தண்ணீரை நின்றுகொண்டே குடிப்பது ஆபத்தா? மருத்துவர்கள் அறிவுறுத்துவது என்ன?

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தண்ணீரை நின்று குடிக்கக் கூடாது, உட்கார்ந்துதான் குடிக்க வேண்டும் என்று பல வீடியோக்கள் இணையத்தில் வலம் வருவதைப் பார்த்திருப்பீர்கள்.

தண்ணீரை நின்று குடிக்கும்போது, உடலிலுள்ள திரவ சமநிலை குலையக்கூடும், அஜீரணம் ஏற்படும், மூட்டு வலி ஏற்படும் எனப் பல பாதிப்புகள் அவற்றில் பட்டியலிடப்படுகின்றன.

அதேபோல, பொதுவாக நிற்பதைவிட, அமர்ந்திருப்பது நிதானமான, அமைதியான நிலை என்பதால் தண்ணீரை உட்கார்ந்துதான் குடிக்க வேண்டுமென வீட்டிலுள்ள பெரியவர்களும் இதை வலியுறுத்துவதுண்டு.

ஆனால், இவற்றில் எது உண்மை, எது நம்பிக்கை, எது அறிவியல்? இதுகுறித்த மருத்துவர்களின் விளக்கத்தை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

அலோபதி மருத்துவர்களும், ஆயுர்வேதம், சித்தா போன்ற மருத்துவர்களும் நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பதைவிட அமர்ந்த நிலையில் குடிப்பதையே அறிவுறுத்துகின்றனர்.

இருப்பினும், "நின்ற நிலையிலேயே குடிப்பதால் உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படும், மூட்டு வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம்" என்பன போன்ற கூற்றுகளுக்கு அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் ஏதுமில்லை என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

"தண்ணீர் குடிக்காமலே இருப்பதுதான் ஆபத்தானது. குடிக்காமலே இருப்பதுடன் ஒப்பிட்டால் நின்றவாறு குடிப்பது பரவாயில்லை" என்று கூறும் மூத்த இரைப்பைக் குடல் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் செந்தில் குமார் கணபதி, அதேநேரம் 'தண்ணீரை நின்று குடிப்பது சிறந்ததா? உட்கார்ந்து குடிப்பது சிறந்ததா?' என்ற கேள்விக்கு, "உட்கார்ந்து குடிப்பதே சிறந்தது" என்று தெரிவித்தார்.

"ஒருவர் நின்ற நிலையில் இருப்பதைவிட உட்கார்ந்திருக்கும்போது நிதானமாக இருப்பார். தண்ணீரை நிதானமாக அருந்தினால், அது முறையாக உணவுக்குழாய் வழியாக குடலுக்குச் சென்று சேரும்" என்கிறார் மருத்துவர் கணபதி.

அவரது கூற்றுப்படி, "உணவு சாப்பிடும்போது அமர்ந்து தண்ணீர் குடிப்பது நல்லது. இது செரிமானத்திற்கு உதவும். சாப்பிடும்போது இடையிடையே சிறு அளவுகளில் தண்ணீர் எடுத்துக் கொள்வது, உணவை உணவுக் குழாயில் மெதுவாகச் செலுத்த உதவுகிறது. அதற்காக சாப்பிடும்போது தண்ணீரை அதிகமாகக் குடிக்கக்கூடாது. அது வயிற்றிலுள்ள செரிமானச் சாறுகளை நீர்த்துப்போகச் (dilute) செய்யும். அது செரிமானச் செயல்பாட்டிற்கு உகந்ததல்ல."

நின்ற நிலையில், அமர்ந்த நிலையில் என்பதைவிட உண்மையில் மிகவும் ஆபத்தானது தண்ணீரை படுத்துக்கொண்டு குடிப்பதுதான் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அதனால், "உணவுக் குழாயில் செல்ல வேண்டிய நீர், காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும் குழாயில் தடம் மாறிச் செல்லக்கூடும் என்பதால் அது ஆபத்தானது. பொதுவாக, தண்ணீர் குடிக்கையில் நேராக அமர்ந்த நிலையில் 45 டிகிரி சாய்மானத்தில் இருந்தால், தண்ணீர் சரியாக குடலுக்குச் சென்று சேரும். அதேநேரம், நின்றுகொண்டே குடிப்பதால் ஆபத்து அல்லது உடல் பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறுவது ஆதாரமற்றது" என்கிறார் அரசு பொது மருத்துவர் சந்திரசேகரன்.

அத்துடன், தண்ணீரை அன்னாந்து பார்த்து அப்படியே விழுங்காமல், சிறுகச் சிறுக உறிஞ்சிக் குடிக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்துகிறார்.

"சாதாரண வெப்ப நிலையில் உள்ள நீரை, அன்னாந்து கடகடவென விழுங்காமல் சிறு சிறு அளவுகளாக உறிஞ்சிக் குடிக்க வேண்டும். அப்படியில்லாமல், ஒரே வீச்சில் மொத்தமாகக் குடிப்பதால் சுவாசம் அடைபடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக" அவர் கூறுகிறார்.

உணவுடன் அல்லாமல் தாகத்திற்காக தண்ணீர் குடிக்கும்போது நின்றவாறு குடிக்கலாம் என்கிறார் மருத்துவர் கணபதி.

அவரது விளக்கத்தின்படி, "உடலில் இழந்த நீர்ச்சத்தை மீண்டும் பெறுவதற்காக, உதாரணமாக மாரத்தான் ஓடிய பிறகு, ஒருவர் தனது தாகத்தைத் தீர்க்க நின்ற நிலையில் தண்ணீர் அருந்தலாம். அப்போது நீர் வேகமாக குடலுக்குள் செல்லும், உடல் இழந்த நீர்ச்சத்தும் வேகமாக திரும்பக் கிடைக்கும்."

அதேநேரம் குடல் ஒரு நேரான குழாய் போன்றதல்ல என்பதால், புவி ஈர்ப்பு உள்ளிட்ட காரணிகளின் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், " சிறு குடல் ஆறு மீட்டர், பெருங்குடல் இரண்டு மீட்டர் என்ற நீளத்தில் இருக்கும். இவை ஒரே நேரான குழாய் அல்ல, கூட்டாகச் சுருட்டப்பட்ட நிலையில்தான் உடலில் அமைந்திருக்கும். எனவே ஒருவரின் நிலை (நிற்பது அல்லது அமர்வது) காரணமாக வேறுபாடுகள் ஏற்படுவது மிகவும் குறைவு" என்று விளக்கினார்.

இருப்பினும், இவரும் தண்ணீரை உறிஞ்சிக் குடிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். "தண்ணீரை வேகமாகக் குடிப்பதால் தசை அசௌகரியம் ஏற்படலாம். வேகவேகமாக தண்ணீரைக் குடிக்கும்போது, தொண்டையிலுள்ள தசைகள் வேகமாக அதை உட்செலுத்த வேண்டியிருக்கும். அப்போது தசை அசைவுகளில் ஒற்றுமை இல்லாததால் அசௌகரியம் ஏற்படலாம். அப்போது ஒன்றிரண்டு துளிகள் சுவாசக் குழாயில் தவறுதலாகச் சென்று புரையேறலாம்" என்று விவரித்தார் மருத்துவர் கணபதி.

ஆயுர்வேத மருத்துவதத்தில் தண்ணீரை அமர்ந்து குடிப்பதா, நின்று குடிப்பதா என்பது பற்றி அறுதியிட்டுக் கூறப்படவில்லை என்றாலும், கண்டிப்பாக உறிஞ்சிக் குடிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டு இருப்பதாக அரசு ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன் கூறுகிறார்.

"வாயை மூடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையே ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. அதாவது, உதடுகள் தொடும் வகையில் சிறிய அளவுகளில் உறிஞ்சிக் குடிக்க வேண்டும். ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்படும் 13 உடல் உபாதைகளில் தாகமும் ஒன்று. அதைத் தீர்க்காவிட்டால் பாதிப்புகள் ஏற்படும். எனவே தண்ணீரை நின்று குடிப்பதா, அமர்ந்து குடிப்பதா என்பதை விடவும் குடிக்காமல் இருக்கக் கூடாது என்பதே முக்கியம்" என்கிறார் அவர்.

மேலும் பேசிய மருத்துவர் பாலமுருகன், "வாயைத் திறந்து தண்ணீரை குடிக்கும்போது அதனுடன் சேர்ந்து வாயுவும் உள்ளே செல்லும். அது உடலுக்கு உகந்ததல்ல. எனவேதான் உதடுகள் ஒட்டும் வகையில் வாயைச் சேர்த்து வைத்து தண்ணீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும். உடலில் வாயு சேர்வது முதலில் பெரிய தொந்தரவாகத் தெரியாது. ஆனால், நெடுநாள் தொடர்ந்தால் வாயுப் பிரச்னைகள் உடலில் ஏற்படலாம்" என்று தெரிவித்தார்.

இஸ்லாத்திலும் தண்ணீர் குடிப்பது குறித்த சில வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இஸ்லாமிய அறிஞருமான ஜவாஹிருல்லா, "நபிகள் தண்ணீரை அமர்ந்து குடிப்பார். எனவே நபிகளின் வழியைப் பின்பற்ற வேண்டுமென்ற முறையில் தண்ணீரை அமர்ந்து குடிக்க வேண்டும். ஆனால் தண்ணீரை நின்று குடிக்க எந்தத் தடையும் இல்லை. மெக்காவில் உள்ள புனித ஜம் ஜம் கிணற்றில் இருந்து நீரை நின்றுதான் குடிப்பார். இவற்றுடன், தண்ணீரை உறிஞ்சிக் குடிக்க வேண்டும், தண்ணீருக்குள் மூச்சுவிடக்கூடாது என்பதும் சொல்லப்பட்டுள்ளன" என்று விளக்கினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு