரிக்கிறார். பல் மருத்துவம் படித்திருந்த அவர், சொந்தமாக பல் மருத்துவமனை நடத்தி வந்தார். அதனால், அவர் மோசடிக்கு இரையாகியிருப்பார் என்று யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

ஆனால், அவர் ஒரு மோசடிக்காரரிடம் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கத் தொடங்கியபோது, கார்லோஸும் அவரது சகோதரர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

அவரது புதிய காதல் துணையான "பிரையனுக்கு" அவர் அனுப்பிய மின்னஞ்சல், அவர் ஏன் அந்த மோசடிக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருந்தார் என்பதற்கான ஒரு காரணத்தை வெளிப்படுத்தியது.

"நான் முதலில் என் அம்மாவையும், பின்னர் என் தங்கையையும் கவனித்துக்கொண்டேன். அதன்பிறகு என் கணவரையும், குழந்தைகளையும் கவனித்துக்கொண்டேன். என் வாழ்நாள் முழுவதும் மற்றவர்களை கவனித்துக்கொண்டே இருந்தேன். இப்போது என்னை கவனித்துக்கொள்ளக்கூடிய ஒருவரை நான் விரும்புகிறேன்" எனக் கூறியது அச்செய்தி.

சில மாதங்களுக்கு முன்பு, விவாகரத்து பெற்ற தனது தாய் தனிமையில் இருப்பதை கார்லோஸ் கவனித்திருந்தார். அதனால், அவர் டிண்டர் செயலியில் சேருமாறு தனது தாயை ஊக்குவித்தார்.

விரைவிலேயே, சிரியாவில் பணியில் இருப்பதாகக் கூறிய, 50 வயதுகளின் நடுப்பகுதியில் இருந்த அமெரிக்கரான பிரையனுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.

ராணுவத்தில் பணியாற்றிய கார்லோஸின் மூத்த சகோதரர் இதுகுறித்து உடனடியாக சந்தேகமடைந்தார்.

"அவர் பேசுவது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. அம்மா, இது அநேகமாக ஒரு மோசடியாகத்தான் இருக்கும்" என்று அவர் கூறினார்.

அதன்பிறகு, அவரிடம் அந்த உறவு குறித்து பேசுவதை நிறுத்திக்கொண்டார். இருப்பினும், அவ்வப்போது பிரையன் அனுப்பிய மின்னஞ்சல்களை கார்லோஸிடம் அவரது தாய் காட்டியுள்ளார்.

அந்த மின்னஞ்சல்களில் காதலும், உணர்ச்சிப் பெருக்கும் நிறைந்திருந்தன. இருவரும் ஒன்றாக இருப்பதற்காக ஸ்பெயினுக்குக் குடிபெயரப் போவதாக பிரையன் விரைவிலேயே பேசத் தொடங்கினார். இது கார்லோஸின் தாயையே ஆச்சரியப்படுத்தியது.

பிரையன் தங்களது வீட்டுக்கு தங்கக் கட்டிகளை அனுப்பப் போவதாகக் கூறியபோது, குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், அவரது தாய் இரண்டு மோதிரங்களுடன் வீட்டுக்கு வந்து, விரைவில் இருவரும் ஒன்றாக வாழப் போவதாக அறிவித்தபோது தான் கார்லோஸ் நடவடிக்கை எடுத்தார்.

மின்னஞ்சல்கள் உண்மையில் லாகோஸில் இருந்து அனுப்பப்பட்டவை என்பதற்கான ஆதாரங்களை கார்லோஸ் தனது தாயிடம் காட்டியபோது, அவர் அதிகம் எதுவும் பேசவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, பெரும்பாலான மின்னஞ்சல்களை அவர் நீக்கிவிட்டார். ஆனால், அவர் சோகமாக இருந்தார்.

தனிமையுடன் தனது தாய் போராடுவதைப் பார்த்தது கார்லோஸுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மோசடியில் ஈடுபட்ட அந்த மர்ம நபரைக் கண்டுபிடிப்பதற்காக நைஜீரியாவுக்குச் செல்ல அவர் முடிவு செய்தார்.

யாஹூ பாய்ஸ்

உள்ளூரைச் சேர்ந்த ஒருவரின் உதவியுடன், கார்லோஸ் 'பிக்கி' என்ற மோசடியாளரின் உதவியைப் பெற்றார். கார்லோஸை தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும், லாகோஸின் நெரிசல் மிகுந்த புறநகர்ப் பகுதியான இகோட்டுனைச் சுற்றிக் காட்டவும் பிக்கி ஒப்புக்கொண்டார். அங்கு "எல்லோரும் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், எல்லோரும் பணம் சம்பாதிக்க முயற்சி செய்கிறார்கள்."

20 வயதுகளின் இறுதியில் இருந்த பிக்கியும், கார்லோஸின் வயதை ஒத்தவர்தான். அவர் புத்திசாலியாகவும், "மிகவும் நகைச்சுவையானவராகவும்" இருந்தார்.

இருவரும் விழித்திருக்கும் நேரத்தில் பெரும்பாலான நேரத்தை ஒன்றாகக் கழித்தனர். ஆச்சரியப்படும் வகையில், கார்லோஸுக்கு பிக்கியைப் பிடிக்கத் தொடங்கியது.

"அவரைப் போன்ற ஒருவர், இணையத்தில் தனிமையில் இருக்கும் நபர்களுடன் இரவு நேரங்களில் பேசும் ஒரு மோசடியாளராக எப்படி மாறினார்? என்று நான் தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தேன்" என்கிறார் கார்லோஸ்.

உள்ளூர் மக்களிடம் பேசியபோது, மோசடியாளர்களுக்கு மிகப்பெரிய வலையமைப்பு இருப்பதை கார்லோஸ் புரிந்துகொண்டார்.

ஆரம்ப காலங்களில் அவர்கள் பயன்படுத்திய மின்னஞ்சல் சேவையான யாஹூவின் பெயரிலிருந்து, இந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 'யாஹூ பாய்ஸ்' என்று அழைக்கப்பட்டனர்.

ஒரு புனைப்பெயர் மற்றும் போலியான மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைத் தவிர வேறு எந்தத் தகவலும் இல்லாமல், 240 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஒரு நாட்டில் தனது தாயை ஏமாற்றிய நபரைத் தன்னால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது என்பதை கார்லோஸ் படிப்படியாக உணர்ந்தார்.

அதற்குப் பதிலாக, யாஹூ பாய்ஸின் உலகத்தைப் பற்றி அவர் கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

வெள்ளை ஐரோப்பியராக இருந்த கார்லோஸ், எங்கு சென்றாலும் தனித்து தெரிந்தார். தன்னைப் பார்த்தவர்கள், அவர் எஃப்பிஐ அதிகாரியாக இருக்கலாம் அல்லது சீன தொழிலதிபராக இருக்கலாம் என்று கருதியதாக அவர் கூறுகிறார். அவர்கள் அவரை 'மகா' என்று அழைத்தனர். எளிதில் ஏமாற்றக்கூடிய முட்டாள் என்பதைக் குறிக்கும் சொல் இது.

இருப்பினும், பிக்கியின் அறிமுகத்தின் மூலம், 50 யாஹூ பாய்ஸிடம் கார்லோஸால் பேச முடிந்தது.

அவர்களில் ஒருவர் அமெரிக்க மல்யுத்த வீரர் கோடி ரோட்ஸைப் போல ஆள்மாறாட்டம் செய்து, ஒரு பெண்ணை 25 விமான டிக்கெட்டுகளுக்காக பணம் செலுத்தும்படி ஏமாற்றியிருந்தார்.

அவர் முதலில் செலுத்திய தொகை 300 யூரோக்கள். ஒரு தொழிற்சாலையில் 18 மாதங்களுக்கும் மேலாக வேலை செய்து சம்பாதித்த தொகையைவிட அது அதிகம்.

ஆனால், வெற்றி என்பது பெரும்பாலும் விரைவாகக் கிடைப்பதில்லை.

"அவர்கள் இதை 'பாம்பிங்' என்று அழைக்கிறார்கள். அதாவது, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நபர்களிடம் கூட நீங்கள் முயற்சி செய்வீர்கள்" என்று கார்லோஸ் கூறுகிறார்.

கார்லோஸ் மற்றொரு யாஹூ பாயான அசீஸுடனும் நெருக்கமானார். அவர் 14 வயதில் மோசடி செய்யத் தொடங்கியிருந்தார்.

அவர் தனது கிராமத்திலிருந்து லாகோஸுக்கு இடம்பெயர்ந்து, தனது தாய் மற்றும் சிறுவயது சகோதரியுடன் நெருக்கமான ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார்.

அழகான வெள்ளை நிறப் பெண்ணின் திருடப்பட்ட புகைப்படத்தைப் பயன்படுத்தி, அமெரிக்க ஆண்களிடம் தன்னை 'வனெஸ்ஸா' என்று அசீஸ் அறிமுகப்படுத்திக்கொண்டார்.

ஆரம்பத்தில் அவரால் வெற்றி பெற முடியவில்லை. அவருக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியவில்லை. அவருக்கு ஒருபோதும் காதலி இருந்ததில்லை, அவர் அமெரிக்காவுக்கும் சென்றதில்லை.

"மேற்கத்திய உலகத்தைப் பற்றி அதிகம் அறிந்திராத சிறுவர்களை பற்றித்தான் நாம் பேசுகிறோம்" என்று கார்லோஸ் கூறுகிறார்.

இறுதியில், அசீஸுக்கு ஒரு மோசடியில் வெற்றி கிடைத்து, 5 டாலர்கள் கிடைத்தன. அந்தப் பணத்தை ஒரு உணவகத்தில் உணவு வாங்குவதற்காக செலவிட்டார்.

குளிர்சாதன வசதி கொண்ட கட்டடத்திற்குள் அவர் சென்றது அதுவே முதல் முறை.

ஆனால், எழுதப் படிக்கத் தெரியாத தெருவோர உணவு விற்பனையாளர்களான அசீஸின் தாயும் பாட்டியும், அவர் செய்து கொண்டிருந்தது தவறு என்பதை அறிந்திருந்தனர்.

மோசடி செய்வதை நிறுத்த வேண்டும், இல்லையெனில் குடும்பத்தில் இருந்து விலக்கப்படுவார் என அவரது பாட்டி அவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தார்.

அதன் பிறகு அவர் அதைச் செய்யவில்லை.

இளம் வயதினரால் எப்படி ஏமாற்ற முடிந்தது?

நைஜீரியாவுக்குச் சென்றபோது, மோசடியாளர்கள் ஒரு நுட்பமான குற்றக் கும்பலின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் சென்றதாக கார்லோஸ் கூறுகிறார். ஆனால், அசீஸுடனான அவரது அறிமுகம் அந்தக் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைத்தது.

"மேற்கு ஆப்பிரிக்காவில் செயல்படும் ஒரு பெரிய குற்றக் கும்பல் நம்மை ஏமாற்றுகிறது என்று நம்புவது எளிது. ஆனால், உண்மையில் அது ஒரு கைப்பேசியை வைத்திருக்கும் இந்த இளைஞனாக இருக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத சில இளம் வயதினரால், கார்லோஸின் தாய் போன்ற பெரியவர்களை நம்ப வைக்க எப்படி முடிந்தது என்ற ஒரு கேள்வி மட்டும் தொடர்ந்து இருந்தது.

பலருக்கும் கிடைக்காத ஒன்றான 'பிணைப்பு' என்பதைத் தாங்கள் வழங்குவதாக அந்த மோசடிக்காரர்கள் அவரிடம் கூறினார்கள்.

"'நீங்கள் அவர்கள் மீது கவனம் செலுத்தினால் மட்டும் போதும்'. அது அவர்களுடன் இருப்பதைப் பற்றியது. 'காலை வணக்கம். எப்படி இருக்கிறாய், அன்பே? எப்படி இருக்கிறாய் செல்லமே? மதிய உணவுக்கு என்ன சாப்பிட்டாய்?' என்று கேட்பது' எனஅவர்கள் என்னிடம் கூறினார்கள்'' என்கிறார் கார்லோஸ்.

மோசடிக்கு ஆளானவர்களுடனான உரையாடல்களில், தனிமையால் உந்தப்பட்ட அதே பிணைப்பிற்கான தேவை தொடர்ந்து வெளிப்பட்டதாக கார்லோஸ் கூறுகிறார்.

"இதுதான் உலகிலேயே மிகவும் சோகமான குற்றம். ஏனென்றால், அவர்கள் உங்கள் பணத்தை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. உங்களை உணர்வற்றவர்களாக மாற்றி விடுகிறார்கள். அந்த நபர் திடீரென காணாமல் போகும்போது, உங்களுக்குள் ஒரு வெறுமை ஏற்படுகிறது. அதன்பிறகு, சமூகமும் உங்களை ஒரு முட்டாள் என்றும், நடந்ததற்கு நீங்கள்தான் காரணம் என்றும் கூறுகிறது" என்று ஒருவர் கார்லோஸிடம் கூறியுள்ளார்.

கார்லோஸ் தனது அனுபவங்களை பற்றி 'தி யாஹூ பாய்ஸ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்தச் செய்தி பிபிசி வேர்ல்ட் சர்வீஸில் ஒளிபரப்பான 'அவுட்லுக்' நிகழ்ச்சியின் ஓர் அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது .

இச்செய்தியை எழுதியவர்கள் : பெக்கா ஜான்ஸ் மற்றும் குளோபல் ஜர்னலிசம்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு