'3,000 ஆண்டு பழமையான இரு குரல்கள் மீண்டும் கேட்டன': ஒரு நூற்றாண்டு கடந்தும் துட்டன்காமன் கல்லறை பற்றி விலகாத மர்மங்கள்

    • எழுதியவர், கிரெக் ஹோக்விட்
    • பதவி,
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

1936ஆம் ஆண்டு பிபிசி ஆவணக் காணொளி ஒன்றில், தொல்லியல் ஆய்வாளர் ஹோவர்ட் கார்டர், 1924 பிப்ரவரி 12ஆம் தேதி தானும் தனது குழுவினரும் 3,300 ஆண்டுகளுக்குப் பிறகு இளம் எகிப்திய மன்னரை முதன்முறையாகச் சந்தித்த தருணத்தை விவரிக்கிறார்.

"நாங்கள் நின்றுகொண்டிருந்த தரையில் மனித கால்கள் கடைசியாகப் பதிந்ததிலிருந்து 33 நூற்றாண்டுகள் கடந்திருந்தன. இருந்தபோதிலும், சமீபத்தில் அங்கு மனிதர்கள் இருந்ததற்கான தடயங்கள் எங்களைச் சுற்றிலும் காணப்பட்டன."

சுமார் 90 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹோவர்ட் கார்டரின் தெளிவான ஆங்கிலக் குரல், ஒரு பழங்காலப் பொருளைப் போல ஒலிக்கிறது. 1936ஆம் ஆண்டு பிபிசி வானொலியில் அவர் பேசியபோது, ஏராளமான புதையல்கள் நிறைந்த துட்டன்காமன் கல்லறையை அவர் முதன்முதலில் கண்டுபிடித்து 14 ஆண்டுகள் கடந்திருந்தன.

அந்த இளம் மன்னரின் கல்லறை எந்தவித சேதமும் இல்லாமல் இருந்ததை கார்டரும் அவரது நிபுணர் குழுவினரும் கிட்டத்தட்ட அதிசயமாகக் கண்டுபிடித்தது அவரை உலகப் புகழ்பெற்றவராக்கியது.

பண்டைய எகிப்து மீது பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. 1924ஆம் ஆண்டு நடந்த நிகழ்வுகளைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், அந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி துட்டன்காமனின் சார்கோபகஸ் எனப்படும் கல் சவப்பெட்டியை அவர்கள் இறுதியாக அடைந்தபோது ஏற்பட்ட விநோதமான உணர்வை விவரித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த மன்னரின் உடல் அந்தக் கல் சவப்பெட்டியில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருந்தது.

"பாதி நிரப்பப்பட்ட சாந்துக் கிண்ணம், கருமை படிந்த விளக்கு, தச்சர் கவனக்குறைவாக தரையில் விட்டுச் சென்ற மரத்துண்டுகள்" போன்ற விவரங்களைக் குறிப்பிடும்போது, கார்டரின் ஆச்சரிய உணர்வு இன்றும் உயிர்ப்புடன் வெளிப்படுகிறது.

"நாங்கள் இரண்டு அறைகளுக்குள் நுழைந்திருந்தோம். ஆனால் கதவுகள் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டிருந்த தங்கச் சன்னதியை அடைந்தபோது, எங்கள் காலத்தில் வேறு எந்த மனிதருக்கும் காணக் கிடைக்காத ஒரு காட்சியை நாம் பார்க்கப்போகிறோம் என்பதை உணர்ந்தோம்" என்று அவர் விவரித்தார்.

விலைமதிப்பற்ற முத்திரையை அகற்றி, கதவைத் திறந்தபோது, அதற்குள் மேலும் ஒரு சன்னதி இருந்தது. அதன் வேலைப்பாடு முந்தையதைவிடவும் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்தது.

கதவு மெதுவாகத் திறந்தபோது , ​​ அவரது கண்களுக்கு முன் "பிரமாண்டமான மஞ்சள் குவார்ட்சைட் கல் சார்கோபகஸ்" தென்பட்டது.

சுமார் 2,500 பவுண்டுகள் அல்லது 1,130 கிலோகிராம் எடையுள்ள அதன் கல் மூடியைத் தூக்காமல் உயர்த்தாமல் அதற்கு அப்பால் செல்ல வழியில்லை.

விஐபிக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அடங்கிய பார்வையாளர்கள் குழு, சிக்கலான அமைப்பின் மூலம் அந்த மூடி உயர்த்தப்படுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது. கார்டர் அந்தக் கல்லை அகற்றியபோது, சவப்பெட்டிக்குள் வெளிச்சம் பாய்ந்தது.

"எங்கள் கண்களுக்கு எதிரில் தோன்றிய காட்சி அவ்வளவு அழகாக இருந்ததால், எங்கள் உதடுகளில் இருந்து வியப்பின் பெருமூச்சு வெளிப்பட்டது. அற்புதமான வேலைப்பாடுகளுடன் கூடிய இளம் மன்னரின் தங்க உருவம் சவப்பெட்டியின் முழு உட்பகுதியையும் நிரப்பியிருந்தது. இதுவே ஒன்றுக்குள் ஒன்றாக வைக்கப்பட்டிருந்த மூன்று சவப்பெட்டிகளின் தொடரில் முதல் மூடி.

அந்த மூன்று சவப்பெட்டிகளுக்குள் இளம் மன்னர் துட்டன்காமனின் உடல் வைக்கப்பட்டிருந்தது" என்று அவர் கூறினார்.

உலகின் மிகப் பெரிய தொல்லியல் கண்டுபிடிப்புகளில் ஒன்றைச் நிகழ்த்தியிருந்தாலும், கார்டர் தனது 15-வது வயதிலேயே பள்ளிப் படிப்பை நிறுத்தியிருந்தார். அவருக்கு முறையான தொல்லியல் பயிற்சியும் இல்லை.

வரைவதில் அவருக்கு இருந்த திறமையைக் கவனித்த, அவரது கிராமப்புற நார்ஃபோக் வீட்டுக்கு அருகே வசித்த ஒரு உள்ளூர் பிரபுக் குடும்பம், தனிமையில் இருந்த அந்த இளைஞருக்கு ஆதரவளித்தது.

அம்ஹர்ஸ்ட் குடும்பத்தினரின் டிட்லிங்டன் ஹால் இல்லத்தில் பிரிட்டனிலேயே மிகப்பெரிய தனியார் எகிப்தியப் பொருட்கள் சேகரிப்பு இருந்தது. அவற்றின் கதைகளால் கார்டர் ஈர்க்கப்பட்டார்.

17-வது வயதில், அவரது கலைத்திறன் காரணமாக எகிப்தில் வரைபடக் கலைஞராகவும், படங்களைப் பிரதியெடுப்பவராகவும் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் தொல்லியல் ஆய்வுகள் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் எகிப்துக்குச் சென்றார். இந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை செல்வந்தர்களான ஆர்வலர்கள் மற்றும் பிரிட்டிஷ் பிரபுக்களின் நிதியுதவியுடன் நடைபெற்றன.

20 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் பணியாற்றிக் கொண்டே பயிற்சி பெற்றார்.

துட்டன்காமனின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதற்குப் பின்னால் அதிர்ஷ்டத்துக்கும் பெரும் பங்கு இருந்தது.

நைல் நதியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள, பண்டைய எகிப்தியர்கள் பாரோக்களின் முக்கிய அடக்கத் தலமாகப் பயன்படுத்திய 'கிங்ஸ் பள்ளத்தாக்கில்', கார்டர் பல ஆண்டுகளாக எந்தப் பெரிய வெற்றியும் இல்லாமல் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தார்.

கல்லறையின் நுழைவாயில் நீண்ட காலமாகப் பழங்காலக் குப்பைகள் மற்றும் மண்படிவங்களால் மறைக்கப்பட்டிருந்தது. இதனால், அது கல்லறைக் கொள்ளையர்களுக்கும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் எட்டாத இடமாக இருந்தது.

டட் மன்னரின் வழிபாடு

1922ஆம் ஆண்டு நவம்பரில் ஒரு சிறிய கதவு துளையின் வழியாக மெழுகுவர்த்தியை உயர்த்திப் பிடித்து இருளுக்குள் கார்டர் எட்டிப் பார்த்தபோது, இந்தக் கண்டுபிடிப்புக்கான திருப்புமுனை ஏற்பட்டது.

அருகில் பதற்றத்துடன் காத்திருந்த அவரை ஆதரித்த செல்வந்தர் லார்ட் கார்னர்வான், ஏதாவது பார்க்க முடிகிறதா என்று கேட்டார். கார்டர், "ஆம், அற்புதமான பொருட்கள்" என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

அவர் தனது அகழாய்வுக் குறிப்பேட்டில், "எனது கண்கள் வெளிச்சத்துக்குப் பழகியதும், அறையின் விவரங்கள் பனிமூட்டத்திலிருந்து மெதுவாக வெளிப்பட்டன. விசித்திரமான விலங்குகள், சிலைகள் மற்றும் தங்கம். எங்கு பார்த்தாலும் தங்கத்தின் மினுமினுப்பு" என்று எழுதியிருந்தார்.

இந்தப் புதையல்கள் அனைத்தும் துட்டன்காமன் மறு உலகத்துக்குச் செல்லும்போது அவருடன் எடுத்துச் செல்லப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்தன.

எகிப்தின் 18வது வம்சத்தின் 11வது பாரோவான துட்டன்காமன், இறந்தபோது சுமார் 17 வயதுடையவராக இருந்தார். அவர் எட்டு அல்லது ஒன்பது வயதில் அரியணை ஏறியதாகக் கருதப்படுகிறது.

அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. படுகொலை முதல் வேட்டையின்போது ஏற்பட்ட விபத்து வரை பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

1922ஆம் ஆண்டு நவம்பரில் கிடைத்த கண்டுபிடிப்பு இதன் தொடக்கம் மட்டுமே. கார்டர் 'முன் அறை' என்று குறிப்பிட்ட சிறிய வெளிப்புற அறையை அது வெளிப்படுத்தியது.

சார்கோபகஸை அடைய குழுவுக்கு மேலும் 15 மாதங்கள் தேவைப்பட்டன.

"இந்த நூற்றாண்டின் மிகவும் பரபரப்பான எகிப்திய தொல்லியல் கண்டுபிடிப்பாக இருக்கும்" என்று உறுதியளிக்கும் வகையில் தி டைம்ஸ் நாளிதழ் உலக அளவில் பிரத்யேக செய்தியை வெளியிட்டபோது, ​​டட் மன்னரின் வழிபாடு பிறந்தது.

எகிப்து மீதான வெறித்தனமான ஆர்வம் 1920களில் அதிகரித்தது. பிரமிடுகள் மற்றும் தாமரை மலர் வடிவங்கள் இடம்பெற்ற ஆடை வடிவமைப்பு மற்றும் ஆர்ட் டெகோ வடிவமைப்பு முதல் வசனங்களே இல்லாத திரைப்படங்கள் மற்றும் ஜாஸ் பாடல்கள் வரை பலவற்றுக்கு இது ஊக்கமளித்தது.

கார்டரும் கார்னர்வானும் சர்வதேச அளவில் பிரபலங்களாயினர். ஆனால், இந்தப் பெரிய கண்டுபிடிப்பு வெளியான சில மாதங்களிலேயே கார்னர்வானின் அதிர்ஷ்டம் முடிவுக்கு வந்தது. பூச்சிக் கடியால் ஏற்பட்ட விஷத்தன்மை காரணமாக அவர் உயிரிழந்தார்.

அவரது மரணம் துட்டன்காமன் கதைக்கு புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. மம்மியின் சாபம் மற்றும் துட்டன்காமனின் பழிவாங்கல் போன்ற கதைகள், அந்தக் கண்டுபிடிப்பைச் சுற்றி உருவான கட்டுக்கதைகளை மேலும் அதிகரித்தன.

இவை அனைத்தும் எகிப்தில் அரசியல் குழப்பம் நிலவிய காலகட்டத்தில் நடந்தன. 1882 முதல் அந்த நாடு பிரிட்டிஷ் படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்தது. ஆனால், 1922ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அது குறிப்பிட்ட அளவு சுதந்திரம் பெற்றது.

எகிப்திய அரசின் அனுமதியுடன் கார்டர் பணியாற்றி வந்தார். சிறந்த தொல்லியல் பொருட்கள் அனைத்தும் அந்நாட்டின் தலைநகரான கெய்ரோவுக்கு செல்ல வேண்டும் என்று எகிப்திய அரசு எதிர்பார்த்தது.

கோபக்கார குணம் கொண்ட கார்டருக்கும், அவரது அகழாய்வுப் பணிகளை மேற்பார்வையிட்ட எகிப்திய தொல்லியல் துறைக்கும் இடையிலான உறவு பெரும்பாலும் மோதல் நிறைந்ததாக இருந்தது.

காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான எகிப்தின் போராட்டத்தின் அடையாளமாக துட்டன்காமன் மாறினார். அதே நேரத்தில், தங்களது அறிவையும் உள்ளூர் அனுபவத்தையும் பகிர்ந்த பல எகிப்தியர்கள் இந்தக் கதையிலிருந்து நீக்கப்பட்டனர்.

கல்லறை அமைந்திருந்த இடத்தைச் சுத்தப்படுத்திய தொழிலாளர்களுடன், அகமது கெரிகர், காட் ஹசன், ஹுசைன் அபு அவாத் மற்றும் ஹுசைன் அகமது சயீத் போன்ற திறமையான மேற்பார்வையாளர்களுடனும் கார்டர் பணியாற்றினார்.

துட்டன்காமனின் பதப்படுத்தப்பட்ட உடல் கிங்ஸ் பள்ளத்தாக்கிலே இருந்தது.

ஆனால், அவரது பிற புதையல்களில் பல முதலில் கெய்ரோ அருங்காட்சியகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

அவற்றில் இரண்டு எக்காளங்களும் இருந்தன. ஒன்று வெள்ளியாலும் மற்றொன்று வெண்கலத்தாலும் செய்யப்பட்டவை. 1939-ஆம் ஆண்டு ஒரு அசாதாரணமான பிபிசி வானொலி நிகழ்ச்சியில் அவை இடம்பெற்றன.

முன்னோடியான வானொலி தயாரிப்பாளர் ரெக்ஸ் கீட்டிங், 3,000 ஆண்டுகளாக கேட்கப்படாத ஒரு ஒலியை பிபிசியில் ஒலிபரப்ப எகிப்திய தொல்லியல் துறையின் அனுமதியைப் பெற்றார்.

அந்த ஒளிபரப்பு பற்றிய 2011-ஆம் ஆண்டு பிபிசி ஆவணப்படத்தில், தொல்லியல் ஆய்வாளர் கிறிஸ்டினா ஃபின் கூறுகையில், "3,000 ஆண்டுகள் பழமையான எக்காளத்தை உண்மையில் வாசிக்க வேண்டும் என்ற யோசனை இன்று ஏற்றுக்கொள்ளப்படாது. ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொல்லியல் ஆய்வுகள் வேகமாக வளர்ந்த காலத்தில் இதுபோன்ற விஷயங்கள் குறித்து பெரிதாகக் கவலைப்படவில்லை" என்றார்.

உலகம் முழுவதும் சுமார் 15 கோடி பேர் கேட்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சியில் இசைக்கத் தேர்வு செய்யப்பட்டவர் இசைக்குழு கலைஞர் ஜேம்ஸ் டேப்பர்ன்.

அவர் இசைக்கத் தொடங்குவதற்கு முன், இரண்டு எக்காளங்களையும் ஒலிக்கச் செய்வது எளிதல்ல என்று கீட்டிங் நேயர்களை எச்சரித்தார்.

ஆனால், அதுகுறித்து அவர் கவலைப்படத் தேவையில்லை. இரண்டு பழங்கால இசைக்கருவிகளின் மர்மமான ஒலி தெளிவாகவும் சத்தமாகவும் ஒலித்தது.

நிம்மதியடைந்த கீட்டிங், நாடகத்தன்மையுடன் அந்த நிகழ்ச்சியை முடித்தார்.

"சுமார் 3,000 ஆண்டுகளுக்கும் மேலான அமைதிக்குப் பிறகு, எகிப்தின் புகழ்பெற்ற கடந்த காலத்திலிருந்து வந்த இந்த இரண்டு குரல்கள் உலகம் முழுவதும் எதிரொலித்துச் சென்றுள்ளன" என்று அவர் கூறினார்.

ஆனால், அந்த ஒலிபரப்பைக் கேட்க கார்டர் உயிருடன் இருக்கவில்லை.

அதற்கு சில வாரங்களுக்கு முன்பே, தனது 64-வது வயதில் புற்றுநோயால் அவர் உயிரிழந்திருந்தார். 1970களில் 'துட்டன்காமனின் பொக்கிஷங்கள்' கண்காட்சியின் சர்வதேச வெற்றியுடன் 'டட் மேனியா' மீண்டும் பிறந்தது. அதன் முக்கிய ஈர்ப்பாக இருந்த தங்க முகமூடி, 1972-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்தது.

இன்றுவரை அந்த அருங்காட்சியகத்தின் அதிக பார்வையாளர்களைப் பெற்ற கண்காட்சியாக அது உள்ளது. அதன் பிறகு, அந்தக் கண்காட்சி இரண்டு ஆண்டுகள் சோவியத் ஒன்றியத்துக்குச் சென்றது. பின்னர், 1976 முதல் 1979 வரை அமெரிக்காவின் ஆறு நகரங்களில் அது நடத்தப்பட்டது.

அங்கு அந்தக் கண்காட்சி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இது நகைச்சுவை நடிகர் ஸ்டீவ் மார்ட்டினின் வேடிக்கையான பாடலான 'கிங் டட்' பாடலுக்கும் ஊக்கமளித்தது.

சாட்டர்டே நைட் லைவ் நிகழ்ச்சியின் பார்வையாளர்களிடம் அவர் உணர்ச்சியற்ற குரலில், "சிறிய பொருட்கள், பொம்மைகள், டி-ஷர்ட்கள், போஸ்டர்கள் என்று இதை வணிகமயமாக்கிய விதம் தேசிய அளவில் அவமானகரமானது என்று நினைக்கிறேன்" என்று கூறிவிட்டு, வேடிக்கையான நடனத்தை நிகழ்த்தினார்.

முழுமையான கல்லறை இறுதியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டது

பிரபல கலாசாரம் முதல் தீவிரமான கல்விசார் ஆய்வுகள் வரை, துட்டன்காமனின் கதை தொடர்ந்து ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது.

முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும், அவரது கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் இன்னும் பல மர்மங்கள் அவிழ்க்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன. 2019ஆம் ஆண்டு பிபிசியின் 'இன் அவர் டைம் ' நிகழ்ச்சியில் பேசிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் எலிசபெத் ஃப்ரூட், கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவானவையே முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"சுமார் 5,000க்கும் அதிகமான தனித்தனி பொருட்கள் உள்ளன. இது இந்தத் துறையையே சற்று திணறடித்துவிட்டது என்று நினைக்கிறேன். இந்தக் குழுவில் உள்ள குறிப்பிட்ட வகைப் பொருட்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பது மிகவும் கடினமாக உள்ளது. ஏனெனில், இதைப் போன்ற வேறு எதுவும் இல்லை" என்று அவர் கூறினார்.

2025ஆம் ஆண்டில், கல்லறையில் இருந்த அனைத்து பொருட்களும் பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான கிசாவில் உள்ள குஃபுவின் பெரிய பிரமிடுக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய அருங்காட்சியகத்தில் இறுதியாகக் காட்சிக்கு வைக்கப்பட்டன.

கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் தாரெக் தவ்ஃபிக் பிபிசியிடம் கூறுகையில், "அவரை எப்படி வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்துவது என்று நான் சிந்திக்க வேண்டியிருந்தது. ஏனெனில், 1922-ஆம் ஆண்டு கல்லறை கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அதற்குள் இருந்த 5,500-க்கும் மேற்பட்ட பொருட்களில் சுமார் 1,800 பொருட்கள் மட்டுமே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முழு கல்லறையையும் காட்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதாவது, எந்தப் பொருளும் சேமிப்புக் கிடங்கில் இருக்காது, வேறு எந்த அருங்காட்சியகத்திலும் இருக்காது. 100 ஆண்டுகளுக்கு முன்பு ஹோவர்ட் கார்டர் பெற்ற அனுபவத்தைப் போல, முழுமையான அனுபவத்தைப் பெற முடியும்" என்றார்.

துட்டன்காமனின் தங்க முகமூடி அந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. ஆனால், அவரது மம்மி கிங்ஸ் பள்ளத்தாக்கிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டுள்ளது. அங்குதான் பிரமிப்பில் ஆழ்ந்த கார்டரும் அவரது குழுவினரும் ஏராளமான "சமீபத்திய மனித வாழ்க்கைக்கான தடயங்களை" கண்டனர்.

கார்டரின் பிபிசி வானொலி ஒலிபரப்பில், சார்கோபகஸின் தங்க நிற வெளிப்புற மூடியின் மீது வைக்கப்பட்டிருந்த சிறிய மலர் வளையம் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். அது, "கணவரை இழந்த இளம் ராணி தனது கணவருக்குச் செலுத்திய இறுதி விடைபெறும் காணிக்கையாக" இருக்கலாம் என்று அவர் கூறினார்.

"அந்த அரச ஆடம்பரம் அனைத்திற்கும் மத்தியில், வாடியிருந்த அந்தச் சில மலர்களைப் போல அழகானது வேறு எதுவும் இல்லை. 3,300 ஆண்டுகள் என்பது உண்மையில் எவ்வளவு குறுகிய காலம் என்பதை அவை எங்களுக்குச் கூறின"என்றும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு