'பெற்ற தாயை கிணற்றில் வீசி கொன்ற மகன்கள்' - 5 மாதங்களாக காவல்துறை துப்பு துலக்கியது எப்படி?

    • எழுதியவர், பிரவீன் சுபம்
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

"அசுப நேரத்தில் இறந்தால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற மூடநம்பிக்கையால் உயிரோடு இருந்த தாயைக் கிணற்றில் வீசிக் கொன்ற மகன்கள், அதனை தற்கொலை என நம்ப வைக்க முயற்சி செய்துள்ளனர்" என்று ஒரு கொலை வழக்கு தொடர்பாக தெலங்கானா காவல்துறை தெரிவிக்கிறது.

காவல் துறை விசாரித்து வந்த மூதாட்டி மரண வழக்கில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு தெரியவந்தது என்ன?

தெலங்கானாவின் கரீம்நகர் பகுதியில், தாயார் தங்களது வீட்டில் இறந்தால் வீட்டை விட்டு வெளியேற நேரிடும் என்ற மூடநம்பிக்கையால், அவரைக் கிணற்றில் தள்ளிக் கொன்ற இரு மகன்களைக் கைது செய்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் தற்கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, ஐந்து மாத விசாரணைக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.

"மருத்துவ மற்றும் தடயவியல் அறிக்கைகளின் மூலம் இது தற்கொலை அல்ல, மகன்கள் திட்டமிட்டு நடத்திய கொலை என்பது உறுதியானது" என்று ஹுஸூராபாத் காவல் ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் வலுவான ஆதாரங்கள் இல்லாத போதிலும், உடல்நலம் குன்றிய ஒரு முதிய பெண், தற்கொலை செய்துகொள்வதற்காக வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஓர் இடத்திற்கு நடந்து சென்றிருக்க முடியாது என்ற சந்தேகத்தின் பேரிலேயே மாதக்கணக்கில் விசாரணை தொடர்ந்ததாக அவர் கூறினார்.

காவல் துறையினர், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அளித்த விவரங்களின்படி, ஏப்ரல் 6-ஆம் தேதி, கரீம்நகர் மாவட்டம் எலபோதாரம் கிராமத்தைச் சேர்ந்த கோனே ரவீந்தர், தனது தாய் கோனே வெங்கடம்மா (80) தற்கொலை செய்துகொண்டதாக சைதாபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

'நகர கூட முடியாத நிலையில் இருந்த தாய்'

காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

வெங்கடம்மா வசித்த வீட்டிற்கும் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்ட கிணற்றிற்கும் இடையே இருந்த அதிக தொலைவு அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

"வெங்கடம்மா முதுமை மற்றும் நோயினால் படுக்கையிலேயே இருந்தார். அவரால் படுக்கையை விட்டு எழுந்து நடக்கக் கூட முடியாது. நகரக் கூடிய நிலையிலும் அவர் இல்லை. அப்படிப்பட்ட சூழலில், அவர் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தூரம் சென்று தற்கொலை செய்துகொண்டார் என்று கூறுவது ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது," என்று ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

தாயை பராமரிக்க முறை எடுத்துக் கொண்ட மகன்கள்

வெங்கடம்மாவிற்கு சம்மய்யா, ரவீந்தர், குமார சுவாமி, ஸ்ரீனிவாஸ் ஆகிய நான்கு மகன்களும், ஒரு மூத்த மகளும் உள்ளனர்.

மூத்த மகன் சம்மய்யாவின் வீட்டில் வெங்கடம்மாவிற்காகத் தனியாக ஓர் அறை ஒதுக்கப்பட்டிருந்தது.

"முன்பு, நான்கு மகன்களும் ஆளுக்கு ஒரு மாதம் என முறை வைத்துத் தாயைப் பராமரித்து வந்தனர். சமீபத்தில் வெங்கடம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரால் உட்காரக் கூட முடியாத நிலை ஏற்பட்டதால், வாரம் ஒருவராகப் பொறுப்பைப் பகிர்ந்துகொண்டனர்" என்று காவல் துறையினர் கூறினர்.

கொலை நடந்த சமயத்தில், மூன்றாவது மகன் குமார சுவாமியின் முறை முடியப் போகும் நிலையில் இருந்தது. இன்னும் இரண்டு நாட்களில் இளைய மகன் ஸ்ரீனிவாஸின் முறை தொடங்கவிருந்தது.

'வீட்டில் இறந்தால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற மூடநம்பிக்கை'

வெங்கடம்மா உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களே உயிருடன் இருப்பார் என்றும் குடும்பத்தினர் கருதியதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்

அந்தச் சமயத்தில், மூத்த மகன் சம்மய்யா, இனி தாயை ஒவ்வொருவரும் தங்களது சொந்த வீட்டிற்கே அழைத்துச் சென்று பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அசுப நேரத்தில் (பஞ்சாங்கத்தின்படி கெட்ட நேரங்கள் நடக்கும் போது) தாய் தனது வீட்டில் இறந்தால், சிறிது காலம் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என்று சம்மய்யா கருதினார். முன்பு இவர்களது தந்தை இறந்தபோதும் குடும்பத்தினர் அவ்வாறே வீட்டை விட்டு வெளியேறியதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

தாய் தனது வீட்டில் இறந்தால் தானும் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும் என அஞ்சிய இளைய மகன் ஸ்ரீனிவாஸ், தாய் எப்படியும் அதிக நாட்கள் உயிருடன் இருக்கமாட்டார் என்று கருதி, அவரை முன்கூட்டியே கொன்றுவிட மூத்த அண்ணன் சம்மய்யாவுடன் சேர்ந்து முடிவு செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டார் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

'மூத்த மகனும் இளைய மகனும் சேர்ந்து செய்த செயல்'

ஹுஸூராபாத் காவல் துறையினரும் கிராம மக்களும் தெரிவித்த விவரங்களின்படி, "ஏப்ரல் 5 இரவு, மூன்றாவது மகன் குமாரசுவாமியின் குடும்பத்தினர் தங்களது முறையை முடித்துக்கொண்டு வீட்டிற்குச் சென்ற பிறகு, திட்டமிட்டபடி சம்மய்யாவும் ஸ்ரீனிவாஸும் சேர்ந்து தாயை வீட்டிலிருந்து தூக்கிச் சென்று அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் வீசினர்."

"தாயைக் கொல்வதற்காக சகோதரர்கள் இருவரும் முன்னதாகவே ஒரு கிணற்றைத் தேர்வு செய்து வைத்திருந்தனர். ஸ்ரீனிவாஸ் தாயைச் சுமந்து செல்ல, வழியில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதில் சம்மய்யா கவனமாக இருந்தார்," என்று ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் விளக்கினார்.

மறுநாள் வெங்கடம்மாவைக் காணவில்லை என்று குடும்பத்தினர் தேடத் தொடங்கினர்.

வீட்டின் பின்புறம் உள்ள விவசாயக் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், மோட்டார்கள் மூலம் நீரை வெளியேற்றினர். இறுதியில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

"வெங்கடம்மா நீண்ட காலமாக நோய் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். நகர்ந்து சென்று வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் விழுந்திருப்பாரோ என்று நாங்கள் நினைத்தோம். பின்னர்தான் அந்தச் சகோதரர்கள் கிராம மக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளனர் என்பது புரிந்தது," என்று எலபோதாரம் கிராமத் தலைவர் (சர்பஞ்ச்) நமிண்ட்லா ரவீந்தர் பிபிசியிடம் தெரிவித்தார்.

முன்னேற்றம் காணாத வழக்கு

வெங்கடம்மாவின் மரணம் குறித்து குடும்பத்தினர் யாரும் சந்தேகம் எழுப்பவில்லை.

காவல் துறைக்குச் சந்தேகங்கள் இருந்தபோதிலும், தொழில் நுட்ப ஆதாரங்களால் மட்டுமே தீர்க்க முடியாத வழக்காக இருந்தது.

கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் விசாரித்தபோது உடலின் மீது எந்தக் காயங்களும் உடனடியாகத் தெரியவில்லை எனக் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விசாரணை அதிகாரி இடையில் மாறுதலானதாலும் வழக்கின் புலனாய்வு தடைபட்டது.

"குடும்பத்தினரே சம்பந்தப்பட்ட வழக்கு இது. கடுமையான நோயால் படுக்கையில் கிடந்த வெங்கடம்மாவின் மரணத்தில் கிராம மக்களுக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால் எங்களுக்கு இது தற்கொலை என்ற நம்பிக்கை வரவில்லை. அதேசமயம் கொலை என்பதை நிரூபிக்க தெளிவான ஆதாரங்களும் இல்லை. வீட்டிலிருந்தே குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிப்பது கடினம். அதனால் அறிவியல் பூர்வமான ஆதாரங்களில் கவனம் செலுத்தினோம்," என்று பின்னர் இந்த வழக்கை விசாரித்த ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கூறினார்.

'தடயவியல் அறிக்கையில் விலகிய முடிச்சு'

வெங்கடம்மாவின் மரணம் விபத்தா அல்லது கொலையா என்பதைத் தீர்மானிக்கக் காவல் துறையினர் பல கோணங்களில் ஆராய்ந்தனர்.

அதேநேரத்தில், சில கிராம மக்களிடமிருந்தும் சந்தேகங்கள் எழுந்தன.

உள்ளூர் மருத்துவர்களின் உடற்கூறாய்வு அறிக்கை, தடயவியல் ஆய்வகம் மற்றும் காகடியா மருத்துவக் கல்லூரி அறிக்கைகளின் முடிவுகளை ஆராய்ந்தனர்.

கழுத்தை நெரித்துக் கொன்றார்களா? வலுக்கட்டாயமாகக் கிணற்றில் தள்ளினார்களா? வேறு எங்காவது கொன்றுவிட்டுச் சடலத்தைக் கிணற்றில் வீசினார்களா? என்ற கோணங்களில் ஆய்வு செய்து, இறுதியில் அது தற்கொலை அல்ல, கொலை என காவல்துறையினர் முடிவுக்கு செய்தனர்.

"எத்தனை சந்தேகங்கள் இருந்தாலும் அவற்றை நிரூபிக்க ஆதாரங்கள் தேவை. கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டாரா, கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா அல்லது கிணற்றில் விழுந்த பிறகு இறந்தாரா, உடலில் காயங்கள் இருந்தால் அவை இறப்பதற்கு முன் ஏற்பட்டவையா அல்லது இறந்த பின் ஏற்பட்டவையா என்பது தடயவியல் மற்றும் உடற்கூறாய்வு அறிக்கைகள் மூலம் தெளிவாகத் தெரியவரும். அந்த அறிக்கைகள் வரத் தாமதமானதால்தான் வழக்கை முடிப்பதும், குற்றவாளிகள் இருவரைக் கைது செய்வதும் தாமதமானது," என்று ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

மூடநம்பிக்கையே கொலைக்குக் காரணம் எனக் கூறும் காவல்துறையினர்

வெங்கடம்மாவைக் கொலை செய்யச் சொத்து, பணம் அல்லது குடும்பத் தகராறுகள் காரணமல்ல என்றும், வீட்டை விட்டு வெளியேற நேரிடுமோ என்ற மூடநம்பிக்கையே இந்த கொலைக்குக் காரணம் என்றும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

"தாயின் நிலைமை மோசமாக இருந்தால் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்திருக்கலாம். ஆனால் மூடநம்பிக்கையால் தாயைக் கொன்றுவிட்டனர்" என்று ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கூறினார்.

காவல் துறையினரின் விசாரணையில் வெளிவந்த உண்மைகள் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகச் சர்பஞ்ச் நமிண்ட்லா ரவீந்தர் தெரிவித்தார்.

"பெற்றோரைக் கவனிக்கத் தவறுபவர்களுக்கு இந்த வழக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று கிராமத்தில் உள்ள அனைவரும் பேசிக்கொள்கிறார்கள். இயற்கை மரணம் எய்தாமல் பெற்ற தாயைக் கொல்வது கொடூரமானது. வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது ஒரு மூடநம்பிக்கை. ஒருவேளை வெளியேற வேண்டிய நிலை வந்தாலும், வேறொரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள பிபிசி முயன்று வருகிறது. கிராமத் தலைவர், உள்ளூர்வாசிகள் மற்றும் காவல் துறை மூலமாகவும் அவர்களைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் இச்செய்தி புதுப்பிக்கப்படும்.

முக்கிய குறிப்பு

மனநலம் சார்ந்த பிரச்னைகளை மருந்துகள் மற்றும் சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம். இதற்கான உதவி எண்களில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெறலாம்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு