'இடித்துக்கொண்ட தலைகள்': ஜெய்ஸ்வால், அசிதா பெர்னாண்டோவுக்கு அபராதம் - களத்தில் என்ன நடந்தது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது ஏற்பட்ட மோதல் சம்பவத்துக்காக இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு ஐசிசி, அவர்களது போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதித்துள்ளது.

இதனுடன், இரு வீரர்களுக்கும் தலா ஒரு டிமெரிட் புள்ளியையும் ஐசிசி வழங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், ஜெய்ஸ்வால் 45 ரன்களில் அசிதா பெர்னாண்டோவின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனபோது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த மோதல் குறித்து பேசிய ஜெய்ஸ்வால், இந்தச் சம்பவம் குறித்து ஒரு தீர்மானத்துக்கு வருவதற்கு முன்பு பெர்னாண்டோ தன்னிடம் என்ன கூறினார் என்பதைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை இந்தியா வீழ்த்தியது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஐசிசி எடுத்த முடிவு என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், "கொழும்பில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தின் முதல் நாளில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை பந்துவீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

''இரு வீரர்களும் ஐசிசி வீரர்கள் மற்றும் வீரர்களின் உதவிப் பணியாளர்களுக்கான நடத்தை விதிமுறைகளின் 2.12-வது பிரிவை மீறியதாக கண்டறியப்பட்டுள்ளனர்.''

''இதன் விளைவாக, ஜெய்ஸ்வால் மற்றும் பெர்னாண்டோ ஆகிய இருவருக்கும் அவர்களது போட்டி ஊதியத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டதுடன், தலா ஒரு டிமெரிட் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.''

மேலும், கடந்த 24 மாதங்களில் இரு வீரர்களும் எந்தவித தவறும் செய்ததில்லை என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது.

என்ன மோதல் நடந்தது?

ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், "இந்திய அணியின் பேட்டிங் இன்னிங்ஸின் 17-வது ஓவரில் பெர்னாண்டோ, ஜெய்ஸ்வாலை ஆட்டமிழக்கச் செய்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. அப்போது இந்திய பேட்டர் பெர்னாண்டோவை நோக்கிச் சென்றார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பெர்னாண்டோ தனது தலையை ஜெய்ஸ்வாலை நோக்கி முன்னோக்கி நகர்த்தினார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜெய்ஸ்வாலும் முன்னோக்கி சாய்ந்தார். அப்போது இருவரின் தலைகளும் மோதிக்கொண்டன," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு வீரர்களும் தங்களது தவறை ஒப்புக்கொண்டதுடன், எமிரேட்ஸ் ஐசிசி எலைட் பேனல் போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் விதித்த தண்டனையையும் ஏற்றுக்கொண்டனர். எனவே, இந்த விவகாரத்தில் முறையான விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

இதற்கிடையில், அசிதா பெர்னாண்டோவுடன் ஏற்பட்ட கடும் வாக்குவாதம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் பதிலளித்துள்ளார்.

"அவர் என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், தயவுசெய்து முடிவுக்கு வராதீர்கள். ஒருவர் எல்லை மீறினால், 'இந்தியா போராடும்; பதிலடி கொடுக்கும்' என்பதை அவரிடம் நாங்கள் சொல்ல வேண்டும்," என்று ஜெய்ஸ்வால் இன்ஸ்டாகிராமில் கிரிக்பஸ் வெளியிட்ட வீடியோவுக்கு கீழ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெய்ஸ்வால் கருத்து தெரிவித்த அந்த வீடியோவில், பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, ஜெய்ஸ்வால் அங்கிருந்து அமைதியாக விலகிச் சென்றிருக்கலாம் என்று கூறியிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இத்தகைய சம்பவங்கள் நடப்பது இயல்புதான் என்றும், அவற்றைத் தாண்டி முன்னேற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் நேர்மறையான பக்கத்தைப் பார்க்க வேண்டும். நான் நேர்மறையாகச் சிந்திப்பவன். எதிர்மறையான விஷயங்கள் நடக்கும். அது பரவாயில்லை. ஒவ்வொரு வீரருக்கும் தனித்துவமான குணம் உள்ளது''என்று அவர் கூறினார்.

"ஆனால், ஒரு வரம்பை நிர்ணயித்தால் வீரர்கள் அதைத் தாண்டாததை கிரிக்கெட் வாரியம் உறுதி செய்ய வேண்டும்." என்றும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு