You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி சிஜேபி போராட்டக்காரர்களை நவீன தொழில்நுட்பம் மூலம் கண்காணித்த அரசு - என்ன செய்யப் போகிறது? விடை தெரியாத கேள்விகள்
- எழுதியவர், நய்லா க்வாஜா
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ஜூலை 20 அன்று டெல்லியின் ஜந்தர் மந்தரில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு செய்தி சேகரிப்புக்காகச் சென்றிருந்த ஒரு பத்திரிகையாளர் எதிர்பாராத ஒரு காட்சியைக் கண்டார்.
புலனாய்வு பத்திரிகையாளரான ஸ்ரிஷ்டி ஜெய்ஸ்வால், ஜந்தர் மந்தரில் போராட்டத்தைப் பற்றி செய்தி சேகரித்து கொண்டிருந்தார். போராட்ட இடத்தின் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கண்காணிப்பு வேன் மீது அவர் கேமராவை ஜூம் செய்தார். அதன் உள்ளே இருந்த மானிட்டரில் அவருக்கே அவரது முகம் தெரிந்தது.
ஸ்ரிஷ்டியின் கூற்றுப்படி, அந்த கேமரா அவரது முகத்தை நெருக்கமாகவும் தொலைவாகவும் தொடர்ந்து ஜூம் செய்து கொண்டிருந்தது.
"முதலில் என்னையே அடையாளம் காண ஒரு விநாடி ஆனது. பிறகு 'ஐயோ, இது நான்தான்' என்று உணர்ந்தேன்," என்கிறார் அவர்.
அந்த வேனுக்குள் பல திரைகளில் பல்வேறு வகையான கண்காணிப்பு நடைமுறைகள் நடப்பதை அவர் பார்த்ததாக கூறுகிறார். இதுகுறித்து உள்ளே இருந்த அதிகாரியிடம் அவர் கேட்டபோது, அங்கு PTZ (Pan-Tilt-Zoom) கேமராக்கள் இருப்பதாகவும், அவை தானாகவே ஜூம் செய்யும் எனவும் கூறப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து கேள்வி எழுப்பியதும், வேனின் கதவு மூடப்பட்டது.
அன்று ஜந்தர் மந்தரில் கண்காணிப்பு வேன்கள் மட்டுமல்லாமல், சிசிடிவி கேமராக்கள், டிரோன்கள் மற்றும் போலீஸ் புகைப்படக்காரர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மற்றொரு பத்திரிகையாளரான இலா காஸ்மி, அங்கிருந்த ஒரு கண்காணிப்பு வேனை புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்தார். " அந்த வேனில் 'நேரடியாக முகத்தை அடையாளம் காணும் அமைப்பு' (Live Facial Recognition System) என்று குறிப்பிடப்பட்டிருந்தது" என்கிறார் அவர்.
முகங்களை கேமரா எவ்வாறு அடையாளம் காண்கிறது?
எளிமையாகச் சொன்னால், முக அடையாளக் கணினி தொழில்நுட்பம் (Facial Recognition Technology - FRT) முதலில் ஒரு நபரின் முகத்தைக் கேமரா மூலம் பதிவு செய்கிறது. பின்னர் மென்பொருள் அந்த முகத்தின் டிஜிட்டல் வடிவத்தை உருவாக்கி, ஏற்கனவே ஒரு தரவுத்தளத்தில் இருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பிடுகிறது.
ஆனால் ஜந்தர் மந்தரில் பயன்படுத்தப்பட்ட அமைப்பில் எந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டது, எந்த தரவுத்தளத்துடன் முகங்கள் ஒப்பிடப்பட்டன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
பத்திரிகையாளர்களான ஸ்ரிஷ்டி ஜெய்ஸ்வாலும் கௌஷிக் ராஜும் இது தொடர்பாக டெல்லி போலீசிடம் பல கேள்விகளை எழுப்பினர்.
அவர்கள் கேட்ட கேள்விகளில்:
- கண்காணிப்பு வேனில் எந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது?
- பதிவு செய்யப்பட்ட நபர்களின் தரவுகள் எங்கு சேமிக்கப்படுகின்றன?
- அந்தத் தகவல்களுக்கு பின்னர் எப்படி பயன்படுத்தப்படுகிறது?
என்பவையும் அடங்கும்.
ஆனால் இந்தக் கேள்விகளுக்கு தெளிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
டிஜிட்டல் உரிமைகள் ஆராய்ச்சியாளரான திஷா வர்மா, முக அடையாளத் தொழில்நுட்பத்தில் உள்ள மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்று அதன் வெளிப்படைத்தன்மையின்மை என்கிறார்.
ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த காவல்துறை எந்த தரவுத்தளத்தைப் பயன்படுத்துகிறது என்பது தெளிவாக இல்லை என்று அவர் கூறுகிறார்.
தரவுத்தளம் உள்ளூர் மட்டத்தில் இருந்தால் பிற மாநிலங்களிலிருந்து வந்த போராட்டக்காரர்களின் அடையாளம் எப்படிக் கண்டறியப்படும்? தேசிய அளவிலான தரவுத்தளம் பயன்படுத்தப்பட்டால் தவறான பொருத்தங்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்காதா? என்ற கேள்விகளையும் அவர் எழுப்புகிறார்.
இந்த தொழில்நுட்பம் திடீரென வந்தது அல்ல
டெல்லி ஜந்தர் மந்தரில் காணப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்காக, அரசு ஆவணங்கள், தகவல் அறியும் உரிமை (RTI) பதில்கள், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பழைய செய்தி அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்தியாவில் காவல்துறையின் நடவடிக்கைகளில் முக அடையாளத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது.
2019ஆம் ஆண்டு, தேசிய தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு (National Automated Facial Recognition System - AFRS) திட்டத்திற்கான டெண்டரை தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டது.
இதன் நோக்கம், சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு புகைப்படங்களின் மூலம் நபர்களை அடையாளம் காண உதவும் ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பை உருவாக்குவதாகும்.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வழங்கிய விளக்கத்தின் படி, இந்த அமைப்பு:
- குற்றவாளிகளை அடையாளம் காண,
- அடையாளம் தெரியாத சடலங்களை கண்டறிய,
- காணாமல் போனோர் மற்றும் கண்டுபிடிக்கப்பட்டோரின் அடையாளத்தை உறுதிப்படுத்த
பயன்படுத்தப்படவிருந்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் நகர்ப்புற கண்காணிப்பு கட்டமைப்புகளும் விரிவடைந்தன.
ஸ்மார்ட்சி சிட்டி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் (Integrated Command and Control Centres - ICCCs) பல்வேறு கேமராக்கள் மற்றும் வீடியோ உள்ளீடுகளை ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கக்கூடிய உட்கட்டமைப்பை உருவாக்கின.
இது பரவலான பொது கண்காணிப்புக்காக அல்ல என்றும், ஏற்கனவே குற்றப் பதிவுகள் கொண்ட நபர்களை அடையாளம் காண உதவுவதற்காக பயன்படுத்தப்படுவது என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.
அதே நேரத்தில், அனைத்து ஐசிசிசி மையங்களும் முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன என்பதல்ல. ஆனால் நகரங்களின் பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க ஒரு வலுவான அடித்தளத்தை இந்த மையங்கள் உருவாக்கியுள்ளன.
ஜந்தர் மந்தரில் மட்டும் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை
டெல்லி காவல்துறை முன்பும் பல்வேறு விசாரணைகளில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளது.
ஆர்டிஐ பதில்கள் மற்றும் அதிகாரபூர்வ தகவல்களின் அடிப்படையில், 2020 வடகிழக்கு டெல்லி கலவரங்கள் உள்ளிட்ட பல வழக்குகளின் விசாரணையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
2020 மார்ச் மாதத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி கலவர விசாரணையில் முக அடையாள மென்பொருளின் உதவியுடன் 1,922 பேரை அடையாளம் கண்டதாக தெரிவித்தார்.
ஆனால் டிஜிட்டல் அடையாளங்களை இறுதியான ஆதாரமாக ஏற்றுக்கொள்வதில் பல கேள்விகள் எழுந்துள்ளன.
டெல்லி கலவர வழக்குகள் ஒன்றில், முகமது ஆரிஃப் என்பவரின் அடையாளம் குறித்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், போலீஸ் வழங்கிய டிஜிட்டல் அடையாள ஆதாரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியது.
டிஜிட்டல் அடையாளம் மற்றும் ஒரு நபரின் உண்மையான அடையாளம் இரண்டும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்று பத்திரிகையாளர் கௌஷிக் ராஜ் சுட்டிக்காட்டுகிறார்.
தவறாக அடையாளம் காணப்பட்டால் என்னவாகும்?
முக அடையாள காணும் தொழில்நுட்பம் குறித்து எழும் முக்கியமான கேள்வி அதன் துல்லியம் மட்டுமல்ல.
"அது தவறாக இருந்தால் என்ன ஆகும்?" என்பதும் முக்கியமே.
திஷா வர்மா, தெலங்கானாவில் முக அடையாளம் காணும் தரவுத்தளம் கசிந்த உதாரணத்தை குறிப்பிடுகிறார்.
கசிந்த அந்த தரவுத்தளத்தின் ஸ்கிரீன்ஷாட்களில், ஒரே புகைப்படத்துக்கு பல்வேறு சாத்தியமான பொருத்தங்கள் காட்டப்பட்டிருந்தன. அவற்றில் அதிக ஒற்றுமை காட்டப்பட்டிருந்தாலும், உண்மையில் அந்த முகங்கள் ஒன்று போல் தெரியவில்லை.
தவறான அடையாளத்தின் விளைவுகள் என்ன?
- ஒருவர் குற்றவாளி என சந்தேகிக்கப்படலாம்,
- அவரை போலீசில் ஆஜராகச் சொல்லலாம்,
- அவரது பெயர் அதிகாரபூர்வ பதிவுகளில் இடம்பெறலாம்,
- அடுத்தக்கட்ட விசாரணைகளும் பாதிக்கப்படலாம்.
இதனால்தான், ஒரு மென்பொருள் அல்காரிதம் ஒருவரை சந்தேக நபராகக் குறித்தால், அந்த முடிவை அவர் எவ்வாறு எதிர்கொள்வது என்ற கேள்வியை நிபுணர்கள் எழுப்புகின்றனர்.
கண்காணிப்பும் அச்ச உணர்வும்
ஜந்தர் மந்தரில் கண்காணிப்பின் தாக்கம் தொழில்நுட்ப ரீதியாக மட்டும் இருக்கவில்லை.
காவல்துறை புகைப்படக்காரர்கள் எப்போதும் தங்களைப் பதிவு செய்து கொண்டிருப்பது போன்ற உணர்வு இருந்ததாக ஸ்ரிஷ்டி ஜெய்ஸ்வால் கூறுகிறார்.
தனது முகமும் எளிதாக அடையாளம் காணப்படலாம் என்பதை அறிந்தபோது, எதிர்காலத்தில் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டதாக இலா காஸ்மி கூறுகிறார்.
சில போராட்டக்காரர்கள் முகத்தை மூடிக்கொண்டு வந்ததாகவும் தெரியவந்தது. காரணம், கேமராக்கள் மூலம் தங்களை அடையாளம் காணலாம் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது.
இதிலிருந்து ஒரு முக்கியமான அரசியலமைப்பு சார்ந்த கேள்வி எழுகிறது:
ஒரு போராட்டத்தில் பங்கேற்பது கண்காணிக்கப்படும் என்ற அச்சம், மக்களைத் தங்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கிறதா?
சட்டம் என்ன சொல்கிறது?
இணையச் சுதந்திர அறக்கட்டளை (IFF) பெற்ற ஆர்டிஐ பதில்களில், டெல்லி காவல்துறையிடம் முக அடையாள காணும் தொழில்நுட்பப் பயன்பாடு, தரவு சேமிப்பு காலம் மற்றும் தனியுரிமை தாக்க மதிப்பீடு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அந்த பதில்களில், தெளிவான தரவு சேமிப்பு கொள்கை, தனியுரிமை தாக்க மதிப்பீடு, சிறப்பு செயல்முறை வழிகாட்டி எதுவும் வழங்கப்படவில்லை.
இணையச் சுதந்திர அறக்கட்டளையைச் சேர்ந்த அபார் குப்தாவின் கூற்றுப்படி, காணாமல் போன குழந்தைகளை கண்டறியும் நோக்கில் மட்டும் முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் முன்பு அனுமதி அளித்திருந்தது.
ஆனால் அதே காரணத்தை அமைதியான போராட்டக்காரர்களைக் கண்காணிப்பதற்கு விரிவுபடுத்த முடியாது என அவர் வாதிடுகிறார்.
கே.எஸ். புட்டசுவாமி vs இந்திய ஒன்றியம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அவர் மேற்கோள் காட்டுகிறார். அந்தத் தீர்ப்பில் தனியுரிமை ஒரு அடிப்படை உரிமை என அங்கீகரிக்கப்பட்டது.
ஒருவர் பொதுவெளியில் இருப்பதால் மட்டும் அவரது தனியுரிமை அழிந்து விடாது. அந்த உரிமையில் அரசு தலையிட வேண்டுமெனில் தெளிவான சட்ட அடிப்படை அவசியம் என அவர் வலியுறுத்துகிறார்.
ஆனால் ஜந்தர் மந்தரில் முக அடையாளம் காணும் தொழில்நுட்பப் பயன்பாட்டின் சட்டபூர்வத்தன்மை குறித்து நீதிமன்றங்கள் இன்னும் இறுதியான தீர்ப்பை வழங்கவில்லை.
டெல்லி உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் டெல்லி காவல்துறையும் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம், முக அடையாள மற்றும் உயிரியல் கண்காணிப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதே நேரத்தில், சமீபத்திய போராட்டங்களின்போது இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதை டெல்லி காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நியாயப்படுத்தியுள்ளது.
டெல்லி போலீசிடம் நாங்கள் கேட்ட கேள்விகள்
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி காவல்துறையை தொடர்புகொள்ள பலமுறை முயற்சி செய்யப்பட்டது.
நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பியவை...
- ஜூலை 20 போராட்டத்தில் முக அடையாளம் காண எந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டது?
- எந்த தரவுத்தளத்துடன் முகங்கள் ஒப்பிடப்பட்டன?
- பதிவு செய்யப்பட்ட புகைப்படங்கள் மற்றும் முகத் தரவுகள் எவ்வளவு காலம் சேமிக்கப்படுகின்றன?
- அடையாளம் கண்ட எந்த போராட்டக்காரருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
- இந்த முழு கண்காணிப்பு அமைப்பிற்கான சட்ட அடிப்படை அல்லது நிலையான செயல்பாட்டு நடைமுறை (SOP) என்ன?
ஆனால் செய்தி வெளியான நேரம் வரை இந்தக் கேள்விகளுக்கு விரிவான பதில் எதுவும் கிடைக்கவில்லை.
எப்படியாயினும், இது யாருடைய கேள்வி?
ஜூலை 20 இரவு ஜந்தர் மந்தரில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது. போராட்டக்காரர்கள் சென்றுவிட்டனர். சாலைகள் வெறிச்சோடின.
ஆனால் இந்த ஆய்வின் போது கண்காணிப்பின் பல அடுக்குகள் வெளிப்பட்டன:
- சிசிடிவி கேமராக்கள்
- டிரோன்கள்
- கண்காணிப்பு வேன்கள்
- புகைப்படக்காரர்கள்
- முகஅடையாளம் காணும் தொழில்நுட்பம்
ஆனாலும் சில அடிப்படை கேள்விகள் இன்னும் பதிலின்றி உள்ளன.
- முகம் எந்த தரவுத்தளத்தில் தேடப்படுகிறது?
- புகைப்படங்கள் எவ்வளவு காலம் பாதுகாக்கப்படுகின்றன?
- தவறான அடையாளம் ஏற்பட்டால் பொறுப்பு யாருக்கு?
- ஒரு அல்காரிதம் ஒருவரை சந்தேக நபராகக் குறித்தால், அவர் அதற்கு எதிராக எவ்வாறு முறையிட முடியும்?
ஒருவேளை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள் பற்றிய மிகப்பெரிய கேள்வி, அவை நம்மை எவ்வளவு துல்லியமாக அடையாளம் காண முடியும் என்பதல்ல.
உண்மையான கேள்வி இதுதான்:
- நம்மைக் கண்காணிக்கும் அந்த அமைப்பை நாம் உண்மையில் அடையாளம் கண்டு புரிந்துகொள்கிறோமா?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு