'3 வயதில் மன்னரானவர்... 34 வயதில் மரணம்' - உலகின் மிக இளம் மரபுவழி மன்னரின் கதை

    • எழுதியவர், ஸ்வைபு இப்ராஹிம்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

உலகின் மிக இளம் மன்னராக அறியப்பட்ட உகாண்டாவின் மரபுவழி மன்னர் ஒருவர் தனது 34-வது வயதில் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த தகவலை பிரதமர் அறிவித்துள்ளார்.

மேற்கு உகாண்டாவில் உள்ள டோரோவின் மன்னராக நான்காம் ஓயோ நிம்பா கபாம்பா இகுரு ருகிடி, 1995-ஆம் ஆண்டு தனது தந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தனது 3-வது வயதில் அரியணை ஏறினார்.

மன்னர் ஓயோவின் மரணத்துக்கான காரணத்தை டோரோ ராஜ்ஜியம் வெளியிடவில்லை. ஆனால், அவர் உடல்நலக்குறைவால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் உகாண்டா அரசின் அமைச்சர் ஒருவர் உள்ளூர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

உகாண்டா, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மற்றும் நாடாளுமன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அதேவேளையில், அந்நாட்டில் பல மரபுவழி பாரம்பரிய ராஜ்ஜியங்கள் உள்ளன. அவற்றுக்கு அரசியல் அதிகாரம் இல்லாவிட்டாலும், அவை தொடர்ந்து குறிப்பிடத்தக்க கலாசார செல்வாக்கைக் கொண்டுள்ளன.

ஓயோவை உலகின் மிக இளம் ஆட்சியிலிருக்கும் மன்னர் என கின்னஸ் உலக சாதனை நிறுவனம் பட்டியலிட்டிருந்தது. இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களை அவர் ஆட்சி செய்தார். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட டோரோ ராஜ்ஜியத்தின் 13-வது மன்னர் இவர்.

மன்னரின் மரணத்தை அறிவித்த டோரோவின் பிரதமர் கால்வின் ஆம்ஸ்ட்ராங் ர்வோமியிரே அகீகி, வியாழக்கிழமை நிகழ்ந்த அவரது மரணம் அரச குடும்பத்துக்கும் டோரோ மக்களுக்கும் "அளவிட முடியாத இழப்பு" என்று தெரிவித்தார்.

"இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் டோரோ மக்கள் அனைவரும் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் பிரார்த்தனையுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அகீகி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

டோரோ ராஜ்ஜியத்தில் மன்னரைத் தேர்ந்தெடுப்பது பரம்பரை அடிப்படையிலான முறையைப் பின்பற்றுகிறது.

மன்னர் ஓயோ அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துகொள்ளவில்லை. எனினும், "அரியணையின் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று அகீகி தெரிவித்தார்.

"மன்னர், தனது வாரிசாக ஒரு இளவரசரை விட்டுச் சென்றுள்ளார். டோரோ ராஜ்ஜியத்தின் மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப, உரிய நேரத்தில் அவரது அடையாளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்" என்று அவர் விளக்கினார்.

1995-ஆம் ஆண்டு தனது 3-வது வயதில் ஓயோ மன்னராகப் பொறுப்பேற்றபோது, அவரது தாயாரான ராணி உள்ளிட்டோர் அடங்கிய ஆட்சிக்குழு அமைக்கப்பட்டது. ஓயோ 18 வயதை அடையும் வரை இந்த ஆட்சிக்குழு மன்னரின் சார்பில் நிர்வாகத்தை கவனித்தது. அதன்பின்னர் அவருக்கு அதிகாரப்பூர்வமாக முடிசூட்டு விழா நடைபெற்றது.

இளம் மன்னர் தனது மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். டெய்லி மானிட்டர் நாளிதழ் வெளியிட்ட செய்தியின்படி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், கல்வி, காலநிலை பாதுகாப்பு மற்றும் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சமூக நலக் காரணங்களுக்காக அவர் செயல்பட்டார்.

உகாண்டாவின் மிகப் பெரியதும் செல்வாக்கு மிக்கதுமான பாரம்பரிய அமைப்பான புகாண்டா ராஜ்ஜியம், மன்னர் ஓயோவின் மறைவையடுத்து டோரோ மக்களுடன் தங்களது துயரத்தைப் பகிர்ந்துகொள்வதாகத் தெரிவித்தது. மேலும், அவர் உகாண்டாவுக்கு மதிப்புமிக்க ஒரு நபராக இருந்ததாகவும் புகாண்டா ராஜ்ஜியம் குறிப்பிட்டது.

இதேபோல், ர்வென்சுருரு ராஜ்ஜியமும், "இந்தப் பேரிழப்பால் துயரத்தில் இருக்கும் அனைவருக்கும்" தனது இரங்கலைத் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் பலரும் மறைந்த மன்னருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உகாண்டா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு, மன்னர் ஓயோவை "கால்பந்து விளையாட்டின் உண்மையான நண்பர்" என்று புகழ்ந்துள்ளது. மேலும், அவரது "பாரம்பரியம், கால்பந்து மீதான அன்பு, ஆர்வம் மற்றும் பங்களிப்பு" ஆகியவற்றை நினைவுகூரும் வகையில், செப்டம்பர் 4-ஆம் தேதி வரை நடைபெறும் அனைத்து கால்பந்து போட்டிகளின் தொடக்கத்துக்கு முன்பும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

உகாண்டா அரசின் அமைச்சர் மார்கரெட் முஹாங்கா, டோரோ ராஜ்ஜியத்தில் நிலவும் சூழலை "சோகமானதாக உள்ளது... யாருடைய முகத்திலும் புன்னகையைப் பார்க்க முடியவில்லை" என்று விவரித்தார்.

மன்னர் தனது வாழ்க்கையின் மிகச் சிறந்த பருவத்தில் இருந்ததாகக் கூறிய அவர், சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்றில், "அவர் மிகவும் இளம் வயதிலேயே இருந்தாலும், தனது ராஜ்ஜியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்" என்று தெரிவித்தார்.

உகாண்டா பாடகி ஜூலியானா கன்யோமோஸி, இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில், "டோரோவுக்கு மிகவும் இருண்ட நாள். இவ்வளவு சீக்கிரம் சென்றுவிட்டார். என்ன ஓர் இழப்பு!!!!" என்று தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாடகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பாபி வைன், மன்னர் ஓயோவின் "ஆன்மா என்றென்றும் அமைதியில் இளைப்பாறட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு