You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாள வெள்ளம்: சீனா குறித்து எழும் சர்ச்சை பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, இதில் சீனாவின் பங்கு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
பேரிடருக்கு முன்பாக நேபாளத்திற்கு சீனா உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
உரிய நேரத்தில் தகவல் கிடைத்திருந்தால், நேபாளத்தில் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்பைக் குறைத்திருக்க முடியுமென கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளையும் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் செய்திகளையும் நேபாளத்தில் உள்ள சீன தூதரகம் மறுத்துள்ளது. இதற்கிடையில், சீனாவின் பங்கு குறித்து சர்வதேச ஊடகங்களிலும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. நேபாள ஊடகங்களும் சீன ஊடகங்களும் இந்த விவகாரம் குறித்து செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
குற்றச்சாட்டுகளை நிராகரித்த சீனா
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் அழிவுக்கு, இந்தச் சம்பவம் குறித்து சீனா முன்கூட்டியே நேபாளத்துக்கு எச்சரிக்கை வழங்காததே காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை நேபாளத்தில் உள்ள சீன தூதரகம் மறுத்துள்ளது.
எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்தச் செய்திகளை சீன தூதரகம் போலியானவை என்று மறுத்துள்ளது. அதில், "ஆகஸ்ட் 26ஆம் தேதி, நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அல்லது பனிப்பாறை சரிவு காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்ததுடன், நேபாளம், சீனா ஆகிய இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் பலர் காணாமல் போயுள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நேபாளத்தில் உள்ள சீன தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தகவல்களைப் பகிரவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "ராசுவா - கியிரோங் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் சீனா ஆழ்ந்த வருத்தமடைந்து இருக்கிறது. நேபாளத்திற்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும். முதல்கட்ட தகவல்களின்படி, நேபாள பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பனிச்சரிவுகளையும், பாறைகள் மற்றும் மண் சரிவுகளையும் ஏற்படுத்தியது. இதனால் எல்லையின் இருபுறங்களிலும் உயிரிழப்புகளும், பலர் காணாமல் போன சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளது.
சீன தூதரகம் மேலும் தனது அறிக்கையில், "எதிர்காலத்தில், குறிப்பாக எல்லை தாண்டிய பேரிடர்கள் ஏற்படும் சூழலில், வானிலை, நீர் மற்றும் நிலவியல் அபாயங்கள் குறித்த தகவல்களைச் சிறப்பாகப் பரிமாறிக் கொள்ள ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவோம். நேபாளமும் சீனாவும் அண்டை நாடுகள் மட்டுமின்றி, நிலவியல் ரீதியாகவும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன."
"எனவே, இந்தப் பேரிடரில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, எல்லையின் இருபுறங்களிலும் உள்ள மக்களின் உயிர் மற்றும் உடைமைகளை சிறப்பாகப் பாதுகாக்கும் வகையில், இரு நாடுகளும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.
நேபாள ஊடகங்கள் என்ன கூறின?
'தி காத்மாண்டு போஸ்ட்' நாளிதழ், நேபாளத்தின் லாசா துணைத் தூதரான லக்ஷ்மி பிரசாத் நிரௌலாவை மேற்கோள் காட்டி, "நேபாளம் மற்றும் சீனாவை சேர்ந்த அதிகாரிகளால் எல்லையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை" என்று தெரிவித்துள்ளது.
"தகவல் தொடர்பு இல்லாததால், வெள்ளம் எங்கிருந்து தொடங்கியது, அதற்கான உண்மைக் காரணம் என்ன என்பது குறித்த அதிகாரபூர்வமான மற்றும் நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை" என்று நிரௌலா தெரிவித்துள்ளார்.
அதோடு அவர், "வெள்ளம் எங்கிருந்து தொடங்கியது, அதன் உண்மையான மூல காரணம் என்ன என்பதைக் கண்டறிய சீன அதிகாரிகளாலும் இதுவரை முடியவில்லை" என்று அதில் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், நம்பகமான தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேபாளத்தின் முன்னணி செய்தி நிறுவனமான 'ஆன்லைன் கபர்' வெளியிட்டுள்ள தகவலின்படி, வெள்ளத்துக்குப் பிறகு, பேரிடர் தொடர்பான தகவல்களை சீனாவுடன் நிகழ்நேரத்தில் பகிர்ந்து கொள்ளும் அமைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹால் "பிரசண்டா" இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரசண்டா, ராசுவாவில் நிலவும் வெள்ளச் சூழலைக் கருத்தில் கொண்டு, சீனா உடனான தகவல் பரிமாற்றத்திற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
சீனாவின் எச்சரிக்கை அமைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள்
காத்மாண்டுவை தளமாகக் கொண்டு செயல்படும் டிஜிட்டல் ஊடகமான 'உகேரா' வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, புதன்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் திபெத்தின் கெருங் மாவட்டத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இது நேபாள நேரப்படி காலை சுமார் 8.15 மணி.
சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, வெள்ளத்தின் பலத்த நீரோட்டம் நேபாளத்தில் உள்ள போடேகோஷி ஆற்றைச் சென்றடைந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிடம் இருந்து வெள்ளம் தொடர்பாக நேபாளத்திற்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லையென நேபாள தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் சாந்தி மஹத் தெரிவித்ததாக 'உகேரா' மேற்கோள் காட்டியுள்ளது.
ராசுவா மாவட்டத்தின் தலைமை மாவட்ட அதிகாரி, உள்ளூர் நேரப்படி காலை 9 மணியளவில் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையத்தைத் தொடர்பு கொண்டு வெள்ளம் குறித்து தகவல் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, எல்லை தாண்டிய பேரிடர்கள் தொடர்பான நிகழ்நேர தகவல்களை நேபாளம், சீனா இடையே பகிர்ந்துகொள்ளும் அமைப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
பனிப்பாறை ஏரிகள் உடைதல் மற்றும் திடீர் வெள்ளம் போன்ற சம்பவங்களின்போது, சீனாவிடம் இருந்து உரிய நேரத்தில் தகவல்களைப் பெற வேண்டியதன் அவசியத்தை நேபாளம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை விடுத்ததா இல்லையா?
தற்போதைய சூழலில், சீனாவின் முன்னெச்சரிக்கை அமைப்பு எச்சரிக்கை விடுத்ததா, இல்லையா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனா-நேபாள எல்லைப் பகுதியில் செயல்பட்டு வரும் முன்னெச்சரிக்கை அமைப்பு, இந்தப் பேரிடருக்கு முன்னதாக ஏதேனும் அசாதாரண நடவடிக்கையைக் கண்டறிந்ததா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏதேனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த அமைப்பில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, முன் எச்சரிக்கை அமைப்பு இதுவரை ஏழு முறை உரிய நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்கியுள்ளது.
இதில் கடந்த ஆண்டு சீனா-நேபாள எல்லைப் பகுதியில் வழங்கப்பட்ட ஓர் எச்சரிக்கையும் அடங்கும். ஆயினும், புதன் கிழமை ஏற்பட்ட சமீபத்திய பேரிடர் தொடர்பாக இந்த அமைப்பு ஏதேனும் எச்சரிக்கை விடுத்ததா என்பதை விஞ்ஞானிகள் தெளிவுபடுத்தவில்லை.
இந்த விவகாரம் தொடர்பாக சீனாவின் டிஜிட்டல் நாளிதழான 'தி பேப்பர்', சீன அறிவியல் அகாடமியை சேர்ந்த நிபுணர் காங் ஷிச்சாங்கிடம் பேசியதாக 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' தெரிவித்துள்ளது.
'தி பேப்பர்' நாளிதழிடம் காங் ஷிச்சாங் கூறுகையில், "மலை உச்சியில் பனி மற்றும் பாறைகள் சரிவதை முன்கூட்டியே கண்டறிந்தால், சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பாக எச்சரிக்கை விடுக்க முடியும்" என்றார்.
ஆனால், அப்பகுதியில் போதுமான கண்காணிப்பு உபகரணங்கள் இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், இந்த முறை வெள்ளத்தின் தோற்றம் நேபாளத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுவதாகவும் கூறினார்.
எனவே அவரது கூற்றுப்படி, சென்சார்கள் அபாயத்தைக் குறிக்கும் சமிக்ஞைகளைக் கண்டறியும் நேரத்திற்குள், வேகமாகப் பாயும் பாறைகள் மற்றும் மண் கலந்த வெள்ளம் ஏற்கெனவே கீழ்நோக்கிப் பாய்ந்து சென்றிருக்கலாம்.
தகவல்கள் மீதான சீன அரசின் கட்டுப்பாடு
அமெரிக்க நாளிதழான 'நியூயார்க் டைம்ஸ்', தனது செய்தியில் திபெத்தில் இருந்து வெளியாகும் தகவல்கள் மீது சீனா கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த விவகாரத்தை எழுப்பியுள்ளது. இந்த அமைப்பில் தகவல்கள் செல்வது கிட்டத்தட்ட முழுமையாக சீன அரசின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக சர்வதேச திபெத் பிரசார அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரியான் ஃபியோரெஸி கூறியதாக அந்தச் செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
இயற்கைப் பேரிடரின்போது இதன் தாக்கம் மேலும் கடுமையாக இருக்கக்கூடுமென ஃபியோரெஸி கூறுகிறார். மக்கள் பழிவாங்கப் படுவோமென்ற அச்சத்தில், எங்கு மக்கள் சிக்கியுள்ளனர், எந்தப் பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்களைப் பகிர அஞ்சக்கூடும்.
இதுபோன்ற தகவல்களைப் பகிர மக்கள் அஞ்சினாலோ அல்லது அவர்களின் சமூக ஊடக பதிவுகள் நீக்கப்பட்டாலோ, முக்கியமான தகவல்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நிவாரணம் மற்றும் மீட்புக் குழுக்கள், பொது மக்கள் ஆகியோரைச் சென்றடைய முடியாது என்று அவர் கூறுகிறார்.
இதற்கிடையில், நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பெரும் அழிவு, சீனா - நேபாள எல்லையில் பேரிடர் தொடர்பான நிகழ்நேர தகவல் பரிமாற்றம் மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளின் செயல்திறன் குறித்த விவாதத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இருப்பினும், பேரிடருக்கு முன்பாக சீனாவிடம் ஏதேனும் எச்சரிக்கை தகவல் இருந்ததா, அது நேபாளத்துடன் பகிரப்பட்டதா என்பது குறித்து இதுவரை சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.
'நேச்சர்' இதழ், நேபாளம் மற்றும் சீனா இடையே ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
"பல பனிப்பாறைகளும், அவற்றுடன் தொடர்புடைய உயரமான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு உள்கட்டமைப்புகளும் சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் அமைந்துள்ளன. எனவே, எச்சரிக்கை அமைப்பைப் பொறுத்தவரை, இரு நாடுகளுக்கும் இடையே தரவுப் பகிர்வும், எல்லை தாண்டிய ஒருங்கிணைப்பும் அவசியம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு