You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கண்ணீர் முடிவுக்கு வந்துவிட்டது' - விஜயின் அறிவிப்பு குறித்து பரந்தூர் மக்கள் கூறுவது என்ன?
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக, சட்டப்பேரவையில் திங்கள்கிழமையன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
அரசின் அறிவிப்புக்கு பரந்தூர் கிராம மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆனால், "மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்" என, தி.மு.க விமர்சித்துள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 110வது விதியின்கீழ் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
அப்போது பேசிய அவர், "சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் இயக்கப்படுகிறது. தற்போது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இது உள்ளது" எனக் கூறினார்.
வளர்ந்து வரும் சென்னை மாநகரத்தின் தேவைகள், பயணிகளின் வசதிகள், சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தனது பேச்சில் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
"புதிய விமான நிலையம் அமைப்பதற்கு தேவைப்படும் இடம் விவசாயிகளை பாதிக்காத வகையிலும் குடியிருப்புகளை அகற்றாத வகையிலும் அமைக்க வேண்டும்" என முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார்.
ஆனால், முந்தைய அரசு விவசாயிகளை பாதிக்கும் வகையிலும் குடியிருப்புகளை அகற்றிவிட்டு விமான நிலையம் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
விமான நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரந்தூரில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அம்மக்களைக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சந்தித்துப் பேசியதை தனது பேச்சில் முதலமைச்சர் ஜோசப் விஜய் குறிப்பிட்டார்.
"பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 கிராமங்களில் அமையவுள்ள விமான நிலையத்தை எதிர்த்துப் போராடும் மக்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்" எனக் கூறினார்.
நீண்டநாட்களுக்கு மேலாக திட்டத்துக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறிய அவர், "விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு. தங்களின் நிலங்களைக் காப்பதற்காக அவர்கள் போராடி வருகின்றனர்" எனப் பேசினார்.
துறைசார்ந்த வல்லுநர்களிடம் ஆலோசித்து விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
"அந்த இடங்களில் தொழில்நுட்பரீதியான சாத்தியக் கூறுகளை சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்துக்கான இடம் இறுதி செய்யப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாகவும் சில அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார்.
அதன்படி, மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து அதன் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளைக் கையாளும் வகையில் 'டெர்மினல் 5' என்ற புதிய முனையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
"தற்போது மீனம்பாக்கத்தில் நடைபெற்று வரும் 'டெர்மினல் 3' முனையம் முடிந்த பிறகு ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாளக் கூடியதாக இருக்கும்" எனக் கூறிய அவர், "டெர்மினல் 5 பயணிகள் முனையம் பணிகள் முடிந்த பிறகு ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளைக் கையாளக் கூடியதாக இருக்கும்" எனக் கூறினார்.
"சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு புதிய விமான நிலையம் அமைக்கப்படும் வரை பயணிகளின் போக்குவரத்துத் தேவை பூர்த்தி செய்யப்படும்" எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
'பொருளாதாரத்தை பாதிக்கும்' - தங்கம் தென்னரசு
அரசின் அறிவிப்புக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து தி.மு.க எம்.எல்.ஏ கே.என்.நேரு பேச முயன்றபோது, அதற்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்தார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான தங்கம் தென்னரசு, "பரந்தூரில் விமான நிலையம் அமைவதுதான் சரியானதாக இருக்கும். அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு அறிவித்துள்ளனர். இது மாநிலத்தின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் முக்கியமான ஒன்று. இது பொருளாதார வளர்ச்சிக்கும் தொழில் வளர்ச்சிக்கும் முக்கியமானது" என்கிறார்.
பரந்தூரை தேர்வு செய்வதற்கு முன்னதாக பல இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய அவர், "தொழில்நுட்பரீதியான பிரச்னைகளை ஆய்வு செய்த பிறகே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது" என்கிறார்.
'கண்ணீர் முடிவுக்கு வந்துவிட்டது' - பரந்தூர் மக்கள்
"விமான நிலையம் வந்தால் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் தொழில் வளர்ச்சியைப் பெறும் வாய்ப்புகள் உருவாகும். பரந்தூரில் விமான நிலையம் அமையவிருந்த 5746 ஏக்கரில் 90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன" என தங்கம் தென்னரசு கூறினார்.
ஆனால், தற்போது வரை சுமார் 1,300 ஏக்கர் வரை நிலங்கள் மட்டுமே பரந்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுகிறார், தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு.
90 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதற்கு அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்தார்.
"நீண்டநாட்களாக இருந்த மனக்குழப்பம், நாங்கள் சிந்திய கண்ணீர் எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது" எனக் கூறுகிறார், பரந்தூர் புதிய விமான நிலையத் திட்ட எதிர்ப்புக் குழுவின் தலைவர் சுப்ரமணியம்.
"13 கிராம மக்களின் குடியிருப்புப் பகுதிகளை தமிழ்நாடு அரசு மீட்டுக் கொடுத்துவிட்டது. தேர்தலுக்கு முன்னதாக த.வெ.க தலைவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிக் கொடுத்துவிட்டார்" என அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
3 ஆண்டுகளில் முடிவை எட்டிய பரந்தூர்
காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் கடந்த 2023-ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க அரசு முனைப்பு காட்டியது.
புதிய விமான நிலையப் பணிகளுக்கு 5746.18 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கின.
நிலத்தை ஒப்படைக்கும் மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு 1822.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பரந்தூரில் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, தண்டலம் உள்பட 13 கிராமங்களில் இருந்து நிலத்தைக் கையகப்படுத்தி விமான நிலையமும் அணுகுசாலைகளும் அமைக்கப்பட உள்ளதாக, தமிழ்நாடு அரசு அறிவித்தது.
புதிய விமான நிலையத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
சுமார் ஆயிரம் நாட்களைக் கடந்து அவர்களின் போராட்டம் நீடித்தது. இந்தக் கிராமத்தில் 920 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த அரசு திட்டமிட்டது. "இதனால் வரைபடத்தில் ஏகனாபுரம் என்ற கிராமமே இல்லாமல் போய்விடும் என்ற அச்சத்தில் போராட்டங்களை முன்னெடுத்தோம்" என்கிறார், சுப்ரமணியம்.
'இழப்பீட்டைத் திருப்பித் தரத் தயார்'
இக்கிராம மக்களின் எதிர்ப்பு காரணமாக ஏகனாபுரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளால் நிலங்களைக் கையகப்படுத்த முடியவில்லை.
"ஆனால், எங்களின் நிலங்களை வங்கிகளின் அடமானம் வைக்க முடியாத நிலையும் உருவானது" என்கிறார் சுப்ரமணியம்.
அதேநேரம், நெல்வாய், நாகப்பட்டு உள்பட சில கிராமங்களில் அரசின் விமான நிலையத் திட்டத்துக்கு ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களைக் கொடுத்துள்ளனர்.
"பல்வேறு வகைகளில் அழுத்தம் கொடுத்து நிலங்களைக் கையகப்படுத்தினர். அதை மீண்டும் பெற முடியுமா எனத் தெரியவில்லை. அரசிடம் இருந்து பெற்ற இழப்பீட்டைத் திருப்பித் தர சிலர் தயாராக உள்ளனர்" என்கிறார், பரந்தூரில் உள்ள தண்டலம் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ் பாபு.
அந்தவகையில், இழப்பீட்டுத் தொகையை திரும்ப ஒப்படைத்தால் அவர்களிடமே நிலத்தை ஒப்படைப்பதற்கான வழிவகைகளை அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
"இங்கு விவசாயம், நிலத்தடி நீருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற் பூங்காவை அரசு அமைக்க வேண்டும்" என்கிறார், சுப்ரமணியம்.
'சட்டரீதியாக போராடுவோம்' - தி.மு.க எம்.பி வில்சன்
அரசின் அறிவிப்புக்கு எதிராக தி.மு.க தலைவருடன் பேசி சட்டரீதியாக சில விஷயங்களை முன்னெடுக்க உள்ளதாகக் கூறுகிறார், மூத்த வழக்கறிஞரும் தி.மு.க எம்.பியுமான வில்சன்.
கடந்த ஜூலை 20-ஆம் தேதி பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் இரண்டு கேள்விகளை வில்சன் எழுப்பியிருந்தார். அதில், 'பரந்தூருக்கு மாற்றாக வேறு இடத்தில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளதா?' எனக் கேட்டிருந்தார்.
அதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல், "இல்லை" என்று பதில் அளித்திருந்தார். இதனால், 'திட்டம் தொடருமா?' என்ற விவாதம் ஏற்பட்டது.
''தேர்தல் வாக்குறுதி என்ற அடிப்படையில், த.வெ.க அரசு திட்டத்தைக் கைவிட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு பின்னோக்கிப் போவதற்கான சூழல்கள் உருவாகும்" என்கிறார் வில்சன் எம்.பி.
பரந்தூரில் சர்வதேச பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்காக 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி கொள்கைரீதியான ஒப்புதலை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
'பரந்தூர் விமான நிலையத்தைக் கைவிடுவது தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் படுகுழியில் தள்ளிவிடும்' என, தி.மு.க தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
'மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக அவசியமானது. அதை வேண்டாம் என மறுத்திருப்பது மாற்றமல்ல, பெருத்த ஏமாற்றம்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சாத்தியமுள்ள அனைத்து மாற்று இடங்களையும் கவனமாகப் பரிசீலித்த பின்பு பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறியுள்ள ஸ்டாலின், 'பலகட்டப் பணிகள், ஒப்புதல்கள் நிறைவடைந்த நிலையில் ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானம் விரைந்து தொடங்கப்பட பல திட்டங்களை நாங்கள் வைத்திருந்தோம்' எனக் கூறியுள்ளார்.
'தற்போது அமைந்துள்ள புதிய அரசு மீண்டும் வேறு இடத்தைத் தேர்வு செய்து பணிகள் தொடங்குவதற்கு முன், தமிழ்நாட்டின் வளர்ச்சியே மொத்தமாக நின்றுவிடும்' என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு