You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாளத்தில் இருந்து இந்தியா திரும்பிய 21 தமிழர்கள் - '90 பேரின் நிலை தெரியவில்லை' என அமைச்சர் தகவல்
(இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
தமிழ்நாட்டில் இருந்து நேபாளத்திற்கு சென்றவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 400 ஆக இருக்கலாம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். அவர்கள் அனைவரையும் மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் வெளியுறவுத் துறை செயலாளரைச் சந்தித்துப் பேசிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்மோகன், நேபாளத்தில் இருந்து டெல்லி திரும்பிய 21 பேரைச் சந்தித்துப் பேசியதாகவும் அவர்கள் அனைவரும் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாகவும் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் தங்களுடைய பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்களைத் தவறவிட்டுவிட்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து இருப்பதாகவும் அவர்கள் விரைவில் சென்னை திரும்புவார்கள் என்றும் அவர் கூறினார்.
"அவர்கள் இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர்கள் 3 வாகனங்களில் பயணம் செய்தனர். முன்னாள் இருந்த வாகனமும், பின்னால் இருந்த வாகனமும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அங்கிருந்து மிகவும் சிரமமான நிலப்பரப்பில் ஏறி வேறு இடத்தை அடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மூத்த குடிமக்கள், எனவே தன்னம்பிக்கையுடன் போராடி இறுதியில் ராணுவ உதவியுடன் வந்து சேர்ந்துள்ளனர்" என அமைச்சர் தெரிவித்தார்.
கூடுதலாக, "57 பேர் கொண்ட குழுவில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை எப்படியாவது தொடர்புகொள்ள கடுமையாக முயன்று கொண்டிருக்கிறோம். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை தொடர்ந்து இயங்கி வருவகிறது. வெளியுறவுச் செயலாளருடனும் ஆலோசனை நடத்தியுள்ளோம். மத்திய அரசு அமைத்துள்ள கட்டுப்பாட்டு அறைக்கும் சென்று காணாமல் போனவர்களைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளோம்."
"இதே போல, மேலும் பல குழுக்கள் சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு விமானத்தில் சென்ற 140க்கும் மேற்பட்டவர்கள் அங்கு சிக்கியுள்ளார்கள். அவர்களை காத்மாண்டு அழைத்து வந்து அங்கிருந்து டெல்லி அழைத்து வரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில் மூலம் சென்றவர்களும் இருக்கிறார்கள். பெரிய குழுக்கள் மூலம் சென்றவர்கள் தவிர சிறு சிறு குழுக்களாகச் சென்றவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன" என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
தற்போது வரை 90க்கும் மேற்பட்டவர்கள் எந்தத் தொடர்புமின்றி இருப்பதாகவும் அவர் கூறினார். தகவல் தொடர்பு எந்தத் தாமதமும் இல்லாமல் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேபாள வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 21 பேர் டெல்லி திரும்பியுள்ளனர். அவர்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் பலரின் நிலை என்னவென்று தெரியாத நிலை தொடர்கிறது.
அவர்களை மீட்கும் முயற்சிகளை நேபாள அரசுடன் இந்திய அரசும், நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகமும் ஒருங்கிணைத்து வருகின்றனர். தமிழக அரசின் சார்பிலும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக நான்கு தமிழக அமைச்சர்கள் கொண்ட குழு டெல்லி சென்றுள்ளது.
இந்த நிலையில் வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்களை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர் மீட்கப்பட்டவர்களின் அனுபவங்களை நேரடியாகக் கேட்டறிந்து நெகிழ்ந்ததாகத் தெரிவித்தார். அவர்களை மீட்க உதவிய நேபாள ராணுவத்திற்கும், நேபாள அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ள ஜெய்சங்கர், அவர்கள் இந்தியா திரும்பத் தேவையான ஏற்பாடுகளைச் செய்த நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள தமிழ்நாட்டுப் பயணிகளை மீட்கும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்காக டெல்லி சென்றுள்ள தமிழக அமைச்சர்கள் குழு வெளியுறவுத் துறை செயலாளரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகியோர் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி வெங்கடநாராயணா, முதன்மைச் சிறப்பு ஆணையர் ஜெயா, அயலக தமிழர் நல ஆணையர் சதீஷ் ஆகியோருடன் இணைந்து, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியை சந்தித்து, நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசனை நடத்தினர்.
நேபாளத்திற்குப் பயணம் மேற்கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வருவது குறித்தும் இந்திய அரசுடன் தேவையான உதவிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலச்சரிவுக்குப் பிறகு உருவான 'ஏரி' போன்ற அமைப்பு அமைந்திருக்கும் இடம் தொடர்பாக தகவல்களை சீன அரசு ஊடகமான சிசிடிவி வெளியிட்டுள்ளது.
இந்த ஏரி கிரோங் போர்ட் என்கிற இடத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்திருப்பதாகவும் இருபது லட்சம் கன மீட்டர் தண்ணீர் அளவு தண்ணீர் கொண்டிருப்பதாகவும் சீன அரசு ஊடகம் தெரிவிக்கிறது.
முன்னதாக அந்த ஏரி உடைந்து மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கிற அச்சத்தால் திபெத் பகுதியில் இன்று காலை மீட்புப் பணிகள் 3 மணிநேரம் வரை நிறுத்தப்பட்டன.
தடுப்பு ஏரியில் தண்ணீர் வழிந்தோடுவது நின்றுவிட்டதாக சீன அரசு ஊடகம் தெரிவிக்கிறது. இந்தச் சூழலில் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கிவிட்டதாக சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திபெத் பகுதியில் மீட்புப் பணிகள் வழக்கம் போல தொடர்வதாக சீன அரசு ஊடகமான சிசிடிவி தெரிவிக்கிறது.
சமீபத்திய நிலச்சரிவுக்குப் பிறகு நேபாளம் - திபெத் எல்லையில் உருவான ஏரியின் கரைகள் உடைவதற்கான அபாயம் அதிக அளவில் இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி, இந்த ஏரியில் தோராயமாக 25 லட்சம் கன மீட்டர் தண்ணீர் தேங்கியுள்ளதாக சீன அரசு ஊடகமான சிசிடிவி தெரிவிக்கிறது.
வியாழக்கிழமைக்கும் வார இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏரிக்குள் 30 லட்சம் கன மீட்டர் தண்ணீர் வந்து சேரும் என்றும், இதனால் ஏரி உடைவற்கான "அதிக ஆபத்து" இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு ஊடகம் வழங்கும் தகவல்களின்படி, வரும் நாட்களில் இந்தப் பகுதியில் கன மழை எதிர்பார்க்கப்படுகிறது. சீன நீர்வள அமைச்சகத்தின் தகவல்படி, சோச்சென் கோலா, புரேபு சாங்போ ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உருவான தடுப்பு ஏரி, வியாழக்கிழமையன்று நிரம்பி வழியத் தொடங்கியது.
ஏரியின் நீர்மட்டம் மற்றும் வளிமண்டல நிலவரங்களைக் கண்காணிக்க அதிகாரிகள் பொறியியல் குழுக்களை அனுப்பியுள்ளனர். அத்துடன், உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு சேர்ப்பதற்காக டிரோன்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கிரோங் போர்ட் என்கிற இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் மேலே, உடைந்த பனிப் பாறை உருவானதாக நம்பப்படும் லாங்டாங் லிருங் உச்சி அருகே இந்த ஏரி அமைந்துள்ளது. போட்டே கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்படும் அடைப்புகளால் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் குறித்தும் நேபாள அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து உருவான ஏரி போன்ற அமைப்பிலிருந்து (barrier lake) இன்று நீர் வழிந்தோடுவதாக சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியிருந்தது.
அந்த ஏரி நிரம்பியுள்ளதாகவும், அதிலிருந்து நீர் கசிந்து வெளியேறுவதாகவும் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மணிநேரங்களில் நிலவரத்தை இன்னும் துல்லியமாக மதிப்பிடுவதற்காக, ஏரியைச் சுற்றி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
வெள்ள அபாய எச்சரிக்கையால் மக்கள் பதற்றம்
பிபிசியின் தெற்காசிய செய்தியாளர் ஆசாதே மோஷிரி நேபாளத்தின் திரிசூலியில் நேரில் கண்டதாகப் பகிர்ந்த விவரங்கள்.
வெள்ள அபாய எச்சரிக்கைகளுக்கு மத்தியில் மக்கள் பதற்றத்துடன் தகவலுக்காகக் காத்திருக்கின்றனர்.
வடக்கு நேபாளத்தில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கைகள் பரவி வருகின்றன; அவசர காலப் பணியாளர்கள் மக்களைப் பாதுகாப்பான உயரமான இடங்களுக்கு வெளியேற்றி வருகின்றனர்.
நாங்கள் இப்போது திரிசூலி ஆற்றின் மேல் பகுதியில் உள்ள ஓர் இடத்திற்கு வந்துள்ளோம்; ஆபத்து நீங்கும் வரை பாதுகாப்பிற்காக மக்கள் இங்கு கூடியுள்ளனர். ராணுவத்தினர் வந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் மேலாளரும் எங்களுடன் இங்கு வந்துள்ளார்.
திரிசூலியில் உள்ள ராணுவ முகாமில் சில நிமிடங்களுக்கு ஒருமுறை ஹெலிகாப்டர்கள் தரையிறங்குகின்றன. அவை பேரிடரிலிருந்து மீட்கப்பட்டவர்களை அங்கு கொண்டு வந்து சேர்க்கின்றன; அவர்களில் சிலர் காயமடைந்த நிலையில் உள்ளனர்.
முகாமின் நுழைவாயிலுக்கு வெளியே, தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவலுக்காகவோ அல்லது நன்கு தெரிந்த முகங்களைப் பார்ப்பதற்காகவோ டஜன்கணக்கான மக்கள் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.
மீட்கப்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலைக் கொண்ட காகிதத் தாள்கள் சுவரில் ஒட்டப்பட்டுள்ளன; அவற்றைச் சுற்றிலும் மக்கள் கூட்டமாக நின்று பார்க்கின்றனர்.
540ஐ கடந்த பலி எண்ணிக்கை
முன்னதாக வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ரசுவா மற்றும் நுவாகோட் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 900 பேர் மீட்கப்பட்டதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் 90க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பலி எண்ணிக்கை 547ஆக உயர்ந்துள்ளதாகவும் நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு