நேபாளத்தில் வீட்டைச் சூழ்ந்த வெள்ளம் - பால்கனியில் செய்வதறியாது நின்ற குடும்பம் என்ன ஆனது?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

நேபாளத்தில் புதன்கிழமை ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும் இப்போது வெளியாகி வருகின்றன.

சமூக ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், நேபாள-திபெத் எல்லையில் வெள்ளம் ஏற்படுத்திய பேரழிவின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன.

வெள்ள நீரும் குப்பைக் கூளங்களும் அடுத்தடுத்து பல பகுதிகளை அடித்துச் செல்வதை இந்தக் காணொளிகள் காட்டுகின்றன. கான்கிரீட் வீடுகளைக் கூட வெள்ள நீர் அடித்துச் செல்கிறது.

ஆனால், இந்த அச்சமூட்டும் காணொளிகளுக்கு மத்தியில், ஒரு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷார்ட் வீடியோ

பிபிசி சரிபார்ப்புப் பிரிவின் தகவலின்படி, இந்தக் காணொளி திரிசூலி நதிக்கரைக்கு அருகிலுள்ள பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.

அங்கு சிக்கியிருந்தவர்களின் அடையாளங்களை பிபிசி சரிபார்ப்புப் பிரிவு வெளியிடவில்லை. இருப்பினும், அந்தக் குடும்பம் எப்படியோ உயிர் பிழைத்தது என்று குறிப்பிட்டு அந்தக் காணொளியைப் பகிர்ந்துள்ளது. இதற்கிடையில், வீட்டின் கூரையில் இருந்த ஒருவர் உதவி கோரி சிவப்பு நிறத் துணியை அசைத்துக் கொண்டிருந்தார்.

காணொளியில் குறைந்தது மூன்று பேர் தெரிகிறார்கள்: ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை (ஒரு சிறுமியாக இருக்கலாம்).

வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள பால்கனி பகுதியில் அவர்கள் சிக்கியிருப்பதை காண முடிகிறது.

பெரிய கற்கள், குப்பைகள் கொண்ட சேறு கலந்த வெள்ள நீர் அவர்களைச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது.

அந்தப் பொருட்கள் உறுதியாக நிற்கும் வீட்டின் மீது தொடர்ந்து மோதி, அதைத் அடித்துச் செல்ல முற்படுகின்றன.

அதே வேளையில், வீட்டின் குடியிருப்பாளர்கள் பால்கனியில் செய்வதறியாது நிற்பதைக் காண முடிகிறது. ஒரு பெண் வீட்டின் கூரைக்குச் சென்று, உதவி கோரி சிவப்பு நிறத் துணியை அசைப்பதையும் காண முடிகிறது.

சமூக ஊடகங்களில் மக்கள் இந்தக் காணொளிக்குத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் மக்கள் என்ன சொல்கிறார்கள்?

சர்வதேச விவகார ஆய்வாளர் அரிக் சென் இந்தக் காட்சியைப் பகிர்ந்து "சமீப காலங்களில் நான் பார்த்ததிலேயே மிகவும் பரிதாபகரமான காட்சி இதுதான். தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் அடித்துச் சென்ற வெள்ளப்பெருக்கிற்கு மத்தியிலும் ஒரு வீடு மட்டும் இன்னும் உறுதியாக நிற்கிறது." என்று குறிப்பிட்டுள்ளார்.

"நேபாள-திபெத் பள்ளத்தாக்கு வழியாகச் சேறு, பனி, பாறைகள் கலந்த பெரும் வெள்ளம் பாய்ந்து வரும் நிலையில், மக்கள் பால்கனிகளிலும் கூரைகளிலும் இருந்தார்கள். அடுத்த வெள்ள அலை தங்கள் கடைசிப் புகலிடத்தையும் அடித்துச் செல்லுமா என்று அஞ்சி அவர்கள் உதவிக்காக காத்திருக்கிறார்கள். அவர்கள் உயிர் பிழைக்கட்டும். அடுத்த அலை தாக்குவதற்குள் மீட்புக் குழுவினர் அவர்களைச் சென்றடையட்டும்." என அவர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

"இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது ஏற்படும் துயர உணர்வுக்கு இயற்கையின் சீற்றம் மட்டுமே காரணமல்ல. நேபாளத் தரப்புத் தகவல்களின்படி, திபெத் பகுதியில் உள்ள லெண்டே-போட்டிகோஷி ஆற்றில் ஏற்பட்ட பனிப்பாறை உடைவு மற்றும் அதனால் ஆற்றில் கொட்டிய பாறைத் துண்டுகளே இந்தப் பெருவெள்ளத்திற்குக் காரணமாகும். ஆற்றின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்கள், சீன அதிகாரிகளிடமிருந்து சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை எதுவும் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர்.

திரிசூலி ஆற்றின் நீர்மட்டம் சுமார் 30 நிமிடங்களில் ஒன்பது மீட்டர் உயர்ந்தது. அந்த அரை மணி நேர இடைவெளிதான், பாதுகாப்பான இடத்திற்குச் செல்வதற்கும், அல்லது பால்கனியில் சிக்கிக்கொண்டு கண்முன்னே உலகம் அழிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கும் இடையிலான வித்தியாசமாக அமைந்தது."

''பின்னர் சீனா, முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கத் தவறியதாகக் கூறப்படுவதை மறுத்ததுடன், ஆற்றின் அளவைக் கண்காணிக்கும் கருவிகளால் கூட உடனடியாகக் கண்டறிய முடியாத அளவுக்கு பனிப்பாறை-பாறை சரிவு திடீரென ஏற்பட்டதாக விளக்கம் அளித்தது. சரி. ஆனால், இதே ஆற்றுப் பகுதியில் 2025ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு விவாதிக்கப்பட்ட எல்லை தாண்டிய முன்எச்சரிக்கை அமைப்பு, இந்த வெள்ளம் ஏற்பட்ட நேரத்திலும் ஏன் இன்னும் கையெழுத்தாகாமல் இருந்தது என்பதை விளக்க வேண்டும்.

நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். வெளிநாட்டு யாத்ரீகர்கள் மற்றும் மலையேற்றம் சென்றவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். தப்பிய அந்த வீடு ஏதோ ஒரு அதிசயம் அல்ல. அது உயிருக்கும் ஆற்றுக்கும் இடையிலான மிக மெல்லிய கோடு. அந்த வீட்டில் உள்ள குடும்பத்தினர் இன்னும் பாதுகாப்பாக இருக்கட்டும்." என அவர் தெரிவித்துள்ளார்.

நேபாள வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 600-ஐ கடந்தது

புதன்கிழமை நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 616-ஆக உயர்ந்துள்ளதாக நேபாளக் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சீன அரசு ஊடகங்களின் தகவலின்படி, திபெத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது; மேலும் 554 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, சர்வதேச நிவாரண அமைப்புகளும் பல நாடுகளின் அரசுகளும் அவசரக கால நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

வெள்ளத்திற்குப் பிறகு நேபாளத்தில் சுமார் 2,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல பலவும் நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள் அல்லது நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு