You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பூனை உரிமையாளரின் 30வது பிறந்தநாளில் வீடு திரும்பியது எப்படி?
- எழுதியவர், அங்காரட் தாமஸ்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
பிரிட்டனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 13 வயது பூனை ஒன்று தற்போது தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளது.
சார்லி என்ற அந்தப் பூனை காணாமல் போனபோது அதற்கு மூன்று வயது. 2016 ஏப்ரலில் சார்லி காணாமல் போனதால் அதன் உரிமையாளர்களான லூசி மற்றும் ஹன்னா ராபர்ட்சன் மிகவும் வேதனை அடைந்தனர்.
வீட்டுக்கு வெளியே சுற்றித் திரியும் பூனையான சார்லி, வழக்கமாகப் பகல் நேரங்களில் தெருக்களில் சுற்றித் திரியும். ஆனால், குடும்பத்தினர் புதிய பகுதிக்கு குடிபெயர்ந்த சில நாட்களிலேயே ஒருநாள் வீட்டை விட்டு வெளியே சென்ற சார்லி மீண்டும் திரும்பவில்லை.
குடும்பத்தினர் பல மாதங்களாக சார்லியைத் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
ஆனால், கடந்த மாதம் லூசியின் 30-வது பிறந்தநாளன்று, அவர்கள் எதிர்பாராத தொலைபேசி அழைப்பைப் பெற்றனர். சார்லி கண்டுபிடிக்கப்பட்டதாக கால்நடை மருத்துவமனையில் இருந்து அவர்களுக்கு அழைப்பு வந்தது.
37 வயதான ஹன்னா, 10 ஆண்டுகளுக்கு முன்பு கேர்ஃபில்லி கவுன்டியில் உள்ள நியூபிரிட்ஜில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள அபர்கார்னுக்கு குடிபெயர்ந்தார்.
அதன்பிறகு மூன்று நாட்களுக்குள், "கொஞ்சம் முரட்டுத்தனமான குணம் கொண்டது" என்று ஹன்னா வர்ணிக்கும் சார்லி காணாமல் போனது.
"ஒன்று அல்லது இரண்டு தகவல்கள் எங்களுக்குக் கிடைத்தன. சார்லியைக் கண்டுபிடிக்க முயன்றோம். ஆனால் ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு செல்வதற்குள் அது அங்கிருந்து சென்றுவிடும்," என்று ஹன்னா கூறினார்.
"நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக எங்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை," என்று அவர் பிபிசி ரேடியோ வேல்ஸிடம் தெரிவித்தார்.
சார்லியைப் பற்றி பலரிடம் விசாரித்ததுடன், ஃபேஸ்புக்கிலும் தகவல் வெளியிட்டதாக லூசி கூறினார். ஆனால், சார்லி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
"அது மிகவும் வேதனையாக இருந்தது. சார்லி வாகனத்தில் அடிபட்டிருக்குமோ அல்லது அது உயிருடன் இல்லையோ என்று நாங்கள் அஞ்சினோம்," என்று அவர் கூறினார்.
ஆனால், ஜூலை 29ஆம் தேதி ஹன்னாவுக்கு அபர்கார்னில் உள்ள கால்நடை மருத்துவமனையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. சார்லி கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதைக் கேட்டு ஹன்னா பெரும் அதிர்ச்சியடைந்தார்.
புதர்களுக்கு நடுவே சார்லி வசிப்பதை ஒருவர் கண்டுள்ளார். தெருவில் சுற்றித் திரியும் பூனை என நினைத்த அந்த நபர், பல வாரங்களாக சார்லிக்கு உணவு அளித்து வந்துள்ளார். பின்னர் அதை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சார்லியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோசிப் மூலம் கிடைத்த தொலைபேசி எண்ணை வைத்து ஹன்னாவைத் தொடர்புகொண்டனர்.
10 ஆண்டுகளாக அந்தப் பூனை காணாமல் போயிருந்தது என்பதை அறிந்தபோது கால்நடை மருத்துவரும் "மிகவும் அதிர்ச்சியடைந்ததாக" ஹன்னா கூறினார்.
மனிதர்களுடன் நன்றாகப் பழகும் சார்லி நல்ல உடல்நிலையில் இருந்தது. அதன் ரோமங்களும் நன்றாக இருந்ததுடன், அது பார்ப்பதற்கு "பராமரிப்பின்றி இருந்தது போல" தெரியவில்லை.
"அவள் ஒரு சாகசப் பயணம் சென்று வந்திருக்கிறாள்," என்று ஹன்னா கூறினார். சார்லிக்கு இந்த 10 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை "நாம் ஒருபோதும் அறியப் போவதில்லை" என்றும் அவர் தெரிவித்தார்.
தங்களின் செல்லப் பிராணியான சார்லி, தங்களைப் பார்த்தவுடனேயே "உடனடியாக அடையாளம் கண்டுகொண்டதாக" லூசி கூறினார்.
"அது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்படி நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை," என்று அவர் கூறினார்.
"அவள் தோற்றத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. எங்களிடம் இருக்கும் பழைய புகைப்படங்களில் இருப்பதைப் போலவே அப்படியே இருக்கிறாள்," என்று லூசி தெரிவித்தார்.
தற்போது வீட்டில் இருக்கும் மற்ற செல்லப் பிராணிகளுடன் சார்லியைப் பழக்குவது "இன்னும் கொஞ்சம் முயற்சி தேவைப்படும் விஷயமாக இருக்கிறது" என்றும், "ஆனால் நாங்கள் நிச்சயம் அதில் முன்னேறி வருகிறோம்" என்றும் லூசி கூறினார்.
எனினும், சார்லி தற்போது கிடைக்கும் "உணவு மற்றும் கவனிப்பை" மிகவும் விரும்புவதாகவும், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போலவே இப்போதும் அது மனிதர்களுடன் அன்பாகப் பழகுவதாகவும் லூசி கூறினார்.
சார்லி தான் பெறும் "கவனத்தையும்" மிகவும் ரசித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
"இப்போது, தான் ஒரு பிரபலமாகிவிட்டதை சார்லி உணர்ந்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது," என்று லூசி கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு