ஆளில்லாத பிரமாண்ட கட்டடங்கள் - மலேசியாவின் 'கனவு நகரம்' மோசடி கும்பல்களின் கூடாரமாக மாறியதா?

    • எழுதியவர், கேவின் பட்லர்
    • பதவி, பிபிசி செய்திகள்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

தொலைவில் இருந்து பார்த்தால், மலேசியாவின் ஃபாரஸ்ட் சிட்டி 3டி பிரிண்டரில் உருவாக்கப்பட்டதைப் போலத் தெரிகிறது.

எந்த சிறப்பம்சமும் இல்லாத கடற்கரையோரத்தில், பெரிய அளவில் ஒரே மாதிரியான வெள்ளை நிறக் கட்டடங்கள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாக அமைந்துள்ளன.

சீனாவைச் சேர்ந்த நிறுவனங்கள் 2016-ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, 100 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த மாபெரும் திட்டம், "ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கான கனவு உலகம்" என்று விளம்பரப்படுத்தப்பட்டது.

சுமார் 700,000 பேர் வசிக்கக்கூடிய சிறப்பு நிதி மண்டலமாக இது உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பத்தாண்டுகளுக்குப் பிறகு, சிங்கப்பூருக்கு அருகில் 14 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்தத் தீவில், மதிப்பிடப்பட்ட மக்கள் தொகையில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே வசிப்பதாகக் கூறப்படுகிறது.

வரிசையாக உள்ள வானளாவிய கட்டடங்கள், அமைதியான சாலைகளுக்கு மேலே உயர்ந்து நிற்கின்றன.

காலியாகக் கிடக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள், சமையலறை மேடைகள் மற்றும் ஜன்னல்கள் தூசி படிந்து காணப்படுகின்றன.

"2016-ஆம் ஆண்டில் இது தங்க நகரம் என்று இங்கு வர்ணிக்கப்பட்டது. மிக மிக அழகாக இருக்கும் என்று கூறப்பட்டது" என்கிறார் 56 வயதான முதலீட்டாளர் ஜேசன் டெங்.

ஃபாரஸ்ட் சிட்டியில் முதலில் வீடு வாங்கியவர்களில் ஒருவரான அவர், ஐந்து சொத்துகளை வாங்குவதற்கு "பெரும் தொகையை" செலவிட்டுள்ளார்.

"இது இவ்வளவு சிறப்பாக அமையப் போவதில்லை என்று எனக்குத் தெரிந்திருந்தால், இத்தனை அடுக்குமாடிக் குடியிருப்புகளை நான் வாங்கியிருக்க மாட்டேன்" என்று இப்போது கூறும் அவர், "இது மிகவும், மிகவும் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன்" என்கிறார்.

இந்த நகரம் சிலருக்கு மட்டுமே சிறந்த இடமாக இருக்கிறது என்பதும், ஆனால், அந்த 'சிலர்' இந்தத் திட்டத்தை உருவாக்கியவர்கள் எதிர்பார்த்தவர்கள் அல்ல என்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதத்தின் நடுப்பகுதியில், மலேசிய காவல்துறையினர் ஃபாரஸ்ட் சிட்டியில் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் இரண்டு பெரிய மோசடி வலையமைப்புகள் மீது சோதனை நடத்தினர்.

32 இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், 335 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சுமார் 10 லட்சம் ரிங்கிட் (சுமார் $245,000) மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில் 313 கணினிகள், 1,557 கைப்பேசிகள், 17 மடிக்கணினிகள் மற்றும் 10 மோடெம்கள் அடங்கும்.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கால் சென்டர்களில் இருந்து குற்றவியல் கும்பல்கள் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்தி, வெளிநாடுகளில் உள்ளவர்களைக் குறிவைத்து முதலீட்டு மோசடிகளையும் காதல் மோசடிகளையும் நடத்தி வந்துள்ளன.

இவற்றில் ஒரு கால் சென்டர், குடியிருப்புக் கோபுரத்தின் ஐந்து தளங்களில் பரவியிருந்த 27 வீடுகளில் செயல்பட்டு வந்தது. மற்றொன்று ஐந்து பங்களாக்களில் செயல்பட்டு வந்தது.

கைது செய்யப்பட்டவர்களில் 309 பேர் சீன நாட்டவர்கள், 19 பேர் இந்தோனீசியர்கள், மூன்று பேர் மலேசியர்கள் மற்றும் நான்கு பேர் மியான்மர் நாட்டவர்கள்.

இந்த மோசடி நடவடிக்கையின் பின்னணியில் உள்ள முக்கிய நபரை கண்டறிய, அதிகாரிகள் இன்டர்போலுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக ஜொகூர் காவல்துறை தலைவர் அப் ரஹ்மான் அர்சாத் தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு பிபிசி ஃபாரஸ்ட் சிட்டி நிர்வாகத்தையும் ஜொகூர் காவல்துறையையும் தொடர்புகொண்டது. ஆனால், எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இது வெறும் மேலோட்டமான பகுதி மட்டுமே எனவும் உண்மையில், இது பரவி, வளர்ந்து, மேலும் தொழில்முறைப்படுத்தப்பட்டுவரும் உலகளாவிய மோசடி வலையமைப்பின் அறிகுறி எனவும் நிபுணர்களும் உள்ளூர் மக்களும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

"உண்மையில், இந்த அமைப்புகளில் பல, பாரம்பரிய குற்றவியல் வலையமைப்பு அல்லது கும்பலைவிட பன்னாட்டு நிறுவனங்களைப் போலவே தற்போது செயல்படுகின்றன" என்கிறார் கிரிப்டோகரன்சி மூலம் நடைபெறும் குற்றங்களை விசாரிக்கும் நிறுவனமான டிஆர்எம் லேப்ஸின் ஆய்வாளர் ஜான் வோஜ்சிக்.

"அவற்றில் ஆட்களைச் சேர்ப்பதற்கென தனிக் குழுக்கள், தகவல் தொழில்நுட்பத் துறைகள், பண மோசடி நிபுணர்கள் என சொந்தமாக உள்கட்டமைப்பையும் வைத்திருக்கின்றன."

ஃபாரஸ்ட் சிட்டியில் கண்டறியப்பட்ட மோசடி மையங்களில் பணியாற்றியவர்கள், பெரும்பாலும் கம்போடியாவில் இருந்து வெளியேறிய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று அதிகாரிகளும் நிபுணர்களும் கருதுகின்றனர். கம்போடியா, நீண்ட காலமாக சர்வதேச மோசடி வலையமைப்புகளின் முக்கிய மையமாக அறியப்பட்டு வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தக் குற்றச் செயல் துறை பல மில்லியன் டாலர் மதிப்பிலான தொழிலாக வளர்ந்துள்ளது.

டத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டவர்களை கட்டாயப்படுத்தி வேலை செய்ய வைப்பதன் மூலம் இந்த மோசடி வலையமைப்புகள் இயங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. பலர் சித்திரவதை மற்றும் வன்முறை அச்சுறுத்தல்களின் கீழ் இந்த மையங்களில் பணியாற்றியதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இறுதியில் இருந்து, இந்த நடவடிக்கைகளை ஒழிக்க கம்போடிய அரசு தனது முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், சில மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியதாக அதிகாரிகள் சமீபத்தில் மதிப்பிட்டுள்ளனர்.

ஆனால், மலேசியாவில் செயல்பட்ட இந்த மோசடி மையங்கள், வழக்கமாக அறியப்படும் "மோசடி வளாகங்கள்" போன்றவை அல்ல என்று தெரிகிறது.

சியானுக்வில் மற்றும் மியான்மர் எல்லைப் பகுதிகளில் உள்ள மிகவும் மோசமான பெயர் பெற்ற மோசடி வளாகங்களுடன் ஒப்பிடும்போது, ஃபாரெஸ்ட் சிட்டியில் செயல்படுவதாகக் கூறப்படும் மோசடி மையங்கள் மிகவும் தொழில்முறையாகவும், வெளிப்படையாக குற்றச்செயல் நடைபெறுவது போல் தெரியாமலும் இருக்கின்றன.

அங்கு உள்ளூரைச் சேர்ந்தவர்கள் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது. அவர்கள், தங்கள் அண்டை வீட்டில் வசிப்பவர்களுக்குத் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே, அவர்களது வீடுகளுக்கு மிக அருகாமையில் வசித்து வந்துள்ளனர்.

எவ்வளவு பேர் வசிக்கிறார்கள்?

ஃபாரஸ்ட் சிட்டியில் வாடகைக்கு குடியிருப்பதுடன், அங்குள்ள சொத்து விற்பனைத் துறையிலும் பணியாற்றும் கெவின், அந்த வளாகத்தில் அடிப்படை வசதிகள் உள்ள குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மோசடி செய்பவர்கள் இன்னும் செயல்பட்டு வருவதாக நம்புகிறார்.

பழிவாங்கப்படலாம் என்ற அச்சத்தில், தனது பெயரை மாற்றிக் குறிப்பிடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

"அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். உண்மையில், ஜொகூர் சிட்டி மற்றும் கோலாலம்பூரில் இது மிகவும் பொதுவான பிரச்னை. ஆனால், குறிப்பாக ஃபாரஸ்ட் சிட்டியில் இது அதிகம். ஃபாரஸ்ட் சிட்டி மிகவும் வித்தியாசமானது" என்கிறார் அவர்.

கெவின், வோஜ்சிக் உள்ளிட்டோர் பார்வையில், ஃபாரஸ்ட் சிட்டியின் "சிறப்பே" அதற்கு இவ்வளவு அவப்பெயரைத் தேடித்தந்த விஷயத்தில்தான் இருக்கிறது. பாதியளவு கைவிடப்பட்ட, ஆள் அரவமற்ற "பேய் நகரம்" என இது அறியப்படுகிறது.

"வாடிக்கையாளர்களிடம் பேசும்போது, 'இந்தப் பகுதியில் ஏற்கனவே 23,000 பேர் வசிக்கிறார்கள்' என்று கூறுமாறு நிறுவனம் எங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது" என்கிறார் கெவின்.

ஆனால், உண்மையில் "5,000க்கும் குறைவானவர்களே" வசிப்பதாக அவர் மெதுவாகக் கூறுகிறார்.

மோசடி செய்பவர்கள் ஃபாரஸ்ட் சிட்டியைத் தேர்ந்தெடுத்து அங்கு குடியேறியதற்கு இதுதான் காரணம் என்று கூறும் அவர்,"அவர்களுக்கு தனிமை கிடைக்கிறது... இங்கு யாரும் வருவதில்லை"என்கிறார்.

பல காரணிகள், ஃபாரஸ்ட் சிட்டியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்ததாகக் கருதப்படுகிறது.

சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான கன்ட்ரி கார்டன் மற்றும் மலேசிய சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் நிறுவனமான டாங்கா 88 ஆகியவற்றால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பத்தில், பணக்கார சீன வாடிக்கையாளர்களுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த பெருநகரமாக இது உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

இதில் சொகுசு ஹோட்டல், கோல்ஃப் மைதானம் மற்றும் நீர் பூங்கா ஆகியவை இடம்பெற இருந்தன.

இந்த ரிசார்ட் பாணியிலான நகரில் கடற்கரையோர அலுவலகங்கள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அதிக தேவை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கொரோனா பெருந்தொற்று, சீனாவின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்டுவரும் சரிவு மற்றும் அந்நாட்டு மக்களுக்கான கடன் பெறும் வரம்புகள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த தாக்கம், இந்தப் பிரமாண்டமான கனவுகளை முடக்கி, திட்டத்தை கிட்டத்தட்ட முடங்கச் செய்துவிட்டது.

விளக்குகள் இன்னும் எரிந்துகொண்டிருக்கின்றன. ஆனால், வீடுகளில் கிட்டத்தட்ட யாருமே வசிக்கவில்லை.

இது மோசடி செய்பவர்களுக்கு இந்த வளாகத்தை ஈர்ப்புமிக்க இடமாக மாற்றியிருப்பதாகத் தெரிகிறது.

"ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் சூழலை ஃபாரஸ்ட் சிட்டி பிரதிபலிக்கிறது. அறிவார்ந்த, பிரபலமான, சொகுசான, திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரமாக விளம்பரப்படுத்தப்பட்ட ஓர் அடையாளச் சின்னம், அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு ஒருபோதும் அருகில்கூட செல்லவில்லை" என்கிறார் வோஜ்சிக்.

"இதுபோன்ற திட்டங்கள், இந்த மாஃபியா கும்பல்கள் தேடுவது அனைத்தையும் வழங்குகின்றன. நவீன உள்கட்டமைப்பு, ஏராளமான காலி சொத்துகள் மற்றும் சர்வதேசத் தொடர்புகள். இவை அனைத்தும் சட்டபூர்வமான பொருளாதார நடவடிக்கைகள் நடைபெறுவது போன்ற தோற்றத்துடன் இணைந்திருப்பதால், உள்ளே நடக்கும் செயல்களின் குற்றவியல் தன்மை வெளியில் தெரியாமல் போகிறது."

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஃபாரஸ்ட் சிட்டியின் பிரமிக்க வைக்கும் வெளித்தோற்றம், அதற்கு 1,800 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள மிகவும் பிரபலமான ஒரு பெருநகரத்தை நினைவுபடுத்துகிறது.

அது, மியான்மர்-தாய்லாந்து எல்லையில் உள்ள, உலகின் மிகப் பிரபலமான மோசடி மையங்களில் ஒன்றாகத் திகழும் 'சுற்றுலா நகரம்' என்று அழைக்கப்படும் ஷ்வே கொக்கோ.

சீனாவின் தனியார் நிறுவனங்களின் கூட்டமைப்பான யாடாய் உருவாக்கிய ஷ்வே கொக்கோ, சீன சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பான விடுமுறைத் தலமாகவும், கோடீஸ்வரர்களுக்கான சொர்க்கமாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது.

ஆனால், மரங்கள் நிறைந்த சாலைகள் மற்றும் சொகுசு வில்லாக்களுக்குப் பின்னால், மோசடி, பணமோசடி மற்றும் மனிதக் கடத்தல் ஆகியவற்றின் வலையமைப்பு இயங்கி வருகிறது.

மறைமுக தந்திரம்

அனைத்து தடைகளை மீறியும், முதலில் முன்மொழியப்பட்ட திட்டத்தில் 15-20 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும், ஃபாரஸ்ட் சிட்டி தொடர்ந்து தன்னை ரியல் எஸ்டேட் முதலீடு, தொழில்நுட்பப் புத்தாக்கம் மற்றும் வரியில்லா தொழில் முயற்சிகளுக்கான மையமாக விளம்பரப்படுத்தி வருகிறது.

இதுபோன்ற தொழில் விளம்பரங்கள், மோசடி செய்பவர்கள் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்க உதவுகின்றன.

இதன் மூலம் அவர்கள் தங்களது மோசடிகளை மிகவும் திறம்பட நடத்த முடிகிறது.

"சாதாரண வணிக வளாகங்களில் சட்டபூர்வமானதாகத் தோன்றும் நிறுவனங்களின் பின்னால் மோசடி கும்பல்கள் தங்களை மறைத்துக்கொள்ளும்போது, அவற்றைக் கண்டறிந்து தடுத்து நிறுத்துவது மட்டுமின்றி, அவை உருவாக்கும் மிகப்பெரிய லாபத்தின் மூலம் கணிசமான அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்தும் திறனையும் பெறுகின்றன."என்று வோஜ்சிக் விளக்குகிறார்.

இந்த அதிகாரமும் செல்வாக்கும், மோசடி செய்பவர்கள் தங்களை வேறு வழிகளிலும் தொழில்முறையாக மாற்றிக்கொள்ள உதவுகிறது.

மனிதக் கடத்தல் மூலம் சுரண்டப்படுபவர்களே தொடர்ந்து மோசடித் தொழிலுக்கான முக்கிய மனிதவளமாக இருக்கின்றனர்.

அதே நேரத்தில், அதிக சம்பளம் மற்றும் சிறந்த பணிச்சூழலை வழங்குவதன் மூலம் அனுபவம் வாய்ந்த மோசடி செய்பவர்களை வேலைக்கு எடுத்து தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் போக்கு, குற்றவியல் வலையமைப்புகளை நடத்துபவர்களிடையே தற்போது குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுகிறது.

இதற்கிடையில், மோசடியான வேலை வாய்ப்புகள் விளம்பரப்படுத்தப்படும் அதே டெலிகிராம் குழுக்களில், மோசடி செய்பவர்கள் தற்போது தங்களது விரிவான சுயவிவரங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

சட்டவிரோத நடவடிக்கைகளில் தங்களுக்கு உள்ள அனுபவத்தை விவரிப்பதுடன், வேலை செய்வதில் தங்களுக்கு உள்ள ஆர்வத்தையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

"முறைகேடும், சுரண்டலும் பரவலாகத் தொடர்ந்தாலும், இந்தத் தொழில் வளர்ச்சியடைந்து, மேலும் தொழில்முறை சார்ந்த குற்றவியல் நிறுவனமாக மாறி வருவதற்கான அறிகுறி இது" என்று வோஜ்சிக் விவரிக்கிறார்.

ஃபாரெஸ்ட் சிட்டியில் நடத்தப்பட்ட சோதனைகள், அளவிலும் வடிவத்திலும் மாறிவரும் எல்லை தாண்டிய மோசடித் தொழில்துறையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. ஆனால், இதுபோன்ற செயல்பாடுகள் மலேசியாவில் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை அல்ல.

2022-ஆம் ஆண்டு முழுவதும், இந்தத் துறை உலகளாவிய கவனத்தைப் பெறுவதற்கு முன்பாகவே, ஜொகூர், பினாங்கு மற்றும் தலைநகர் கோலாலம்பூர் ஆகிய இடங்களில் பங்களாக்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து செயல்பட்டு வந்த பல மோசடி மையங்களை மலேசிய அதிகாரிகள் முடக்கினர்.

இந்த சோதனைகள் மற்றும் பிற பெரிய அளவிலான நடவடிக்கைகள் மோசடி கும்பல்களிடம் "மோசடிக்கு சகிப்புத்தன்மை இல்லை" என்ற வலுவான செய்தியை அனுப்பியிருந்தாலும், செல்வாக்கு மிக்க குற்ற வலைப்பின்னல்களுக்கு மலேசியா தொடர்ந்து தளமாக இருந்து வருவதாக வோஜ்சிக் குறிப்பிடுகிறார்.

மேலும், "பெரிய அளவில் இந்தச் செயல்பாடுகள் மீண்டும் உருவாகுவதற்கான எந்த அறிகுறிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறுகிறார்.

இங்கு மோசடிகள் நடைபெறுவது நீண்ட காலமாகவே "வெளிப்படையாகத் தெரிந்த ரகசியம்" என்றும் "ஆனால், காவல்துறை திறம்பட நடவடிக்கை எடுத்திருப்பதுதான் ஒரே ஆச்சரியம்" என்றும் கெவின் கூறுகிறார்.

இங்கு இதைவிட அதிகமான மோசடி நடவடிக்கைகள் நடப்பதாக அவர் உறுதியாக நம்புகிறார்.

ஆனால், தனது அண்டை வீட்டில் இருப்பவர்கள் லட்சக்கணக்கான டாலர்களை மோசடி செய்து வருகிறார்கள் என்ற எண்ணம் குறித்து அவர் கவலைப்படவில்லை.

"எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. அது என் வேலை இல்லை... சம்பளத்துக்காக மட்டுமே இங்கு வேலை செய்கிறேன்" என்கிறார் அவர்.

அங்கு வசிக்கும் மற்றவர்களும் இதே கருத்தைத் தான் கொண்டுள்ளனர்.

பிலிப் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இருந்து ஃபாரஸ்ட் சிட்டிக்கு குடிபெயர்ந்தார்.

ஒப்பீட்டளவில் மலிவான ரியல் எஸ்டேட் சந்தையும், தனது முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவரை இங்கு வரவழைத்தன.

அவர் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார். மேலும்,சைபர் பாதுகாப்பில் தான் மிகவும் கவனம் செலுத்தி வருவதாகக் கூறுகிறார்.

"ஆம், அவர்கள் என் வீட்டு வாசலிலேயே இருக்கலாம். எனது அண்டை வீட்டுக்காரர்களில் ஒருவர் இந்தக் குற்றவியல் வலையமைப்புகளில் ஒன்றை நடத்துபவராகக்கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும், நீங்கள் எங்கு சென்றாலும் இது நடக்கத்தான் செய்யும்" என்கிறார் பிலிப்.

தான் வசிக்கும் குடியிருப்பு வளாகத்தில் மோசடி மையங்கள் செயல்படுவதாக வெளியான தகவல்கள் தன்னை ஆச்சரியப்படுத்தவில்லை என்று கூறும் அவர், ஆனால், ஃபாரஸ்ட் சிட்டிக்கு அதிகமான மக்கள் குடிபெயர்ந்து வருவதுதான் தனக்கு ஆச்சரியமாக இருப்பதாகக் கூறுகிறார்.

தான் வசிக்கும் குடியிருப்புப் பகுதியைத் தேர்வு செய்ததற்கான காரணங்களில் ஒன்று அதன் அமைதியான சூழல் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், அது ஒரு "பேய் நகரமாக" இருந்த நிலையிலிருந்து, மக்கள் வசிக்க விரும்பும் இடமாக மாறி வருவதைக் கண்டு மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறுகிறார்.

"இந்தத் திட்டங்களில் நிறைய பேர் பணத்தை இழந்திருக்கிறார்கள்" என்று குறிப்பிடும் பிலிப், "ஆனால் கடந்த மூன்று மாதங்களில், வீடுகளில் விளக்குகள் எரிவதைப் பார்க்க முடிகிறது. முன்பு 20 வீடுகளில் ஒன்றில் மட்டுமே மக்கள் குடியிருந்த நிலையில், இப்போது ஐந்து வீடுகளில் ஒன்று என்ற அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு