You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'விவாகரத்து, ஸ்மார்ட்போன்கள், கட்டுப்பாடு' - தாலிபன்கள் ஆளும் ஆப்கானிஸ்தான் எப்படி உள்ளது?
- எழுதியவர், கவூன் கமூஷ்
- பதவி, பிபிசி உலக சேவை
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
ஆளுநர் அப்துல்லா சர்ஹாதி, உடைந்த கையுடன் இருக்கும் ஒரு சிறுவனுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பணம் வழங்குகிறார்.
மேலும், உள்ளூர் மசூதிக்காகவும் நிதியுதவி செய்கிறார்.
அதன்பிறகு, வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள அவரது அலுவலகத்தில் ஆச்சரியமளிக்கும் ஒரு உரையாடல் நடைபெறுகிறது.
இளம் பெண் ஒருவர், முன்னாள் தாலிபன் தளபதியும் நரைத்த தாடியுடன் இருப்பவருமான ஆளுநர் அப்துல்லா சர்ஹாதியிடம், தனது கணவரை விவாகரத்து செய்ய விரும்புவதாகக் கூறுகிறார்.
பல மாதங்களாக தனது கணவர் தன்னைத் துன்புறுத்தி அடித்து வந்ததாக அவர் குற்றம்சாட்டுகிறார்.
விவாகரத்து செய்யக்கூடாது என்று கூறினாலும், அந்தப் பெண் தனது முடிவில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை.
பெண்கள் மேல்நிலைக் கல்வி கற்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நாட்டில், 18 வயதான அந்தப் பெண் தனது தரப்பை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் எடுத்துரைக்கிறார்.
அவரது முகம் முழுவதும் முழுமையாக மூடப்பட்டிருந்ததுடன், அவர் ஒரு கண்ணாடியும் அணிந்திருந்தார்.
"நாங்கள் ஒன்றாக வாழ்வதற்கு ஏதேனும் வாய்ப்பு இருந்திருந்தால், நான் இங்கு வந்திருக்க மாட்டேன்… நான் எனது முடிவை எடுத்துவிட்டேன்" என்று அவர் கூறுகிறார்.
விவாகரத்தைத் தவிர்க்குமாறு அவரை சமரசம் செய்ய முயன்ற பிறகு, ஆளுநர் பெண்கள் "சிந்திக்கும் திறனற்றவர்கள்" என்றும் "அறிவாற்றலில் குறைபாடு உள்ளவர்கள்" என்றும் கருத்து தெரிவிக்கிறார்.
அவரைச் சுற்றியிருந்த ஆண் அதிகாரிகள், பாதுகாவலர்கள் மற்றும் பெரியவர்கள் இதைக் கேட்டு சிரிக்கின்றனர்.
2021-ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசை தாலிபன்கள் அகற்றிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களுடைய ஆட்சியின் அன்றாட யதார்த்தங்களை இந்த காட்சி அரிதாக வெளிப்படுத்துகிறது.
தாலிபன்கள் ஆட்சியில் பெண்கள் பெரும்பாலான பணியிடங்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தனியாகப் பயணம் செய்யவோ, பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களுக்குச் செல்லவோ அவர்களுக்கு அனுமதி இல்லை.
இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற பல்வேறு சந்திப்புகளின் மூலம், தீவிர இஸ்லாமியவாத இயக்கமான தாலிபனின் செல்வாக்குமிக்க தலைவர்களைச் சந்திப்பதற்கான அரிய வாய்ப்பை பிபிசி பெற்றது.
ஒரு காலத்தில் தற்கொலைத் தாக்குதல்களைத் திட்டமிட்ட அல்லது பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்த, ஆனால் தற்போது அதிகாரிகளாகவும் வீரர்களாகவும் இருக்கும் நபர்களுடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பும் பிபிசிக்கு கிடைத்தது.
தாங்கள் மாறிவிட்டதாகக் கூறிய தாலிபன்கள் ஆட்சிக்கு வந்தனர். ஆனால், 1990-களில் அவர்கள் அமல்படுத்திய இஸ்லாமிய மதச் சட்டமான ஷரியாவின் கடுமையான விளக்கத்துடன் அவர்களின் பல கொள்கைகள் ஒத்துப்போகின்றன.
நாங்கள் சந்தித்தவர்கள் தங்களை நியாயமானவர்களாகக் காட்டிக்கொள்ள விரும்புவதாகத் தெரிந்தது.
ஆனால், தங்களது கடந்த கால வன்முறைகள் குறித்து பேச அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மேலும், ஆட்சியாளர்களுக்கும் அவர்கள் ஆட்சி செய்யும் மக்களுக்கும் இடையே அசௌகரியமான தருணங்களையும் நாங்கள் கண்டோம்.
டூபா (இது அவரது உண்மையான பெயர் அல்ல) தனது திருமண வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்று ஆளுநர் சர்ஹாதி கூறுகிறார்.
"விவாகரத்துக்குப் பிறகு யார் திருமணம் செய்துகொள்வார்கள் என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்று கூறும் சர்ஹாதி, "நீங்கள் நிறைய விஷயங்களில் சமரசம் செய்துகொள்ள வேண்டியிருக்கும். இல்லையெனில், உங்கள் கண்ணியத்தையும் மரியாதையையும் இழந்துவிடுவீர்கள்"என்கிறார்.
"ஆளுநர் அவர்களே, எனது கண்ணியமும் மரியாதையும் ஏற்கெனவே சீரழிக்கப்பட்டுவிட்டன" என்று அப்பெண் பதிலளிக்கிறார்.
அவரது கணவர், தனது முறை வருவதற்காகக் காத்திருந்தபடி அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஷரியா சட்டத்தின்படி, கணவர் விவாகரத்துக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கோரும் ஒரு பெண், திருமணத்தின்போது தனது கணவர் தனக்கு வழங்கிய பணத்தில் ஒரு பகுதியையோ அல்லது முழுத் தொகையையோ திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கலாம்.
பெரும்பாலும், நிதி தொடர்பான ஓர் உடன்பாடு எட்டப்படும்.
ஆனால், இந்தப் பெண்ணின் கணவர் தனக்கு நான்கு மடங்கு தொகை வேண்டும் என்று கூறுகிறார். இதற்கு அப்பெண்ணின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண்ணுக்குத் தனி அறை வழங்க வேண்டும் என்று ஆளுநர் கூறுகிறார். மேலும், அவரை கணவர் அடிக்கக்கூடாது என்று அதிகாரிகள் எச்சரிப்பார்கள் என்றும், "இல்லையென்றால் அவர் சிறையில் அடைக்கப்படுவார்" என்றும் அவர் கூறுகிறார்.
இதில் திருப்தியடையாத டூபாவின் தந்தை, பின்னர் பிபிசியிடம் தங்களது குடும்பம் நீதிமன்றம் மூலம் விவாகரத்தைத் தொடரப் போவதாகத் தெரிவித்தார்.
இருப்பினும், தாலிபன்களின் நீதிமன்ற அமைப்பின் கீழ், கணவரின் சம்மதம் இல்லாமல் ஒரு பெண் விவாகரத்து பெறுவது மிகவும் கடினம்.
1990-களில் தாலிபன்கள் முதன்முறையாக ஆட்சியில் இருந்தபோது, சர்ஹாதி ராணுவத் தளபதியாக இருந்தார்.
2001-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, தாலிபன்களை ஆட்சியில் இருந்து அகற்றியபோது சரணடைந்த ஆயிரக்கணக்கான கிளர்ச்சியாளர்களில் அவரும் ஒருவர்.
அமெரிக்காவின் குவாண்டனாமோ விரிகுடா தடுப்பு முகாமில் அவர் பல ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் விடுவிக்கப்பட்டார்.
தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, அவர் ஆளுநரானார்.
முதலில் பாமியான் மாகாணத்தின் ஆளுநராகவும், பின்னர் ஜூன் மாத இறுதியில் நாங்கள் அவரைச் சந்தித்தபோது, ஜவ்ஸ்ஜான் மாகாணத்தின் ஷெபர்கான் நகரத்தின் ஆளுநராகவும் இருந்தார்.
சமீபத்தில், வடக்கு மாகாணமான குந்தூஸில் உள்ள ராணுவப் படைப்பிரிவின் துணைத் தளபதியாக அவர் பொறுப்பேற்றுள்ளார்.
சிறிய திரையைக் கொண்ட பழைய வகை செல்போனைத் தட்டியபடி, அதிகாரிகள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதற்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட தடை பணிகளைத் தாமதப்படுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.
"இதற்கு முன்பு, நீங்கள் விரைவாக ஒரு செய்தியை அனுப்ப முடியும்… ஆவணங்களை அனுப்பி, விரைவாக பதிலைப் பெற முடியும்.''
"இந்தத் தடை குறித்து மேலும் எதையாவது கூறினால், "அது பிரச்னையை ஏற்படுத்தும்" என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால், மற்ற வகைகளில் அவரது கண்ணோட்டம் 25 ஆண்டுகளுக்கு முன்பு தாலிபன்களின் நிலைப்பாட்டில் இருந்து பெரிதாக மாறியதாகத் தெரியவில்லை.
அப்போது, அவர் பாமியான் பகுதியில் ராணுவத் தளபதியாக இருந்தார்.
அங்கு தாலிபன்கள் பழமையான பிரமாண்டமான புத்தர் சிலைகளை வெடிவைத்து தகர்த்தனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியது.
தொல்லியல் தளம் குறித்து நாங்கள் எழுப்பிய கேள்விகளை முதலில் தவிர்க்க முயன்ற அவர், இறுதியில், "நான் அதை எனது சொந்தக் கைகளால் அழித்தேன்" என்று கூறுகிறார்.
"நாங்கள் செய்ததும், செய்து வருவதும் இறைவனின் வழிகாட்டுதல்களுக்கும் கடவுளின் சட்டத்திற்கும் உட்பட்டதே… சிலைகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக அவற்றை நாங்கள் உடைத்துத் தகர்க்கிறோம். நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? அது கடவுளின் விருப்பம்" என்கிறார் அவர்.
கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்
தலைநகர் காபூலில், வன்முறையான கடந்தகாலத்தை விட்டுவிட்டு தற்போதைய ஆட்சியில் ஒரு பொறுப்பை ஏற்றுள்ள மற்றொரு மூத்த தாலிபன் தலைவரை நாங்கள் சந்திக்கிறோம்.
ஹபிபுல்லா பத்ர், கவச வாகனத்தில் எங்களை காபூலின் தெருக்கள் வழியாக அழைத்துச் செல்கிறார்.
காபூலில் தற்கொலைப் படையினரின் "தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக" தான் முன்பு இருந்ததாக அவர் கூறுகிறார்.
"எனக்கு அனைத்து சாலைகளும் தெருக்களும் நன்றாகத் தெரியும்… காபூல் மற்றும் அதன் குறுகிய தெருக்கள் குறித்து எங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் எங்களிடம் இருந்தன" என்று பகிர்ந்து கொண்ட அவர், "நீண்ட காலம் திட்டமிட வேண்டிய பகுதிகளும் இருந்தன" எனக் குறிப்பிடுகிறார்.
தாலிபன்களின் தற்கொலைத் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஏராளமான பொதுமக்களும் அடங்குவர்.
எனினும், தனது கடந்த காலத்தைப் பற்றிப் பேசுவது குறித்து பத்ர் எச்சரிக்கையாக இருக்கிறார்.
அது "மக்களை வருத்தமடையச் செய்யும்" என்றும், "பழைய காயங்களை மீண்டும் நினைவுகூறச் செய்யும்" என்றும் அவர் அஞ்சுகிறார்.
பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து கேட்கப்பட்டபோது, அமெரிக்க ராணுவத் தொடரணிகளையே தாலிபன்கள் குறிவைத்ததாகவும், வெளிநாட்டுப் படைத்தளங்களிலிருந்து விலகி இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபெற்ற குறிப்பிட்ட தாக்குதல்கள் குறித்து அவரிடம் நான் கேட்க முயற்சிக்கும் போதெல்லாம், அவர் கேள்வியைத் தவிர்க்கிறார்.
தற்போது மருத்துவ சிகிச்சைக்காக அதிகாரப்பூர்வப் பொறுப்புகளில் இருந்து ஓய்வு எடுத்துள்ள அவர், முன்பு நாடு முழுவதற்குமான சிறைச்சாலைகளின் துணைத் தலைவராக இருந்துள்ளார்.
மேலும், முந்தைய அரசாங்கத்தின் கீழ் மரண தண்டனையை எதிர்நோக்கி அவர் அடைக்கப்பட்டிருந்த அதே சிறையை அவரே நிர்வகித்து வந்தார்.
பத்ர் எங்களை ஒரு பழங்குடியினக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கிறார். அங்கு ஒரு தொண்டு நிறுவனத்தின் தலைவர் அவருக்கு பதக்கம் வழங்கி கௌரவிக்க உள்ளார். ஆனால், எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது.
"பத்ர் ஆப்கானிஸ்தானுக்குப் பெருமை சேர்ப்பவர் மற்றும் சிறந்த போராளி" என்று சுல்தான் முகமது தலாயி கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆனால், எனக்கு ஒரு புகாரும் உள்ளது. பள்ளி செல்லவும், கல்வி கற்கவும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால், அது ஆப்கானிஸ்தானுக்கு ஒரு மிகச்சிறந்த செயலாக இருக்கும். இது உங்களைப் புண்படுத்தாது என்று நம்புகிறேன்"என்றும் குறிப்பிட்டார்.
அதன்பிறகு அங்கு அசௌகரியமான அமைதி நிலவியது. அங்கிருந்தவர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் தவித்தனர். தலாயியின் கையில் இருந்த ஒலிவாங்கி உடனடியாக அகற்றப்படுகிறது.
அதன்பிறகு பிபிசியிடம் பேசிய அவர், "பெண்களுக்கான பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்தேன்… இஸ்லாத்தில் அறிவைப் பெறுவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரு கடமையாகும்" என்று கூறினார்.
"நான் சொல்ல விரும்பிய வேறு சில விஷயங்களும் இருந்தன. ஆனால், அவர்கள் என்னை மேற்கொண்டு பேச அனுமதிக்கவில்லை"என்றும் அவர் தெரிவித்தார்.
பொதுவாக, தங்களது கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிப்பவர்கள் மிகவும் கடுமையான விளைவுகளை எதிர்கொள்கின்றனர்.
கல்வி மீதான கட்டுப்பாடுகளால் தங்களது கனவுகள் தடைபட்டது குறித்து ஏற்பட்ட ஆழ்ந்த விரக்தியையும், போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட தங்களது நண்பர்கள் குறித்தும் பெண்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
நாங்கள் பேசிய பெரும்பாலான பத்திரிகையாளர்கள், தாலிபன்களின் உளவுத்துறை அமைப்பான இஸ்திக்பராத்தால் அழைக்கப்பட்டதாகவோ அல்லது விசாரிக்கப்பட்டதாகவோ தெரிவித்தனர்.
இந்தக் கவலைகளில் சிலவற்றை தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளரான ஜபிஹுல்லா முஜாஹித்திடம் பிபிசி முன்வைத்தது.
2021-ஆம் ஆண்டு முதல் தாலிபன் அரசின் பொது முகமாக அவர் இருந்து வருகிறார். கிளர்ச்சியின் போது பல ஆண்டுகளாக அவர் பயன்படுத்தி வந்த புனைப்பெயரையே அவர் இன்னும் பயன்படுத்துகிறார்.
ஆனால், தனது உண்மையான பெயர் தாஹிர் ஷா செத்திகி என்று அவர் எங்களிடம் தெரிவித்தார். தனது உண்மையான பெயரை அவர் பொதுவெளியில் வெளிப்படுத்துவது இதுவே முதல்முறை.
முந்தைய அரசாங்கத்திற்காக அமெரிக்கர்களால் நிதியளிக்கப்பட்ட பிரமாண்டமான செய்தியாளர் மையத்தில், தாலிபன்கள் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, அங்கு அவர் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினோம்.
அப்போது, தாலிபன் அரசு பெண்களை "எங்கள் கட்டமைப்புகளுக்குள்" பணியாற்றவும் படிக்கவும் அனுமதிக்கும் என்றும், அவர்கள் சமூகத்தில் "மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்" என்றும் அவர் உலகிற்குக் கூறினார்.
அப்படியானால், தாங்கள் அளித்த வாக்குறுதியை அவர்கள் ஏன் நிறைவேற்றத் தவறினர்?
"நாங்கள் பெண்களின் உரிமைகள், பேச்சு சுதந்திரம் மற்றும் ஷரியாவிற்கு உட்பட்ட பிற விஷயங்களுக்கு உறுதியுடன் இருக்கிறோம்" என்று பதில் அளித்த அவர், "எல்லாவற்றையும் ஷரியாவின் கண்ணோட்டத்தில் நாம் பார்க்க வேண்டும்"என்கிறார்.
தனது அலுவலகத்தைப் போன்ற இடங்களில் பெண்களைப் பணியாற்ற அனுமதிப்பது "ஒழுக்கக்கேடுகளுக்கு வழிவகுக்கும்" என்றும், "அவர்களின் கண்ணியம் பாதிக்கப்படும்" என்றும் அவர் கூறுகிறார்.
பெண்களுக்கான கல்வி தொடர்பான விவகாரம் "ஆலோசனையில் உள்ளது… அதற்கு ஷரியாவை அடிப்படையாகக் கொண்ட தீர்வை நாம் காண வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.
ஊடக சுதந்திரத்தின் மீது தாலிபன்கள் மேற்கொள்ளும் கட்டுப்பாடுகள் குறித்து கேட்கப்பட்டபோது, "ஆப்கானிஸ்தான் போன்ற ஒரு சமூகத்தில் எங்களுக்கு எங்களுடைய கட்டுப்பாடுகள் உள்ளன. ஊடகங்கள் தாங்கள் விரும்பிய எந்தப் பிரசாரத்தையும் மேற்கொள்ள நாம் அனுமதிக்க முடியாது… இஸ்லாமியச் சட்டங்கள் மற்றும் சடங்குகளுக்கு எதிராக அவர்கள் ஒளிபரப்ப முடியாது" என்கிறார்.
தாலிபன் அரசாங்கம் காபூலில் செயல்பட்டு வருகிறது.
ஆனால், தாலிபன்களின் மையப்பகுதியாகக் கருதப்படும் தெற்கு நகரமான கந்தஹாரில் முஜாஹித் அதிக நேரத்தை செலவிடுகிறார். சிலர் தற்போது கந்தஹாரை நடைமுறை தலைநகராகக் கருதுகின்றனர்.
அங்கு இருக்கும் தாலிபன்களின் உச்சத் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதாவைச் சந்திக்க நாங்கள் அனுமதி கோரினோம்.
அவர் பொதுவெளியில் அரிதாகவே தோன்றுகிறார், மேலும் இதுவரை எந்த ஊடகத்துக்கும் பேட்டி அளித்ததில்லை. தற்போது அவரைச் சந்திப்பது சாத்தியமில்லை என்று எங்களிடம் கூறப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கடைசியாக கந்தஹாருக்குச் சென்றிருந்ததைவிட, தற்போது அங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இப்போது ஆண்கள் தாடி வைத்திருக்க வேண்டும். வானொலி நிலையங்கள் இசையை ஒலிபரப்பவோ அல்லது பெண்களின் குரல்களை ஒலிபரப்பவோ அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், நகரத்தில் படம் பிடிக்கவும் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அங்கிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில், புழுதி நிறைந்த சாலைகளைக் கடந்து சென்றபோது, அந்தக் குழுவின் முன்னாள் தீவிர ஆதரவாளர்களான போராளிகளில் சிலர், கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்திய பழைய ரகசிய குகை வலையமைப்பை பிபிசிக்கு காட்டினர்.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்புப் படையின் ஒரு பகுதியாக தற்போது சோதனைச் சாவடியில் பணியாற்றும் முன்னாள் போராளியான அபித் லலாய், தாம் துப்பாக்கிச் சூடு நடத்திய இடங்களையும், தன்னுடைய குர்ஆனை வைத்திருந்த இடங்களையும், ஏ.கே.-47 துப்பாக்கிகளை தொங்கவிட்டிருந்த இடங்களையும் எங்களுக்கு காட்டினார்.
அவரது மேலதிகாரியான அப்துல் சமத், அடையாளம் எதுவும் குறிப்பிடப்படாத ஒரு கல்லறைத் தோட்டத்தைக் காட்டுகிறார்.
தனது தந்தை தாலிபன்களுக்காகப் போராடியபோது கொல்லப்பட்டு இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நான்கில் மூன்று பேர் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத ஒரு நாட்டில், இந்தப் பகுதி மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக உள்ளது.
உள்ளூர் மக்களுக்கு தண்ணீர், சாலைகள் மற்றும் மருத்துவமனைகள் மிகவும் அவசியமாகத் தேவைப்படுவதாக சமத் கூறுகிறார்.
"எமிரேட் [தாலிபன்] அதிகாரிகள் எங்களை மறந்துவிடவில்லை" என்று சமத் கூறுகிறார்.
தலைவர்கள் வேறு முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதில் மும்முரமாக இருக்கலாம் என்றும் கூறும் அவர், "அவர்கள் ஒரு நாள் எங்களை கவனித்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது" என்கிறார்.
தாலிபன்கள் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை ஆகியவை தொடர்ந்து முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.
நாங்கள் பேசிய தாலிபன் பிரமுகர்கள், இவற்றைச் சமாளிக்க தாங்கள் பணியாற்றி வருவதாகக் கூறினர்.
ஆனால், அந்தக் குழுவே நாட்டின் முக்கியப் பிரச்னை என்று நம்பும் மற்றவர்களையும் நாங்கள் சந்தித்தோம்.
"வாழ்க்கையைப் பற்றி எந்தப் புரிதலும் இல்லாத ஒரு குழு திடீரென ஆட்சிக்கு வந்துவிட்டதைப் பற்றி என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை" என்று ஹோடா கூறுகிறார் (இது அவரது உண்மையான பெயர் அல்ல).
தாலிபன்கள் முதன்முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தெருக்களில் போராட்டம் நடத்திய பெண் இவர்.
"பெண்களால் இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று பிபிசியிடம் கூறும் அவர், "அவர்கள் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கலாம். ஆனால், இந்த நிலைமை அப்படியே தொடர்ந்து நீடிக்காது"என்கிறார்.
மேலும், "படித்த பெண்களைக் கண்டு தாலிபன்கள் அஞ்சுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன்"
"அதனால் தான் அவர்கள் பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். படிக்காத பெண்களையே அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதான் அவர்களால் அறிவார்ந்த ஆண்களை உருவாக்க முடியாது. ஏனென்றால் அப்படி நடந்தால், அது தாலிபன்களின் முடிவுக்கு வழிவகுக்கும்"என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
கூடுதல் தகவல்களை வழங்கியவர்: ஹஃபிசுல்லா மரூஃப்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு