பாகிஸ்தான், செளதி, துருக்கி பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு - இந்தியாவுக்கு இது எவ்வளவு பெரிய கவலை?

    • எழுதியவர், ரௌனக் பைரா
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

செளதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் இடையிலான மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

மூன்று நாடுகளின் தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த அவர், இந்த ஒப்பந்தம் "மிகப்பெரிய, வலுவான மற்றும் முக்கியமான நடவடிக்கை" என்று குறிப்பிட்டார்.

'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து டிரம்ப் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அவர் தனது பதிவில், "செளதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் சமீபத்தில் மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது" என்று குறிப்பிட்டார்.

"மத்திய கிழக்கு ஒன்றிணைந்து வருவதை இது காட்டுகிறது. இந்த நாடுகள் முன்பைவிட வலுவான முறையில் தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியும். மூன்று நாடுகளின் சிறந்த தலைமைக்கும் வாழ்த்துகள். இது மிகப்பெரிய, வலுவான மற்றும் முக்கியமான நடவடிக்கை - வாவ்," என்று அவர் கூறினார்.

மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்திருப்பது, தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவலைக்குரிய விஷயமாக இல்லை என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

எனினும், இந்தச் சூழலில் இந்தியாவுக்கு தனது நிலைப்பாட்டை வகுப்பது சவாலாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர்.

மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, செளதி அரேபியா, துருக்கி அல்லது பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மூன்று நாடுகள் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

மெக்கா ஒப்பந்தத்தை அமெரிக்கா ஏன் வரவேற்றது?

உண்மையில், டொனால்ட் டிரம்பின் 'அமெரிக்கா ஃபர்ஸ்ட்' கொள்கையின் முக்கிய அடிப்படை என்னவென்றால், பிற நாடுகளின் உள்நாட்டு மோதல்கள் அல்லது அதிகச் செலவு ஏற்படுத்தும் வெளிநாட்டுப் போர்களில் அமெரிக்கா தேவையின்றி தலையிடக்கூடாது என்பதுதான்.

வெளிநாடுகளின் பாதுகாப்புக்கான பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான பொறுப்பைத் தாங்களே ஏற்க வேண்டும் என்று டிரம்ப் நம்புகிறார்.

பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள், தங்களது பாதுகாப்புக்காக அமெரிக்காவை முழுமையாகச் சார்ந்திருக்க விரும்பவில்லை என்பதற்கான அறிகுறியாகவே இந்த மூன்று நாடுகளின் கூட்டணியைப் பார்க்கலாம் என்று ராஜ்ஜிய விவகார நிபுணரும் பத்திரிகையாளருமான நிருபமா சுப்பிரமணியன் சமீபத்தில் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நேட்டோ கூட்டணியில் உள்ள நாடுகள் தங்களது பாதுகாப்புக்கான பொறுப்பைத் தாங்களே ஏற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார். தற்போது இந்த மூன்று நாடுகள், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக தங்களுக்கான சொந்த பாதுகாப்பு அமைப்பை உருவாக்க விரும்புவதாகச் செய்தி தெரிவிக்கின்றன," என்றார் அவர்.

அதேநேரத்தில், அந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் முக்கிய சக்தி என்ற தனது நிலையைத் தக்கவைத்துக்கொள்ள அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்க வேண்டியிருக்கும் என்று அவர் கருதுகிறார்.

மத்திய கிழக்கு விவகார நிபுணரும் இந்திய உலக விவகாரக் கவுன்சிலின் மூத்த ஆய்வாளருமான ஃபஸ்சுர் ரஹ்மான், டொனால்ட் டிரம்பின் இந்தக் கருத்து அவரது சொந்த கொள்கைகளில் ஒன்றுக்கே முரணாக இருப்பதாகக் கூறுகிறார்.

"அனைத்து நாடுகளும் தங்களது பாதுகாப்பைத் தாங்களே கவனித்துக்கொள்ள வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நேட்டோ நாடுகளிடமும் அவர் இதையே கூறியுள்ளார். ஆனால் தற்போது, நாடுகள் தங்களது பாதுகாப்புப் பொறுப்பை தனித்தனியாக ஏற்காமல், ஒன்றுக்கொன்று பகிர்ந்துகொள்ளும் வகையிலான ஓர் ஒப்பந்தத்தை அவர் வரவேற்றிருக்கிறார்," என்றார் அவர்.

டிரம்பின் ஆதரவு இந்தியாவுக்கு எந்த அளவுக்கு கவலைக்குரியது?

செளதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் 2026 ஆகஸ்ட் 7-ஆம் தேதி மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தில் ராணுவப் பயிற்சிகள், உளவுத்துறை ஒத்துழைப்பு, பாதுகாப்புத் தொழில்நுட்பம் மற்றும் கூட்டு ராணுவத் திறன்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர், இதுதொடர்பான முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.

எனினும், இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு கவலையை அதிகரிக்கக்கூடும் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கெனவே நீண்டகாலமாகப் பதற்றமான உறவு நிலவி வரும் நிலையில், செளதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவு ஒப்பீட்டளவில் நல்ல நிலையில் உள்ளது. இந்த உறவும் பாதிக்கப்படலாம் என்ற கவலை எழுந்துள்ளது.

ஆனால், மெக்கா ஒப்பந்தம் குறித்து டொனால்ட் டிரம்ப் சாதகமாகக் கருத்து தெரிவித்திருப்பது இந்தியாவின் கவலையை மேலும் அதிகரித்துள்ளதா?

இந்தக் கேள்விக்கு பதிலளித்த ஃபஸ்சுர் ரஹ்மான், டிரம்பின் கருத்தை தற்போதைய சூழலுக்கான உடனடி எதிர்வினையாகவே பார்க்க வேண்டும் என்கிறார்.

அவர் கூறுகையில், "தற்போது அமெரிக்காவுக்கு பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் துருக்கியுடன் நல்ல உறவு உள்ளது. இரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. அதேநேரத்தில், செளதி அரேபியாவுடனான உறவின் மூலம் அமெரிக்கா பெருமளவிலான பொருளாதாரப் பலன்களைப் பெறுகிறது. எனவே, டிரம்ப் இந்த நாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நாடுகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில்கொண்டு, சமீப காலங்களில் இந்தியாவைவிட அவற்றுக்கு அவர் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளார்," என்றார்.

எனினும், ஒரு குறிப்பிட்ட சூழலைச் சுட்டிக்காட்டிய அவர், "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்தால், செளதி அரேபியா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்கும் வாய்ப்பு குறைவு. பாகிஸ்தானுக்கும் செளதி அரேபியாவுக்கும் ஏற்கெனவே பாதுகாப்பு ஒப்பந்தம் உள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தத்தின் வரம்புகள் சமீபத்தில் வெளிப்பட்டன. ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டபோது, செளதி அரேபியா வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கவில்லை," என்றார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்பட்டால், இந்த நாடுகள் வெளிப்படையாக ஒன்றுக்கொன்று ஆதரவளிப்பது எளிதாக இருக்காது என்று அவர் கருதுகிறார். இருப்பினும், தற்போதைய சூழலில் தனிப்பட்ட மற்றும் பொருளாதார நலன்களைக் கருத்தில்கொண்டு, டிரம்ப் இந்த மூன்று நாடுகளுக்கும் இந்தியாவைவிட அதிக முன்னுரிமை அளித்திருப்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா மற்றும் இஸ்ரேலின் நலன்களை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று இந்தோ-பசிபிக் விவகார நிபுணர் பேராசிரியர் டெரெக் ஜே. கிராஸ்மேன் கூறியுள்ளார்.

டிரம்பின் பதிவைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் அவர், "இது இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் என்ன அர்த்தத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து எந்தக் கவனமும் செலுத்தப்படவில்லை. உங்களுக்குத் தெரியும், அவர்கள் நமது நல்ல நண்பர்கள்," என்று குறிப்பிட்டார்.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஜெரால்ட் ஆர். ஃபோர்டு பொதுக் கொள்கைப் பள்ளியில் இணை பேராசிரியராக உள்ள ஜாவெத் அலி, எதிர்காலத்தில் உடனடியாக இந்தியா கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறார்.

"இந்த ஒப்பந்தத்தை ஆரம்பத்திலேயே இந்தியாவுக்கு எதிரான கூட்டணி என்று பார்ப்பதற்குப் பதிலாக, எதிர்காலத்தில் இது எந்த வடிவத்தை எடுக்கிறது என்பதைக் கவனிப்பதே இந்தியாவுக்கு மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்," என்றார் அவர்

"பாகிஸ்தானின் சர்வதேச முக்கியத்துவம் அதிகரித்து வருவது நிச்சயமாக இந்தியாவுக்கு முக்கியமான விஷயமாக இருக்கும். பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரிப்பதற்கான சாத்தியத்தையும் இந்தியா கண்காணிக்கும். இந்த ஒப்பந்தத்தை சீனா எவ்வாறு பார்க்கிறது, இந்த விவகாரத்தில் சீனாவின் பங்கு மாறுகிறதா என்பதையும் இந்தியா கவனிக்கும்," என்றார்.

அதேநேரத்தில், அமெரிக்கா மற்றும் சீனாவுடன் நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்த நாடுகள், தற்போது ஏதேனும் ஒரு தரப்பில் முழுமையாக இணைவதற்குப் பதிலாக, தங்களுக்குள் கூட்டணிகளை உருவாக்கி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

"இந்த மாற்றத்தின் மற்றொரு அறிகுறியாக மெக்கா ஒப்பந்தம் இருக்கலாம். இப்போது, இந்த ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நடைமுறையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கவனிப்பதே முக்கியம். குறிப்பாக, இந்த மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும்போது இந்த ஒப்பந்தம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்," என்று ஜாவெத் அலி கூறுகிறார்.

இந்தியாவின் நிலை என்ன?

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மேற்கு ஆசிய ஆய்வு மையப் பேராசிரியர் சுஜாதா ஐஸ்வர்யா, இந்தச் சூழலில் இந்தியாவின் மிகப்பெரிய கவலை, தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாகக் கண்டறிய முடியாததுதான் என்கிறார்.

"மெக்கா ஒப்பந்தத்தை டிரம்ப் வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது, இந்தப் புதிய ஏற்பாடு அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்றதாக இருப்பதாக அமெரிக்கா கருதுவதைக் காட்டுகிறது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திலும் இந்தியாவின் குரல் எங்கும் தென்படாததுதான் இந்தியாவின் மிகப்பெரிய கவலை," என்றார் அவர் .

இதுதொடர்பாக இந்தியாவிடம் இருந்து இதுவரை வெளிப்படையான எந்தப் பதிலும் வெளியாகவில்லை என்பது முக்கியமான விஷயம். இந்த விவகாரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாக மட்டுமே வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது என்கிறார் அவர்.

"இது ஒரு வகையான மௌனம். அந்த மௌனமே ஒரு செய்தியாக இருக்கிறது. இந்தப் புதிய புவிசார் அரசியல் அமைப்பில் இந்தியாவின் நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள இந்தியா இன்னும் முயன்று வருகிறது என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம்," என்றார் அவர்.

இந்தியாவுக்கு மற்றொரு முக்கியமான கவலை செளதி அரேபியாவுடனான உறவு என்றும் அவர் கூறுகிறார். 90 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் செளதி அரேபியாவில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் செளதி அரேபியா கணிசமான அளவில் முதலீடு செய்துள்ளது. மேலும், இந்தியாவின் எரிசக்தித் தேவைகளில் கணிசமான பகுதி செளதி அரேபியாவிலிருந்து கிடைக்கிறது.

மறுபுறம், வெளிவிவகார நிபுணரும் டிஆர்டி வேர்ல்டு செய்தி நிறுவனத்தின் மூத்த ஆசிரியருமான அபிஷேக் ஜி. பாயா, இந்த ஒப்பந்தத்தை இந்தியாவை மையமாக வைத்து பார்க்கக் கூடாது என்று கருதுகிறார்.

"மெக்கா ஒப்பந்தம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு எதிராக நடத்திய போரின் நேரடி விளைவாகும். மத்திய கிழக்கு நாடுகள் இனி பிராந்திய பாதுகாப்புக்கான இறுதி உத்தரவாத சக்தியாக அமெரிக்காவைக் கருதவில்லை என்பதை இது காட்டுகிறது," என்று அவர் கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு