You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜென் ஸி இளைஞர்கள் மதுவுக்கு பதில் இந்த மருந்துகளை நாடுவது ஏன்?
- எழுதியவர், ஜாக்கி வேக்ஃபீல்ட் மற்றும் இசபெல் ஷா
- பதவி, குளோபல் ஹெல்த் யூனிட், பிபிசி வேர்ல்ட் சர்வீஸ்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
நண்பர்களுடன் வெளியே செல்லும் முன், 20 வயதான மே-யின் தொண்டையில் ஓர் இறுக்கம் ஏற்படும், கைகள் வியர்க்கும். தவறாக ஏதாவது சொல்லிவிடுவேனோ என்ற பயம் அவரை ஆட்கொள்ளும்.
பின்னர், அந்த 20 வயது சீனப் பல்கலைக்கழக மாணவி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு மூலம் பெறப்படும் மருந்துகளை குறித்து சமூக ஊடகங்களின் மூலம் அறிந்துகொண்டார்.
வலிப்பு நோய், பதற்றம் மற்றும் நரம்பு வலிக்காக பொதுவாகப் பயன்படுத்தப்படும் பிரெகபாலின் மருந்தையும், இதய நோய்களுக்காக வழங்கப்பட்டாலும் பதற்றத்தின் உடல்ரீதியான அறிகுறிகளைக் குறைக்கக்கூடிய பீட்டா பிளாக்கர் மருந்தையும் அவர் எடுத்துக்கொள்ளத் தொடங்கினார். இரண்டையும் இணையத்தில் உள்ள விற்பனையாளர்களிடமிருந்து சட்டவிரோதமாக வாங்கினார்.
"நான் மிகுந்த உற்சாகமாக உணர்வேன். அந்த அறையில் இருக்கும் மிகவும் சுவாரஸ்யமான நபர் நான்தான் என்ற உணர்வு வரும்," என்று அவர் கூறுகிறார்.
"உடல்நலக்குறைவு இல்லாமல், 10 மது பானங்கள் அருந்தியதுபோல இருக்கும்."
இந்த மருந்துகள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படும்போது, மதுபோதையை ஒத்த உணர்வைத் தரக்கூடும்.
ஆனால் மருத்துவரின் கண்காணிப்பின்றி இந்த மருந்துகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது; சில சமயங்களில் உயிருக்கு ஆபத்தாகவும் மாறலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
நீண்டகாலப் பயன்பாடு அதையே சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கலாம். எந்தவொரு சமூகச் சூழலுக்கும் அதை மட்டுமே நம்பியிருக்கும் நிலைக்குப் பயனர்கள் தள்ளப்படுகிறார்கள். மருந்தை நிறுத்த முயற்சிக்கும் போது அதிக பதற்றம், தூக்கமின்மை மற்றும் தற்கொலை எண்ணங்கள் போன்ற பிரச்னைகளும் ஏற்படலாம்.
மே-க்கு(அவரது உண்மையான பெயர் அல்ல), இரவு விருந்துகளுக்காக மட்டும் எனத் தொடங்கிய இந்த பழக்கம் பின்னர் எல்லா சமூக நிகழ்வுகளுக்கும் விரிந்தது. இப்போது, அவர் தினமும் இந்த மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்.
"இது இல்லாமல் என்னால் வீட்டைவிட்டு வெளியே போக முடியாது," என்று மே கூறுகிறார்.
மே மட்டுமல்ல. உலகின் பல பகுதிகளில், சில இளைஞர்கள் மதுவிற்குப் பதிலாக மருந்துகளையும் பரிசோதனை நிலையிலுள்ள பிற பொருட்களையும் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
1997 முதல் 2012 வரை பிறந்தவர்களாக கருதப்படும் ஜென் ஸி தலைமுறையினரிடம் பதற்றம், முந்தைய தலைமுறைகளை விட அதிகமாக உள்ளது. ஓர் ஆய்வின் படி, 1990 முதல் 2021 வரை 10 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களிடையே பதற்றக் குறைபாடுகளின் உலகளாவிய எண்ணிக்கை 10 மில்லியனிலிருந்து 16 மில்லியனாக உயர்ந்துள்ளது. 61 ஆய்வுகளை ஆய்வு செய்த மற்றொரு மதிப்பாய்வு, பெருந்தொற்று காலத்திற்கு முன்பிருந்ததை விட இளைஞர்களிடையே பதற்றம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.
அதேநேரத்தில், மதுவுக்கான "ஆரோக்கியமான" மாற்றுகளைத் தேடும் மனப்பான்மை, சமூக ஊடகங்களில் "ஹேங்கோவர் இல்லாத சமூக மருந்துகள்" என்று விளம்பரப்படுத்தப்படும் பொருட்களுக்கு புதிய சந்தையை உருவாக்கியுள்ளது.
"இளைஞர்கள் இந்த மருந்துகளை அதிகம் பாதுகாப்பான, மேம்பட்ட மாற்றாகப் பார்க்கிறார்கள்," என்று டீசைட் பல்கலைக்கழகத்தின் அடிமைப்பழக்க ஆய்வாளர் லியம் நோல்ஸ் கூறுகிறார். "ஆனால் அது பாதுகாப்பைப் பற்றிய தவறான நம்பிக்கை."
இந்த மருந்துகளை சமூக நிகழ்வுகளுக்காக எத்தனை இளைஞர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிவது சாத்தியமில்லை. குறிப்பாக பலர் அவற்றை சட்டவிரோதமாகப் பெறுவதால் அது இன்னும் கடினமாகிறது.
நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளியான ஒரு ஆய்வு, 2008 முதல் 2018 வரை உலகளாவிய பிரெகபாலின் பயன்பாடு நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறது. இதனுடன் தொடர்புடைய தவறான பயன்பாடுகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.
சீனாவில், பிரெகபாலின் தவறாகப் பயன்படுத்தப்பட்ட முதல் சம்பவங்கள் 2024-ல் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு, அந்த மருந்தின் கட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் திட்டங்களை அரசு அறிவித்தது. இந்தியாவும் மே மாதத்தில் அதன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது. ஜோர்டான் மற்றும் யுக்ரேனில் உள்ள ஆய்வாளர்களும் இந்த மருந்தின் தவறான பயன்பாடு அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகின்றனர்.
இந்த மருந்துகளுடன் தொடர்புடைய ஹாஷ்டேக் தேடினால், சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான காணொளிகள் கிடைக்கின்றன. பயனர்கள் தாங்களே மருந்துக் கலவைகளை உருவாக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். இதை இணையத்தில் "ஸ்டேக்கிங்" என்று அழைக்கின்றனர்.
சமூக ஊடகங்கள் இந்தப் பொருட்களை அறிமுகப்படுத்துவதில் மட்டும் இல்லாமல், அவற்றைப் பெறுவதற்கும் வழிவகுக்கின்றன.
சில சமூக ஊடகப் பிரபலங்கள் தங்களது கணக்குகள் வழியாக இந்த மருந்துகளை விற்பனை செய்து வருவதை பிபிசி உலக சேவை, கண்டறிந்தது.
"நான் இந்த மருந்துகளை சீன சமூக ஊடகங்கள் வழியாக வாங்கினேன்," என்று மேய் கூறுகிறார்.
"அவற்றை விற்கும் ஆயிரக்கணக்கான பதிவுகள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடிப்பதும் ஆர்டர் செய்வதும் மிகவும் எளிது."
இந்த நிலை சீனாவுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை.
யுக்ரேனைச் சேர்ந்த 26 வயதான வாடிக்கையாளர் சேவைப் பணியாளர் லோரா, இணையம் மூலமாகவோ நண்பர்கள் மூலமாகவோ இந்த மருந்துகளைப் பெறுவது "எளிது" என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
'மது அருந்தாத தலைமுறை'
இந்தப் பொருட்களின் மீதான வளர்ந்து வரும் ஆர்வம், இளம் பருவத்தினர் மது பழக்கத்திலிருந்து அதிகளவில் விலகி வரும் நேரத்தில் உருவாகியுள்ளது, இது ஜென் ஸி தலைமுறைக்கு 'மது அருந்தாத தலைமுறை' (sober generation) என்ற செல்லப்பெயரைப் பெற்றுத் தந்துள்ளது.
ப்ளூம்பெர்க் கூற்றுப்படி, உலகளவில் 2025-இல் மதுபானப் பங்குகளின் மதிப்பு 830 பில்லியன் அமெரிக்க டாலராக சரிந்தது. செலவுகள் மற்றும் சுகாதாரக் கவலைகளை சுட்டிக்காட்டி, இளைஞர்களின் குடிப் பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றமே இந்தப் போக்கிற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் கலோரிகளையோ, அது தங்களது உடல் எடையில் ஏற்படுத்தும் தாக்கத்தையோ அல்லது வயதாகும் செயல்முறையையோ விரும்புவதில்லை," என்று லியம் நோல்ஸ் கூறுகிறார்.
பிரிட்டனைச் சேர்ந்த 22 வயதான மேட்டிற்கு இந்த தர்க்கம் உடன்பாடாக உள்ளது; தீவிரமாக உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்லும் இவர், இந்த மருந்துகள் மதுவை விடத் தனது உடலில், குறிப்பாகத் தனது கல்லீரல் மற்றும் இதயத்தில் "மிகக் குறைந்த தாக்கத்தையே" ஏற்படுத்துவதாக நம்புகிறார்.
"இந்தச் சமூகத்தில் உள்ளவர்கள், (இந்த மருந்துகள்) மதுவைவிட ஆரோக்கியமானவை என்று நம்புகிறார்கள்," என்று மேட் கூறுகிறார்.
'இது எந்த விலையும் இல்லாத பலன் அல்ல'
மது குறைந்தபட்சம் ஏழு வகை புற்றுநோய்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறும், உலக சுகாதார அமைப்பு மது எவ்வளவாக இருந்தாலும் கூட ஆபத்தானதே என்று 2023-ல் எச்சரித்தது.
நெகிழ்வான மருந்துப்பொருட்கள் சட்டங்களுக்காக நீண்ட காலமாக போராடி வரும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் நரம்பியல் உளவியல் மருந்தியல் நிபுணர் பேராசிரியர் டேவிட் நட், மே உட்கொள்ளும் மருந்துகள் ஆபத்துகளைக் கொண்டிருந்தாலும் கூட, அவை அதிகப்படியான மது அருந்துவதை விடக் குறைவான தீங்கு விளைவிப்பவையாக இருக்கலாம் என்று வாதிடுகிறார்.
பிரெகாபலின் மருந்து அதிக அளவுகளில் பயன்படுத்தப்படும் போது காட்சி ஒட்டுமொத்தமாக மாறுவதாக அவர் கூறுகிறார்.
"போதையேறுவதற்காக அவர்கள் அதை ஒரு வகையான போதைப்பொருளாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால், அவர்கள் அதற்கு அடிமையாகும் ஆபத்து உள்ளது," என்று அவர் கூறுகிறார், "அந்த வகையில், இது பாதிப்புகள் அற்றது அல்ல."
பொழுதுபோக்கிற்காக பிரெகபாலின் பயன்படுத்துபவர்களுக்கு, காலப்போக்கில் அந்த மருந்தின் தாக்கத்துக்கான சகிப்புத்தன்மை உருவாகலாம். அதாவது, அதே அளவிலான தளர்வு அல்லது பேரானந்த உணர்வைப் பெற படிப்படியாக அதிக அளவு மருந்து தேவைப்படலாம்.
அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் போது, பிரெகபாலின் சுவாசத்தை மந்தப்படுத்தக் கூடும். சில சந்தர்ப்பங்களில் அது உயிருக்கு ஆபத்தாகவும் மாறலாம். அதிக அளவில் எடுத்துக்கொள்ளப்படும் பீட்டா பிளாக்கர்கள் மயக்கம் ஏற்படுத்தக் கூடும்; இதயத் துடிப்பு ஆபத்தான அளவுக்கு மெதுவாகும் அபாயமும் உள்ளது.
சார்புநிலையின் ஆபத்து
கிங்ஸ் கல்லூரி லண்டனின் உளவியல் நிபுணர் பேராசிரியர் எமிலி ஜோன்ஸ் கூறுவதாவது, மதுவையும் இந்த மருந்துகளையும் உடல் நல பாதிப்புகளின் அடிப்படையில் மட்டும் ஒப்பிடுவது முக்கியமான கேள்வியைத் தவிர்க்கிறது.
"அதிக அளவு மது ஆபத்தானது. அதைப் போலவே, மருத்துவரின் கண்காணிப்பின்றி மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்வதும் ஆபத்தானதே," என்று அவர் கூறுகிறார்.
சமூக சூழல்களில் பதற்றத்தைத் தவிர்க்க மருந்துகளைப் பயன்படுத்துவது, சாதாரண சமூக அனுபவங்களே ஆபத்தானவை என்ற நம்பிக்கையை ஒருவரிடம் உருவாக்கிவிடும் என்ற கவலை அவருக்குள்ளது.
இந்த மருந்துகள் மற்றும் மதுபானம் ஆகியவற்றின் உடல் ரீதியான தீங்குகளை ஒப்பிடுவது மிகவும் அடிப்படையான ஒரு கேள்வியைத் தவறவிடும் ஆபத்தைக் கொண்டுள்ளது என்று லண்டன் கிங்ஸ் கல்லூரியின் உளவியலாளர் பேராசிரியர் எமிலி ஜோன்ஸ் வாதிடுகிறார்: அதாவது, இரசாயன உதவியுடன் (மருந்துகள் மூலம்) மட்டுமே தங்களால் சமூகத்தில் பழக முடியும் என்று மக்கள் நம்பத் தொடங்கும்போது என்ன நடக்கும்?
"ஓர் இரவு வெளியே செல்லும் முன் இந்த மருந்தை எடுத்தால்தான் நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று ஒருவர் தன்னை நம்ப வைக்கத் தொடங்கினால், அந்த நம்பிக்கை வாழ்க்கையின் பிற சூழல்களுக்கும் பரவிவிடும்," என்று அவர் கூறுகிறார்.
"விஷயங்களைச் திறம்படக் கையாள்வதற்கான உங்களது சொந்தத் திறனின் மீதான நம்பிக்கையை நீங்கள் இழக்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார்.
லோராவும் இதே சார்புநிலையை அனுபவித்தார்.
முதலில், விருந்துகள் மற்றும் சமூக நிகழ்வுகளுக்காக மட்டும் மருந்துகளை எடுத்துக்கொண்ட அவர், பின்னர் வேலைக்குச் செல்லும் போதும் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கினார்.
"அது எனக்கு உதவியது. நான் மக்களுடன் பணிபுரிகிறேன். அவர்களுடன் பேசுவதையும் பிரச்னைகளைத் தீர்ப்பதையும் அது எளிதாக்கியது," என்று அவர் கூறுகிறார்.
இரண்டு வாரங்கள் அந்த மருந்தைப் பெற முடியாமல் போனபோது, மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்களை அனுபவித்ததாக அவர் கூறுகிறார்.
"என்ன நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை. நான் பதற்றமாக இருந்தேன். சாப்பிட முடியவில்லை. நண்பர்களைச் சந்திக்க முடியவில்லை," என்று அவர் கூறுகிறார்.
கள்ளச் சந்தை மருந்துகள்
இந்த மருந்துகளுக்கு பல நாடுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில், மேலும் தடை விதிப்பது புதிய ஆபத்துகளை உருவாக்கும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
யுக்ரேனின் மைண்ட் கேம்ஸ் அமைப்பின் தலைவரும் தொற்றுநோய் ஆய்வாளருமான மைகிட்டா லாபின், "சில பொருட்களைத் தடை செய்வதாலேயே மக்கள் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட மாட்டார்கள்," என்று கூறுகிறார்.
"மாறாக, அவர்கள் தரம் உறுதியற்ற பொருட்களை கள்ளச் சந்தையில் இருந்து வாங்கத் தொடங்கலாம். இது அதிக அளவு உட்கொள்ளுதல் உள்ளிட்ட ஆபத்துகளை அதிகரிக்கும்."
சட்டவிரோதமான பிரெகாபலின் கூடுதல் ஆபத்தைக் கொண்டுள்ளது, ஏனெனில் பயனர்கள் தாங்கள் சரியாக எதை உட்கொள்கிறோம் என்பதை அறியாமல் போகலாம் என்று நோல்ஸ் கூறினார்.
"(பிரிட்டனில்) ஒரு கடையில் வாங்கும் மது பானத்தில் அதன் வலிமை மற்றும் அளவு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் இணையத்தில் வாங்கப்படும் பிரெகபாலின் குறித்து அதே உறுதியை எப்போதும் பெற முடியாது."
"அது ஒரு மது பாட்டிலுடன் வராத கூடுதல் ஆபத்து."
மே போலவே, பொழுதுபோக்கிற்காக இந்த மருந்துகளைப் பயன்படுத்தும் பலரும், ஒருநாள் இதிலிருந்து முழுமையாக விடுபட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
"பயமாக இருக்கிறது. அது இல்லாமல் நான் எப்படி சமாளிப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை."
இந்தக் கட்டுரையில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னைகளால் நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ பாதிக்கப்பட்டிருந்தால், உள்ளூர் மருத்துவர் ஒருவர் உங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம் அல்லது உதவக்கூடிய ஒரு அமைப்பிற்கு உங்களை வழிநடத்தலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு