வாரத்தின் சில நாள் அல்லது தினசரி உணவுக் கட்டுப்பாடு எடை குறைப்பு தவிர வேறு பலன்களையும் தருமா?

    • எழுதியவர், சாலி அடீ
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

இடைநிலை விரதம் (இன்டர்மிடன்ட் ஃபாஸ்டிங்) உண்மையில் பலனளிக்கிறது என்பதை நிரூபிப்பது, மற்ற எந்தவொரு வாழ்க்கை முறை மாற்றத்தையும் போலவே, மிகவும் கடினமானது.

ஆனால், புதிய தொழில்நுட்பங்கள் எது பலனளிக்கிறது, எது பலனளிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள நமக்கு சிறப்பாக உதவக்கூடும்.

சில மாதங்களுக்கு ஒருமுறை, இடைநிலை உண்ணாவிரதத்தின் நன்மைகள் குறித்த புதிய விவாதம் உருவாவது போல் தெரிகிறது.

வாரத்தின் குறிப்பிட்ட நாட்களில் விரதம் இருப்பது அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே உணவு உட்கொள்வது என பல்வேறு முறைகளைக் கொண்ட இந்தப் பிரபலமான உணவுமுறை, வழக்கமான கலோரி குறைப்பைவிட உடல் எடையைக் குறைப்பதை எளிதாக்கும் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

ஆனால், இதன் மூலம் இதைவிட வேறு அதிகமான நன்மைகள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.

உதாரணமாக, புற்றுநோய் மற்றும் அறிவாற்றல் திறன் குறைவதற்கான அபாயத்தைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த உணவுமுறை இவ்வளவு பிரபலமானதில் ஆச்சரியமில்லை.

எனினும், சமீபத்திய ஆய்வுகள் இந்தக் கூற்றுகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.

ஆய்வைப் பொறுத்து, இடைநிலை விரதம் மற்ற உணவுமுறைகளைவிட அதிக பலனளிப்பதாகவோ அல்லது குறைவான பலனளிப்பதாகவோ நிரூபிக்கப்படலாம்.

ஒரு ஆய்வு, இந்த முறையே தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும், இதய நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

"விஞ்ஞானிகள் எல்லா உண்மைகளையும் எப்போதும் ஒரே மாதிரியாக ஏற்றுக்கொள்வதில்லை. அதிலும், சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளவர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்" என்று சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து பேராசிரியர் கிறிஸ்டா வராடி கூறுகிறார்.

"இது ஒன்றும் மாயாஜாலம் அல்ல" என்கிறார் அவர்.

அப்படியானால், இடைநிலை உண்ணாவிரதத்தின் நன்மைகள் அதன் உண்மையான அளவை விட அதிகமாகக் கூறப்பட்டுவிட்டதா? அல்லது, இது நமது வாழ்நாளில் சில ஆண்டுகளை நீட்டிக்கக்கூடிய நம்பிக்கைக்குரிய உணவுமுறையா?

அதற்கான சான்றுகள் ஏன் இவ்வளவு முரண்பாடாக உள்ளன?

தரவுகளை மேலும் துல்லியமானதாக மாற்றுவதற்கு இருக்கும் மிகப்பெரிய தடையை சரிசெய்வதுதான் மிகவும் கடினமான ஒன்றாகும் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "மக்கள் உண்மையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைப் பற்றி நமக்கு எந்த தகவலும் இல்லை" என்கிறார் வராடி.

அந்தக் கருத்து பல உணவுக் கட்டுப்பாட்டு முறைகளுக்கும் பொருந்துகிறது. உண்மையில், எல்லா உணவுமுறை மாற்றங்களுக்கும் கூட பொருந்தக்கூடும்.

1. வரலாற்றுக்கு முந்தைய உணவுப் பழக்கவழக்கங்கள்

இடைநிலை விரதம் என்பது, நமது முன்னோர் எவ்வாறு உணவுக்காக பரிணாம வளர்ச்சி அடைந்தார்களோ, அதை பிரதிபலிப்பதாகக் கருதப்படுகிறது.

"ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவும், அதற்கு மேல் இரண்டு முறை சிற்றுண்டியும் சாப்பிடும் சூழலில் நாம் பரிணாம வளர்ச்சி அடையவில்லை" என்று பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய நரம்பியல் விஞ்ஞானி மார்க் மாட்சன் கூறுகிறார்.

அவரது ஆய்வுகள் இந்தத் துறையின் அடித்தளமாக அமைந்தன.

விரதம் இருப்பது, உடலின் வளர்சிதை மாற்றம் முதலில் சர்க்கரையை எரிப்பதில் இருந்து, ரத்தத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் கொழுப்பை எரிப்பதற்கு மாறுகிறது.

சர்க்கரையை எரிக்கும் இந்தச் செயல்முறை 'கிளைகாலிசிஸ்' என்று அழைக்கப்படுகிறது.

இந்த வளர்சிதை மாற்றம், செல்களின் செயல்பாட்டையும் மாற்றுகிறது.

ஆரோக்கியமான செல்கள், பழுதடைந்த மற்றும் சேதமடைந்த புரதங்களை மறுசுழற்சி செய்யத் தொடங்குகின்றன. 'ஆட்டோஃபேஜி' என்று அழைக்கப்படும் இந்தச் செயல்முறை, செல்களைப் புத்துணர்ச்சியடையச் செய்கிறது.

கோட்பாட்டளவில், இது தான் இடைநிலை உண்ணாவிரதத்தால் கிடைக்கும் என்று கூறப்படும் ஆரோக்கிய நன்மைகளுக்கு நேரடியாக வழிவகுக்கிறது.

நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் இதழில் வெளியான முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வில், மாட்சன் இந்த வளர்சிதை மாற்றத்தை நீண்ட ஆயுளுடனும், நீரிழிவு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் குறைவாக ஏற்படுவதுடனும் தொடர்புபடுத்தினார்.

ஆனால், இதில் ஒரு பிரச்னை உள்ளது.

இந்தத் தெளிவான விளக்கத்துக்கான வலுவான ஆதாரங்கள் எலிகள், ஈக்கள் மற்றும் புழுக்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்துதான் கிடைத்தன.

அவற்றைப் பொறுத்தவரை, இடைநிலை விரதம் ஒரு மிகச் சிறந்த தீர்வாக இருந்தது.

சுதந்திரமாக உணவு உட்கொள்ள அனுமதிக்கப்பட்ட மற்றொரு குழுவில் இருந்த எலிகள் உட்கொண்ட அதே அளவு கலோரிகளையே, மற்றொரு குழுவில் இருந்த எலிகளும் உட்கொள்ள முடிந்தது.

ஆனால், அந்த எலிகள் உணவு உட்கொள்ளும் நேரத்தைக் கட்டுப்படுத்தியிருந்த வரை, அவை வயதான காலத்திலும் மெலிந்தும் ஆரோக்கியமாகவும் இருந்தன. அதே நேரத்தில், மற்ற எலிகள் உடல் பருமனடைந்து நோய்வாய்ப்பட்டன.

துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் இதை அவ்வளவு தெளிவாக உறுதிப்படுத்தவில்லை.

2. எலிகளும் மனிதர்களும்

உடல் பருமனில் இதன் தாக்கத்தை எடுத்துக்கொள்வோம்.

இடைநிலை உண்ணாவிரதத்தின் வகையைப் பொறுத்து, மனிதர்களிடம் "இது சுமார் 5% உடல் எடை குறைப்பை ஏற்படுத்துகிறது" என்கிறார் வராடி.

"இது வேறு எந்த உணவுமுறை உத்தியையும் போலவே பயனுள்ளதாக இருக்கிறது" என்கிறார் அவர்.

ஆனால், எலிகளிடம் காணப்பட்ட வியத்தகு முடிவுகளை மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சமூக வலைதளங்களில் பகிரப்படும் தனிப்பட்ட அனுபவங்களும் இதை உறுதிப்படுத்தவில்லை.

இடைநிலை உண்ணாவிரதத்தின் மூலம் சிறிதளவு உடல் எடை குறைந்தாலும், அது வளர்சிதை மாற்றத்தில் நிச்சயமாக சில நன்மைகளை ஏற்படுத்தும்.

"வளர்சிதை மாற்றம் தொடர்பான சில ஆபத்து குறியீடுகள் குறைகின்றன. இதில் கொழுப்புச் சத்து மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவையும் அடங்கும்"என்கிறார் வராடி.

இது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) அறிகுறிகளைக் குறைப்பதாகவும் தெரிகிறது.

உணவுமுறை மாற்றத்தைத் தொடங்கும்போது ஒருவர் எந்த அளவுக்கு ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கிறாரோ, அந்த அளவுக்கு அதிகமான உடல்நலனில் நன்மைகளை அவர் பெறுவார் என்கிறார் வராடி.

ஆனால், இங்கும் எலிகளிடம் காணப்பட்ட நன்மைகளுடன் ஒப்பிடும்போது, மனிதர்களிடம் இந்த நன்மைகள் குறைவாகவே காணப்படுகின்றன.

இடைநிலை உண்ணாவிரதத்தின் தீவிரமான முறைகள், உதாரணமாக, ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடுவது உடலில் உள்ள மெலிந்த தசை நிறையை குறைப்பதன் மூலம் ஒருவரை வளர்சிதை மாற்ற ரீதியாக குறைவான ஆரோக்கியமானவராக மாற்றக்கூடும்.

அறிவாற்றல் திறன் மேம்படுகிறது என்ற கூற்றுகளிலும் இதேபோன்ற நிலை காணப்படுகிறது. எலிகள் மற்றும் மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது.

புற்றுநோய் குறித்த ஆய்வுகளும் இதேபோன்ற கலவையான முடிவுகளையே வழங்குகின்றன.

விலங்குகளிடம் நடத்தப்பட்ட ஆய்வுகள், இடைநிலை விரதம் புற்றுநோயைத் தடுப்பதுடன், நச்சுத்தன்மை கொண்ட கீமோதெரபி சிகிச்சையைத் தாங்கும் உடலின் திறனை அதிகரிப்பதாகவும் தொடர்புபடுத்தியிருந்தன.

ஆனால், எலிகளில் செயல்பட்ட இந்த முறையைப் பற்றிய ஒரு முக்கியமான ஆய்வு, மனிதர்களிடம் தோல்வியடைந்தது. ஆராய்ச்சியாளர்கள் நீண்டகால உண்ணாவிரதத்தால் உடலில் ஏற்படும் உயிரியல் மாற்றத்தைப் போன்ற விளைவை உருவாக்கும் வகையில் ஒரு சிறப்பு உணவுமுறையை உருவாக்கியிருந்தனர்.

கோட்பாட்டளவில், இது ஆரோக்கியமான செல்களை அதிக எதிர்ப்புத்திறன் கொண்டவையாக மாற்றுவதுடன், புற்றுநோய் செல்களை பலவீனப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆய்வில் பங்கேற்றவர்கள் எதிர்பார்க்கப்பட்ட அந்த வளர்சிதை மாற்ற மாற்றத்தை அடையவில்லை.

அதேநேரத்தில், 5:2 உணவுமுறை, உடல் முழுவதும் பரவிய மார்பகப் புற்றுநோயைக் கொண்ட பெண்கள் கீமோதெரபி சிகிச்சை பெறும்போது சிறப்பாகச் செயல்பட உதவக்கூடும். இது அவர்களின் வாழ்க்கைத் தரத்திலும், நோய் முன்னேறும் வேகத்தைக் குறைப்பதிலும் பயனளிக்கக்கூடும்.

குழப்பமானதும் முரண்பாடானதுமான இந்த ஆய்வு முடிவுகளுக்கு மத்தியில் ஒரு தெளிவான போக்கு தெரிகிறது. விலங்குகளிடம் காணப்பட்டதைவிட, மனிதர்களிடம் இடைநிலை உண்ணாவிரதத்தின் நன்மைகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன.

ஏன்?

இதற்கு அடிப்படை உயிரியல் வேறுபாடுகளை ஒரு காரணமாகக் கூறலாம்.

உதாரணமாக, மனிதர்களை விட எலிகளின் வளர்சிதை மாற்ற விகிதம் மிகவும் அதிகம். இது ஆய்வு முடிவுகளைத் தவறாகப் புரிந்துகொள்ளச் செய்யக்கூடும்.

"ஒரு கொறித்துண்ணிக்கு 16 மணி நேரம் விரதம் இருப்பது, ஒரு மனிதர் பல நாட்கள் விரதம் இருப்பதற்கு சமமானதாகும். ஏனெனில், அவற்றின் வளர்சிதை மாற்ற விகிதம் மிகவும் அதிகமாக உள்ளது" என்கிறார் ஹார்வர்ட் பொது சுகாதாரப் பள்ளியின் ஊட்டச்சத்து இணைப் பேராசிரியர் கோர்ட்னி பீட்டர்சன்.

இந்த ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் எலிகள் பொதுவாக மரபணு ரீதியாக ஒன்றுக்கொன்று ஒரே மாதிரியானவை என்கிறார் வராடி.

இது மனிதர்களிடம் காணப்படும் வேறுபாடுகளைப் பிரதிபலிப்பதில்லை. "அவை உண்மையில் மிகவும் மோசமான மாதிரிகள்" என்கிறார் அவர்.

எனினும், மிகப்பெரிய தடையாக இருப்பது உயிரியல் அல்ல.

அது தகவல் தான்.

"மக்கள் உண்மையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் கடினம்" என்கிறார் பீட்டர்சன்.

3. ஞாபக சக்தியில் உள்ள குறைபாடுகள்

உணவுமுறைக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையிலான தொடர்பு, விலங்குகளிடம் இவ்வளவு தெளிவாகக் காணப்பட்டதற்கு ஒரு காரணம், அவை என்ன சாப்பிடுகின்றன என்பதில் எந்தக் கேள்வியும் எழாதது தான்.

எலிகள் மற்றும் பிற ஆய்வக விலங்குகளுக்கு உணவைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. ஆராய்ச்சியாளர் வழங்கும் உணவை, அவர் வழங்கும் நேரத்தில், அவர் வழங்கும் அளவிலேயே அவை உண்கின்றன.

இதனால், உணவுமுறைக்கும் உடலில் ஏற்படும் உயிரியல் அல்லது மருத்துவ விளைவுகளுக்கும் இடையே நேரடியான தொடர்பை ஏற்படுத்துவது எளிதாகிறது.

ஆனால், மனிதர்கள் பங்கேற்கும் பெரும்பாலான ஆய்வுகளில், அவர்கள் உட்கொள்ளும் ஊட்டச்சத்தைக் கட்டுப்படுத்த முடியாது.

அவர்கள் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் உணவுமுறை குறித்து அவர்களுக்கு அறிவுறுத்தலாம். காகிதத்தில் அல்லது சில நேரங்களில் ஆன்லைனில் உணவுப் பதிவேட்டையும் வழங்கலாம்.

அதன்பிறகு, அவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி, தங்களுக்கான சொந்த முடிவுகளை எடுக்கிறார்கள்.

"ஊட்டச்சத்து ஆய்வுகளில், மக்கள் உண்மையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை அளவிடுவதற்கான வழி நம்மிடம் இல்லை" என்று கூறும் வராடி, "எனவே, அவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என்று நம்புவதையே முழுமையாகச் சார்ந்திருக்கிறோம்"என்கிறார்.

ஆனால், நேர்மையானவர்களுக்குக் கூட சரியான நினைவாற்றல் இருப்பதில்லை.

அவர்கள் உணவுப் பதிவேட்டில் ஒரு வேளை உணவைப் பதிவு செய்ய மறந்துவிடலாம். அது நேரக் கட்டுப்பாட்டுடன் உணவு உட்கொள்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தலாம்.

அல்லது, தான் கூறிய உணவுமுறையைப் பின்பற்றவில்லை என்ற குற்ற உணர்வு காரணமாக, விரதம் இருக்க வேண்டிய நேரத்தில் சாப்பிட்ட ஒன்று அல்லது இரண்டு உணவுகளைப் பதிவு செய்யாமல் விட்டுவிடலாம்.

தனது ஆய்வில் பங்கேற்பவர்களில் சுமார் 50% பேர் மட்டுமே உணவுப் பதிவுகளைத் திரும்பச் சமர்ப்பிப்பதாக வராடி மதிப்பிடுகிறார். மீதமுள்ளவர்கள் சில நேரங்களில் உண்மையான தகவல்களை மாற்றிக் கூறுகின்றனர்.

ஒரு இளம் ஊட்டச்சத்துப் பேராசிரியராகத் தனது ஆரம்ப நாட்களில், தற்செயலாக இந்த விஷயம் புரிந்ததாக வராடி கூறுகிறார்.

ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்களது உணவுப் பதிவுகளைச் சமர்ப்பிக்கக் காத்திருந்த அறையைக் கடந்து சென்றபோது, ஒருவர் ஒரு வாரம் முழுவதும் சாப்பிட்ட உணவுகளை அவசரமாக எழுதிக்கொண்டிருப்பதை அவர் பார்த்துள்ளார்.

"அவர் முழுவதையும் பொய்யாக எழுதிக்கொண்டிருந்தார். நான், 'சரி, இது முற்றிலும் தவறான தரவு' என்று நினைத்தேன். அதன்பிறகு, 'இதை வேறு எத்தனை பேர் செய்கிறார்கள்?' என்று எனக்குள் கேட்டுக்கொண்டேன்" என்கிறார் அவர்.

2025-ல், சர்வதேச அளவிலான ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இந்தப் பிரச்னையின் அளவை ஓரளவு கணிக்கக்கூடிய ஒரு சமன்பாட்டை உருவாக்கியது.

மக்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை சுமார் 30% குறைத்துக் கூறுவதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது என்று அபெரிஸ்வித் பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து ஆய்வாளர் தாமஸ் வில்சன் கூறுகிறார்.

"மக்கள் தாங்கள் உட்கொண்டதைவிட அதிகமாகச் சாப்பிட்டதாகக் கூறுவது மிகவும் அரிது" என்றும் அவர் கூறுகிறார்.

ஒருவர் சரியாக எவ்வளவு ஆற்றலை உட்கொள்கிறார் என்பதைக் கண்காணிப்பதற்கான மிகச் சிறந்த முறையாக 'டப்ளி லேபிள்டு வாட்டர்' ஆய்வுகள் கருதப்படுகின்றன.

இந்தச் சோதனைகளில், ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் பாதுகாப்பான நிலையான ஐசோடோப்புகள் கலந்த தண்ணீரை ஆய்வில் பங்கேற்பவர்கள் குடிக்கின்றனர்.

அவை வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக உடலைவிட்டு எவ்வளவு வேகமாக வெளியேறுகின்றன என்பதை அளவிடுவதன் மூலம், அந்த கால கட்டத்தில் அவர்களது உடல் எவ்வளவு ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளது என்பதை விஞ்ஞானிகளால் கணக்கிட முடியும்.

2025-ம் ஆண்டின் சமன்பாடு, மக்கள் சராசரியாக 400 முதல் 800-க்கும் அதிகமான கலோரிகளை குறைத்துக் கூறுவதாகத் தெரிவித்தது.

ஆனால், இந்த அளவு நபருக்கு நபர் மாறுபடலாம்.

ஒருவர் சாப்பிட்ட உணவின் அளவு குறித்த நினைவுக்கும் உண்மைக்கும் இடையிலான வேறுபாட்டை மதிப்பிடுவதற்கு வராடி இந்த முறையைப் பயன்படுத்தியபோது, முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தன.

"மக்கள் ஒரு நாளைக்கு 1,600 முதல் 2,000 கலோரிகள் வரை சாப்பிடுவதாகக் கூறுகிறார்கள். ஆனால், 'டப்ளி லேபிள்டு வாட்டர்' மூலம் உண்மையான தரவைப் பெறும்போது, அது 3,500 கலோரிகளாக இருக்கிறது" என்கிறார் அவர்.

ஊட்டச்சத்து நிபுணர்களுக்குக்கூட தாங்கள் உட்கொள்ளும் உணவின் சரியான ஊட்டச்சத்து மதிப்புகளைத் தெரிவிப்பது கடினம் என்கிறார் பீட்டர்சன்.

உணவின் அளவுகள் பெரிதும் மாறுபடுகின்றன.

அதற்கும் மேலாக, ஒரு உணவில் எவ்வளவு மேக்ரோ ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதைக் கணக்கிட விஞ்ஞானிகள் பயன்படுத்தும் ஊட்டச்சத்து அட்டவணைகளில், ஒவ்வொரு குறிப்பிட்ட உணவுப் பொருளுக்கான விவரங்கள் இல்லாமல் சராசரி மதிப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.

இந்த வரம்புகள் நன்கு அறியப்பட்டவையாகவும், மிகவும் சிக்கலானவையாகவும் உள்ளன என்பதால், உணவு குறித்து மக்கள் தாங்களே சுயமாகப் பதிவு செய்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்படும் ஆய்வுகளை வெளியிடுவதை அறிவியல் இதழ்கள் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.

நடைமுறையில், ஊட்டச்சத்து நிபுணர்களால் உணவுப் பதிவுகள் மற்றும் கணக்கெடுப்புகளை முற்றிலுமாக கைவிட முடியாது.

"நம்மிடம் இருப்பது இதுதான்" என்கிறார் வராடி.

ஆனால், இன்னும் அதிக காலத்துக்கு அப்படியே இருக்க வேண்டிய அவசியமில்லாமல் போகலாம்.

4. ஸ்மார்ட் முட்கரண்டிகள், நெக்லஸ் மற்றும் பல் சென்சார்கள்

மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆய்வுகளும் சுயமாகத் தெரிவிக்கும் தகவல்களை மட்டுமே நம்பியிருப்பதில்லை.

உள்நோயாளிகளைக் கொண்டு நடத்தப்படும் உணவுப் பரிசோதனைகள் பங்கேற்பாளர்கள் சரியாக என்ன சாப்பிடுகிறார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கட்டுப்படுத்தும் கடுமையான வகை ஆய்வுகள், எலிகள் மீதான ஆய்வுகளைப் போலவே புறநிலைத் தரவுகளை வழங்கக்கூடும்.

ஒவ்வொரு கலோரியும் கவனமாகக் கட்டுப்படுத்தப்படும். உணவு எடை போடப்படும். நீங்கள் விரதம் இருக்க வேண்டிய நேரத்தில் சின்னதாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டாலும், அதற்கு வழியில்லை. ஏனென்றால், அங்கே குளிர்சாதனப் பெட்டியே இருக்காது.

பீட்டர்சன் இதுபோன்ற ஆய்வுகளை நடத்தியுள்ளார்.

அவரது ஆய்வுகளில், இடைநிலை விரதம் தொடர்பான விளைவுகள், இதுகுறித்த பரந்த அளவிலான ஆய்வுகளில் காணப்பட்டதைவிட வலுவாக இருந்தன.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறைந்தது, ரத்த அழுத்தம் குறைந்தது, 'ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்' என்று அழைக்கப்படும் ஒரு வகையான மூலக்கூறு சேதம் குறைந்தது. 'ஆட்டோஃபேஜி' அதிகரித்தது.

ஆனால், இதற்கான செலவுகள் அதிகமாக இருந்ததால், இந்த ஆய்வுகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களைக் கொண்டதாகவும், குறுகிய காலத்துக்கானதாகவும் மட்டுமே நடத்த வேண்டியிருந்தது. இதனால், இந்த ஆய்வுகளிலிருந்து நாம் பெறக்கூடிய முடிவுகளுக்கும் சில வரம்புகள் உள்ளன.

(ஆறு மாதங்களுக்கு உணவு ஆய்வில் பங்கேற்கச் சென்று தங்குவதற்கு சிலருக்கு மட்டுமே நேரம் இருக்கும்.)

ஆனால், தொழில்நுட்பத்தின் மூலம் இவ்வாறு மிகவும் நெருக்கமாகக் கண்காணிக்கப்படும் சூழலை உருவாக்க முடிந்தால்?

சுயமாகத் தெரிவிக்கும் தகவல்களை குறைவாகவோ அல்லது முற்றிலுமாகவோ நம்பாத புதுமையான அணுகுமுறைகளை ஊட்டச்சத்து நிபுணர்கள் அதிகளவில் ஆராய்ந்து வருகின்றனர்.

மக்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதற்கான அதிக புறநிலையான பதிவை தற்போது பல புதிய தொழில்நுட்பங்கள் வழங்கக்கூடியதாக உள்ளன.

உதாரணமாக, சில ஆய்வுகளில் பங்கேற்பவர்கள் தாங்கள் சாப்பிடும் அனைத்தையும் புகைப்படம் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஆனால், இதுவும் பங்கேற்பாளர் அந்தத் தகவலைத் தானாகப் பதிவு செய்யும் முறையைச் சார்ந்துள்ளது.

எனவே, சில ஆய்வுகளில் கண்ணாடிகள் அல்லது கழுத்தில் அணியும் பொருட்களில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. ஃபிட்நிப்பிள் (FitNibble), ஆட்டோகிராஃபர் (Autographer) போன்ற பெயர்களைக் கொண்ட இவை, ஒவ்வொரு ஏழு விநாடிகளுக்கும் அல்லது ஒருவர் மெல்லுவதை உணரும்போதும் ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ளும்.

ஆனால், கேமராக்கள் தனியுரிமை தொடர்பான கவலைகளை ஏற்படுத்தக்கூடும்.

கேமராக்களைப் பயன்படுத்தாமல் உணவு மற்றும் சிற்றுண்டிகளைக் கண்காணிப்பதற்காக வேறு சில சென்சார்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மெல்லுவதைக் கண்டறியும் கழுத்தணிகள், ஒருவர் எப்போது மற்றும் எவ்வளவு உணவை வாய்க்குக் கொண்டு செல்கிறார் என்பதைக் கண்டறியும் ஸ்மார்ட் முள்கரண்டிகள், பற்களில் பொருத்தப்படும் ஊட்டச்சத்து சென்சார்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இவற்றில் பெரும்பாலான யோசனைகள் இன்னும் மாதிரி நிலையில் உள்ளன.

தற்போதைக்கு, உடலால் செயல்படுத்தப்படும் மேக்ரோ ஊட்டச்சத்துகளை கண்காணிப்பதற்காக வழக்கமான ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை மேற்கொள்வதே நடைமுறைக்கு ஏற்ற தீர்வாக உள்ளது.

"சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் உணவின் கலவை குறித்த அதிக தகவல்களைத் தரும்" என்கிறார் வில்சன்.

பல புதிய மற்றும் பழைய தொழில்நுட்பங்கள் நம்மிடம் உள்ளன என்கிறார் வில்சன். ஆனால், இவற்றில் எந்த ஒரு தொழில்நுட்பமும் தனியாக இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியாது.

இருப்பினும், அவற்றை ஒன்றாக இணைத்து, வீட்டிலேயே பயன்படுத்தக்கூடிய ஒரு முழுமையான கண்காணிப்பு அமைப்பை உருவாக்க முடியும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஓர் ஆய்வில், வில்சனும் அவரது சக ஆய்வாளர்களும் பல்வேறு முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆய்வு செய்தனர். அவற்றை ஒன்றாகப் பயன்படுத்தினால் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.

தற்போது, இந்த கலவைகள் உதவுமா என்பதைச் சோதிக்கும் ஆய்வின் இறுதிக்கட்டத்தில் அந்தக் குழு உள்ளது. இதில் சுயமாகப் பதிவு செய்யப்படும் உணவு நாட்குறிப்புகள், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளில் இருந்து பெறப்படும் புறநிலை உயிரியல் குறியீடுகள், கேமராக்கள் போன்ற ஓரளவு சுய தகவல்களை வழங்கும் அணியக்கூடிய சாதனங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.

மக்கள் தங்களது இயல்பான வாழ்க்கையைத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போதும், உள்நோயாளிகளிடம் நடத்தப்படும் ஆய்வுகளைப் போன்ற தரமான முடிவுகளை ஊட்டச்சத்து ஆராய்ச்சியாளர்கள் பெறுவதற்கு இவை உதவுமா என்பதே ஆய்வின் நோக்கம்.

"நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதை விளக்குமாறு நான் உங்களிடம் கேட்க வேண்டிய நிலை எனக்கு வேண்டாம்" என்கிறார் வில்சன்.

5. அறிவின் தேவை

இடைநிலை விரதம் குறித்த மருத்துவ ஆய்வுகள் இன்னும் விரிவாக இருக்க வேண்டும் என்று மாட்சன் கருதுகிறார்.

உணவுமுறையைப் பின்பற்றுகிறார்களா, உணவின் கலவை என்ன, எத்தனை கலோரிகளை எடுத்துக்கொள்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல், உடல் செயல்பாடு மற்றும் தூக்கம் குறித்த தரவுகளையும் இந்த ஆய்வுகள் உள்ளடக்க வேண்டும் என்கிறார்.

ஏனெனில், விலங்குகள் மீதான ஆய்வுகளிலும் இந்த நடவடிக்கைகள் "துல்லியமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன".

தனியுரிமையை மீறுவதற்கும், மக்கள் உண்மையில் எவ்வாறு உணவு உட்கொள்கிறார்கள் என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வதற்கும் இடையில் ஒரு நுட்பமான சமநிலையை ஏற்படுத்த ஆராய்ச்சியாளர்களும் நிறுவனங்களும் முயற்சித்து வருகின்றனர்.

அதேநேரத்தில், சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் எலிகள் மீதான ஆய்வு முடிவுகளை மனிதர்களுக்கான முடிவுகளுடன் தொடர்ந்து ஒன்றாகக் கருதி வருகின்றனர். இடைநிலை உண்ணாவிரதத்தின் சில நன்மைகளையும் அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து வருகின்றனர்.

"இவ்வளவு போலியான தகவல்களைப் பார்க்கிறேன். அதனால் நான் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குவது குறித்து யோசித்து வருகிறேன். " என்கிறார் வராடி.

இந்தப் பிரச்னை இடைநிலை உண்ணாவிரதத்துடன் மட்டும் நின்றுவிடவில்லை.

"அதனால் தான் ஊட்டச்சத்து குறித்த ஆய்வுகளால் மக்கள் மிகவும் விரக்தியடைகிறார்கள்" என்று அவர் விளக்குகிறார்.

கொழுப்புச் சத்து குறித்த ஆலோசனைகளையே அவர் உதாரணமாகக் குறிப்பிடுகிறார். பல ஆண்டுகளாக, அது கொடியது என்றும் பாதிப்பில்லாதது என்றும் மாறி மாறி கூறப்பட்டு வருகிறது.

"ஏனென்றால், மக்கள் உண்மையில் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது குறித்து நமக்கு எந்தத் தகவலும் இல்லை "

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு