'காஞ்சனா' படம் பார்த்த பாதிப்பா? மாணவிகளின் விசித்திர நடவடிக்கையால் காலியான பள்ளி - பிபிசி கள ஆய்வு

    • எழுதியவர், நிதேஷ் ராவத்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

மகாராஷ்டிராவில் அமராவதி மாவட்டத்தின் தொலைதூரப் பகுதியான மெல்காட் பகுதியில் உள்ள டோமா கிராமத்தில் அமைந்துள்ள பழங்குடியின மாணவர்களுக்கான ஆசிரமப் பள்ளி, பேய் நடமாட்டம் இருப்பதாகப் பரவிய வதந்திகளால் முற்றிலும் அமைதியாகியுள்ளது.

அந்த அச்சத்தின் காரணமாக, ஆசிரமப் பள்ளியில் பயின்ற 606 மாணவர்கள் தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களில் 263 சிறுவர்களும் 343 சிறுமிகளும் அடங்குவர்.

இங்குள்ள மாணவர்களின் கூற்றுப்படி, மாணவிகள் விடுதியில் இருந்த சில மாணவிகள் திடீரென எந்தக் காரணமும் இல்லாமல் சிரிக்கவும் அழவும் தொடங்கியுள்ளனர். வெறித்துப் பார்ப்பது, கத்துவது, கைகால்கள் இறுக்கமடைவது மற்றும் எதற்கும் பதிலளிக்காமல் இருப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மற்ற மாணவிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த விடுதியின் அருகிலேயே மாணவர்களுக்கான விடுதியும் உள்ளது. ஆனால், அங்குள்ள மாணவர்களிடம் இதுபோன்ற எந்தச் சம்பவமும் காணப்படவில்லை.

அந்தஷ்ரத்தா நிர்மூலன் அமைப்பின் செயற்பாட்டாளர்களும் இந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டுகின்றனர்.

டோமா ஆசிரமப் பள்ளி அமராவதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பஞ்ச்துங்கரி, ஏக்தாய், சுங்காடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த ஆசிரமப் பள்ளியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் உட்பட பள்ளியில் மொத்தம் சுமார் 800 மாணவர்கள் உள்ளனர். 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்குவதற்கு மூன்று அறைகள் மட்டுமே உள்ளன. இந்த அறைகள் மாணவிகள் தங்குவதற்கு போதுமானதாக இல்லை.

மாணவர் விடுதியின் நிலையும் இதேபோல்தான் உள்ளது.

பெரிய விடுதி கட்டடம் தயாராக இருந்தாலும், சுற்றுச்சுவர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் மாணவர்களுக்காக இன்னும் திறக்கப்படவில்லை. இதனால், அவர்கள் பழைய மற்றும் போதுமான வசதிகள் இல்லாத இடத்திலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

100 மீட்டர் தொலைவில் பல ஆண்டுகளாக இருந்த ஒரு மகுடா மரம் புதிய கட்டடம் கட்டுவதற்காக வெட்டப்பட்டுள்ளது. அதன்பிறகு, பேய் நடமாட்டம் குறித்த வதந்தி வேகமாகப் பரவத் தொடங்கியது.

அந்த மரத்தில் பேய்களின் குடும்பம் ஒன்று வசித்து வந்ததாகவும், மரம் வெட்டப்பட்ட பிறகு அந்தப் பேய்களின் குடும்பம் விடுதியில் வந்து குடியேறிவிட்டதாகவும் சில மாணவர்களிடையே மூடநம்பிக்கை பரவியது.

இந்த ஆசிரமப் பள்ளி கிராமத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பள்ளியைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் அமைதியாக உள்ளது. புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டபோது சில மரங்கள் வெட்டப்பட்டன. இதன் காரணமாக, பள்ளியில் பேய்கள் குறித்த மூடநம்பிக்கை பரவியது.

டோமாவில் இருந்து ஏக்தாய் கிராமம் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வசிக்கும் பல மாணவிகள் இந்த ஆசிரமப் பள்ளியில் படித்து வருகின்றனர். குறிப்பிட்ட இந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகளிடம் வித்தியாசமான அறிகுறிகள் காணப்பட்டன. நாங்கள் இந்தக் கிராமத்திற்குச் சென்றோம்.

இந்த விவகாரம் குறித்து கிராமம் முழுவதும் பேசப்பட்டு வந்தது. இந்த மாணவிகளில் ஒருவரின் தந்தையான சங்கர் திகாரின் வீட்டிற்கு நாங்கள் சென்றோம்.

அவரது மகளுக்கும் வித்தியாசமான அறிகுறிகள் காணப்பட்டன.

பிபிசி மராத்திக்கு அளித்த பேட்டியில் சங்கர் திகார், "தற்போது பள்ளி வளாகம் என் மகளுக்குப் பொருத்தமானதாக இல்லை" என்று கூறினார்.

"அவள் இதிலிருந்து குணமடைந்த பிறகு, பள்ளிக்கு அனுப்புவேன். அவள் எங்களைப் பின்தொடர்ந்து பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறாள்" என்றார்.

அன்று நடந்தது குறித்து சங்கரின் மகளுக்கு எதுவும் நினைவில் இல்லை. இருப்பினும், பள்ளியில் நடந்துகொண்டிருந்த விவாதங்களை அவள் கேட்டிருக்கிறாள்.

மகுடா மரம் வெட்டப்பட்ட பிறகு பரவிய வதந்திகளால் தான் இவை அனைத்தும் நடக்கிறது என்ற மூடநம்பிக்கை, தெரிந்தோ தெரியாமலோ, அவரது மனதில் ஆழமாகப் பதிந்திருக்க வேண்டும். இதுபோன்ற அச்சத்தின் காரணமாகவே இத்தகைய சம்பவம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்களும் தெரிவித்தனர்.

உள் கட்டமைப்பு மூடநம்பிக்கைக்கு காரணமா?

அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதியின் பெண் நிர்வாகி ஒருவர் கூறுகையில், "அடிப்படையில், இங்குள்ள மாணவிகள் தங்குவதற்கான வசதிகள் மிகவும் போதுமானதாக இல்லை. ஒரு கட்டிலில் இரண்டு, மூன்று மாணவிகள் உறங்குகின்றனர்"என்கிறார்.

"விளக்கு வசதியும் போதுமானதாக இல்லை. இத்தகைய நெருக்கடியான சூழலின் காரணமாகவும் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், மெல்காட் பகுதியில் மூடநம்பிக்கைகள் மற்றும் ஒருவரின் உடலுக்குள் மற்றொருவரின் ஆன்மா புகுந்துவிட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் புதிதல்ல.

ஒருவரின் உடல்நிலை மோசமடைந்தால், பழங்குடியின மக்கள் மருத்துவரிடம் செல்வதில்லை. மாறாக, பூம்கா பாபாவிடம் செல்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பூம்கா பாபா என்பது இதுபோன்ற முறைகளைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறும் தாந்திரீக-மாந்திரீக பாபாவைக் குறிக்கும்.

ஆனால், ஒருவகையில், அவர்கள் மூடநம்பிக்கையை வலுப்படுத்தும் பணியையே செய்கின்றனர். உள்ளூர் மக்கள் பூம்காக்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால், உள்ளூர் நிர்வாகம் கூட செய்வதறியாது தவிக்கிறது.

உள்ளூர் கிராம மக்களின் கூற்றுப்படி, இதுபோன்ற சம்பவங்கள் கிராமத்தைச் சேர்ந்த சில மாணவிகள் ஒன்றாகச் சேரும்போது மட்டுமே நடைபெறுகின்றன. அவர்களிடையே மூடநம்பிக்கை பரவியுள்ளது.

இந்த மாணவிகளில் பலர் தற்போது பள்ளிக்குத் திரும்பத் தயாராக உள்ளனர். ஆனால், அவர்களது குடும்பத்தினர் அவர்களைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராக இல்லை.

பள்ளி முதல்வர் சஞ்சய் சவுத்ரி, குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர முயற்சித்து வருகிறார்.

குழந்தைகள் தரமான கல்வியைப் பெறுவதற்காக அவர்கள் பள்ளிக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

குழந்தைகளுக்கு உடல்நலக் குறைவு இல்லை, ஆனாலும் பெற்றோரின் அச்சத்தின் காரணமாக அவர்களின் கல்வி பாதிக்கப்படுமோ என்ற கவலை நிலவுகிறது.

பேய்கள் அல்ல, மன அழுத்தம் மற்றும் கூட்டுப்பயம்

இந்தச் சம்பவத்துக்கு பேய்கள் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றும், மன அழுத்தம், அச்சம் மற்றும் வதந்திகளின் தாக்கத்தால் இது ஏற்பட்டிருக்கலாம் என்றும் மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனநல மருத்துவர் ஸ்வாதி சோனவனே கூறுகையில், மாணவிகளைப் பரிசோதித்தபோது, அவர்களிடம் பிரிவினை/மாற்றம் குறித்த அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததாகக் கூறினார்.

எந்தக் காரணமும் இல்லாமல் சிரிப்பது மற்றும் அழுவது, நினைவாற்றல் இழப்பு, அச்சம் மற்றும் மன அழுத்தம் போன்ற மனரீதியான அறிகுறிகள் அவர்களிடம் காணப்பட்டன.

மூட நம்பிக்கை, அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் அச்சம் காரணமாக இதுபோன்ற அறிகுறிகள் ஏற்படலாம் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இரண்டாவதாக, இந்த மாணவிகள் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாணவர்களின் மனதில் உள்ள அச்சத்தைப் போக்குவதற்காக அந்தஷ்ரத்தா நிர்மூலன் சமிதி அமைப்பின் பணியாளர்கள் மெல்காட் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இதற்கு முன்பு, இந்த சமிதி 300-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் கலந்துரையாடி, மீண்டும் பள்ளிக்குத் திரும்புவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சில திரைப்படங்கள் மற்றும் பேய்கள் குறித்த விவாதங்களும் பள்ளியின் சூழலைப் பாதித்துள்ளதாக சமிதி செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

இந்த வகையான சம்பவம் ஜூலை 29-ஆம் தேதி தொடங்கியது.

முதலில், நான்கு மாணவிகள் குளியலறையில் இருந்து வெளியே வந்த பிறகு வித்தியாசமாக நடந்துகொள்ளத் தொடங்கினர். அதன்பிறகு, மற்ற மாணவிகளிடமும் இதுபோன்ற அறிகுறிகள் காணப்பட்டன.

இருப்பினும், இந்த மாணவிகளில் பெரும்பாலானோர் வீட்டுக்குச் சென்ற பிறகு முற்றிலும் ஆரோக்கியமாக உள்ளனர்.

அவர்கள் வீட்டு வேலைகளையும் விவசாய வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் 'காஞ்சனா' என்ற திகில் திரைப்படத்தைப் பார்த்திருந்தனர்.

அதுவும் இந்தப் பெண்களிடையே பொதுவாகக் காணப்பட்ட ஒரு விஷயம்.

இரண்டாவதாக, இந்த அனைத்து மாணவிகளும் ஒரே மாதிரியாக நடந்துகொண்டதாக ஒருவர் சுட்டிக்காட்டினார்.

அதாவது, அந்த மாணவிகள் ஒருவரை ஒருவர் பார்த்து அதேபோன்று நடந்துகொண்டனர்.

தற்போது, ஆசிரமப் பள்ளியின் விடுதி கிட்டத்தட்ட வெறிச்சோடிக் கிடக்கிறது.

இருப்பினும், வீட்டுக்குச் சென்றுள்ள பல மாணவிகள் மீண்டும் பள்ளிக்குத் திரும்ப விரும்புகின்றனர். "பள்ளி மூடப்படாது அல்லவா?" என்று சில மாணவிகளும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் கூடுதல் ஆணையர் சந்தீப் கோலாயித் கூறுகையில், பாதுகாப்பான சூழலில் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர அனைத்து சாத்தியமான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பேய் நடமாட்டம் குறித்த வதந்திகளால் பள்ளி அமைதியாகிவிட்ட போதிலும், இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்குப் பின்னால் இருப்பது அச்சம் மற்றும் மூடநம்பிக்கையா அல்லது மன அழுத்தம், கூட்டுப் பயம் மற்றும் வதந்திகளின் தாக்கமா என்பதை அறிவியல் ரீதியாக ஆராய்வது இப்போது முக்கியமாக இருக்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு