You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வெளிநாட்டு உதவியை நிராகரித்த நேபாளம் ஒரே நாளில் முடிவை மாற்றியது ஏன்?
கடுமையான வெள்ளத்துக்குப் பிறகு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கான வெளிநாட்டு உதவியை நேபாளம் முதலில் நிராகரித்திருந்தது. எனினும், தற்போது அந்த முடிவை மாற்றியுள்ளது.
நேபாளத்தின் முக்கிய நாளிதழான காத்மாண்டு போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, இந்த பேரிடரில் இன்னும் பல நாடுகளின் குடிமக்கள் காணாமல் போயிருப்பதால், அந்த நாடுகளின் அழுத்தத்தின் பேரிலேயே நேபாளம் தனது முடிவை மாற்றியதாக கூறப்படுகிறது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, வெள்ளிக்கிழமை நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லோக் பகதூர் செத்ரி, "உதவி வழங்க முன்வருவது இயல்பானது. எங்கள் பாதுகாப்பு அமைப்புகள் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நேரத்தில் எங்களுக்கு அத்தகைய உதவி தேவையில்லை" என்று தெரிவித்திருந்தார்.
ஆனால், போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக சர்வதேச தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களின் உதவியைப் பெறுவதற்கு நேபாளம் இப்போது தயாராகியுள்ளது.
புதன்கிழமை போட்டேகோஷி மற்றும் திரிசூலி நதிகளில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் வெள்ளிக்கிழமை வரை 626 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2000 பேர் காணாமல் போயுள்ளனர். 320 இந்தியர்களும் காணாமல் போயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, தென் கொரியாவிடம் உதவி பெறும் நேபாளம்
காத்மாண்டு போஸ்ட் செய்தியின்படி, புதன்கிழமை நேபாள அரசு, தங்கள் மீட்புக் குழுக்கள் தனியாகவே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் திறன் கொண்டவை என்றும், பிற நாடுகளின் மீட்புக் குழுக்களுக்கு பணியாற்ற அனுமதி வழங்கப்படாது என்றும் தெரிவித்திருந்தது.
ஆனால் அந்த முடிவு ஒரு நாள்கூட நீடிக்கவில்லை.
ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, சுரங்கங்களில் மீட்புப் பணிகள், டிஎன்ஏ பரிசோதனைகள் மற்றும் தடயவியல் ஆய்வுகளுக்காக வெளிநாட்டு நிபுணர்களின் வரம்பிற்குட்பட்ட உதவியைப் பெறும் முடிவை நிர்வாகம் தற்போது எடுத்துள்ளது.
அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை மையத்தின் மதிப்பீட்டின் அடிப்படையில், அரசின் அமைச்சகங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்புக் குழு இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் தங்கள் நிபுணர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும் அனுப்பலாம் என கூறியுள்ளது.
இவர்கள் சுரங்கங்களில் மீட்புப் பணி, டிஎன்ஏ பரிசோதனை மற்றும் தடயவியல் ஆய்வுகளில் தங்கள் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவார்கள்.
வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற நேபாளம் சம்மதிக்கவில்லை என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை செய்தி முகமையான ராய்ட்டர்ஸிடம், கூறியிருந்தது. அது சர்வதேச அமைப்புகளின் வழியாக 10 லட்சம் டாலர் மானுடவியல் உதவியையும் நேபாளத்திற்கு வழங்க முன்வந்திருந்தது.
நீர்மின் திட்டம் ஒன்றில் தனது ஒன்பது குடிமக்கள் காணாமல் போயுள்ளதாகவும், 10 பேர் சிக்கியுள்ளதாகவும் தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.
திபெத் விவகாரமே மறுப்பிற்குக் காரணமா?
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா மாவட்டம் சீனாவின் திபெத்தை ஒட்டியுள்ளதால் நேபாளம் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியைப் பெற விரும்பியிருக்காது என்று ஐக்கிய நாடுகள் சபைகான நேபாளத்தின் முன்னாள் தூதர் தினேஷ் பட்டராய் செய்தி முகமையான ராய்ட்டர்ஸிடம் கூறியிருந்தார். திபெத் சீனாவிற்கு மிகவும் முக்கியமான பிராந்தியப் பிரச்சினைகளில் ஒன்றாகும்.
திபெத் சீனாவின் ஒரு தன்னாட்சிப் பகுதியாகும். நேபாளம் தன்னை விடப் மிகப்பெரிய அந்த அண்டை நாட்டுடன் நீண்டகாலமாக ஒரு நுட்பமான சமநிலையைப் பேணி வருகிறது.
"அந்தப் பகுதியின் புவியியல் ரீதியான தன்மையைக் கருத்தில் கொண்டே நேபாளம் ஆரம்பத்தில் வெளிநாட்டு உதவியை நிராகரித்திருக்கலாம்" என பட்டராய் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
இருப்பினும், நேபாள வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் சேத்ரி, இந்த முடிவில் சீனாவின் இந்த அம்சம் சேர்க்கப்படவில்லை என்று கூறினார்.
நேபாளத்தின் சொந்த மீட்புக் குழுக்களே இந்த நடவடிக்கையைக் கையாண்டு வந்ததால் மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ராய்ட்டர்ஸ் தகவலின்படி, சீன பிரதமர் லீ கெக்கியாங் வெள்ளநீரும் சிதிலங்களும் பெருமளவில் புகுந்திருந்த திபெத்தின் க்யிரோங் பகுதிக்குச் சென்றதாக சீனாவின் அரசு செய்தி முகமையான சின்ஹுவா தெரிவித்தது.
"என் கிராமம் சில விநாடிகளில் அடித்துச் செல்லப்பட்டது"
வெள்ளத்துக்குப் பிறகு நேபாளத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் பெரும் சிரமங்கள் நிலவுகின்றன. பல பகுதிகள் இன்னும் துண்டிக்கப்பட்ட நிலையிலுள்ளன. அங்கிருந்து பேரழிவின் கொடூரமான விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
காத்மாண்டு போஸ்ட் செய்தியாளர் அர்ஜுன் பௌடேல், தனது கிராமத்தை வெள்ளநீர் எவ்வாறு கணநேரத்தில் அடித்துச் சென்றது என்பதை தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.
அவர் தனது அனுபவத்தை எழுதுகையில், "புதன்கிழமை காலை காத்மாண்டுவில் உள்ள காந்திபூர் பப்ளிகேஷன்ஸ் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, என் மனைவி என்னை தொலைபேசியில் அழைத்தார்." என்று குறிப்பிட்டுள்ளார்.
"அவர் என்னிடம், 'திரிசூலி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சோல் பஜார் மற்றும் பேத்ராவதி பகுதிகளில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது. எதுவும் மீதமில்லை என்று மக்கள் கூறுகின்றனர். பதற்றமடைந்த மக்களின் வீடியோக்கள் வைரலாகின்றன' என்றார்."
"சோல் என் சொந்த கிராமம். அது ஆற்றுநீர் வரக்கூடிய பகுதி அல்ல. பலத்த மழை பெய்ததாகக்கூட நான் கேள்விப்படவில்லை. இருந்தாலும் செய்தியை உறுதிப்படுத்த செய்தித் தளத்தைத் திறந்தேன். எதுவும் பெரிதாக இருக்காது என்று நினைத்தேன். ஆனால் தளத்தைத் திறந்தவுடன் திரிசூலி ஆற்றில் வெள்ளம் என்ற செய்தி தோன்றியது."
"என் மார்பில் ஒரு விசித்திரமான இறுக்கம் ஏற்பட்டது. சோல் பஜாரில் குடும்பம் வசிக்கும் பகுதியில் உள்ள நிரஞ்சன் என்ற செய்தியாளருக்கு அழைத்தேன். அவர், 'நானும் கேள்விப்பட்டேன். அம்மாவையோ, அத்தையையோ, சித்தப்பாவையோ, சித்தியையோ யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. யாருடைய தொலைபேசியும் செயல்படவில்லை' என்றார்."
"நாங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் கிராமத்தில் இருந்த ஓர் உறவினரை தொடர்பு கொள்ள முடிந்தது. அவர், 'கிராமத்தில் எதுவும் மீதமில்லை. பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்' என்றார்."
"அதை நம்ப முடியவில்லை. சோலும் துப்சேயும் ஆற்றின் மட்டத்திலிருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்தன. பல நூற்றாண்டுகளாக அங்கு வெள்ளம் ஏற்படவில்லை. அந்த உயரம் வரை நீர் வந்ததில்லை. எனக்கு 44 வயது. என் வாழ்நாளில் ஆறு இத்தனை அருகில் வந்ததை நான் பார்த்ததில்லை."
"என் உறவினர்கள் அனைவரும் அங்கேயே இருந்தனர். என் சகோதரர்கள், அயலவர்கள், குழந்தைப் பருவ நண்பர்கள். நான் நேசித்த ஒவ்வொருவரும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்."
"ஒவ்வொருவருக்கும் நான் தொலைபேசியில் அழைக்கத் தொடங்கினேன். சோல் போன்ற இடத்தில் அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களே. மெதுவாக வீடியோக்களும் படங்களும் என் தொலைபேசிக்கு வரத் தொடங்கின. அங்கு தெரிந்த காட்சிகளுக்கு நான் எந்த வகையிலும் ஆயத்தமாக இருக்கவில்லை."
"என் பெரியம்மா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவருடைய மகன், எனது சகோதரர் மது, அவருடைய மனைவியுடன் சேர்ந்து அடித்துச் செல்லப்பட்டார். இன்னொரு அத்தையும் அடித்துச் செல்லப்பட்டார். அவரது பேரனும், பேரனின் மனைவியும் காணாமல் போயினர். அவரது மகனும் மருமகளும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. காலையில் கால்நடைகளுக்காக புல் வெட்டச் சென்ற என் மாமாவும் திரும்பவில்லை."
"நிரஞ்சனின் மாமா தொலைபேசியில் அழைத்தார். நிரஞ்சனின் தாய், தந்தை, சித்தப்பா, சித்தி மற்றும் சகோதரி ஹிமானி அனைவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார். 'அர்ஜுன், எல்லாம் முடிந்துவிட்டது' என்ற அவரது குரல் இன்னும் நினைவில் உள்ளது."
"பேத்ராவதி ஒரு நகரம் மட்டுமல்ல. நேபாளமும் திபெத்தும் போர் முடிந்தபின் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இடம் அது. உத்தர் கங்கா தாம் அங்கே உள்ளது. பௌஷ அமாவாசையில் முன்னோருக்கான சடங்குகளைச் செய்ய ஆயிரக்கணக்கானோர் வரக்கூடிய புனித நிலம் அது. ஆனால் இப்போது எல்லாம் அழிந்துவிட்டது. கோயில்கள், உடன்படிக்கை மைதானம், புனிதத் தலங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன. சிதிலங்கள் மட்டுமே மீதமிருக்கின்றன."
"சாலைகள் இல்லை. மின்சாரம் இல்லை. இணைய வசதியும் இல்லை. வெள்ளம் திரிசூலி நீர்மின் நிலையத்தின் பிரதான நுழைவாயிலையும், அந்த நீர்மின்நிலையத்தையும் அடித்துச் சென்றது."
"என் கிராமம் எப்போது பழைய நிலைக்குத் திரும்பும் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். யாரிடமும் பதில் இல்லை. ஒரு கிராமத்தையே சில நிமிடங்களில் அழித்துவிடும் வெள்ளத்தை நாங்கள் இதற்கு முன் பார்த்ததில்லை."
நேபாளத்தில் ஏன் வெள்ளம் ஏற்பட்டது?
நேபாளம் எதிர்கொண்டு வரும் இந்த பேரழிவான வெள்ளத்தின் புவியியல் காரணங்களைப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.
பல நிபுணர்கள் இப்போது இதைப் பகுப்பாய்வு செய்து, நேபாளத்தின் நிலம் மற்றும் அதன் நுட்பமான புவியியலுடனான தொடர்பைத் தேடி வருகின்றனர்.
காத்மாண்டுவில் வசிக்கும் வங்கதேச எழுத்தாளரும், கொள்கைப் பகுப்பாய்வாளரும், தொழில்முனைவோருமான ஜாகீர் கிப்ரியா 'நேபாளி டைம்ஸ்' இதழில் எழுதுகையில், "ஹிந்துகுஷ் இமயமலை மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளுக்கு வெளியே மிகப்பெரிய பனிக்கட்டிகள் அங்கு உள்ளன. இந்தப் பகுதி உலக சராசரியை விட வேகமாக வெப்பமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அறிவியல் என்பது ஒரு கருத்து மட்டுமல்ல. இந்த வாரம் நேபாளத்தில் நடந்தது அதன் நேரடி விளைவாகும்" என கூறியுள்ளார்.
"நேபாளத்தில் பனிப்பாறை ஏரி உடைந்ததன் காரணமாகவே வெள்ளம் ஏற்பட்டது. நேபாளம் முழுவதும் இத்தகைய வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன."
"எதிர்கால சேதங்களை குறைக்க வலுவான பேரிடர் முன்னெச்சரிக்கை, உடனடி தகவல் பகிர்வு மற்றும் உட்கட்டமைப்பு திட்டமிடல் ஆகியவற்றின் அவசியத்தை இந்த பேரழிவு மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது." என மை ரிபப்ளிகா இதழில் ராம் சுபேதி எழுதியுள்ளார்.
"ரசுவாவில் நடந்தது, இமயமலைப் பகுதியில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தை வெளிப்படுத்தியது. இந்த பகுதிகள் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவை என்பதை அது காட்டியுள்ளது. அதே நேரத்தில் கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புகளின் பலவீனங்களையும் வெளிப்படுத்தியுள்ளது."
"இந்த பேரிடர், பாரம்பரிய பேரிடர் நிவாரண நடவடிக்கைகளைக் கடந்து சிந்திக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. வெப்பநிலை உயர்வால் பனிப்பாறைகள் உருகுகின்றன. காலநிலை மாற்றத்தால் அதிக மழை பெய்கிறது. நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. பனிச்சரிவுகள் நதிகளின் ஓட்டத்தை திடீரெனத் தடுக்கக்கூடிய அபாயத்தையும் உருவாக்குகின்றன."
சிக்கியுள்ள மக்களின் எண்ணிக்கை குறித்து துல்லிய தகவல் இல்லை
வெள்ளத்துக்குப் பிறகு நேபாளத்தில் நிவாரணப் பணியாளர்கள் சென்றடைந்துள்ளனர். இருப்பினும் பல பகுதிகளில் மக்கள் இன்னும் சிக்கியுள்ளனர். சாலைகளும் பாலங்களும் அழிந்திருப்பதால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து தெளிவான தகவலைப் பெற முடியவில்லை.
காந்திபூர் நாளிதழின் தகவலின்படி, போட்டேகோஷி வெள்ளத்தால் ரசுவா, நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்களில் 40 கிலோமீட்டர் சாலைகளும் 41 பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
நேபாள ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று வெள்ளிக்கிழமை போட்டேகோஷி வெள்ளம் காரணமாகத் திரிசூலி பஜாரில் உள்ள திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியில் சிக்கியிருந்த 40 மாணவர்களையும் ஆசிரியர்களையும் அவர்களின் வீடுகளுக்குக் கொண்டு சேர்த்தது. ஆனால், சில ஆசிரியர்களும் மாணவர்களும் மீட்கப்படுவதற்காக இன்னும் காத்திருக்கிறார்கள்.
ரசுவாவின் உத்தரகயா கிராமப்புற நகராட்சியின் நீலகண்ட் பள்ளியின் ஆசிரியர் மாதவ் லாமிச்சானே கூறுகையில், வெள்ளத்திற்குப் பிறகு பாலங்கள் மற்றும் சாலைகளுக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக உள்ளூர் நோயாளிகளை மீட்பதிலும் அவர்களுக்குச் சிகிச்சையளிப்பதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
'வெள்ளம் திரிசூலியில் இருந்து பெத்ராவதி வரையிலான அனைத்துப் பாலங்களையும் அடித்துச் சென்றுவிட்டது. சாலைகள் சேற்றால் மூடப்பட்டுள்ளன.'
பெத்ராவதியில் இருந்து காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக துஞ்சே வழியாகக் காத்மாண்டுவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக லாமிச்சானே 'காந்திபூர்' நாளிதழிடம் தெரிவித்தார்.
ரசுவாவின் முதன்மை மாவட்ட அதிகாரி நரேந்திர பரியார், கெரங்கில் சிக்கியுள்ளவர்களின் சரியான எண்ணிக்கையைக் கண்டறிய முடியவில்லை என்று கூறினார்.
ரசுவாகடி எல்லைச் சாவடி வழியாக அவர்களை மீண்டும் நேபாளத்திற்கு அனுப்புவது சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு