You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'முஸ்லிம் நேட்டோ': பாகிஸ்தான், செளதி, துருக்கி ராணுவ ஒப்பந்தத்தால் யாருக்கு பலன்? 4 விஷயங்கள்
- எழுதியவர், பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
துருக்கி, சௌதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் "மெக்கா ஒப்பந்தம்" எனப்படும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது.
சில ஆய்வாளர்கள் இதை "சுன்னி ஒப்பந்தம்" அல்லது "முஸ்லிம் நேட்டோ" என்றுகூட அழைத்துள்ளனர்.
இது இரான் மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு விடுக்கப்பட்ட சமிக்ஞை என்று சிலர் கருதுகின்றனர்.
மற்றவர்கள், பாதுகாப்புக்காக அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற இந்த நாடுகளின் விருப்பத்தை இது பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர்.
எனினும், ஒப்பந்தத்தின் முழு வடிவம் இன்னும் வெளியிடப்படாததால், பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.
இந்த மூன்று நாடுகளும் ஒன்றுடன் ஒன்று எல்லையைப் பகிர்ந்துகொள்ளாத நிலையில், அவற்றின் தேசிய நலன்களும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போவதில்லை என்று ஒப்பந்தத்தை விமர்சிப்பவர்கள் வாதிடுகின்றனர்.
மேலும், ஒப்பந்தத்தின் எழுத்துப்பூர்வமான விவரங்கள் வெளியிடப்படாதது, குறிப்பாக அதன் தடுப்புத் திறன் குறித்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது என்றும் சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படியானால், இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை என்ன தெரிகிறது? இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் என்ன? இன்னும் தெளிவாகாத அம்சங்கள் என்ன?
இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகக் கருதப்படும்.
துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிதான், இந்த உறுதிப்பாட்டை நேட்டோவின் கூட்டுப் பாதுகாப்புப் பிரிவான 5-வது பிரிவுக்கு "இணையானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இது நடைமுறையில் சோதிக்கப்படும் வரை உதாரணமாக, சௌதி அரேபியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு பாகிஸ்தானும் துருக்கியும் எவ்வாறு பதிலளிக்கின்றன என்பது தெளிவாகும் வரை இந்த ஒப்பந்தத்தை நேட்டோ பாணியிலான உறுதிப்பாடாக கருதுவதற்குப் பதிலாக, "விருப்பத்தின் வெளிப்பாடாகவே" கருத வேண்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1. சமமானவர்களுக்கிடையேயான கூட்டணி
துருக்கியில் உள்ள காதிர் ஹாஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறை பேராசிரியர் செர்ஹாத் குவென்ச், "ஒப்பந்தத்தின் முழு உரையை நாம் பார்க்கும் வரை, அது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது ஊகத்திற்குரிய விஷயமாகவே இருக்கும்" என்கிறார்.
நீண்ட காலமாக பொருளாதார மற்றும் ராணுவ ரீதியாக அமெரிக்காவின் ஆதிக்கத்தில் இருக்கும் நேட்டோவைப் போல அல்லாமல், இந்த ஒப்பந்தம் சமமான நாடுகளுக்கு இடையிலான கூட்டணி என்று குவென்ச் கூறுகிறார்.
"இதற்கு நன்மைகளும் தீமைகளும் உள்ளன. ஏனெனில், அவர்கள் அனைத்தையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்வார்கள். மேலும், பல விஷயங்களில் தங்களது சொந்த தேசிய இறையாண்மைக்கு முன்னுரிமை அளிப்பார்கள்" என்கிறார் அவர்.
அட்லாண்டிக் கவுன்சிலைச் சேர்ந்த அலிசன் மைனரும் இதே கருத்தைக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பிபிசி உருதுவிடம், "மூன்று நாடுகளின் மாறிவரும் மற்றும் சில நேரங்களில் ஒன்றுக்கொன்று வேறுபடும் நலன்கள் மற்றும் உத்திகளைக் கருத்தில் கொள்ளும்போது, பல்வேறு நெருக்கடிகளுக்கு நேட்டோவைப் போல விரிவான மற்றும் முழுமையாக ஒருங்கிணைந்த ராணுவப் பதிலை இந்தக் கூட்டணி வழங்கும் என்பது சாத்தியமில்லை" என்றார்.
எதிர்காலத்தில் இது நம்பகத்தன்மை கொண்ட ராணுவக் கூட்டணியாக உருவெடுக்குமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
2. இது இரானை இலக்காகக் கொண்டதா?
சில ஆய்வாளர்கள், 3 நாடுகளும் செய்துகொண்ட மெக்கா ஒப்பந்தம் மத்திய கிழக்கில் நிலவும் மோதலுக்கும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான போருக்கும் எதிரான பதில் நடவடிக்கை என்று நம்புகின்றனர்.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இரானுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் இரண்டு சுன்னி பெரும்பான்மை நாடுகளான துருக்கி மற்றும் பாகிஸ்தானும், இரானின் பிராந்திய போட்டியாளரான செளதி அரேபியாவும் இடம்பெற்றுள்ளன.
இதனால், குறிப்பாக இரானில் உள்ள சிலர், இது அந்த நாட்டைச் சுற்றிவளைக்கும் நடவடிக்கையாகவும் கருதுகின்றனர்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் டிசம்பர் 2024-இல் தொடங்கியதால், இந்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த செயல்முறை, பிராந்தியத்தில் தற்போது நிலவும் மோதல் மற்றும் பதற்றத்திற்கு முந்தையது என்று துருக்கி அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சரும் துணைப் பிரதமருமான இஷாக் டார், இந்த ஒப்பந்தம் எந்தவொரு நாட்டிற்கும் எதிரானதல்ல என்றும் வலியுறுத்தினார்.
இதுகுறித்து இரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாயி செய்தியாளர் சந்திப்பில், "இந்த ஒப்பந்தம் இரானுக்கு எதிரானதாக அமையும் என்று கவலைப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை" என்று தெரிவித்தார்.
மாறாக, மூன்று நாடுகளும் "அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிமொழிகளை நம்ப முடியாது என்ற முடிவுக்கு வந்திருப்பதையே" இந்த ஒப்பந்தம் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
3. யாருக்கு அதிகப் பலன் கிடைக்கும்?
மூன்று நாடுகளுமே இந்த ஒப்பந்தத்தின் மூலம் பலனடையும். அதே நேரத்தில், ஒவ்வொரு நாடும் வெவ்வேறு வகையான பலத்தை இந்தக் கூட்டணிக்கு வழங்கும்.
சௌதி அரேபியா மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது. அதனிடம் நிதி வளங்கள், செல்வாக்கு மற்றும் எண்ணெய் வளம் உள்ளன.
ஆனால், அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதை சௌதி அரேபியா உணர்ந்து வருகிறது. இரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள், ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் மற்றும் முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை இதில் அடங்கும்.
இஸ்தான்புல் அரசியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ரிக்கார்டோ காஸ்கோ, குறுகிய காலத்தில் இந்த ஒப்பந்தத்தின் முக்கிய பயனாளியாக சௌதி அரேபியா இருக்கக்கூடும் என்கிறார்.
துருக்கியின் தொழில்நுட்பத்தையும், பாகிஸ்தானின் பாரம்பரிய ராணுவத் திறன்கள் மற்றும் உத்தி அனுபவத்தையும் இணைப்பது பயனுள்ள தடுப்பு சக்தியாக அமையக்கூடும் என்று அவர் கூறுகிறார்.
துருக்கி நேட்டோவில் உறுப்பினராக உள்ளது. மேலும், நேட்டோவில் மிகப்பெரிய ராணுவப் படைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
புவியியல் ரீதியாகவும் தூதரக ரீதியாகவும், நேட்டோவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுவதில் துருக்கி ஆர்வமாக உள்ளது
துருக்கியின் பாதுகாப்புத் துறை தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கும் உற்பத்தி செய்வதற்கும் இந்த ஒப்பந்தத்தில் வாய்ப்புகள் உள்ளன.
மறுபுறம், பாகிஸ்தான் தனக்கென ஒரு வலுவான ராணுவ சக்தியாக உள்ளது. மேலும், இந்த மூன்று நாடுகளில் அணு ஆயுத சக்தியாக இருக்கும் ஒரே நாடும் பாகிஸ்தான்தான்.
ஏற்கெனவே நடைமுறையில் உள்ள உறவுகள் மற்றும் ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே இந்தப் புதிய ஒப்பந்தம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவுடனான நெருக்கமான ஒத்துழைப்பின் மூலம் பொருளாதார மற்றும் பாதுகாப்பு ரீதியான பலன்களைப் பெறுவதுடன், மத்திய கிழக்கு விவகாரங்களில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டையும் இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தக்கூடும் என்று கிங் ஃபைசல் இஸ்லாமிய ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ஓமர் கரீம் கூறுகிறார்.
ஆனால், அட்லாண்டிக் கவுன்சிலைச் சேர்ந்த அலிசன் மைனரின் கூற்றுப்படி, மிகப்பெரிய பலன் கூட்டாகக் கிடைக்கக்கூடும்.
இந்தக் கூட்டணி மூன்று நாடுகளுக்கும் சக்திவாய்ந்த அரசியல் செய்தியை வெளியிடவும், தங்களது செல்வாக்கை அதிகரிக்கவும், உத்தி ரீதியான பலன்களைப் பெறவும் வாய்ப்பளிக்கிறது என்று அவர் கூறுகிறார்.
4. எதிர்காலத்தில் இந்தக் கூட்டணி எப்படி அமையும்?
இதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
''எங்கள் நோக்கம் இந்த மூன்று நாடுகளுடன் மட்டும் நின்றுவிடுவது அல்ல. இதை மேலும் விரிவுபடுத்தி, முடிந்தால் ஒரு நாள் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் இந்தக் கூட்டணியின் கீழ் ஒன்றிணைப்பதே எங்கள் நோக்கம்'' என்று துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான் தெரிவித்துள்ளார்.
சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள நான்கு நாடுகளைக் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற குழுவில் எகிப்து ஏற்கெனவே இடம்பெற்றுள்ளது.
எனவே, இந்த ஒப்பந்தத்தில் எகிப்தும் உறுப்பினராக இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹக்கான் ஃபிதான், எகிப்து ஓர் "இயல்பான கூட்டாளி" என்று தெரிவித்தார்.
எதிர்காலத்தில் அந்த நாடு இந்தக் கூட்டணியில் இணையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அப்தெலாட்டிட், இந்த ஒப்பந்தத்தை "மிகவும் கவனமாக" ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்தார்.
ஆனால், சாத்தம் ஹவுஸைச் சேர்ந்த அகமது அபுதூஹின் கூற்றுப்படி, அதிபர் அப்தெல்-ஃபத்தாஹ் அல்-சிசியின் தலைமையிலான எகிப்து, குறிப்பிட்ட கூட்டணிகளில் இணைவதில் எச்சரிக்கையுடன் உள்ளது. அவ்வாறு இணைவது மற்ற நாடுகளுடனான தனது உறவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே இதற்குக் காரணம்.
இரான், இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளுடனான தனது உறவுகளில் இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே அதற்குக் காரணம் என்றார் அவர்.
குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பிராந்தியத்தில் கூட்டணிகளை உருவாக்க முயற்சிக்கும் இந்த மூன்று நாடுகளும், இந்த அபாயத்தை கவனிக்காமல் இருக்க முடியாது.
-இந்தச் செய்தி பிபிசி துருக்கி மற்றும் பிபிசி உருதுவின் ஆய்வுகளின் அடிப்படையில், குளோபல் ஜர்னலிசத்தால் எழுதப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு