You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடுக்கடலில் இரு மகன்களுடன் 16 மணி நேரம் தத்தளித்த தந்தை - தாய்லாந்தில் என்ன நடந்தது?
- எழுதியவர், ஜேக்கப் பிலிப்ஸ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
தாய்லாந்து கடற்கரைப் பகுதியில் ஒரு பிரெஞ்சு குடும்பம் 16 மணி நேரம் கடலில் சிக்கிக்கொண்டது. அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த ஜெட் ஸ்கி (jet ski) கவிழ்ந்ததால் அந்தக் குடும்பம் இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டது.
50 வயதான தந்தை மற்றும் 5, 7 வயதுடைய அவரது இரு மகன்களும் மீட்கப்பட்ட போது, "கடல் நீரை அருந்தியதால் அவர்களின் முகங்கள் வெளிறிப்போய், சோர்வாகக் காணப்பட்டன" என்று ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் உள்ளூர் அரசு அதிகாரி அமோர்ன் சோம்ச்சோய் தெரிவித்தார்.
மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர்கள் மூவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சிறிது நேரத்திலேயே அங்கிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
தாய்லாந்தின் பிரபலமான சுற்றுலாத் தீவுகளில் ஒன்றான கோ சாமுய் (Koh Samui) பகுதியில், வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு இந்தக் குடும்பம் 45 நிமிட சவாரிக்காக ஜெட் ஸ்கியை வாடகைக்கு எடுத்ததாக 'பாங்காக் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் ஜெட் ஸ்கி திரும்பி வராததால் பாதுகாப்புப் பணியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோ சாமுய் மற்றும் அருகிலுள்ள கோ ஃபங்கன் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள இடங்களில் அந்தக் குடும்பத்தைத் தேட அதிவேகப் படகுகளும் கூடுதல் ஜெட் ஸ்கிகளும் பயன்படுத்தப்பட்டதாக 'பாங்காக் போஸ்ட்' தெரிவித்தது.
இருள் சூழ்ந்ததும் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. மறுநாள் காலை அந்தக் குடும்பம் கடலில் கண்டுபிடிக்கப்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
மறுநாள் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் அதிகாரிகள் தந்தையையும் குழந்தைகளையும் அடையாளம் கண்டுகொண்டதாக ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
பெரிய அலைகள் மோதியதால் ஜெட் ஸ்கியின் (jet ski) இயந்திரம் செயலிழந்ததாக அவர் அதிகாரிகளிடம் கூறியதாக 'பாங்காக் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
மீட்புப் பணிக்கான காணொளிப் பதிவில், ஜெட் ஸ்கியின் பின்பகுதி நீரில் மூழ்கியிருக்கையில், குழந்தைகளில் ஒருவர் அதன் முன்பகுதியில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
குழந்தையின் தந்தை நீரில் மிதந்தவாறு மீட்புக் குழுவினரை நோக்கித் தன் கையை அசைத்துக் காட்டுவது காணப்பட்டது.
'நேஷன் தாய்லாந்து' இணையதளச் செய்தியின்படி, அந்த மூவரும் பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வரப்பட் டபோது, தாயும் மூத்த சகோதரியும் கடற்கரையில் காத்திருந்தனர்.
சம்பவத்திற்குப் பிறகும் அந்தக் குடும்பத்தினர் தாய்லாந்திலேயே தங்கி, தங்கள் விடுமுறையைத் தொடர்ந்து கழித்ததாக அதிகாரிகள் ஏஎஃப்பி (AFP) நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு