You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுகவில் பதவியை ஏற்க மறுத்த எஸ்.பி. வேலுமணி அமைச்சர் ஆனந்துடன் சந்திப்பு - தொடரும் உட்கட்சி பிளவின் பின்னணி
- எழுதியவர், ப. சிவசங்கர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
அதிமுகவின் தலைமையை எதிர்த்து, மீண்டும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கியுள்ளனர்.
"பொதுச்செயலாளர் கொடுத்த பதவிகள் வேண்டாம்; அடிப்படை உறுப்பினர்களாகவே இருக்கிறோம்" என்று எஸ்.பி. வேலுமணி பக்கம் உள்ள அணியினர் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமானஆனந்தையும் சந்தித்து பேசியுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அணிகள் உருவாகின. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு அணியும் செயல்பட்டன. சட்டப்பேரவையில் தவெக அரசின் மீதான நம்பிக்கை தீர்மானம் தொடர்பாக இரு அணிகளும் வேறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்தன.
தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகரிடம் புகார் அளித்தது.
மறுபுறம், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்தார். அந்தப் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
அதிமுகவில் ஏற்பட்ட பிரச்னைகள் நீடித்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்பைச் சேர்ந்த சில அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தனர்.
இதையடுத்து, மீண்டும் ஒரே அணியாக செயல்பட முடிவு செய்த எஸ்.பி. வேலுமணி தரப்பினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தனர். ஆனால் சி.வி. சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. பின்னர் விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தார். சி.வி. சண்முகம் தாம் அதிமுகவில்தான் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
பின்னர், மீண்டும் அதிமுகவில் இணைந்தவர்களுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சிப் பொறுப்புகளை அறிவித்தார்.
எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியும், மற்றவர்களுக்கு அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
ஆனால், "என்னுடன் வந்தவர்களுக்கு அவர்கள் முன்பு வகித்த பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படும் வரை, நான் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்கப் போவதில்லை" என்று எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.
'அடிப்படை உறுப்பினர்களாகவே இருக்கிறோம்'
"எடப்பாடி பழனிசாமி கொடுத்த பொறுப்புகள் வேண்டாம்; அடிப்படை உறுப்பினராகவே இருக்கிறோம்" என்று எஸ்.பி. வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 3-ஆம் தேதி பழனியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி, "கட்சிக்காக உழைத்தவர்களின் பொறுப்புகளைப் பறித்துவிட்டு, துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வழங்கியிருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அனைவருக்கும் மீண்டும் பழைய நிலைபோல் கட்சிப் பொறுப்புகள் வழங்க வேண்டும் என்று கூட்டாக எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துவிட்டோம்," என்றார்.
"தினமும் 200 பேரை எடப்பாடி பழனிசாமி கட்சியிலிருந்து நீக்கி வருவது கட்சிக்கு நல்லதல்ல," என்று குறிப்பிட்ட அவர், "அதிமுகவை பலப்படுத்த வேண்டும். சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தார்.
தவெகவில் இணையப்போகிறாரா வேலுமணி?
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் அமைச்சர் ஆனந்தை இன்று சந்தித்தனர். அதிமுகவைச் சேர்ந்த பல முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்திருந்த நிலையில், எஸ்.பி. வேலுமணியும் தவெகவில் இணையப் போகிறாரா என்ற ஊகங்கள் அரசியல் வட்டாரங்களில் எழுந்தன.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "அதிமுக எங்களை வளர்த்த கட்சி. மாற்றுக் கட்சிக்குச் செல்ல வேண்டிய நிலை எங்களுக்கு ஏற்படவில்லை. ஆனால், நாங்கள் வேறு கட்சியில் இணையப் போவதாக சிலர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்," என்றார்.
மேலும், "தேர்தல் முடிவுக்குப் பிறகு திமுக ஆதரவு பெறுவது போல ஒரு தோற்றம் உருவானதால், தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தோம். ஆனால், எங்கள் கட்சி அதிமுகதான்," என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் ஆனந்துடனான சந்திப்பு குறித்து விளக்கிய அவர், "அதிமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல வளர்ச்சித் திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அவற்றை தவெக அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன்," என்றார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் பலரிடம் இதுப்பற்றி பேச முயற்சித்தோம். ஆனால், தலைமையின் உத்தரவின்றி கருத்து சொல்ல இயலாது என பலர் மறுத்துவிட்டனர்.
தற்போதைய சூழலில் பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் பேசிய அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர், " கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து எஸ்.பி வேலுமணி ஈடுபட்டு வருகிறார். இது தொடர்ந்தால் எடப்பாடி பழனிசாமி கடும் நடவடிக்கை எடுப்பார்" என்று கூறினார்.
"கட்சிக்குள் எத்தனை முரண்கள் இருந்தாலும் அதனை அறைக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் பொதுவெளியில் இதனை கொண்டு வருவது அழகல்ல" என்று அவர் கூறினார்.
'எடப்பாடி பழனிசாமி அனுசரித்து போக வேண்டும்'
"தன்னை கடுமையாக விமர்சித்தவர்களையும் கட்சியில் இணைத்து, அவர்களுக்கு வாய்ப்பளித்தவர் ஜெயலலிதா. அந்த அணுகுமுறையை எடப்பாடி பழனிசாமியும் பின்பற்ற வேண்டும்," என்று மூத்த பத்திரிகையாளர் டி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய வேண்டும் என்று எஸ்.பி. வேலுமணி தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மாவட்ட வாரியாக நிர்வாகிகளைச் சந்தித்து எடப்பாடி பழனிசாமியும் அந்தப் பணியை மேற்கொண்டு வருகிறார்," என்றார்.
மேலும், "அதுமட்டுமல்லாமல், தனக்கு நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளை மாவட்டம் வாரியாக அனுப்பியும் தோல்விக்கான காரணங்களை அவர் கண்டறிந்து வருகிறார்," என்றும் கூறினார்.
"தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட கட்சிகளில் இதுபோன்ற உள்கட்சி பிரச்னைகள் ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால், அனைவரையும் அனுசரித்து சென்று, கட்சி நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டிய நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்," என்று டி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு