You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அண்டங்காக்கா கொண்டக்காரி' - இயக்குநர் ஷங்கரின் 10 பிரபல பாடல்கள்
- எழுதியவர், மீனாட்சி சுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான படங்களை எடுக்கும் பாணியைக் கொண்டவர் இயக்குநர் ஷங்கர். தான் இயக்கும் படங்களில் பாடல் காட்சிகளுக்கும் சண்டைக் காட்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்.
அவர் படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சிக்கான பட்ஜெட்டிலேயே ஒரு சிறிய பட்ஜெட் படத்தைத் தயாரித்துவிடலாம் என்றும் கோலிவுட்டில் பேசப்படுவது உண்டு. அவரது படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகளுக்கு சில விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அவற்றுக்கென தனி வரவேற்பு உள்ளது.
இன்று இயக்குநர் ஷங்கரின் பிறந்தநாள். அவரது படங்களில் இடம்பெற்ற பாடல் காட்சிகள் குறித்து, அவருடன் பணியாற்றியவர்களும் நண்பர்களும் பகிர்ந்துகொண்ட கருத்துகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
' என் வீட்டு தோட்டத்தில் '
ஜென்டில்மேன்' படத்தின் மூலம் ஷங்கரை இயக்குநராக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் பிபிசி தமிழிடம், ''ஷங்கர் இயக்கிய 'ஜென்டில்மேன்' படத்தில் எல்லாப் பாடல்களும் நன்றாக இருக்கும். அடுத்து அவர் இணைந்த 'காதலன்' படத்தின் பாடல்களும் அந்த வரிசைதான்,'' என்றார்.
''கவிஞர்கள் வாலி, வைரமுத்து எழுதிய வரிகள், ஏ.ஆர். ரஹ்மானின் இசை, ஷங்கரின் கிரியேட்டிவிட்டி ஆகியவை அதற்கு முக்கியக் காரணம்,'' என்றார்.
'''ஜென்டில்மேன்' படத்தில் 'என் வீட்டுத் தோட்டத்தில்' பாடல் என் மனதில் நிற்கும் பாடல். அதேபோல, 'காதலன்' படத்தில் வரும் 'சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே' பாடலும் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும். தமிழ் சினிமாவில் ஒரு புது வெரைட்டியாகப் பாடல்களைக் கொடுப்பவர் ஷங்கர்,'' என்று அவர் குறிப்பிட்டார்.
'மலை ஏறி எடுத்த பாடல்'
'எந்திரன்' படத்தில் இடம்பெற்ற 'கிளிமஞ்சாரோ' பாடல் உருவான விதம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.
''எந்திரன் படத்துக்காக 17 ஆண்டுகளுக்கு முன்பே மிகுந்த தொழில்நுட்ப நுணுக்கங்களுடன் எடுக்கப்பட்ட பாடல் அது. அந்தப் பாடல் காட்சிக்கான இடத்தைத் தேர்வு செய்ய மட்டும் 29 நாட்களைச் செலவழித்தோம். இறுதியில், தென் அமெரிக்காவில் உள்ள மச்சு பிச்சுவில் அந்தப் பாடல் படமாக்கப்பட்டது.
அந்த இடத்துக்குச் செல்வது அவ்வளவு எளிதானது அல்ல. இந்தியாவில் இருந்து விமானத்தில் பிரேசில் சென்று, அங்கிருந்து பெரு நாட்டுக்கு விமானத்தில் பயணிக்க வேண்டும். பின்னர் குஸ்கோ நகருக்குச் செல்ல ஒரு மணி நேரம் விமானப் பயணம். அதன்பிறகு ரயில், கார் எனப் பல வழிகளில் பயணித்து அந்தப் பாடலைப் படமாக்கினோம்,'' என்று அவர் விளக்கினார்.
''மலை வழியாக ஒரு மணி நேரம் நடந்து சென்றுதான் அந்த இடத்தை அடைய வேண்டும். புனிதமானதாகக் கருதப்பட்ட அந்தப் பகுதியில் இயற்கை உபாதைகளுக்கு இடமில்லை. சிறுநீர் கழிக்க வேண்டும் என்றாலும் ஒரு மணி நேரம் மலை இறங்கி கீழே சென்றால்தான் முடியும். அந்தப் பாடலைப் படமாக்க எட்டு நாட்கள் பலரும் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டனர். அந்தப் பாடல் காட்சிக்காக பலரும் கடுமையாக உழைத்தார்கள். பாடல் காட்சியும் அற்புதமாக வந்தது,'' என்று கூறிய அவர், நடிகர் சிரஞ்சீவி தனது ஹோம் தியேட்டரில் 100-க்கும் மேற்பட்ட முறை அந்தப் பாடலைப் பார்த்ததாகக் கூறிப் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.
'வாஜி...வாஜி பாடலுக்கு 500 பேர் வேலை பார்த்தார்கள்'
இயக்குநர் ஷங்கர் குழுவில் பல ஆண்டுகள் பணியாற்றிய தயாரிப்பு நிர்வாகி சுந்தர்ராஜன் பிபிசி தமிழிடம், ''எனக்கு ஷங்கர் படப் பாடல்களில் 'சிவாஜி' படத்தில் இடம்பெற்ற 'வாஜி வாஜி' பாடல் பிடிக்கும். அந்தப் பாடலில் அப்படியொரு பிரமாண்டம். பெரிய ராஜ தர்பார் செட்டப்பில் எடுக்கப்பட்ட அந்தப் பாடலுக்காக 500 பேர் வேலை பார்த்தார்கள். பணிப்பெண்கள், பல்லக்கு, பல்லக்கைத் தூக்கிச் செல்பவர்கள், நீச்சல் குளம் என தோட்டா தரணி கலக்கியிருப்பார். ராஜு சுந்தரத்தின் நடனம், ஏ.ஆர். ரஹ்மானின் இசை என அந்தப் பாடலும் காட்சியும் மிகவும் தத்ரூபமாக அமைந்தது,'' என்றார்.
'எந்திர லோகத்து சுந்தரியே'
இயக்குனர் ஷங்கரின் பல படங்களில் கலை இயக்குநராக பணியாற்றிய முத்துராஜ், ''ஷங்கர் ஒவ்வொரு பாடலுக்கும் அவ்வளவு மெனக்கெடுவார். அந்தவகையில் 2.0 வில் வரும் 'எந்திர லோகத்து சுந்தரியே' பாடல் வித்தியாசமானது. அந்த பாடல் ஒரு ரோபோ யோசித்தால் எப்படி இருக்கும் என்பதுதான் கான்செப்ட். எத்தனை முறை அந்த செட்டை மாற்றி மாற்றி வடிவமைத்து அலுத்துபோனாலும், அந்தப் பாடலை விஷுவலா பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன்'' என்று கூறினார்.
ஷங்கரின் பாடல்களில் அதிகம் பிரபலமான 10 பாடல்கள் எவை?
1) உசிலம்பட்டி பெண்குட்டி முத்து பேச்சி
ஷங்கரின் முதல் படமான 'ஜென்டில்மேன்' படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். சாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா ஆகியோர் பாடியிருந்தனர்.
இந்தப் பாடல் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நடிகர் பிரபுதேவா, ''இந்தப் பாடலின் வரிகள், கிராமிய இசை, பின்னணிக் குரல் ஆகியவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது படங்களில் பல பாடல்கள் எனக்குப் பிடித்திருந்தாலும், நானே அவரது பல படங்களில் நடனமாடியிருந்தாலும், இந்தப் பாடல் என் மனதுக்கு நெருக்கமானது,'' என்றார்.
''இந்தப் பாடலைப் பாடிய சாகுல் ஹமீது, ஸ்வர்ணலதா ஆகிய இருவருமே தற்போது உயிருடன் இல்லை. ஆனால், இந்தப் பாடல் சாகாவரம் பெற்றதாகிவிட்டது,'' என்று அவர் கூறினார்.
2 முக்கால முக்காபுலா
வாலியின் வரிகளில், 'காதலன்' படத்தில் வெளியான பாடல் இது. பிரபுதேவாவின் நடன அசைவுகள், மனோ மற்றும் ஸ்வர்ணலதாவின் குரல், அந்தப் பாடலை ஷங்கர் படமாக்கிய விதம், அதில் இடம்பெற்ற கிராபிக்ஸ் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களைக் கவர்ந்தன. பாடலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கவ்பாய் பாணியில் அமைந்த இந்தப் பாடலின் இறுதியில், தலை மற்றும் கால்கள் இல்லாதது போன்ற தோற்றத்தில் பிரபுதேவா நடனமாடுவது அந்தக் காலத்தில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
3) குறுக்கு சிறுத்தவளே
ஷங்கர், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து கூட்டணியில் உருவான சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. ஹரிஹரன் மற்றும் மகாலட்சுமி ஐயர் பாடிய இந்தப் பாடலில், அர்ஜுனும் மனிஷா கொய்ராலாவும் வைரமுத்துவின் வரிகளுக்கு ஏற்ப நடனமாடியிருப்பார்கள்.
ஷங்கர் படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய இயக்குநர் காந்தி கிருஷ்ணா, இந்தப் பாடல் குறித்து பிபிசி தமிழிடம் கூறுகையில், ''கே.வி. ஆனந்தின் ஒளிப்பதிவு அந்தப் பாடலில் அழகாக இருக்கும். மனிஷா கொய்ராலா தண்ணீரில் இருந்து மேலே வரும்போது ஒரு ரிவர்ஸ் ஷாட் எடுத்திருப்பார்கள். அவ்வளவு ரசிக்கும்படியாக இருக்கும். அந்த ரிதம், பாடலின் பின்னணிக் காட்சிகளைப் பார்க்க இரண்டு கண்கள் போதாது,'' என்கிறார்.
4) பூவுக்குள் ஒளிந்திருக்கும் பனிக்கூட்டம்
'ஜீன்ஸ்' படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், சுஜாதா மோகன், உன்னிகிருஷ்ணன் ஆகியோர் பாட, பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்த இந்தப் பாடல் தமிழ் சினிமாவின் சாதனைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
உலகின் ஏழு அதிசயங்களின் பின்னணியில் இந்தப் பாடலைப் படமாக்கிக் காட்டினார் ஷங்கர். இந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று
5) கப்பலேறி போயாச்சு
'இந்தியன்' படத்தில் இடம்பெற்ற பாடல் இது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், எஸ்.பி.பி. மற்றும் சுசீலா பாடிய இந்தப் பாடல், இந்திய தேசிய ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் படமாக்கப்பட்டது.
இந்தப் பாடலில் கமலும் சுகன்யாவும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் கெட்அப்பில் தோன்றுவார்கள்.
6) வாஜி...வாஜி
'சிவாஜி' படத்தில் வந்த இந்தப் பாடலின் பின்னணி மற்றும் பிரமாண்டமான செட் ஆகியவை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. ஐதராபாத்தில் இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஹரிஹரன், மதுஸ்ரீ பாடிய இந்தப் பாடல், காட்சியமைப்பிலும் நடனத்திலும் தனித்துவம் பெற்றது. ஒரு மன்னரின் அரண்மனைக்குள் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பாடல் காட்சி அமைந்திருந்தது.
7) அண்டங்காக்கா கொண்டக்காரி
ஷங்கர் படங்களில் துள்ளல் இசைப் பாடல்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும். அந்த வகையில், இன்றும் பிரபலமாக இருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. 'அந்நியன்' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், ஜாசி கிஃப்ட், கே.கே., ஸ்ரேயா கோஷல், சைந்தவி ஆகியோர் பாடிய இந்தப் பாடலுக்காக திருநெல்வேலியில் ஓர் இடத்தை வண்ணமயமாக மாற்றினார் ஷங்கர்.
இந்தப் பாடலைக் காட்சிப்படுத்த லாரி, பேருந்து, கார் மட்டுமின்றி, மலைகளுக்கும் வண்ணம் தீட்டப்பட்டது.
8) மாரோ மாரோ
'பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற பாடல் இது. அந்தக் காலகட்டத்தில், இந்தப் பாடலுக்காக சென்னையில் உள்ள பல குடிசைமாற்று வாரியக் குடியிருப்புகளுக்கு வண்ணம் தீட்டினார் ஷங்கர். கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கும் இந்தப் பாடலின் காட்சியமைப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. ஷங்கரின் பிரமாண்டமான காட்சியமைப்புக்கு இது மற்றொரு உதாரணம் என்று பலரும் பாராட்டினர்.
9) பூக்களே சற்று ஓய்வெடுங்கள்
ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஹரிசரண், ஸ்ரேயா கோஷல் ஆகியோர் பாடிய பாடல் இது. விக்ரம், எமி ஜாக்சன் பங்கேற்ற இந்தப் பாடலை சீனாவின் புகழ்பெற்ற சிவப்பு கடற்கரை மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பல வெளிநாட்டுப் பகுதிகளில் படமாக்கினார் ஷங்கர்.
10) இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதோ
எந்திரன்' படத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் ஆகியோரை ரோபோக்களுடன் நடனமாட வைத்து அழகு பார்த்திருப்பார் ஷங்கர். மதன் கார்க்கி எழுதிய வரிகளும் இந்தப் பாடலுக்கு கூடுதல் சிறப்பு சேர்த்தன. லேடி காஷ், கிறிஸி ஆகியோருடன் இணைந்து ஏ.ஆர். ரஹ்மான் இந்தப் பாடலைப் பாடியிருந்தார்.
ரோபோவை மையமாகக் கொண்ட கதை என்பதால், கூகுள், பேட்டரி , மோட்டார், ஜீரோ-ஒன் போன்ற கணினி மற்றும் எந்திரவியல் தொடர்பான சொற்களும் இந்தப் பாடலில் இடம்பெற்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு