தங்கப் புதையல் எங்கே? அடர்ந்த காட்டுக்குள் தொலைந்து போன 'இன்கா' நகரம் கண்டுபிடிப்பு

    • எழுதியவர், ஃபியோனா மெக்டொனால்ட்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

1911ஆம் ஆண்டில், அமெரிக்கப் பேராசிரியர் ஒருவர் பெரு நாட்டின் ஆண்டிஸ் மலைத்தொடரின் ஆழமான பகுதியில், கடைசி இன்கா மன்னரின் பண்டைய மலைக் கோட்டையைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

ஆனால், 53 ஆண்டுகளுக்குப் பிறகு மற்றொரு ஆய்வாளர் அவர் தவறாகக் கண்டறிந்திருந்ததை நிரூபித்தார். அதன்பிறகு சிறிது காலத்திலேயே பிபிசி குழுவினர் அவரது தடத்தைப் பின்தொடர்ந்தனர்.

"இது பண்டைய வில்கபாம்பாவின் தளம் தான் என்பதில் இப்போது யாருக்கும் சந்தேகமில்லை" என்று 1911 ஆம் ஆண்டில் பெருவின் மச்சுபிச்சு இடிபாடுகளை உலக அளவில் பிரபலப்படுத்திய யேல் பல்கலைக்கழகப் பேராசிரியர் எழுதினார்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த புதையல்களுக்குப் பெயர்போன தொலைந்துபோன இன்கா நகரத்தைத் தேடுமாறு உள்ளூர்வாசிகள் ஹிராம் பிங்காம் III அழைத்தனர். தான் தேடியதைக் கண்டுபிடித்துவிட்டதாக அவர் உறுதியாக நம்பினார்.

ஆனால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, பிங்காமின் இந்த நம்பிக்கையை "உண்மையான இண்டியானா ஜோன்ஸ்" என்று அழைக்கப்பட்ட மற்றொரு அமெரிக்க ஆய்வாளர் கேள்விக்கு உள்ளாக்கினார்.

1964 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஜீன் சவாய் அதே தொலைந்துபோன நகரத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறினார். அது மச்சு பிச்சுவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் வடமேற்கில் இருந்தது.

அமேசான் நதியின் ஒரு கிளை ஆற்றுக்கு மேலே, தொலைதூர மேகக் காடுகளில் அமைந்திருந்த இடிபாடுகளின் தொகுப்பான எஸ்பிரிட்டு பாம்பாவில் ("ஆவிகளின் சமவெளி" அல்லது வில்கபாம்பா), கடைசி இன்கா மன்னரின் மலைக் கோட்டையைத் தனது குழு அடையாளம் கண்டுள்ளதாக அவர் நம்பினார்.

சவாயின் கண்டுபிடிப்புக்குப் பிறகு வெறும் ஆறு வாரங்களிலேயே, ஒரு பிபிசி குழு அவரது தடத்தைப் பின்தொடர்ந்தது.

ரப்பர் படகில் பயணம் செய்து, வேகமான நீரோட்டங்களில் கவிழ்ந்து, கழுதைகளுடன் செங்குத்தான பள்ளத்தாக்குச் சரிவுகளில் ஏறி, அடர்ந்த காட்டுக்குள் பாதையை உருவாக்கிக் கொண்டு அவர்கள் அந்த இடத்தை அடைந்தனர்.

"வழியில் அவர்கள் சேகரித்த சில தகவல்கள், சவாய் கூறிய சில விஷயங்கள் குறித்து அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின" என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் தெரிவித்தார்.

"ஆனால், இவ்வளவு தூரம் வந்துவிட்ட நிலையில், அவர்கள் தாங்களே சென்று பார்த்துவிட வேண்டியிருந்தது."

அங்கு இருந்த எதிர்பார்ப்பு மிகப் பெரியதாக இருந்தது.

"தெரியாத ஒரு நகரத்தின் மையத்தை கண்டுபிடிக்கக் கூடும். கடைசி இன்கா பேரரசர் தனது மக்களில் எஞ்சியவர்களை ஒன்றுதிரட்டிய இடமாக இது இருக்கக்கூடும்" என்று எதிர்பார்க்கப்பட்டது.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், கெச்சுவா என்ற பண்டைய பழங்குடியின மொழியில் "புனித சமவெளி" என்று பொருள்படும் வில்கபாம்பா, வரலாற்றைப் போலவே புராணத்திலும் வேரூன்றிய ஒரு புகழ்பெற்ற நகரமாக மாறியிருந்தது.

1536-இல் ஸ்பானிய வெற்றியாளர்கள் தனது தலைநகரான குஸ்கோவை கைப்பற்றுவதைத் தடுக்கத் தவறிய பிறகு, இன்கா மன்னர் மான்கோ தோற்கடிக்கப்பட்ட தனது மக்களை மலைகளுக்கு அப்பால் அழைத்துச் சென்றார்.

அங்கு, மான்கோ அமைத்த தலைநகரில் அரண்மனைகளையும் கோயில்களையும் கட்டியதாகக் கூறப்படுகிறது. தனது தங்கப் புதையல்கள், மின்னும் சிலைகள் மற்றும் முன்னோர்களின் பதப்படுத்தப்பட்ட உடல்களையும் அவர் அங்கு எடுத்துச் சென்றிருந்தார்.

16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியும், பெருவின் ஸ்பானியப் படையெடுப்பை ஆவணப்படுத்தியவருமான மார்ட்டின் டி முருவாவின் கூற்றுப்படி, "இன்காக்கள் அந்தத் தொலைதூர அல்லது நாடு கடத்தப்பட்ட நிலத்திலும் குஸ்கோவின் ஆடம்பரம், பெருமை மற்றும் பிரமாண்டத்திற்கு இணையான வாழ்க்கையை அனுபவித்தனர்."

நாடுகடத்தப்பட்ட இடமாக மட்டுமல்லாமல், இன்காக்களின் எதிர்ப்புக்கான மையமாகவும் வில்கபாம்பா இருந்தது. அங்கிருந்துதான் அவர்கள் ஸ்பானியர்களுக்கு எதிரான கொரில்லா போரைத் திட்டமிட்டனர்.

தொலைதூரப் பகுதிகளிலும் கிளர்ச்சிகளைத் தூண்டினர். ஆனால், 1572-ல் ஒரு படையெடுப்பை எதிர்கொண்டபோது, இன்காக்கள் நகரத்துக்குத் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

கடைசி இன்கா தலைநகரம் காட்டுக்குள் மறைந்துபோனது. அதன் இருப்பிடம் பல நூற்றாண்டுகளாக மர்மமாகவே இருந்தது.

புராணங்களில் கூறப்படும் தொலைந்த நகரத்தைத் தேடி

1909-ல், "தங்கத்தின் தொட்டில்" என்று பொருள்படும் சோகெகிராவ் என்ற இடம் தான் புகழ்பெற்ற தொலைந்துபோன நகரமா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக, பெரு நாட்டின் நில உரிமையாளர்கள் பிங்காமை அழைத்தனர்.

அப்போது 34 வயதான அவர், பின்னர் அமெரிக்க செனட்டராக ஆனார். லத்தீன் அமெரிக்க வரலாற்றில் உதவிப் பேராசிரியராக இருந்த அவர், தற்செயலாக அந்தப் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அவர் தொல்லியல் நிபுணர் அல்ல. இன்கா இடிபாடுகளைத் தேடியும் அவர் செல்லவில்லை.

ஆனால், அபுரிமாக் மாகாணத்தின் ஆளுநரான உள்ளூர் அரசு அதிகாரி ஜுவான் ஜோசே நூனெஸ், பிங்காமின் மறுப்பை ஏற்கத் தயாராக இல்லை.

"தொல்லியல் பற்றி எனக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், புதைக்கப்பட்ட புதையல்களுக்கான தளமாக சோக்குவிராவோ எவ்வளவு மதிப்புமிக்கது என்பதை என்னால் அவரிடம் கூற முடியும் என்றும் நியூனெஸ் வலியுறுத்தினார்" என்று பிங்காம் எழுதினார்.

தொல்லியல் குறித்த எனது அறிவை அவர் தவறாக மதிப்பிட்டிருக்கிறார் என்று நான் கூறியதை, அவர் வெறுமனே எனது அடக்கத்தின் வெளிப்பாடாகவே கருதினார்" என்று பிங்காம் எழுதினார்.

"இன்காக்களைப் பற்றி எனக்கு மிகக் குறைவாகவே தெரியும்"என்பதையும் பிங்காம் தெரிவித்தார்.

அதற்குப் பதிலாக, பிரிட்டிஷ் ராயல் ஜியோகிராஃபிக்கல் சொசைட்டி வெளியிட்ட 'பயணிகளுக்கான குறிப்புகள்' (Hints to Travellers) என்ற புத்தகத்தை அவர் நம்பியிருந்தார்.

தொல்லியல் தளத்தை எதிர்கொள்ளும் போது என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகள் அந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்தன.

சோகெகிராவில் தங்கம் இருப்பதாகவோ அல்லது அது தான் புகழ்பெற்ற தொலைந்துபோன நகரம் என்பதாகவோ பிங்காம் நம்பவில்லை.

இருப்பினும், அந்தப் பயணம் அவருக்கு உத்வேகம் அளித்தது.

1911-இல், கடைசி இன்காக்களின் புகலிடத்தைக் கண்டுபிடிப்பதற்காக யேல் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுப் பயணத்துக்கு அவர் தலைமை தாங்கினார்.

"அந்த மலைத்தொடர்களுக்குப் பின்னால் ஒரு அறியப்படாத பகுதி இருப்பது போல் தெரிந்தது. அதில் பெரும் சாத்தியக்கூறுகள் நிறைந்திருக்கலாம். ஒருவேளை மான்கோவின் தலைநகரம் அங்கே மறைந்திருக்கலாம்" என்று அவர் கூறினார்.

உண்மையில், 50 ஆண்டுகளுக்குப் பிறகு சவாய் அடையாளம் கண்ட இடத்துக்கே வழிகாட்டிகள் பிங்காமை அழைத்துச் சென்றிருந்தனர். அது குஸ்கோவின் வடகிழக்கே 150 கிலோமீட்டர் (93 மைல்) தொலைவில் இருந்தது.

ஆனால், மோசமான வானிலை, உணவுப் பற்றாக்குறை மற்றும் தங்களை விட்டுச் சென்றுவிடப் போவதாக எச்சரித்த சுமை தூக்குபவர்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பிங்காம், அங்கிருந்து விரைவாக நகர்ந்துவிட்டார்.

பின்னர், மச்சு பிச்சுவில் தான் அந்தத் தொலைந்துபோன நகரத்தைக் கண்டுபிடித்ததாக அவர் கூறினார்.

மற்றொரு துணிச்சலான ஆய்வாளர் செய்தது என்ன?

1964-இல், ஒரேகான் மாகாணத்தின் போர்ட்லேண்டைச் சேர்ந்த 37 வயதான ஆய்வாளர் சவாய், பெரு நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர் அன்டோனியோ சான்டாண்டர் காஸ்செல்லியுடன் இணைந்து எஸ்பிரிட்டு பாம்பாவுக்கு அருகிலுள்ள பகுதிக்குச் சென்றார்.

முதலில், அந்த இடத்துக்குச் செல்ல வழிகாட்ட உள்ளூர்வாசிகள் மறுத்தனர். அந்த இடம் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துபவர்களை கடவுள்கள் கொன்றுவிடுவார்கள் என்ற பழங்குடியினரின் புராண நம்பிக்கையே இதற்குக் காரணம்.

மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு, பெருவைச் சேர்ந்தவர்கள் சவாயையும் சான்டாண்டரையும் பாசி படர்ந்த வில்கபாம்பாவின் இடிபாடுகளுக்கு அழைத்துச் சென்றனர்.

"எங்கள் கண்களை எங்களாலேயே நம்ப முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அது இன்னும் பிரமிப்பூட்டுவதாக மாறியது" என்று சவாய் கூறினார்.

சவாயும் சான்டாண்டரும் மூன்று மலைச் சமவெளிகளில் பரவியிருந்த இடிபாடுகளைக் கண்டுபிடித்தனர்.

அவற்றில் ஒரு அரண்மனை, கிரானைட் மற்றும் சுண்ணாம்புக் கல் கட்டடங்கள், நீரூற்றுகள் ஆகியவை இருந்தன.

முதல் சமவெளி மட்டுமே மச்சு பிச்சுவின் அளவைப் போல சுமார் நான்கு மடங்கு பெரியதாக இருந்தது.

அப்பகுதியில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வு, "புதிய வெற்றியாளர்களுக்கு எதிரான இறுதிப் போராட்டத்தில் சிக்கிய கடைசி இன்காக்கள் பயன்படுத்திய புகலிடமாக இந்த இடம் இருந்தது" என்று சவாய் நம்புவதற்கு வழிவகுத்தது.

ஆனால், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, பழங்குடியினரின் மூடநம்பிக்கைகளால் பயந்த அவர்களது வழிகாட்டிகள் அங்கிருந்து செல்லத் தொடங்கினர்.

"பொதுவாக அவர்கள் நட்பாகவும் புன்னகையுடனும் இருப்பார்கள். ஆனால், அவர்களை அந்தக் காடுகளுக்குள் அழைத்துச் சென்றபோது, அவர்கள் மாறிவிட்டனர்," என்று சவாய் கூறினார்.

இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து வெளியேறி, பின்னர் மீண்டும் வந்து ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

அவர்களது ஆய்வுப் பயணத்துக்கு ஆறு வாரங்களுக்குப் பிறகு, ஒரு பிபிசி குழுவும் அதே பாதையில் பயணம் செய்தது.

டேவிட் அட்டன்பரோவின் 'பிபிசி அட்வெஞ்சர்' தொடருக்காகத் திரைப்படம் இயக்கிய டோனி மோரிசன் , "400 ஆண்டுகளாக சில ஐரோப்பியர்களே அந்தப் பாதையில் சென்றிருக்கிறார்கள், திரைப்படக் கேமராவுடன் ஒருவர் சென்றதே இல்லை" என்று எழுதினார்.

"ஒரு வார காலம் கடினமாக நடந்த பிறகு, அடர்ந்த, அடிக்கடி மழையில் நனையும் மலைக்காடுகளுக்குள் இறங்கியதற்கு பிறகு, நாங்கள் அந்த இன்கா குடியிருப்பின் இடிபாடுகளை அடைந்தோம்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல நூற்றாண்டுகளாக காடு அந்த நகரைப் பாதுகாத்திருந்தது.

அதை ஆராய முயன்றவர்கள் கபோக் மரங்கள், படர்கொடிகள், கொடிகள் மற்றும் பெரணிகளைக் கத்தியால் வெட்டி அகற்ற வேண்டியிருந்தது.

ஒரு தகவலின்படி, "பெரிய மரங்கள் தங்களது வேர்களைச் சுவர்களையும் மாடித்தளங்களையும் சுற்றிப் பதித்திருந்தன. அவற்றின் கிளைகளில் தொலைபேசி கேபிள்களைப் போல தடிமனாகவும் வலிமையாகவும் இருந்த கொடிகள் பின்னிப் பிணைந்திருந்தன."

"இந்தக் கொடூரமான காட்டை நான் வெறுக்கிறேன்" என்று சவாய் கூறினார். இருப்பினும், "ஆய்வு செய்யாமல் இருப்பதைவிட, அங்கேயே இறப்பதையே விரும்புவேன்" என்றும் அவர் கூறினார்.

சவோய் மற்றும் சாண்டாண்டரின் கண்டுபிடிப்பு, எஸ்பிரிட்டு பம்பாவில் இருந்த இடிபாடுகள்தான் கடைசி இன்கா தலைநகரம் என்பதை நிரூபிக்கவில்லை.

ஆனால், அங்கு அவர்கள் கண்டுபிடித்த பொருளான கூரை ஓடுகள் அது வில்கபாம்பா தான் என்பதை உறுதி செய்வதற்கு வழிவகுத்தது.

"இதுவரை, இந்த ஓடுகள் தான் வலுவான நேரடி ஆதாரமாக உள்ளன. இவை வடிவமைப்பில் ஸ்பானிய பாணியைக் கொண்டிருந்தாலும், வண்ணம் மற்றும் அடையாளங்களில் தனித்துவமான இன்கா தாக்கத்தைக் கொண்டுள்ளன" என்று 1964-இல் பிபிசி தொகுப்பாளர் கூறினார்.

பின்னர், 1975 முதல் 1996 வரை லண்டனில் உள்ள ராயல் ஜியோகிராஃபிக் சொசைட்டியின் இயக்குநராகவும், இன்கா நிபுணராகவும் இருந்த ஜான் ஹெம்மிங், இந்த ஓடுகளின் முக்கியத்துவத்தை அடையாளம் கண்டார்.

துறவி மார்ட்டின் டி முருவாவின் குறிப்புகள் உள்ளிட்ட வில்கபாம்பா குறித்த நேரில் கண்டவர்களின் பதிவுகளை, அந்த இடத்தின் விவரங்களுடன் அவரால் பொருத்திப் பார்க்க முடிந்தது.

இன்காக்கள் பொதுவாக ஓலைக் கூரைகளையே பயன்படுத்தியதால், இந்தக் கூரை ஓடுகளின் கண்டுபிடிப்பு குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

ஆனால், நாடுகடத்தப்பட்ட இன்கா தலைநகரம் குறித்து முருவா எழுதிய விளக்கத்தில் ஒரு முக்கியமான குறிப்பு இருந்தது. "இன்காக்கள் வெவ்வேறு நிலைகளில் அமைந்திருந்த ஒரு அரண்மனையைக் கொண்டிருந்தனர். அது கூரை ஓடுகளால் மூடப்பட்டிருந்தது"என்பது தான் அக்குறிப்பு.

"இந்த நகரம் இருப்பதாக நீண்ட காலமாகப் பேசப்பட்டு வந்ததால், அது வரலாற்றிலிருந்து கிட்டத்தட்ட புராணமாக மாறிவிட்டது. இப்போது அதை மீண்டும் வரலாற்றுக்குக் கொண்டு வந்துள்ளோம்" என சவாய் பின்னர் கூறினார்.

எனவே, 1911-இல் பிங்ஹாம் தான் தேடி அலைந்த இடத்திற்கு அதாவது இன்கா பேரரசின் கடைசி புகலிடத்திற்கு மிக அருகில், சில அடிகளுக்குள்ளேயே நடந்து சென்றுள்ளார் என்பது தெரிகிறது.

ஆனால், சவாயைப் பொறுத்தவரை ஒரு மர்மம் நீடித்தது.

"இன்காக்களின் தங்கம் மற்றும் நகைகளில் ஒரு சிறு பகுதி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை ஸ்பானியர்களின் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக, அவர்கள் அவற்றை ஏரிகளிலும் குகைகளிலும் வீசியிருக்கலாம் என்று நம்புவதற்கு எனக்கு காரணம் உள்ளது.

முந்தைய ஆய்வுப் பயணங்களின் போது, எந்த வரைபடத்திலும் இடம்பெறாத ஏரிகளையும், வரைபடத்தில் குறிக்கப்படாத சுவர்களால் மூடப்பட்ட சுரங்கப் பாதைகளையும் நான் கண்டுபிடித்தேன்" என்று 1967-ல் எஸ்குவையர் இதழிடம் அவர் கூறினார்.

கடைசி இன்கா நகரமாக இருந்திருக்கலாம் எனத் தோன்றும் இந்த நகரத்தின் கண்டுபிடிப்பு, இப்போதும் கூட பெரும்பாலும் காட்டுக்குள் புதைந்துகிடக்கிறது. அதன் கற்களால் ஆன கட்டமைப்புகளை கொடிகளும், மர வேர்களும் சூழ்ந்து, அதன் நுழைவாயில்களைப் பாதுகாப்பது போல உள்ளன.

இந்தக் கண்டுபிடிப்பு பதில்களைவிட அதிகமான கேள்விகளையே எழுப்பியுள்ளது.

"இந்தப் பகுதி மிகவும் சுவாரஸ்யமானது. ஏனென்றால், இப்போதும் அது தொந்தரவு செய்யப்படாமலும் கொள்ளையடிக்கப்படாமலும் உள்ளது" என்று பெரு கலாசார அமைச்சகத்தின் தொல்லியல் நிபுணர் ஜேவியர் பொன்செகா 2018-இல் தி கார்டியன் இதழிடம் தெரிவித்தார்.

காட்டின் இன்னும் ஆழமான பகுதியில் மற்றொரு நகரம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

"'தொலைந்துபோன இன்கா புதையல்' என்று அழைக்கப்படும் அந்தப் புதையல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது நமக்குத் தெரியும். இந்தப் புதையல் உண்மையில் இருக்குமானால், அது எங்கே இருக்கக்கூடும் என்பதைப் பற்றி நாம் ஊகிக்கலாம்" என்று 1967-ல் சவாய் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு