You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'மகனை திட்டமிட்டு 'பாடி பில்டர்' ஆக்கி தொடர் கொலைகளில் ஈடுபட்ட பெண்' - காவல்துறையில் சிக்கியது எப்படி?
- எழுதியவர், பிரவீன் சுபம்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களை சங்கடத்துக்கு உள்ளாக்கலாம்)
தனது மகனை 'பாடி பில்டராக' பயிற்றுவித்து, அவரது உதவியுடன் தொடர் கொலைகளில் ஒரு தாய் ஈடுபட்டுள்ளார். அந்த தாயையும், மகனையும் கைது செய்துள்ளதாக சித்திபேட்டை ஆணையரக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
"தொலைதூரப் பகுதியில் இந்தக் கொலைகள் திட்டமிட்டு நடத்தப்பட்ட விதம் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு உள்ளது" என்று சித்திபேட்டை காவல் ஆணையர் ராஷ்மி பெருமாள் தெரிவித்தார்.
"குற்றங்களைச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் காவல்துறையினரிடம் சிக்காமல் இருப்பதற்கான வழிகள் குறித்து தாயும் மகனும் இணையத்தில் ஆய்வு செய்துள்ளனர்" என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.
ஏற்கெனவே இரண்டு பெண்களைக் கொலை செய்து, அதன் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டிருந்த அவர்கள், அடுத்ததாக கொலை செய்ய வேண்டிய பட்டியலில் மேலும் நான்கு பேரை வைத்திருந்ததாகவும், அதற்குள் இவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பாதி எரிந்த உடல் குறித்த தகவல் கிடைத்தபோது வெளியான மர்மம்
ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலை, சித்திபேட்டை மாவட்டம் துப்பாக்கா மண்டலத்தில் உள்ள ராமக்கப்பேட்டை புறநகர்ப் பகுதியில் சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் உடல் கிடந்ததை கிராம மக்கள் கண்டனர். இதுகுறித்து அவர்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், உயிரிழந்த பெண் பூம்பள்ளி கிராமத்தில் உள்ள டபுள் பெட்ரூம் காலனியைச் சேர்ந்த அட்டிகம் விஜயா (44) என்பது அடையாளம் காணப்பட்டது.
உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதி, பூம்பள்ளியில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதையடுத்து, அந்த வழித்தடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களை குற்றப்பிரிவு குழுவினர் ஆய்வு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட தெள்ளகுள ராஜிதா (38) மற்றும் அவரது மகன் (16) ஆகியோரின் சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்டறிந்தனர்.
"இருவரும் சேர்ந்து பைக்கில் ஒரு கனமான பையை எடுத்துச் சென்றதும், பெட்ரோல் நிலையத்தில் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் நிரப்பியதும் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. அக்காட்சிகள் அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தின" என்று காவல் ஆணையர் ராஷ்மி பெருமாள் தெரிவித்தார்.
காவல்துறை கூறுவது என்ன?
சித்திபேட்டை காவல்துறையினர் வெளியிட்ட தகவலின்படி, பூம்பள்ளி டபுள் பெட்ரூம் காலனியில் வசித்து வரும் ராஜிதா, முன்பு தையல் இயந்திர ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். பின்னர் அவர் மளிகைக் கடை மற்றும் தேநீர் கடை நடத்தியுள்ளார்.
அவரது கணவர் சில காலம் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை மற்றும் டென்ட் ஹவுஸ் நடத்தி வந்துள்ளார். அவர் பல ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அந்தக் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருந்தது.
இதன் காரணமாக, எளிதில் பணம் சம்பாதிப்பதற்காக அப்பாவிப் பெண்களைக் குறிவைத்து ராஜிதா ஒரு திட்டத்தைத் தீட்டியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தங்களது மளிகைக் கடைக்கு வரும் பெண்களில் தனிப்பட்ட மற்றும் குடும்பப் பிரச்னைகள் உள்ளவர்களை தாயும் மகனும் குறிவைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்தப் பெண்களுக்கு கிராம மக்களுடனான மோதல்கள், தனிப்பட்ட பிரச்னைகள் மற்றும் குடும்பத் தகராறுகள் குறித்த விவரங்களை முன்கூட்டியே சேகரித்து, திட்டமிட்டு கொலைகளைச் செய்ததாகவும் குறிப்பிட்டனர்.
பின்னர், அந்த விவரங்களைப் பயன்படுத்தி மற்றவர்கள் மீது சந்தேகம் ஏற்படச் செய்து, தாங்கள் தப்பிக்க முயன்றது காவல்துறை விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட அட்டிகம் விஜயாவுக்கும் சில குடும்பத் தகராறுகள் இருந்துள்ளன. இதன் காரணமாக, அவர் தனது சொந்த வீட்டை விட்டு வெளியேறி, சில காலமாக டபுள் பெட்ரூம் காலனியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
"ஆகஸ்ட் 8-ஆம் தேதி மளிகைக் கடைக்கு வந்த விஜயாவை, ராஜிதாவும் அவரது மகனும் வீட்டிற்குள் அழைத்துச் சென்று தாக்கிக் கொலை செய்தனர். அவரது உடலில் இருந்த தங்க நகைகளை எடுத்துச் சென்று நகைக் கடையில் விற்றனர்.
பின்னர் இரவு சுமார் 10 மணியளவில், உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று, ராமக்காபேட்டை புறநகர்ப் பகுதியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். ஆனால், அன்று இரவு மழை பெய்ததால் உடல் முழுமையாக எரியவில்லை" என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, உயிரிழந்த விஜயாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே இருந்த பிரச்னைகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ராஜிதா பல நாட்களாக காவல்துறையினரைத் தவறாக வழிநடத்தியதாக காவல் ஆணையர் தெரிவித்தார்.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், உண்மையான சந்தேக நபர்கள் தாயும் மகனும்தான் என்பதை உறுதி செய்ததாகவும், பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அவர்கள் இதற்கு முன்பு செய்த மற்றொரு கொலையும் வெளிச்சத்துக்கு வந்ததாக காவல் ஆணையர் தெரிவித்தார்.
"இந்த ஆண்டு மே மாதம் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட பூம்பள்ளியைச் சேர்ந்த குண்டா ரேகா (26) என்பவரும் இதேபோன்று அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது தங்க நகைகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, உடல் அச்சமயப்பள்ளி வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த நேரத்தில் ரேகா வேறு யாருடனாவது சென்றிருக்கலாம் என்று கூறி ராஜிதா விசாரணையைத் தவறாக வழிநடத்தியுள்ளார். அவர்களது பட்டியலில் மேலும் நான்கு பேர் இருந்தனர்" என்று காவல் ஆணையர் தெரிவித்தார்.
கொள்ளையில் தொடங்கி தொடர் கொலைகள் வரை
சுமார் ஓராண்டுக்கு முன்பு காலை நடைபயிற்சிக்குச் சென்ற பூம்பள்ளி கிராமத் தலைவரின் மனைவி அன்னபூர்ணாவைத் தாக்கி, அவரது கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்ததும் இந்தத் தாய் மற்றும் மகன் தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் ஆணையர் கூறினார்.
ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து பூம்பள்ளி கிராமத் தலைவர் ரங்கய்யா ஜன்னாரெட்டி பிபிசியிடம் விளக்கினார்.
"எங்கள் கிராமத்தில் முதலில் நாங்கள் தான் காலை நடைப்பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினோம். பின்னர் சில பெண்களும் வரத் தொடங்கினர். அதனால், நானும் எனது மனைவியும் ஆண்களுடன் சேர்ந்து வெவ்வேறு இடங்களுக்கு நடைப்பயிற்சிக்குச் செல்லத் தொடங்கினோம். கடந்த ஆண்டு ஜூன் 20-ம் தேதி, வழக்கமாக அவருடன் நடைப்பயிற்சிக்கு வருபவர்கள் யாரும் வராததால், எனது மனைவி தனியாக நடைப்பயிற்சிக்குச் சென்றார்.
அப்போது இரண்டு பேர் கல்லால் அவரைத் தாக்கி, அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர்.
ஓராண்டுக்கும் மேலாக விசாரணை நடத்தியும், காவல்துறையினரால் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது காவல்துறை விசாரணையின் போது, அந்த நகைப் பறிப்பைச் செய்ததும் அவர்கள் தான் என்பதை அறிந்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம்" என்று அவர் விளக்கினார்.
நகைப் பறிப்பு சம்பவத்தில் சிக்காமல் தப்பியதால் தாய் மற்றும் மகனுக்கு துணிச்சல் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் நகைப் பறிப்பில் இருந்து கொலை வரை சென்றதாகவும் கிராமத் தலைவர் ஜன்னா ரெட்டி தெரிவித்தார்.
'மகனை பாடி பில்டராக மாற்றிய தாய்'
தொடர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜிதா, தனது மகனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார் என சித்திபேட்டை காவல்துறையினர் கூறியுள்ளனர்.
"அவர் மகனின் மனதை மாற்றி, அவரை பாடி பில்டிங் செய்ய வைத்துள்ளார். வீட்டிலேயே ஒரு சிறிய உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்துள்ளார். மகனின் இளம் வயதைக் கூட கருத்தில் கொள்ளாமல், கொலைகளுக்கு அவரை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளார். இணையத்தில் குற்றத் தொடர்களைப் பார்த்ததுடன், கொலை செய்த பிறகு அதிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்தும் தேடியுள்ளனர்.
அப்பாவி நபர்களைக் குறிவைத்து, பின்னர் அவர்களைக் கொன்று, உடல்கள் கண்டுபிடிக்கப்படாமல் தடுத்து, தங்கள் மீது சந்தேகம் வராத வகையில் காவல்துறையினரைத் தவறாக வழிநடத்தியுள்ளனர். இப்படித்தான் அவர்களின் குற்றங்கள் தொடர்ந்து நடந்துள்ளன. ஆனால், உறுதியான தொழில்நுட்ப மற்றும் கள ஆதாரங்களுடன் குற்றவாளிகளை நாங்கள் பிடித்தோம்" என்று காவல் ஆணையர் ராஷ்மி பெருமாள் தெரிவித்தார்.
கொலைக்குப் பிறகு, உடலை மறைத்து எடுத்துச் செல்வதற்காக பிரத்யேக உபகரணங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில், ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், ஒரு பைக் மற்றும் இரண்டு செல்போன்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் (16) சிறுவர் சீர்திருத்த இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு குறித்து ராஜிதாவின் கணவரிடம் பேச பிபிசி முயன்றது. ஆனால், அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.
ராஜிதாவுக்கு நெருக்கமான ஒரு பெண் பிபிசியிடம் கூறுகையில், "பட்டப்படிப்பு வரை படித்த ராஜிதா இப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக அவருடன் எனக்கு நல்ல உறவு இருந்ததில்லை. கடந்த காலத்தில் ராஜிதா தனது கணவரைத் தாக்கியுள்ளார். அப்போது அவர் ஏன் அதைச் செய்தார் என்று நாங்கள் அவரிடம் கேட்டோம்.
கூட்டுக் குடும்பச் சொத்துகளைப் பிரித்துக் கொள்ளும் போதும் அவர் எங்களுக்கு தொல்லை கொடுத்தார். இந்தக் கொலைகளால் கிராமத்தில் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம்" என்றார்.
இந்த வழக்கின் விசாரணையில் சிசிடிவி கேமராக்கள் முக்கியப் பங்காற்றியதாக காவல் ஆணையர் ராஷ்மி பெருமாள் தெரிவித்தார்.
கிராம மக்கள் சிசிடிவி கேமராகளை நிறுவுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
"சாதாரண இல்லத்தரசியாக இருந்த ஒரு பெண் இதைச் செய்வார் என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியாது. கிராமத்தில் தேவையான இடங்களில் கூடுதல் சிசிடிவி கேமராக்களை நிறுவ வேண்டும் என்று மக்கள் கேட்டு வருகின்றனர். இது தொடர்பாக நாங்கள் ஆலோசித்து வருகிறோம்" என்று பூம்பள்ளி கிராமத் தலைவர் ஜன்னா ரெட்டி தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு