You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாலைப் பணியின் போது 4 பேரின் உடல்கள், 9 மண்டை ஓடுகள் வெளிப்பட்டதால் அதிர்ச்சி - யாருடையவை?
- எழுதியவர், லக்கோஜு ஸ்ரீனிவாஸ்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள சில விவரங்கள் உங்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கக்கூடும்)
விசாகப்பட்டினம் ஷீலாநகர் அருகே சாலை அமைப்பதற்காக கொண்டு வரப்பட்ட மண் குவியலை அகற்றிக் கொண்டிருந்த போது மனித உடல்களும் மண்டையோடுகளும் வெளிப்பட்டிருப்பது உள்ளூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
"மண்ணைச் சமப்படுத்திக் கொண்டிருந்த சில தொழிலாளர்கள் மனித உடல் பாகங்களை கவனித்து எங்களுக்கு தகவல் அளித்தனர். இதுவரை 4 உடல்களும், 9 மண்டையோடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன" என்று போலீசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.
ஷீலாநகர் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.
ஷீலாநகர் - சப்பவரம் பகுதிகளை இணைக்கும் புதிய சாலையை துறைமுகச் சாலையுடன் இணைக்கும் பணிக்காக இந்த மண் கொட்டப்பட்டது. இதற்காக, மண்ணை அகற்றும் போது முதலில் ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன் பின்னர் மேலும் பல உடல்களும் மண்டையோடுகளும் வெளிப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த உடல்கள் எங்கிருந்து வந்தவை?
இந்த வழக்கை விசாரித்து வரும் காஜுவாகா சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வாசு நாயுடு சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
"இந்த உடல்கள் அங்கு எவ்வாறு வந்தன, அவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பதைக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வாசு நாயுடு பிபிசியிடம் தெரிவித்தார்.
"உடல்கள் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டவையா? அல்லது வேறு இடத்திலிருந்து கொண்டு வந்து இங்கே கொட்டப்பட்டவையா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம். அனைத்து அம்சங்களையும் விசாரித்த பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்" என்று வாசு நாயுடு கூறினார்.
சம்பவ இடத்தில் காணப்பட்ட சில பொருட்களின் மீதும் போலீசார் கவனம் செலுத்தியுள்ளனர். அங்கு மூங்கில் பாய்கள், வெள்ளைத் துணிகள், மலர் மாலைகள், தலையணைகள் மற்றும் போர்வைகள் இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
"இவை சமீபத்தில் அடக்கம் செய்யப்பட்ட உடல்களா? அல்லது ஏற்கனவே எங்கோ புதைக்கப்பட்ட உடல்களை தோண்டி எடுத்து இங்கே கொண்டு வந்தார்களா? என்ற கேள்விகள் எழுகின்றன" என்று வாசு நாயுடு கூறினார்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
ஆனால் இந்த உடல்கள் யாருடையவை, அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர், எவ்வளவு காலத்திற்கு முன்பு மரணமடைந்தனர் என்பதில் இன்னும் தெளிவு பெறப்பட வேண்டியுள்ளது.
சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இரவு நேரங்களில் ஏதேனும் வாகனம் அங்கு வந்ததா? யாராவது உடல்களை கொண்டு வந்தார்களா? என்பதைக் கண்டறிய சிசிடிவி பதிவுகள் உதவுமா என்பதைப் பரிசீலித்து வருகின்றனர்.
"இந்தச் சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம். உடல்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதும், அவை அங்கு எவ்வாறு வந்தன என்பதை கண்டறிவதும் தற்போது முக்கிய அம்சங்களாக உள்ளன" என்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வாசு நாயுடு பிபிசியிடம் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு