You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அறிகுறிகள் இல்லாமலேயே' மான் கொம்பு வடிவில் உருவாகும் சிறுநீரக கல்: 8 முக்கிய கேள்வி-பதில்கள்
சிறுநீரகத்தில் கற்கள் என்றால் சிறிய தனித்தனி கற்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், மான் கொம்பு வடிவிலும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படக் கூடும். இது ஒரு குறிப்பிட்ட பிரிவினர், அல்லது இணை நோய் கொண்டவர்கள் என்றில்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிறுநீரகத்தில் ஏற்படும் மான் கொம்பு கல் எதனால் உருவாகிறது, எதனால் அந்த வடிவில் இருக்கிறது, அதன் பாதிப்புகள் என்னவென்று மருத்துவர்களின் கருத்துகளுடன் இந்தக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.
ஏன் மான்கொம்பு வடிவில் உள்ளது?
இந்த கல் சிறுநீரகத்தில் சிறுநீரை சேகரித்து வைக்கும் கேலிக்ஸ் (calycs) என்ற பகுதியில் உருவாகிறது. மரக்கிளை போன்ற வடிவில் கேலிக்ஸ்-ன் உட்பகுதி இருக்கும். அதில் சிறிய அளவில் உருவாகும் கல், கேலிக்ஸ் பகுதி முழுவதும் வளரும் போது, மான் கொம்பு போன்ற வடிவில் காணப்படுகிறது. இது ஆங்கிலத்தில் 'ஸ்டேக்ஹார்ன் ஸ்டோன்' (staghorn stone) எனப்படுகிறது. 'ஸ்டேக்ஹார்ன்' என்றால் மான் கொம்பு என அர்த்தம்.
இந்த கல் எதனால் உருவாகிறது?
இந்த வகையிலான கல், பாக்டீரியா தொற்று மற்றும் வளர்சிதை மாற்றங்கள் (நாம் உண்ணும் உணவை உடலில் சக்தியாக மாற்றும் உயிரியல் நிகழ்வுகள்) காரணமாக உருவாகக் கூடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுநீரகத்துக்கு அருகில் ஏற்படும் பாக்டீரியா தொற்று இந்த கல் உருவாவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று என, சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை மூத்த மருத்துவர் தீபக் ராகவன் கூறுகிறார். "சிறுநீரில் யுரியா (urea) எனும் கழிவு உள்ளது. அதை சிதைக்கும் திறன் கொண்ட பாக்டீரியாக்களே இந்த தொற்று ஏற்பட முக்கிய காரணம். அவற்றில் ப்ரோடியஸ் (Proteus) எனும் பாக்டீரியாவே பல நேரங்களில் தொற்றை ஏற்படுத்துகிறது" என்கிறார் அவர்.
பெண்களில் அதிகம் ஏற்பட காரணம் என்ன?
அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்படுபவர்களில் இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். "பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே சிறுநீர் தொற்று அடிக்கடி ஏற்படக்கூடும். இதற்கு பெண்களின் சிறுநீர் குழாய் அமைந்திருக்கும் விதம் ஒரு காரணமாகும். சிறுநீரகத்தில் சாதாரண கற்களை கொண்ட நோயாளிகளை விட மான்கொம்பு கல் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை குறைவே" என்று சிறுநீரகவியல் மருத்துவர் வி.பலராமன் கூறுகிறார்.
மான்கொம்பு கல்லுக்கும் சாதாரண கல்லுக்கும் என்ன வித்தியாசம்?
சிறுநீரகத்தில் ஏற்படும் சாதாரண கல் கால்சியம் ஆக்சிலேட் என்றும் மான் கொம்பு கல் கால்சியம் ஹைட்ரோக்சியபடேட் என்றும் சிறுநீரகவியல், சிறுநீரக-புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஆர்.ஶ்ரீவத்சன் கூறுகிறார். "சாதாரண கல் உருவாகும் போது, தீவிர வலி ஏற்படும். சில நேரங்களில் பிரசவ வலி போல இருக்கும். ஆனால் மான்கொம்பு கல் உருவாகும் போது, அது போன்ற தீவிர வலி இருக்காது" என்கிறார் அவர்.
அவரது கூற்றுப்படி, சாதாரண வகையிலானவை சிறிய தனித்தனி கற்களாக இருக்கும். ஆனால் மான்கொம்பு கல், ஒரே பெரிய கல்லாக இருக்கும்.
மான்கொம்பு கல் இருந்தாலும் வலி இல்லாதது ஏன்?
மான்கொம்பு கல் சாதாரண சிறுநீர் கற்களை விட பெரியதாக இருந்தாலும், அதனால் தீவிர வலி ஏற்படாது என்று மருத்துவர் ஶ்ரீவத்சன் கூறுகிறார். "மான் கொம்பு கல், சிறுநீர் சேரும் இடத்தில் உருவாகிறது. இதனால் சிறுநீர் வெளியேறுவதில் பெரும்பாலான நேரங்களில் தடை ஏற்படுவதில்லை. ஆனால் சாதாரண சிறுநீர் கற்கள், சிறுநீர் வெளியேறும் குழாயில் இருப்பதால் தீவிர வலி ஏற்படுகிறது. எனவே, மான் கொம்பு கல் வளர்ந்து பெரிதாகும் வரை ஒருவருக்கு தெரியாமலே இருக்கக்கூடும்" என்கிறார் அவர்.
வலி இல்லை என்றாலும், மான் கொம்பு கல் சிறுநீரகத்தில் இருப்பதால், சிறுநீரக செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எத்தனை நாட்கள் சிறுநீரகத்தில் உள்ளது, எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதை பொருத்து சிறுநீரக பாதிப்பு மாறுபடும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கல் இருப்பதற்கான அறிகுறிகள் என்ன?
இந்த கல் இருப்பதற்கான தீவிர அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். "இந்த கல் இருப்பதனால் தீவிர வலி, சிறுநீரில் ரத்தம் போன்ற அறிகுறிகள் இருக்காது. ஒரு நோயாளிக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏற்பட்டால், அவருக்கு ஸ்கேன் செய்து பார்ப்போம். சில நேரங்களில் நோயாளிகள் தனக்கு இரண்டு ஆண்டுகளாக சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியம், ஒரு எரிச்சல் இருக்கிறது என்று கூறுவார்கள். ஆனால், மான்கொம்பு கல் இருப்பதற்கான பிரத்யேக அறிகுறிகள் எதுவும் கிடையாது" என்கிறார்.
இந்த கல் எத்தனை நாட்களில் எவ்வளவு பெரிதாகும் என்பது ஒவ்வொருவர் உடலை பொருத்து மாறுபடும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மான்கொம்பு கல்லை எப்படி நீக்குவது?
சிறுநீரகத்தில் சாதாரண கற்களை போல் அல்லாமல் இதனை கரைக்க முடியாது. எனவே, அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே இதை நீக்குவதற்கான ஒரே வழியாக இருக்கிறது.
பிபிசி தமிழிடம் பேசிய சிறுநீரகவியல் மருத்துவர் தீபக் ராகவ், "இதை உள்ளேயே கரைக்க முடியாது. கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மான்கொம்பு கல்லின் வடிவம் காரணமாக இதை நீக்குவது சிக்கலானதாகும். முதலில் சிறுநீரகத்தை திறந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்தது. இப்போது துளையிட்டு அறுவை சிகிச்சை செய்யும் நடைமுறைகள் உள்ளன. சிறுநீர் குழாயில் துளையிட்டு கருவியை உள்ளே செலுத்தியும், சிறுநீரகத்தில் துளையிட்டும், உள்ளே இருக்கும் கல்லை உடைக்கலாம். அதை முழுவதுமாக பொடியாக்கி, சிறுநீரில் வெளியேறும் படி செய்யலாம்" என்று விளக்குகிறார்.
மான் கொம்பு கல்லை நீக்காவிட்டால் என்னவாகும்?
இந்த கல் இருப்பதற்கான பிரத்யேக அறிகுறிகள் இல்லாததால், பெரும்பாலான நேரங்களில் அது பெரிதான பிறகே கண்டறியப்படுகிறது. அதை நீக்காவிட்டால் நிரந்தர சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர் ஶ்ரீவத்சன் சுட்டிக்காட்டுகிறார். "கல்லீரலில் சிதைவு ஏற்பட்டால், அது மீண்டும் வளரும். ஆனால், சிறுநீரகம் அப்படி அல்ல. அதிலுள்ள திசுக்கள் மீண்டும் வளராது. எனவே, மான் கொம்பு கல் சிறுநீரகத்தில் வெகு நாட்கள் இருந்தால் அது சிறுநீரகத்தில் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும். யாருக்கு எவ்வளவு பாதிப்பு என்பது அவரவர் உடல்நிலையை பொருத்து அமையும்" என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு