திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் 29 ஆண்கள் தற்கொலையா? உண்மையை தேடும் பிபிசி கள ஆய்வு

    • எழுதியவர், ஆஷே யெட்கே
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இந்த ஆண்டு (2026) ஜனவரி 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான 6 மாதங்களில் மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் 383 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தத் தற்கொலைகளுக்கான காரணங்களை காவல்துறை ஆய்வு செய்தபோது, திருமணம் ஆகாமல் இருப்பது, போதைப் பழக்கம், மனச்சோர்வு, குடும்ப காரணங்கள், கடன் ஆகியவை காரணிகளாக இருந்ததாகத் தெரிய வந்தது.

காவல்துறையின் தகவல்படி, 29 ஆண்களின் தற்கொலைகளில் திருமணம் குறித்த பிரச்னைகள் ஒரு காரணியாக இருந்தது.

இந்த எண்ணிக்கை வெளிவந்த பிறகு, ஜல்கானில் தொடர்ந்து ஒரு விஷயம் பேசப்பட்டு வருகிறது. அதாவது, "இந்த நாட்களில் ஆண்களுக்கு மணமகள்கள் கிடைப்பதில்லை" என்பதே அது.

ஆனால் ஜல்கான் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தபோது, இந்த விவகாரம் மேலும் சிக்கலானதாகத் தோன்றியது.

திருமணம் செய்ய முயன்று வரும் இளைஞர்கள், அவர்களது குடும்பத்தினர், பெண்கள் மற்றும் இந்த விஷயத்தை ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் பேசியபோது, இந்தக் கேள்வி அவ்வளவு எளிமையானதல்ல என்பது தெளிவாகிறது.

ஏனெனில், ஜல்கானில் திருமணம் என்பது இரண்டு பேருக்கு இடையிலான ஒரு முடிவு மட்டுமல்ல. அது வேலைவாய்ப்பு, நிலம், சாதி, குடும்பப் பொறுப்புகள், இடப்பெயர்வு, பெண்களின் மாறி வரும் எதிர்பார்ப்புகள், ஆண்கள் மீது சமூகத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் சிக்கலான பின்னலாக மாறியுள்ளது.

'திருமணம் சரியான வயதில் நடக்க வேண்டும்'

ஜல்கானில் நாங்கள் சந்தித்த விஷால் பாட்டீலுக்கு 30 வயதாகிறது. அவர் ஒரு பேராசிரியர். திருமணம் குறித்த அவரது பார்வை, பல இளைஞர்களின் அனுபவங்களுடன் ஒத்திருக்கிறது.

"என் பெற்றோரும் நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதையே விரும்பினர். ஆனால், நான் அதைச் சிறிது காலம் தள்ளிப்போட்டு வருகிறேன். என் தொழில் வாழ்க்கையில் கவனம் செலுத்த விரும்புகிறேன். நான் பொருளாதார ரீதியாக சுயநிறைவு அடைய விரும்புகிறேன். என்னைப் புரிந்துகொண்டு, என் வாழ்க்கைத் துணையாக இருப்பார் என்று நான் உணரும் ஒரு பெண்ணைச் சந்தித்த பிறகே திருமணம் செய்துகொள்வேன்," என்று அவர் கூறுகிறார்.

அதே நேரத்தில், "திருமணத்திற்கென சமூகம் ஒரு குறிப்பிட்ட வயதையும் நிர்ணயித்துள்ளது. விஷாலின் வார்த்தைகளில், "இந்திய சமூகத்தில் 24-25-26 வயதிற்குள் திருமணம் நடந்திருக்க வேண்டும், 28-29 வயதிற்குள் நடந்திருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. 30 வயதைக் கடந்துவிட்டால், மக்கள் உங்களை வேறு மாதிரியாகப் பார்க்கத் தொடங்குகிறார்கள். இந்த அழுத்தம் திருமணம் ஆகாதது பற்றியது மட்டுமல்ல. திருமணம் ஆகாமல் இருந்தால், ஏதோவொரு குறை இருப்பது போன்ற உணர்வும் படிப்படியாக உருவாகலாம்" என்று அவர் குறிப்பிட்டார்.

உளவியல் ஆலோசகர் முகேஷின் கூற்றுப்படி, திருமணம் என்பது கௌரவம் மற்றும் வெற்றியுடன் தொடர்புபடுத்தப்படும்போது, சில இளைஞர்களுக்கு திருமணம் ஆகாமல் இருப்பது தனிப்பட்ட தோல்வியைப் போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடும்.

ஜல்கான் காவல்துறையின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது இதை மனதில் வைத்துக் கொள்வது அவசியமாகிறது. பதிவான 29 தற்கொலைச் சம்பவங்களில் திருமணம் ஆகாதது ஒரு காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தற்கொலைகளுக்குப் பின்னால் அதுவே முக்கியக் காரணமென்று காவல்துறை கூறவில்லை.

போதைப் பழக்கம், மனச்சோர்வு, குடும்ப நெருக்கடி, கடன் போன்ற பிற காரணிகளும் பரவலாகக் காணப்படுகின்றன.

இருப்பினும், திருமணம் ஆகாத நிலைக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை நாம் புரிந்துகொள்ளும்போது, இந்தப் புள்ளிவிவரங்களின் இன்னொரு பரிமாணம் வெளிப்படுகிறது.

'மகாராஷ்டிராவில் திருமணமாகாத பெண்களைவிட ஆண்களே அதிகம்'

மகாராஷ்டிராவின் புள்ளிவிவரங்கள் இந்தக் கேள்விக்கு இன்னொரு பின்னணியை வழங்குகின்றன. தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-5) 2019-21 தரவுகளின்படி, மகாராஷ்டிராவில் 20 முதல் 49 வயதுக்கு இடைப்பட்ட பெண்களில் சுமார் 11% பேர் திருமணம் ஆகாதவர்களாக இருந்தனர். அதேவேளையில், ஆண்களுக்கான இந்த விகிதம் சுமார் 30 சதவிகிதமாக இருந்தது.

இதன் பொருள், மகாராஷ்டிராவில் திருமணமாகாத ஆண்களின் எண்ணிக்கை, திருமணமாகாத பெண்களின் எண்ணிக்கையைவிட மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால் இந்த வேறுபாடு வெறுமனே பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்தானா?

ஜல்கானில் கௌஸ்துப் போத்தார் தொடர்பான சம்பவம், இந்தப் பிரச்னை எவ்வளவு தீவிரமானதாக இருக்கக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

பி. ஃபார்மசி படிப்பை முடித்த பிறகு, அவர் நாசிக்கில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவரது தாயார் இறந்த பிறகு அவர் தனக்கான வரன்களைத் தேடத் தொடங்கினர்.

அவருடைய குடும்பத்தினரின் கூற்றுப்படி, அரசுப் பணி இல்லாதது, சொந்த வீடு இல்லாதது, வயதான தந்தையுடன் சேர்ந்து வாழ வேண்டியிருப்பது போன்ற காரணங்களால் பல இடங்களில் அவர் நிராகரிக்கப்பட்டார். 2026 பிப்ரவரியில் அவர் தற்கொலை செய்துகொண்டார்.

கௌஸ்துபின் அனுபவத்தை வைத்து, ஒவ்வொரு நிராகரிப்பும் ஒரே மாதிரியானது என்ற முடிவுக்கு வர முடியாது. ஆனால் திருமண சந்தையில் பொருளாதார நிலைத்தன்மையும் குடும்ப அமைப்பும் எவ்வளவு முக்கியமானதாக மாறியுள்ளன என்பதை அது நிச்சயமாக எடுத்துக்காட்டுகிறது.

ஜல்கானில் நான் சந்தித்த ஒரு வயதான பெண், தனது மகனுக்கு இப்போது 40 வயதாவதாகக் குறிப்பிட்டார். அவர் தனது மகனுக்காகப் பல ஆண்டுகளாக மணமகளைத் தேடி வருகிறார். பல இடங்களில் பெண் தர மறுத்த பிறகு, இப்போது அவர் தாமே வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். "நாம் ஒரு வீடு கட்டினால், ஒரு பெண் கிடைப்பாள்" என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இதைச் சொல்லும்போது இந்தத் தாய் அச்சத்துடன் இருந்தார். அவரது வார்த்தைகளில், மகனுக்குத் திருமணம் ஆகவில்லை என்ற கவலை இருந்தது. ஆனால் அதைவிட, பல ஆண்டுகளாக முயன்று வந்தும்கூட எதுவும் மாறவில்லை என்ற விரக்தியே அதிகமாக வெளிப்பட்டது.

இதே மாற்றம், மகாராஷ்டிராவின் கிராமப்புறம் குறித்து ஆய்வு செய்த மயூர் குடுபாலே, ஜோயல் கபலேயோன் ஆகியோரின் ஆய்விலும் தென்படுகிறது. அவர்களது ஆய்வின்படி, கிராமப்புற திருமண அமைப்பில் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதை நிலம், கல்வி, சாதி, வயது ஆகியவை முக்கியமாகப் பாதிக்கின்றன.

ஆராய்ச்சியாளர் மயூர் குடுபாலே கூறுகையில், "ஒரு காலத்தில், ஒரு பெண்ணின் தந்தை, மணமகனிடம் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைப் பார்ப்பார். இப்போது, அவரிடம் நிலம் இருக்கிறதா இல்லையா என்பதைவிட, அவருக்கு வேலை இருக்கிறதா என்பதே முக்கியமான கேள்வியாக மாறிவிட்டது" என்றார்.

அவரது கருத்துப்படி, "கிராமப்புற பொருளாதாரம் மாறிவிட்டது. ஆனால் அந்த மாற்றத்துடன் இணைந்து, திருமணம் குறித்த எதிர்பார்ப்புகள் அனைவரிடமும் ஒரே அளவில் மாறவில்லை. ஒரு காலத்தில் நிலம் வைத்திருப்பது சமூக மற்றும் பொருளாதார நிலைத்தன்மையின் அடையாளமாக இருந்தது. இப்போது அந்த இடத்தை, நிலையான வருமானம், வேலை, நகரத்தில் வாழும் வாய்ப்பு மற்றும் சொந்த வீடு வைத்திருத்தல் போன்றவை பிடித்துள்ளன."

'சாதி போகவில்லை; திருமண எதிர்பார்ப்புகளே மாறியுள்ளன'

இவை அனைத்திலும் இன்னொரு பெரிய வரம்பாக இருப்பது 'சாதி'.

மயூர் குடுபாலேவின் கூற்றுப்படி, "சாதியும் உட்சாதியும் திருமணத் தேர்வுக்கான வாய்ப்புகளை வரையறுக்கின்றன. அதாவது, ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ தேடும்போது, சாதி மற்றும் உட்சாதியின் எல்லைக்கு உள்ளேயே தேடிக் கொண்டிருக்கிறார்கள்."

பாலின சமத்துவப் பயிற்சியாளர் தர்ஷனா பவார், இந்த சாதிக் கட்டமைப்பில் இருக்கும் மற்றொரு முரண்பாட்டை முன்வைக்கிறார். "தேவை ஏற்பட்டால், ஆண் ஒருவர் எந்த சாதியைச் சேர்ந்த பெண்ணையும் திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருக்கலாம். ஆனால் பெண்ணைப் பொறுத்தவரை திருமணம் செய்து வீட்டிற்கு வந்த பிறகு, அவரது சாதியையும், பெற்றோரையும், உறவினர்களையும் அவரது குடும்பத்தினர் உண்மையில் ஏற்றுக் கொள்வார்களா?" என்பது முக்கியமான கேள்வி என்கிறார்.

தர்ஷனாவின் கூற்றுப்படி, "ஆண் ஒருவர், சமூக ரீதியாக தன்னைவிடக் கீழானதாகக் கருதப்படும் சாதியைச் சேர்ந்த பெண்ணை ஏற்றுக்கொள்வது எளிதாக இருக்கலாம். ஆனால் சமூக ரீதியாகத் தன்னைவிட உயர்ந்ததாகக் கருதப்படும் சாதியைச் சேர்ந்த பெண்ணை, குறிப்பாக பொருளாதார வசதி குறைந்த பெண்ணை ஏற்றுக் கொள்வது என்று வரும்போது, அதேபோன்ற தயார் நிலை பெரும்பாலும் காணப்படுவதில்லை."

இதன் பொருள், திருமணச் சந்தையில் இருந்து சாதி இன்னும் மறைந்துவிடவில்லை; அது தனது வடிவத்தை மட்டுமே மாற்றியுள்ளது என்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெண்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

ஜல்கானில் பேசிக் கொண்டிருந்தபோது, பல ஆண்களிடம் இருந்து நான் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரு குற்றச்சாட்டு, "பெண்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டன" என்பதுதான்.

பலரின் கருத்துப்படி, பெண்கள் நல்ல வேலையில் இருக்கும் மணமகன், நகரத்தில் ஒரு வீடு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை விரும்புகிறார்கள்.

ஆனால் பெண்களுடன் பேசும்போது, அது சற்று மாறுபட்டதாகத் தெரிகிறது. குழந்தைத் திருமணம் மற்றும் அவர்களுடைய சொந்த எதிர்பார்ப்புகள் குறித்து 20-22 வயதுடைய ஒரு பெண்ணிடம் நாங்கள் பேசினோம். தன்னைச் சுயமாக நிலைநிறுத்திக் கொள்ளக்கூடிய, குறைந்தபட்சம் தனது சொந்த செலவுகளைச் சமாளிக்கும் அளவுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒருவராக மணமகன் இருக்க வேண்டும் என்பதே அவரது எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் அடுத்த நாளே, அந்த நேர்காணலை நீக்கிவிடுமாறு அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். இறுதியில், அந்த நேர்காணலை நாங்கள் நீக்க வேண்டியிருந்தது.

பெண்களின் எதிர்பார்ப்புகள் மாறியுள்ளன. ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடமும் வாய்ப்பும் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதை இது காட்டியது.

தர்ஷனா பவார் கூறுகையில், "தனது கணவருடன் பேச முடிவது, அவருடன் வெளியே செல்ல முடிவது, அவருடன் நேரம் செலவிட முடிவது போன்ற உயர்ந்த எதிர்பார்ப்புகள் இருப்பது தவறல்ல. இவை 'அளவுக்கு மீறிய' எதிர்பார்ப்புகள் அல்ல. அடிப்படையானதும் நியாயமானதுமான எதிர்பார்ப்புகளே. இப்போது பெண்கள் அதை உணரத் தொடங்கியுள்ளனர்" என்றார்.

ஜல்கானை சுற்றிப் பார்த்தபோது, மேலும் ஒரு விஷயத்தை நான் மீண்டும் மீண்டும் கவனித்தேன். திருமணப் பொருத்தமின்மை குறித்த பிரச்னையைப் பற்றி பேசும்போது, பல ஆண்கள் இன்னும் அதற்குப் பெண்களையே குற்றம் சாட்டினர்.

மயூர் குடுபாலேவின் ஆய்விலும், பெண்களின் மாறி வரும் விருப்பத் தேர்வுகள் குறித்து கிராமப்புற ஆண்களிடையே இதேபோன்ற குற்றச்சாட்டுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இருப்பினும், இந்த மாற்றங்களை பெண்களின் விருப்பங்களில் ஏற்பட்ட மாற்றம் என்ற ஒரு கோணத்தில் மட்டுமே பார்க்க முடியாது என்று அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. இவற்றுக்குப் பின்னால் விவசாயத்தின் வீழ்ச்சி, வேலையின்மை, கல்வி, சாதி மற்றும் சமூக அந்தஸ்து குறித்த மாறிவரும் கருத்துகள் எனப் பல காரணிகள் உள்ளன.

ஆண்கள் இவற்ற எப்படிப் பார்க்கிறார்கள்?

ஜல்கானின் கிராமங்கள் வழியாக நடந்து சென்றபோது, திருமணம் பற்றிய பேச்சு வந்த உடனே பல இளைஞர்களின் குரல்களில் மாற்றம் ஏற்பட்டதைக் கவனித்தேன். சிலர் கேமரா முன் பேசத் தயாராக இருக்கவில்லை. இளைஞர் ஒருவர் என்னிடம் வெளிப்படையாக, "நான் கேமராவில் என்னைப் பற்றி பேசினால், யார் திருமணம் செய்து கொள்வார்கள்?" என்று கூறினார்.

பல ஆண்டுகளாக திருமணத்திற்காக முயன்றும் பலன் இல்லாததால், சில குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற அழுத்தத்தைக் குறைத்துக் கொண்டன.

சில குடும்பங்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் திருமணத்திற்கான ஏற்பாடாக வீடு கட்டி வருகின்றன, நிலங்களை வாங்குகின்றன அல்லது தங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்த முயன்று வருகின்றன.

பல குடும்பங்கள் தற்போது இடைத்தரகர்கள் மற்றும் திருமணத் தரகர்களின் உதவியை நாடுகின்றன. சில பெற்றோரின் கூற்றுப்படி, திருமணம் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளன.

சிலர் மகாராஷ்டிராவின் பல பகுதிகளுக்குச் சென்று மணமகளைத் தேடுகின்றனர். சில குடும்பங்கள் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைப்பதற்காகப் பணம் கொடுக்கவும் தயாராக உள்ளன.

திருமணத்திற்கான தேடல் இப்போது உறவினர்களின் வட்டத்தைத் தாண்டி, இடைத்தரகர்கள், பணப் பரிவர்த்தனைகள் மற்றும் தொலைதூர மாவட்டங்கள் வரை விரிவடைந்துள்ளது.

பெண் சிசுக் கொலையில் இருந்து மாறி வரும் திருமண அமைப்பு வரை

தர்ஷனா பவாரின் கூற்றுப்படி, "கடந்த சில தசாப்தங்களில் பரவலாக நடந்த பெண் சிசுக்கொலையின் தாக்கம், இன்று திருமண வயதை எட்டியுள்ள ஆண்களின் தலைமுறையில் தென்படுகிறது."

"இன்று 30-35 வயதுப் பிரிவில் இருந்து, திருமணத்திற்கு துணையைத் தேடி கிடைக்காமல் இருக்கும் ஆண்கள் பிறந்த காலத்தில், பெருமளவிலான பெண் கருக் கலைப்புகளும் பெண் சிசுக் கொலைகளும் நடந்தன. ஆனால் பெண்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்பதற்காக, திருமணம் குறித்த முழு முடிவெடுக்கும் அதிகாரமும் பெண்களிடம் சென்றுவிட்டது என்று அர்த்தமல்ல," என்று தர்ஷனா சுட்டிக்காட்டுகிறார்.

மயூர் குடுபாலே, ஜோயல் கபலேயோன் ஆகியோரின் ஆய்வுப்படி, பெண்களின் தேர்வு செய்யும் திறன் ஓரளவு அதிகரித்து இருந்தாலும், அது இன்னும் குடும்பம், சாதி, சமூக அழுத்தம் ஆகியவற்றின் கட்டமைப்புக்கு உள்ளேயேதான் இருக்கிறது.

ஆண்களும், வேலைவாய்ப்பு, வருமானம், சாதி, குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், மாறி வரும் திருமண அமைப்பு ஆகியவற்றின் உலகில் தங்களுக்கான இடத்தைக் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.

விஷால் பாட்டீல் கூறுகையில், "திருமணம் என்பதே வாழ்க்கை அல்ல" என்றார். ஜல்கானில் பதிவான இந்த 29 தற்கொலைகளைப் பார்க்கும்போது, ஒருவேளை முதலில் நினைவில் கொள்ள வேண்டியது இதுவாக இருக்கலாம்.

ஏனெனில், இந்த 29 தற்கொலைகளில் திருமணம் ஆகாதது ஒரு காரணியாக இருந்துள்ளது. ஆனால் ஜல்கானில் இருந்து வெளிப்படும் கதை, இது வெறுமனே பெண்களைப் பற்றிய பிரச்னை இல்லை என்பதைக் காட்டுகிறது. மாறி வரும் பொருளாதார சூழல்கள், சாதி அமைப்புகள், பெண்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகள், ஆண்கள் மீதான சமூகத்தின் எதிர்பார்ப்புகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள ஒரு சிக்கலான பிரச்னை இது.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு