'45 நாளில் பணம் இரட்டிப்பாகும்': மதுரை, திண்டுக்கல்லை உலுக்கும் எஃப்.கியூ.எல் 'கிரிப்டோகரன்சி' மோசடி புகார் - என்ன நடந்தது?

    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பணத்தை இரட்டிப்பாக்குவதாக கூறி மொபைல் செயலிகள் மூலம் ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறையினரால் பல்வேறு முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பணத்தை இழந்ததாக அந்த மாவட்டங்களில் காவல்துறையினரிடம் புகார்கள் குவிந்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்கள் என்ன சொல்கிறார்கள்?

என்ன நடந்தது?

"இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ஆன்லைன் செயலியில் பணம் செலுத்தி ஏமாற்றி விட்டோம். மீண்டும் இயல்பான வாழ்க்கை வாழ காவல்துறை வழிவகை செய்ய வேண்டும்" என கூறுகிறார், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா.

45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்ற ஆசையில் எஃப்.கியூ.எல். எக்ஸ்சேஞ்ச், விஜி இன்வெஸ்ட்மென்ட் ஆகிய இரு ஆன்லைன் செயலிகளில் முதலீடு செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

ஆரம்பத்தில் ரூ.54 ஆயிரம் முதலீடு செய்தால் 45 நாட்களில் இரட்டிப்பு தொகை கிடைக்கும் என்று கூறப்பட்டதாக தெரிவித்த அவர்கள், கடந்த சில நாட்களாக செயலியில் இருந்து பணத்தை திரும்ப எடுக்க முடியாத நிலை ஏற்பட்ட பிறகே தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததாக கூறுகின்றனர்.

பிபிசி தமிழிடம் பேசிய ஷேக் அப்துல்லா, "நான் ஒத்தக்கடை பகுதியில் வெள்ளி பட்டறை ஒன்றில் 20 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். என் மாமியார் மூலமாக பழனி என்ற ஒருவர் அறிமுகமானார். அவர் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என கூறியதை நம்பி முதலீடு செய்தேன்." என்றார்.

மேலும் பேசிய அவர், "நான் பழனி என்பவர் மூலம் கடந்த 3-ஆம் தேதி எஃப்.க்யூ.எல் எக்ஸ்சேஞ்ச் செயலியில் ரூ.50 ஆயிரம், வி.ஜி. இன்வெஸ்ட்மென்ட் செயலியில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தேன். இதேபோல், என் மனைவி பெயரிலும் இரண்டு செயலிகளிலும் ரூ.1.65 லட்சம் செலுத்தி முதலீடு செய்துள்ளோம். இந்த பணத்தை அந்த நிறுவனத்தை சேர்ந்த நபர்கள் நேரடியாக வந்து என்னிடம் பெற்றுச் சென்றனர்." என்றார்.

தொடர்ந்து பேசிய ஷேக் அப்துல்லா, இந்த ஆன்லைன் முதலீடு செயலியில் சேர்த்துவிட்ட பழனி என்பவர் தன் மொபைல் போனில் எஃப்.க்யூ.எல் எக்ஸ்சேஞ்ச் மற்றும் வி.ஜி. இன்வெஸ்ட்மென்ட் ஆகிய இரண்டு செயலிகளையும் பதிவிறக்கம் செய்ததாக தெரிவித்தார்.

பின்னர் ஒரு கணக்கு தொடங்கப்பட்டுவிட்டது என அவர் கூறியதாகவும் ஷேக் அப்துல்லா தெரிவித்தார்.

"நான் ஐம்பதாயிரம் செலுத்திய பிறகு என் கணக்கில் 500 டாலர் வரவு வைக்கப்பட்டது. ஒரு டாலர் 100 ரூபாய் மதிப்பு என அந்நிறுவனம் சார்பில் அந்த செயலியில் குறிப்பிடப்பட்டிருந்தது." என்றார் அவர்.

''கணக்கு தொடங்கப்பட்டவுடன், ஒரு நாளைக்கு 2.35 மணி, 5.35 மணி, 8.35 மணி ஆகிய மூன்று முறை எனது மொபைல் செயலியில் அலாரம் அடிக்கும். அப்போது அந்த செயலிக்குள் சென்று அதில் வரும் சிக்னலை கிளிக் செய்தால் கணக்கில் இருந்த 500 டாலர்களில் 6 டாலர்களை அந்நிறுவனம் எடுத்துக்கொள்ளும். அதனால் கணக்கில் 494 டாலர்கள் மட்டுமே இருக்கும். அரை மணி நேரத்தில் மீண்டும் அந்த கணக்கில் 10 டாலர் வரவு வைக்கப்படும். அப்போது கணக்கில் 4 டாலர்கள் உயர்ந்து 504 டாலர்கள் இருக்கும். அலாரம் அடிக்கும்போது செயலிக்குள் சென்று கிளிக் செய்தால் டாலர் எண்ணிக்கை உயரும். அலாரம் அடிக்கும்போது நாம் கிளிக் செய்யாவிட்டால் கணக்கில் டாலர் குறையவும் செய்யாது, கூடவும் செய்யாது.''என்கிறார் ஷேக் அப்துல்லா

"அதேநேரத்தில், ஒரு லட்ச ரூபாய் செலுத்தி தொடங்கப்பட்ட வி.ஜி.இன்வெஸ்ட்மென்ட் செயலியில் தினசரி 100 டாலர்கள் கிடைக்கும். சிறப்பு சலுகை என அவ்வப்போது 300 முதல் 400 டாலர்கள் கணக்கில் சேர்ந்துகொண்டே இருக்கும். இதற்கு சிக்னல் செயல்முறை கிடையாது" என்றும் ஷேக் அப்துல்லா தெரிவித்தார்.

"நான் இரண்டு கணக்குகள் தொடங்கி 20 நாட்கள் ஆகின்றன. எனக்கு தெரிந்த மூன்று பேரை நான் இந்த செயலியில் சேர்த்து விட்டுள்ளேன். எனக்கு கீழ் நான் மூன்று நபர்களை இணைத்ததற்கு என் கணக்கிற்கு 200 டாலர்கள் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என ஆசைப்பட்டு ஏமாந்து நிற்கிறேன். இரண்டு மாதத்துக்கு முன்பு இதேபோல் பணம் செலுத்தி கணக்கு தொடங்கியவர்கள் சிலர் பணத்தை எடுத்துள்ளனர். ஆனால், கடந்த ஒரு மாதத்துக்குள் பணம் செலுத்தி சேர்ந்தவர்களால் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றப்பட்டுள்ளோம்" என்றார்.

தன்னை போன்று பலரும் கடன் பெற்று தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முகவராக செயல்பட்டவர் கூறியது என்ன?

இதுதொடர்பாக, அந்த செயலிகளின் முகவராக செயல்பட்ட பழனியிடமும் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.

அவர் கூறுகையில், "நான் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறேன். எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் ஜனவரி மாதம் என்னை ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அந்த கூட்டத்தில் பேசிய ரஞ்சித், அவரது மனைவி பிரியதர்ஷினி ஆகியோர் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் அளவு டேட்டாவை பயன்படுத்தி செல்போன் மூலம் ஆன்லைன் வணிகம் செய்து முதலீட்டு தொகையை இரட்டிப்பாக சம்பாதிக்கலாம் என கூறினார்கள். என்னை அந்த கூட்டத்துக்கு அழைத்து சென்று சேர்த்து விட்டதால் எனது நண்பருக்கு பரிசு பொருட்கள் வழங்கினர். இதனை நம்பி நான் வங்கியில் நகைக்கடன் பெற்று என் பெயரிலும் எனது மனைவி, மகள், மருமகன் பெயர்களில் தலா ரூ.50 ஆயிரம் செலுத்தி தனி தனி கணக்கு தொடங்கினேன்" என்றார்.

தான் முதலீடு செய்த ஒரு மாதத்தில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைத்தது என்று கூறிய அவர், அந்த தொகையை கொண்டு வங்கி கடனை செலுத்தி விட்டு எனது நண்பர்கள் சிலரை இந்த செயலியில் சேர்த்து விட்டதாக தெரிவித்தார்.

"இந்த செயலியில் எனக்கு கீழ் ஐந்து பேரை முதலில் சேர்த்தேன். அதற்கு ஊக்கத்தொகை வழங்கினர். என்னைப் போன்ற பலர் அவர்களுக்கு கீழ் இந்த செயலியில் இணைத்து முதலீடு செய்ய வைத்தனர். முதலீடு செய்தவர்களுக்கு கடந்த ஒரு மாதமாக பணம் வழங்கப்படவில்லை என பிரச்னை ஏற்படும் வரை செயலியில் சிக்னல்கள் வந்து கொண்டு தான் இருந்தன. ஆனால், ஆகஸ்ட் 26-ஆம் தேதி நள்ளிரவுடன் அந்த செயலி முற்றிலும் மூடப்பட்டது. இதனையடுத்து, செயலியில் முதலீடு செய்த பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர்." என்றார்.

இப்பிரச்னை தொடங்குவதற்கு முன்பே கட்டையம்பட்டியில் உள்ள ரஞ்சித் வீட்டுக்கு சென்றபோது ரஞ்சித், பிரியதர்ஷினி, அருண்குமார் என யாரும் இல்லை எனக்கூறிய பழனி, "ரஞ்சித் பெற்றோர் மட்டும் இருந்தனர். அடுத்த நாள் போலீசார் ரஞ்சித் பெற்றோர் மற்றும் அவரது அக்காவை கைது செய்ததால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது." என்றார் பழனி.

''மக்கள் முதலீடு செய்த பணத்தை மட்டுமாவது அவர்களிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்" என பழனி கூறுகிறார்.

ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி வீடியோ வாயிலாக விளக்கம்

ஆன்லைன் செயலி நிதி மோசடி புகாரில் குற்றம்சாட்டப்படும், ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.

இது குறித்து விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோவில், "நாங்கள் பண மோசடியில் ஈடுபடவில்லை, நாங்களும் அந்த செயலியில் முதலீடு மட்டும் தான் செய்துள்ளோம். ஆனால் நாங்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக கூறி சிலர் மிரட்டல் விடுக்கிறார்கள். சூழ்நிலை ஒத்துழைக்காததால், என்ன நடந்தது என்பது குறித்து எங்களால் விரிவாக சொல்ல முடியவில்லை." என்று ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

"மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சைபர் கிரைம் காவல் துறையினர் என்னிடம் விசாரணை நடத்திய போது நான் முதலீடு மட்டும்தான் செய்துள்ளேன் என தெரிவித்தேன். எல்லோரும் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் முதலீடு செய்தார்கள், கடைசியில் எங்களை சிக்க வைத்துள்ளனர்." என்றும் அவர் கூறியுள்ளார்.

காவல்துறை சொல்வது என்ன?

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ''திண்டுக்கலில் பல்வேறு பகுதிகளில் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி, சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை செய்திக்குறிப்பின்படி, ''இந்த வழக்கில் நத்தம் காசம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், அவரது மனைவி அனிதா, மற்றும் விஜய் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள தீனதயாளன், பிரியதர்ஷினி, ரஞ்சித் மற்றும் அருண்குமார் உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது''

செயலி யாருடையது, எங்கிருந்து இயங்குகிறது?

எஃப்.கியூ.எல் எக்ஸ்சேஞ்ச் தொடர்பான புகாரில், சம்பந்தப்பட்ட செயலியின் உரிமையாளர் யார் என்பதும், அது எங்கிருந்து செயல்படுத்தப்படுகிறது என்பதும் இதுவரை உறுதியாகக் கண்டறியப்படவில்லை என திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், "'ரிச்சர்ட்' எனக் கூறப்படும் நபர் வீடியோ அல்லது ஆன்லைன் வகுப்புகள் வாயிலாக சில வழிமுறைகளை வழங்குவதுபோல் பேசியதாக, தற்போது குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நபர் உண்மையில் யார் என்பது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாகத் தெரிந்து வைத்திருக்கவில்லை. செயலியின் உரிமையாளர் மற்றும் அதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செயலி எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பது குறித்தும் தெளிவான தகவல் இல்லை. செயலியை முடக்க நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் யார் மீதெல்லாம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதோ அந்த நபர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு வங்கிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் இந்த நிதி மோசடி தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை அளிக்க சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலூர் டிஎஸ்பி சிவகுமார் தலைமையில் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை 3 இடங்களில் நடைபெற்ற முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் புகார் தாங்கள் பாதிக்கப்பட்டதாக கூறி புகார் மனுக்களை அளித்துள்ளனர் என மதுரை காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை எச்சரிக்கை

"எந்த ஒரு சட்டபூர்வ நிதி நிறுவனமும் குறுகிய காலத்தில் முதலீட்டை இரட்டிப்பாக்க முடியாது. அதிக வட்டி மற்றும் குறுகிய கால இரட்டிப்பு வாக்குறுதிகளை அளிக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று திண்டுக்கல் காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள்:

  • பிளே ஸ்டோர் அல்லது அதிகாரப்பூர்வ நிதி நிறுவன அங்கீகாரம் இல்லாத ஏபிகே லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் போலி செயலிகளில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
  • பொதுமக்கள் இதுபோன்ற நிதி மோசடிகளால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தையோ, மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தையோ அல்லது சைபர் குற்ற பிரிவையோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு