You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியில் மீண்டும் பேரணி அறிவிப்பு - காரணம் என்ன?
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) மீண்டும் பேரணியில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 5-ஆம் தேதி, இந்தியா கேட் முதல் டெல்லி போலீஸ் தலைமையகம் வரை அமைதியான இளைஞர் பேரணியை நடத்தப்போவதாக சிஜேபி தெரிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுவதாக அளித்த வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, சிஜேபி எக்ஸ் தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஜூலை 25-ஆம் தேதி தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட சிஜேபியின் பல்வேறு கோரிக்கைகளுக்கு மத்திய அரசு சம்மதித்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஜூலை 20-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பேரணியின்போது, போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பல போராட்டக்காரர்களும் போலீஸாரும் காயமடைந்தனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தையும் எட்டியுள்ளது. குற்றப் பின்னணி இல்லாத நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காது என்று அரசு தெரிவித்துள்ளது.
அறிக்கையில் என்ன கூறப்பட்டது?
சிஜேபி செய்தித் தொடர்பாளர் ஆஷுதோஷ் ரங்கா, எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "ஜூலை 25-ஆம் தேதி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு தோல்வியடைந்துள்ளது. எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. மேலும், முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுத்துப்பூர்வமான உடன்பாடும் செய்யப்படவில்லை. காக்ரோச்சுகள் பின்வாங்கப் போவதில்லை. செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா கேட்டில் சந்திப்போம்" என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிஜேபி தனது எக்ஸ் பதிவில், "ஜூலை 25-ஆம் தேதி இந்திய இளைஞர்களுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை சிஜேபி கடுமையாகக் கண்டிக்கிறது. குறிப்பாக, மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளைத் திரும்பப் பெறுவதாக அளித்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை," என்று தெரிவித்துள்ளது.
"தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு தொடர்ந்து தாமதமும் தவிர்ப்பும் காட்டி வருவதால், செப்டம்பர் 5-ஆம் தேதி, டெல்லியில் உள்ள இந்தியா கேட் முதல் டெல்லி காவல்துறை தலைமையகம் வரை சிஜேபி அமைதியான இளைஞர் பேரணியை நடத்தும். நீட் தேர்வில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் போலீஸ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இந்தப் பேரணிக்குத் தலைமை வகிப்பார்கள்," என்றும் சிஜேபி தெரிவித்துள்ளது.
"அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். எங்களுடைய பொறுமையை பலவீனமாகக் கருதக் கூடாது," என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் உடன்பாடு ஏற்பட்டது?
ஜூலை 25-ஆம் தேதி, சிஜேபி தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும்ஜிதேந்திர சிங் ஆகியோருடன் மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இந்தக் காலகட்டத்தில்தான் தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, சிஜேபி தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.
அப்போது, நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது, போராட்டக்காரர்கள் மீது முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்யாமல் இருப்பது உள்ளிட்ட சிஜேபியின் பிற கோரிக்கைகளில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், போராட்டத்துக்குப் பிறகு போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற நிபந்தனையிலும் உடன்பாடு ஏற்பட்டதாக சிஜேபி தெரிவித்தது.
இந்த வாக்குறுதிகள் மற்றும் உடன்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும் என்று சிஜேபி எச்சரித்திருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு