You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஃபிடல் காஸ்ட்ரோவின் ஒரே மகள் அவரை வெறுத்து ஒதுக்கியது ஏன்? மாறுவேடமிட்டு கியூபாவை விட்டு வெளியேறிய கதை
- எழுதியவர், அடாஹுவால்பா அமெரிஸ்
- பதவி, பிபிசி நியூஸ் முண்டோ
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்
அலினா ஃபெர்னாண்டஸ் ரெவுல்டாவிற்கு விவரம் தெரிந்த வயதிலிருந்தே, அவரை அடிக்கடி சந்திக்க கியூபா புரட்சியின் தலைவரான ஃபிடல் காஸ்ட்ரோ வருவார். அலினாவிற்கு 10 வயதானபோது, ஃபிடல் காஸ்ட்ரோ தான் அவரது தந்தை என்ற உண்மையைச் சொன்னார்கள்.
2026 ஆகஸ்ட் 13 அன்று, ஃபிடலின் 100-வது பிறந்தநாள். அவர் அங்கீகரித்த ஒரே மகளான அலினா (மற்ற ஆறு பேரும் மகன்கள்), மயாமியில் பிபிசி முண்டோ குழுவை வரவேற்று, ராணுவ உடையில் தாடியுடன் இருந்த அந்த மனிதருடன் தொடர்புடைய தனது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்துகொண்டார்.
அந்த மனிதரை ஒருபோதும் 'அப்பா' என்று அழைக்க அலினா விரும்பியதில்லை.
1956ஆம் ஆண்டு ஹவானாவில், காஸ்ட்ரோவிற்கும் ஹவானாவின் உயர் சமூகத்தைச் சேர்ந்த அழகான இளம்பெண்ணான நடாலி ரெவுல்டாவிற்கும் இடையிலான திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவின் மூலம் பிறந்தவர் அலினா. தனது குழந்தைப் பருவத்தின் தொடக்க கட்டத்தில் தனது தந்தை யார் என்று தெரியாமலேயே அவர் வளர்ந்தார்.
10 வயதில் நடாலி உண்மையைச் சொல்லும் வரை, தனது தாயின் கணவரான ஆர்லாண்டோ ஃபெர்னாண்டஸ்தான் தனது தந்தை என்று அவர் நினைத்திருந்தார். ஆனால், அவரைச் சுற்றியிருந்த பலருக்கும் அந்த உண்மை ஏற்கனவே தெரிந்திருந்தது.
அலினா 'காஸ்ட்ரோ' என்ற குடும்பப் பெயரை வைத்துக்கொள்ள மறுத்துவிட்டார். பல ஆண்டுகளாக அந்த குடும்ப உறவை மறைக்க முயன்றார்; சிறப்பு சலுகைகளை விட அது தனக்கு அதிக தடைகளையே ஏற்படுத்தியதாக அவர் கூறுகிறார். 1959-இல் கிளர்ச்சியாளர்களுடன் ஹவானாவை நோக்கி முன்னேறியபோது, தொலைக்காட்சியில் தோன்றிய தாடி வைத்த மனிதராகவே ஃபிடல் பற்றிய தனது முதல் நினைவு இருப்பதாக அவர் கூறுகிறார்.
1993இல், போலி பாஸ்போர்ட், விக் மற்றும் ஸ்பானிஷ் மொழி உச்சரிப்புடன் அலினா கியூபாவிலிருந்து தப்பினார்.
அமெரிக்கா சென்றடைந்தவுடன், தான் எந்த அடையாளத்தைத் தவிர்க்க விரும்பினாரோ, அதே அடையாளம்தான் கியூபாவில் நடக்கும் விஷயங்களை விமர்சிக்க தனக்கு ஒரு தளத்தை வழங்குகிறது என்பதை அவர் உணர்ந்தார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தான் வசித்து வரும் மயாமியில் உள்ள தனது பூக்கள் நிறைந்த வீட்டில், கியூபன் கோலாடாவுடன் (அதிக அளவு சர்க்கரையுடன் கலக்கப்பட்ட காபி) ஃபிடல் காஸ்ட்ரோவின் மகள் எங்களை வரவேற்றார்.
எங்கள் உரையாடலின்போது, 70 வயதான அவர் திரைப்படத்தைப் போன்ற தனது வாழ்க்கையை விவரிக்கிறார். தன்னுடைய மற்றும் கியூபாவின் தலைவிதியை மாற்றியமைத்த அந்தப் புரட்சித் தலைவரைப் பற்றிய ஆரம்பகால நினைவுகளுடன் அந்த விவரிப்பு தொடங்குகிறது.
இரவு நேரங்களில் வந்தவர்
ஜனவரி 1, 1959 அன்று ஃபுல்ஜென்சியோ பாடிஸ்டா நாட்டை விட்டு வெளியேறியபோது அலினாவுக்கு 3 வயது கூட முழுமையாக ஆகவில்லை. ஃபிடல் காஸ்ட்ரோ சாண்டியாகோவிலிருந்து புறப்பட்டு, எட்டு நாட்களுக்குப் பிறகு கியூபாவின் புதிய தலைவராக ஹவானாவை அடைந்தார்.
"வீட்டில் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த மிக்கி மவுஸ் மறைந்துவிட்டது," என்று நினைவுகூரும் அவர், "சில தாடி வைத்த ஆட்கள் வண்டிகளில் தொங்கிக்கொண்டு வருவதைக் கண்டேன். அவர்களைப் பார்க்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது, பல நாட்களுக்கு அவர்கள் தான் தொலைக்காட்சித் திரையில் தோன்றினார்கள்," என்கிறார்.
தெருக்களில் காணப்பட்ட ஆரம்பகால கொண்டாட்டங்கள் விரைவில் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலாக மாறியதாக அவர் நினைவுகூருகிறார்.
"பின்னர் மரண தண்டனைகள் வந்தன, அவையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன, மக்கள் மன்ற விசாரணைகளும் நடந்தன. கியூபா முழுவதும் பயம் மற்றும் வன்முறை நிறைந்த சூழல் நிலவியது," என்று அவர் நினைவுகூருகிறார்.
நாட்டில் ஏற்பட்ட இந்த மாற்றம் அவருடைய குடும்பம் உட்பட பல குடும்பங்களைப் பிரித்தது: அவரது தாய் புரட்சியை ஏற்றுக்கொண்டார், அவரது பாட்டி புதிய தலைவர்களைச் சபித்தார், அவரது தந்தை என்று அவர் நம்பியவர் உட்பட மற்ற உறவினர்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அமெரிக்காவிற்குச் செல்ல முடிவு செய்தனர்.
இவை அனைத்தையும் முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் வளர்ந்து வந்த நிலையில், கியூபாவின் புதிய தலைவர் அலினாவின் வீட்டிற்கு அவ்வப்போது வரத் தொடங்கினார்.
"அவர் பெரும்பாலும் இரவில்தான் வருவார், அடிக்கடி வருவார், சில நேரங்களில் நீண்ட நாட்களுக்கு வரமாட்டார்," என்று அலினா கூறுகிறார்.
ஃபிடல் தன்னிடம் வரவேற்பறையின் தரையில் அமர்ந்து விளையாடுவார் என்றும், பரிசுகளைக் கொண்டு வருவார் என்றும் அலினா கூறுகிறார். அதில் ஒரு பரிசை அவர் இன்றும் நினைவில் வைத்துள்ளார்.
"அவர் தன்னைப் போலவே, அதாவது ஃபிடல் காஸ்ட்ரோ போலவே உடையணிந்த ஒரு பொம்மையை எனக்குக் கொடுத்தார். அது ஒரு குழந்தை பொம்மை என்பதால் அதன் தாடியில் உள்ள முடிகளை நான் பிடுங்குவேன்," என்று அவர் கூறுகிறார்.
அவர் வந்ததும் தனது தாயின் கண்கள் பிரகாசமாவதை அலினா கவனித்திருக்கிறார்: "காதலை எளிதாக அடையாளம் காண முடியும், என் தாய் அவர் மீது காதலில் இருந்தார்."
நடாலி ரெவுல்டா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ இருவருக்குமே, அவர்களின் காதல் தொடங்கியபோது ஏற்கனவே திருமணமாகி இருந்தது. நடாலி இதய நோய் நிபுணரான ஆர்லாண்டோ ஃபெர்னாண்டஸை மணந்திருந்தார்; ஃபிடல், பாடிஸ்டா அரசாங்கத்துடன் தொடர்புகொண்ட செல்வாக்கு மிக்க ஹவானா குடும்பத்தைச் சேர்ந்த மிர்தா டியாஸ்-பலார்ட்டை மணந்திருந்தார்.
ஆர்லாண்டோ தனது குடும்பப் பெயரை அலினாவுக்குக் கொடுத்தார். 1961-இல் அவர் கியூபாவை விட்டு வெளியேறிய பிறகும், அவர்தான் தனது தந்தை என்று உறுதியாக அலினா நம்பினார்.
அவருக்கு 10 வயதாக இருந்த போதுதான் உண்மை தெரியவந்தது.
"என் அம்மாதான் என்னிடம் சொன்னார். நான் பள்ளியை மாற்றவிருந்தேன், யாரோ வெளியாட்கள் வந்து இதை என்னிடம் சொல்வதை அவர் விரும்பவில்லை."
இந்தச் செய்தி அவருக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்றாலும் - தனது வருகை மூலம் ஃபிடல் ஏற்கனவே ஒரு தந்தையின் இடத்தைப் பிடித்திருந்தார். இது தன்னிடம் "ஒரு வகையான துரோகம் மற்றும் ஏமாற்ற உணர்வை" ஏற்படுத்தியதாக அவர் விளக்குகிறார்.
"காரணம், என்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் அந்த உண்மை தெரிந்திருந்தது," என்று அவர் கூறுகிறார்.
12 அல்லது 13 வயதில், அவர் தனது குடும்பப் பெயரை மாற்ற மறுத்துவிட்டார்: "நான் அவரது மகளா என்று அவர்கள் என்னிடம் கேட்டால் 'இல்லை' என்று சொல்வேன். திடீரென்று குடும்பப் பெயரை மாற்றுவது கௌரவக் குறைச்சலாகத் தோன்றியது. அதில் எனக்கு எந்தப் பயனும் தெரியவில்லை."
தான் ஃபிடலை ஒருபோதும் "அப்பா" என்று அழைத்ததில்லை என்றும் அவர் கூறுகிறார். அவரைப் பொறுத்தவரை, அந்த வார்த்தை அவரது ஆரம்பகால நினைவுகளில் தந்தை ஸ்தானத்தில் இருந்த ஆர்லாண்டோ ஃபெர்னாண்டஸுக்கு மட்டுமே உரியது.
ஃபிடல் காஸ்ட்ரோவுடனான அவரது உறவு
அலினா வளர வளர, தன் தந்தை மீது மட்டுமின்றி, கியூபாவில் திணிக்கப்பட்ட புதிய அமைப்பின் மீதான விரக்தியும் ஏமாற்றமும் அதிகரித்தது.
அவர் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகள் என்பதை அறிந்தவுடன், பலரும் தங்களுடைய கடிதங்களை தலைவரிடம் அவர் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் அவரிடம் அளித்தனர்.
"இவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் தூக்கிலிடப்பட்டதைப் பார்த்தவர்கள். தங்களுக்கு ஒரு நரகமாக இருந்த அந்த இடத்தைவிட்டு வெளியேற அனுமதி பெற முயன்றவர்கள். தங்களுக்கு தெரிந்த அரசியல் கைதிகள் எண்ணற்ற ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதைப் பார்த்தவர்கள். சிறு வயதிலிருந்தே இவை அனைத்தையும் நான் பார்த்து வந்தேன்."
இதனுடன், "ஒரு புதிய புனிதரை" உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பிரசாரங்கள், மூளைச்சலவை மற்றும் தலைவரின் மீதான தனிமனித வழிபாடு ஆகியவையும் சேர்ந்துகொண்டன.
"வார இறுதி நாட்கள் என்று எதுவும் இருக்கவில்லை. ஏனெனில், வார இறுதி நாட்கள் தன்னார்வப் பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்தன — ஆனால் உண்மையில் அவை கட்டாயப் பணியாக இருந்தன. போர் நடவடிக்கைகளுக்கான அணிதிரட்டல்கள், கொரில்லா நடவடிக்கைகள், பல்வேறு இயக்கங்கள் என தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தன."
"ஏழு மணி நேரம் தொலைக்காட்சியில் ஒரு மனிதர் (ஃபிடல்) உரையாற்றினார். அந்த உரைகளை நாங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும். மறுநாள் வகுப்பறைகளில் அவற்றைப் படிக்கவும் வேண்டும். அது ஒரு கொடிய கனவுபோல இருந்தது."
"ஒரு பைத்தியக்கார விடுதியில் வாழ்வது போன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும்," என்று அலினா முடிக்கிறார்.
காஸ்ட்ரோ ஏற்பாட்டின் பேரில் நடாலியும் அலினாவும் பிரான்சில் சிறிது காலம் செலவிட்ட பிறகு ஃபிடலின் வருகைகள் குறைந்தன.
"அவர் இல்லாமலேயே வாழ நான் கற்றுக்கொண்டேன்," என்கிறார்.
ஃபிடல் காஸ்ட்ரோ தனிப்பட்ட முறையில் எப்படிப்பட்டவர் என்று நாங்கள் கேட்டதற்கு, "அவர் அறிவாளி, புத்திசாலி, படித்தவர்" என்றும் "அதீத ஆர்வம் கொண்டவர்" என்றும் விவரித்தார், அதே சமயம் "அவர் தந்திரமானவர், பொய்யர்" என்றும் அலினா கூறினார்.
"அவர் என்னிடம் பல பொய்களைச் சொல்லியிருக்கிறார். என்னிடம் சொன்னதை மறந்துவிட்டு, பிறகு வேறொரு கதையைச் சொல்வார்."
தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான உரையாடலும் எளிதாக இருந்ததில்லை: "அவர் மட்டுமே தான் பேசுவார். அவர் என்னிடம் பேச விரும்பினால், அது என்னிடம் பேசுவதற்காக அல்ல, அவர் பேசுவதை அவரே கேட்டுக் கொள்வதற்காகத்தான்."
ஹவானாவின் கதீட்ரல் சதுக்கத்தில் காலணிகள், சாவிக்கொத்துகள் மற்றும் பிற பொருட்களை விற்றுக் கொண்டிருந்த சில கைவினைஞர்களை காவல்துறை கைது செய்தபோது அவர்களுக்கு இடையே ஒரு சிறிய மோதல் நடந்ததாக அவர் நினைவுகூருகிறார்.
"நான் அவரிடம், 'ஏன் இந்தக் கைது?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஏனென்றால், அரசு ஒருபோதும் வர்த்தகத்தின் மீதான தனது ஏகபோக உரிமையை இழக்க முடியாது' என்று பதிலளித்தார்."
கியூபாவை விட்டு தப்பித்தது எப்படி?
மிகச் சிறு வயதிலிருந்தே கியூபாவை விட்டு வெளியேற வேண்டும் என்று தான் விரும்பியதாக அலினா கூறுகிறார். தனது தந்தையிடம் இருந்து தான் மேலும் மேலும் விலகியதாகவும், அவர் உருவாக்கிய அமைப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், நாட்டில் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறியிருந்த பொருள்களின் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
"இந்தக் குழப்பத்துக்கு ஃபிடல் காஸ்ட்ரோதான் அடித்தளமிட்டார். புரட்சி வெற்றி பெற்ற இரண்டு ஆண்டுகளிலேயே உணவு எதுவும் இல்லை," என்று அவர் வருத்தத்துடன் கூறுகிறார்.
வெளிநாடு செல்ல பல முறை முயன்றதாகவும், ஆனால் அது "அரசியல் பிரச்னையாக" மாறக்கூடும் என்று கருதப்பட்டதால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர் விளக்குகிறார்.
1990களின் தொடக்கத்தில் சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு சிதைந்ததைத் தொடர்ந்து, கியூபாவில் "சிறப்புக் காலம்" என்று அழைக்கப்பட்ட காலகட்டம் தொடங்கியது. பசி, தொடர்ச்சியான மின்வெட்டுகள் மற்றும் போக்குவரத்து வசதியின்மை ஆகியவற்றால் குறிக்கப்பட்ட கடுமையான பற்றாக்குறை நிலவிய காலம் அது.
அப்போது அலினா வெளிப்படையாகவே அரசுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருந்தார். நாட்டின் தலைமைத் தளபதியின் மகளாக இருந்தபோதிலும், தான் கைது செய்யப்படலாம் என்று அவர் அஞ்சினார்.
"அதிகாலை நேரத்தில் எங்கேனும் காரின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டால், அவர்கள் என்னைப் பிடிக்க வருகிறார்கள் என்று நினைக்கத் தோன்றும்."
1993ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி, நெருங்கிய நண்பர்கள் திட்டமிட்டு மிகுந்த கவனத்துடன் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் அவருக்கு பெரிய வாய்ப்பு கிடைத்தது.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தனது கடவுச்சீட்டையும் விமானப் பயணச்சீட்டையும் அவருக்குக் கொடுத்தார். மற்றொரு பெண், அந்த ஆவணத்தை அலினா பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்தார். பின்னர் அலினா ஒரு டாக்ஸியில் ஹவானா விமான நிலையத்துக்குச் சென்றார்.
"நான் டாக்ஸியில் ஏறியதிலிருந்தே ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவரைப் போலப் பேசத் தொடங்கினேன். ஏனென்றால், விமான நிலையத்துக்குச் சென்றபோது என்னைப் பேசச் சொன்னால், ஸ்பெயின் நாட்டவர் போன்ற உச்சரிப்புடன் பேச வேண்டியிருக்கும். டிரைவரை நான் சரியாக ஏமாற்றிவிட்டேன்."
தன்னை அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி விக் அணிந்துகொண்டு, அதிக அளவில் ஒப்பனை செய்துகொண்டு அவர் விமான நிலையத்துக்குச் சென்றார்.
"நான் பதற்றமாக இருக்கவில்லை. மாறாக, ஒரு விதமான மிகப்பெரிய கையறுநிலை உணர்வு இருந்தது. எங்கள் வாழ்க்கை மேம்பட்டுவிடும் அல்லது முற்றிலும் சீரழிந்துவிடும்."
"சுங்கச் சோதனையை எந்தப் பிரச்னையும் இல்லாமல் கடந்துவிட்டேன். கடவுச்சீட்டின் உரிமையாளரின் பெயர், குடும்பப் பெயர், பிறந்த தேதி மற்றும் சில விவரங்களை நான் மனப்பாடம் செய்திருந்தேன். விமானம் தாமதமானதால், அமைதியாக அமர்ந்து ஹென்றி மில்லரின் ஒரு புத்தகத்தைப் படித்தேன். 'எது நடந்தாலும் நடக்கட்டும்' என்று நினைத்துக்கொண்டேன்."
நீண்ட நேரம் காத்திருந்த பிறகு, எந்தச் சிக்கலும் இல்லாமல் விமானத்தில் ஏறினார்.
"விமானத்தில் அமர முடிந்த பிறகு எனக்கு ஏற்பட்ட உணர்வு, மனநலக் காப்பகத்திலிருந்து வெளியேறுவது போல இருந்தது," என்று அவர் கூறுகிறார்.
அவர் மாட்ரிட் சென்றார். பின்னர் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி பெற்றார். அங்கிருந்து, 16 வயதான தனது ஒரே மகள் கியூபாவை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியைப் பெற முயன்றார்.
அமெரிக்க மதபோதகர் ஜெஸ்ஸி ஜாக்சன் தலையிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் டிசம்பர் 31ஆம் தேதி ஜார்ஜியாவில் மீண்டும் சந்தித்தனர். 1994ஆம் ஆண்டின் புத்தாண்டு பிறப்பை இருவரும் ஒன்றாகக் கொண்டாடும் வகையில் அது அமைந்தது.
'அமெரிக்காவில் ஃபிடல் காஸ்ட்ரோவின் மகளானேன்'
2001ஆம் ஆண்டு மயாமியில் நிரந்தரமாகக் குடியேறும் வரை, அலினா அமெரிக்காவிலும் ஸ்பெயினிலும் மாறி மாறித் தங்கினார்.
நாட்டைவிட்டு வெளியேறிய பிறகு, பல தசாப்தங்களாக அவர் மறைக்க முயன்ற குடும்ப உறவுகள், கியூபாவின் நிலைமையை விமர்சிப்பதற்கான ஒரு கருவியாக மாறின.
"கியூபாவில் நான் ஒருபோதும் செய்ய விரும்பாத ஒன்று — ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றிப் பேசுவதும், அவரது குடும்பத்தின் ஒரு பகுதியாக என்னை அடையாளப்படுத்திக்கொள்வதும் — இங்கே நான் அதைச் செய்தேன். 40 வயதில், நான் உண்மையிலேயே ஃபிடல் காஸ்ட்ரோவின் மகளானேன்," என்று அவர் கூறுகிறார்.
செல் வளர்ப்பு ஆய்வகத்தில் தொழில்நுட்பப் பணியாளராகப் பணியாற்றிய அவர், அந்த வேலையுடன் வானொலிப் பணியையும் மேற்கொண்டார். ஒரு உள்ளூர் வானொலி நிலையத்தில் "சிம்பிளி அலினா" என்ற நிகழ்ச்சியைப் பல ஆண்டுகள் தொகுத்து வழங்கினார்.
1997ஆம் ஆண்டு, 'அலினா: ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிகரமான மகளின் நினைவுக் குறிப்புகள்' (Alina: Memoirs of Fidel Castro's Rebel Daughter) என்ற தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். அது ஸ்பெயினில் அதிகம் விற்பனையான நூலாக மாறியதுடன், பின்னர் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி ஃபிடல் காஸ்ட்ரோ இறந்த செய்தியை அவர் எவ்வாறு எதிர்கொண்டார் என்று கேட்டபோது, "பெரும் துயரமும் இல்லை பெரும் மகிழ்ச்சியும் இல்லை" என்று பதிலளித்தார்.
"அது எனக்கு அதிர்ச்சியாக இருக்கவில்லை," என்று அவர் கூறுகிறார்.
இந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான 'புரட்சியின் மகள்' (Revolution's Daughter) என்ற ஆவணப்படத்தில் அலினா இடம்பெற்றுள்ளார். கியூபாவை விட்டு வெளியேறிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கருத்துகளுடன் அவரது வாழ்க்கை வரலாற்றை இணைக்கும் இந்த ஆவணப்படம், 1959ஆம் ஆண்டு புரட்சிக்குப் பின்னர் நிலவி வரும் ஆட்சியை விமர்சன ரீதியில் பார்க்கிறது.
ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகியும், மிகுவல் டியாஸ்-கனெல் அதிபராக இருக்கும் நிலையில், கியூபா தற்போது "சிறப்புக் காலத்தை" விடவும் மோசமான நிலையை எதிர்கொள்வதாகப் பலர் கூறுகின்றனர். தொடர்ச்சியான மின்வெட்டுகள், பரவலான உள்கட்டமைப்பு மற்றும் சேவைச் சீர்குலைவு, பொருள்களின் தட்டுப்பாடு மற்றும் பட்டினி ஆகியவை அங்கு நிலவுகின்றன.
தற்போதைய நெருக்கடி தனது தந்தை உருவாக்கிய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பின் விளைவு என்று அலினா கருதுகிறார்.
"அரசு அனைத்து தொழில்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டால், அனைவரும் தங்கள் அமைதியை இழந்துவிடுகிறார்கள்."
"கியூபாவின் பொருளாதாரம் எங்கே என்று அனைவரும் கேட்கிறார்கள். அது உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கிறது. அதன் படையணிகள், அதன் ஆலோசகர்கள் என, புரட்சியை ஏற்றுமதி செய்வதற்காக கியூபாவில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட அனைத்திலும் அது இருக்கிறது. அது ஃபிடல் காஸ்ட்ரோவின் பிரமாண்டமான கனவு," என்று அவர் முடிக்கிறார்.
இன்றைய கியூபாவில் யார் அதிகாரத்தை வைத்திருக்கிறார்கள் என்பது குறித்து — 95 வயதான ராவுல் காஸ்ட்ரோவும் அவரது குடும்பத்தினரும் அதிகாரத்தை வைத்திருப்பதாக சில நிபுணர்கள் கூறுகின்றனர். "கியூபா ஒரு ராணுவ ஆட்சிக்குழுவுக்குச் சொந்தமான இடம். அவர்கள் அதை அவ்வளவு எளிதாக விட்டுக்கொடுக்கப் போவதில்லை," என்று அலினா கூறுகிறார்.
ஓய்வு பெற்று மயாமியில் எளிமையான வாழ்க்கை வாழும் அலினா பெர்னாண்டஸ், பல தசாப்தங்களாக காஸ்ட்ரோ குடும்பத்தினருடன் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறுகிறார். நாடு கடத்தப்பட்ட தனது அத்தை ஜுவானிடா காஸ்ட்ரோவின் குடும்பத்தினருடன்கூட தனக்கு தொடர்பு இல்லை என்று அவர் தெரிவிக்கிறார். ஜுவானிடா காஸ்ட்ரோ, ஃபிடலின் சகோதரி.
அவரது தந்தையின் (ஃபிடல்) ஆளுமையில் இருந்து அவருக்கு என்ன கிடைத்தது என்று கேட்டபோது, பதிலளிப்பதற்கு சில விநாடிகள் யோசித்தார்.
"நான் மிகவும் யதார்த்தமாக, பகுத்தறிவுடன் சிந்திக்கும் பெண். அவர் அப்படிப்பட்டவராக இருந்தாரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் அப்படிப்பட்டவராகத் தன்னை ஒருபோதும் காட்டிக்கொண்டதில்லை," என்று அலினா பதிலளித்தார்.
"சில நேரங்களில், ஒருவரை விமர்சிக்க வேண்டுமென்றால், அவரிடம் இருக்கும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை."
2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கியூபப் புரட்சியின் தலைமைத் தளபதி உயிரோடு இருந்திருந்தால் 100 வயதை எட்டியிருப்பார். வரலாறு அவரை எவ்வாறு நினைவுகூரும் என்ற எங்களது இறுதிக் கேள்வியை அலினாவிடம் கேட்டோம்.
"உங்களுக்குத் தெரியும், வரலாறு மிக வேகமாக மாறிவிட்டது. இறுதியில், ஃபிடல் காஸ்ட்ரோ என்பவர் இப்போது யாரும் பெரிதாகப் பேசாத இடதுசாரிகளின் ஒரு குறியீடாகிவிட்டார். கியூபாவின் சீரழிவு மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்கள் தொடர்ந்து அமெரிக்கர்களைக் குற்றம்சாட்டிக் கொண்டிருந்தாலும், எல்லாவற்றுக்கும் அதுதான் காரணம் அல்ல என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு