You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நமக்கு பெரும்பாலும் தீங்கு செய்யாத விஷயங்களை பார்த்து ஏன் இவ்வளவு பயப்படுகிறோம்?
- எழுதியவர், டெய்ஸி ஸ்டீபன்ஸ்
- பதவி, பிபிசி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
உங்கள் வீட்டின் வரவேற்பறை தரையில் திடீரென்று ஒரு சிலந்தி ஓடிச் சென்றால், உங்களுக்கு எப்படி இருக்கும்?
பெரும்பாலான சிலந்திகளிடம் விஷம் உள்ளது. ஆனால் அவற்றில் மிகச் சிறிய எண்ணிக்கையிலான சிலந்திகள் மட்டுமே மனிதர்களுக்கு ஆபத்தானவை. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சிலந்திக் கடியால் 10 பேருக்கும் குறைவானவர்களே உயிரிழப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், துல்லியமான தரவுகளைச் சேகரிப்பது கடினம் என்று சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், நானும் உட்பட பலரும் சிலந்திகளைப் பற்றிய பயம் அல்லது அதீத அச்சம் இருப்பதாகக் கூறுவோம். என் அறையில் ஒரு சிலந்தி இருப்பது தெரிந்தால் என்னால் தூங்க முடியாது. சிலந்தி வலைகளைப் பற்றிய நினைப்புக்கூட எனக்கு நடுக்கத்தை ஏற்படுத்தும்.
பல சந்தர்ப்பங்களில், ஃபோபியா என்பது நமக்கு உண்மையில் பெரிய தீங்கு செய்ய முடியாத விஷயங்களைப் பற்றிய மிகவும் தீவிரமான அச்சமாக இருக்கும். அப்படியிருக்க, அவை ஏன் இவ்வளவு பொதுவாகக் காணப்படுகின்றன? அவை எங்கிருந்து தோன்றுகின்றன?
பயத்திலிருந்து ஃபோபியா வரை
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியர் வனேசா லோபூ பயம் என்பது மனிதர்களுக்கு மிகவும் அவசியமான உணர்வு என்கிறார்.
"ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பதில் பயம் முக்கியப் பங்கு வகிக்கிறது," என்கிறார் அவர்.
ஆனால், ஒரு பயம் அளவுக்கு அதிகமாகி, ஒருவரின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் அளவுக்கு மாறிவிட்டால், அதை ஃபோபியா என்று குறிப்பிடலாம் என்கிறார் ஹங்கேரியில் உள்ள பெக்ஸ் பல்கலைக்கழகத்தின் காட்சி உணர்வு மற்றும் உணர்ச்சிகள் ஆய்வகத்தின் இயக்குநர் ஆண்ட்ராஸ் ஸிடோ.
"இதை ஒரு தொடர்ச்சியான அளவுகோலாக கருதலாம். இயல்பான பயத்திலிருந்து இது தொடங்குகிறது. எல்லோருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய பயம் இருக்கும். ஆனால், அந்தப் பயம் உங்கள் அன்றாட வாழ்க்கைக்கே தடையாக மாறத் தொடங்கினால், அதை ஃபோபியா என்று கருதலாம்," என்கிறார் அவர்.
ஃபோபியாக்கள் பொதுவாக உண்மையான ஆபத்துடன் ஒப்பிடும்போது அளவுக்கு மீறிய அச்சமாக இருக்கும் என்கிறார் அவர்.
உதாரணமாக, நான் வசிக்கும் பிரிட்டன் போன்ற உலகின் சில பகுதிகளில், பெரும்பாலான பாம்பு இனங்கள் மனிதர்களுக்கு ஆபத்தானவை அல்ல. எனவே, பாம்புகள் மீது அளவுக்கு அதிகமான பயம் இருப்பது காரணமற்றதாகக் கருதப்பட்டு, அது ஃபோபியாவாக வகைப்படுத்தப்படலாம்.
ஆனால், உலகின் வேறு சில பகுதிகளில் நிலைமை மாறுபடலாம். அங்கு பாம்புகள் உண்மையிலேயே ஆபத்தானவையாக இருக்கக்கூடும் என்பதால், அத்தகைய பயத்தை ஃபோபியா என்று கருத வேண்டிய அவசியம் குறைவாக இருக்கலாம்.
பிறவியிலேயே வருவதா? அல்லது கற்றுக்கொள்வதா?
சில ஃபோபியாக்கள் மிகவும் பொதுவானவையாக இருந்தாலும், அவை பிறக்கும் போதே நமக்குள் இருக்கின்றன என்று பெரும்பாலான நிபுணர்கள் கருதவில்லை. பயம் என்பது சிறிய குழந்தைகளால் உணர முடியாத உணர்ச்சியாகும் என்று லோபூ நம்புகிறார்.
"பயம் என்பது ஏதோ ஒன்று நமக்கு அச்சுறுத்தலாக இருக்கிறதா என்பதை மதிப்பிடுவதுடன் தொடர்புடையது. அதற்காக, உலகத்தைப் பற்றி சில விஷயங்களை நாம் அறிந்திருக்க வேண்டும். அதனால்தான் குழந்தைகள் பிறக்கும் உடனேயே பயப்படுவதைப் பார்க்க முடியாது; பின்னர் தான் பயம் தோன்றுகிறது," என்கிறார் அவர்.
அப்படியானால், நாம் சிலந்திகள் அல்லது பாம்புகளைப் பார்த்து பயப்படுவது பிறவியிலேயே வருவதில்லை என்றால், குறிப்பாக இந்த விஷயங்கள் மீது சிலருக்கு ஃபோபியா ஏன் உருவாகிறது?
ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி உளவியல் பேராசிரியர் ஸ்டெஃபானி ஹோல் மேற்கொண்ட ஆய்வில், குழந்தைகள் பூக்கள் மற்றும் மீன்களைப் பார்க்கும்போது ஏற்பட்டதைவிட, பாம்புகள் அல்லது சிலந்திகளைப் பார்க்கும்போது அவர்களின் கண் பாவை (ப்யூப்பில்) அதிகமாக விரிந்தன என்பது தெரியவந்தது.
கண் பாவை விரிவடைவது, குழந்தைகள் சாத்தியமான ஆபத்தை உணர்ந்திருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். இது நோராட்ரெனர்ஜிக் அமைப்பு செயல்படுவதுடன் தொடர்புடையது. இந்த அமைப்பு உடலின் "சண்டையிடு அல்லது தப்பியோடு" என்ற எதிர்வினையில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அப்போது, உடல் ஆபத்தில் இருந்து தப்பிக்கவோ அல்லது அதை எதிர்கொள்ளவோ தயாராகும்போது இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாச வேகம் அதிகரிப்பது போன்ற மாற்றங்கள் ஏற்படும்.
பயங்கள் பிறவியிலேயே உருவாகின்றன என்று ஹோல் கருதவில்லை. ஆனால், நமது சுற்றுப்புறத்தில் உள்ள சில விஷயங்களை மற்றவற்றைவிட வேகமாகக் கவனித்தறியும் திறன் நமக்கு இருக்கலாம் என்கிறார். அதற்குக் காரணம், அவை நகரும் விதமாகவும் இருக்கலாம்.
"உலகத்தில் உள்ள சில விஷயங்களைப் பார்த்து பயப்படக் கற்றுக்கொள்ள நமது மூளை முன்கூட்டியே தயாராக இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.
சிலந்திகள் மற்றும் பாம்புகளைப் போன்றவற்றை மற்ற விலங்குகளைவிட நாம் எளிதாகப் பயப்படக் கற்றுக்கொள்வதற்கு, அவை "வித்தியாசமாக" இருப்பதே காரணமாக இருக்கலாம் என்று லோபூ கருதுகிறார். அதற்கு நான் முழுமையாக உடன்படுகிறேன்.
"ஒரு பாம்பைப் பற்றி யோசித்துப் பாருங்கள். உலகில் வேறு எந்த உயிரினமும் பாம்பைப் போல இல்லை," என்கிறார் அவர்.
"குழந்தைகள் விலங்குகளைப் பார்ப்பதற்குப் பழகும் விதத்தைப் பாருங்கள். அவை நான்கு கால்களைக் கொண்டவை, நடக்கின்றன அல்லவா? ஆனால் பாம்புகள் அப்படி இல்லை. சிலந்திகள் நாம் எதிர்பார்க்காத விதங்களில் நகர்கின்றன. நமக்கு அது பிடிப்பதில்லை."
சில குறிப்பிட்ட விஷயங்களைப் பார்த்து பயப்படுவதற்கான இந்தப் போக்கு, பரிணாம வளர்ச்சியின் விளைவாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
"ஆரம்பகால மனிதர்கள் மிகவும் கணிக்க முடியாத சூழலில் வாழ்ந்தனர்," என்கிறார் ஸிடோ.
"மனிதகுலத்தின் வளர்ச்சியில் ஒரு கட்டத்தில், ஒவ்வொரு பயமும், ஒவ்வொரு ஃபோபியாவும் ஏதோ ஒரு வகையில் நியாயமானதாக இருந்திருக்கலாம். ஆனால் காலப்போக்கில், அவை நமது அன்றாட வாழ்க்கையில் பயனற்றதாகவும், தர்க்கரீதியற்றதாகவும் மாறிவிட்டன."
ஆனால், சில குறிப்பிட்ட விஷயங்களைப் பார்த்து பயப்படக் கற்றுக்கொள்வதற்கான பரிணாம ரீதியான முன்கணிப்பு 'தயார்நிலை கோட்பாடு’ என்று அழைக்கப்படுகிறது. இது மட்டும் இருந்தால் ஒரு ஃபோபியா உருவாகிவிடாது.
ஒரு விலங்கு அல்லது பொருளுடன் நேரடியாக ஏற்பட்ட எதிர்மறையான அனுபவம், அதைப் பார்த்து பயப்படுவதற்கான மிக விரைவான காரணமாக இருக்கலாம் என்கிறார் லோபூ. குறிப்பாக, அதைப் பற்றிப் பயப்படுவதற்கான இயல்பான முன்கணிப்பு ஏற்கெனவே நமக்கு இருந்தால், அது இன்னும் எளிதாகப் பயத்தை உருவாக்கும்.
ஆனால், மற்றவர்கள் ஒரு விஷயத்துக்கு எதிர்மறையாக எதிர்வினையாற்றுவதைப் பார்ப்பதன் மூலமும் நமக்கு பயம் ஏற்படலாம்.
"உங்களுக்கு ஒரு உடல்ரீதியான எதிர்வினை ஏற்படுகிறது. உதாரணமாக, உங்களை ஏதாவது கடித்திருக்கலாம் அல்லது நீங்கள் திடுக்கிட்டிருக்கலாம். அதன்பிறகு, உங்கள் அம்மா அதற்கு எதிர்வினையாற்றுவது அல்லது 'ஆம், அது மிகவும் ஆபத்தானது' என்று கூறுவது போன்ற விஷயங்கள் அதைப் பார்த்து நீங்கள் பயப்படுவதற்கான வாய்ப்பை மேலும் அதிகரிக்கின்றன." என்கிறார் லோபூ.
இந்தக் காரணத்தால், ஃபோபியாக்கள் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்குப் பரவக்கூடும் என்கிறார் ஹோல்.
'திரைப்படங்களைப் பாருங்கள்'
ஒரு விஷயத்தைப் பற்றிய பயம் நமக்கு எப்படி உருவாகிறது என்பதில் நமது அனுபவங்கள் முக்கியப் பங்கு வகிப்பதால், பாம்புகள் மற்றும் சிலந்திகள் குறித்த ஃபோபியாக்கள் அதிகமாக இருப்பதற்கு பிரபலமான கலாசாரமும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று லோபூ கருதுகிறார்.
"திரைப்படங்களைப் பாருங்கள், புத்தகங்களைப் பாருங்கள். பாம்புகளும் சிலந்திகளும் எப்போது கதாநாயகர்களைக் காப்பாற்றுகின்றன? ஒருபோதும் இல்லை," என்கிறார் அவர்.
இயற்கை உலகில் உள்ள விஷயங்களைப் பற்றிய போபியாக்கள், அதாவது "பயோபோபியாக்கள்" உருவாகுவதற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம்.
ஸிடோ, ஒருவர் வசிக்கும் பகுதி எவ்வளவு நகரமயமாக்கப்பட்டுள்ளது என்பதற்கும், அவர்களுக்கு விலங்குகள் மீதான ஃபோபியா இருக்கிறதா என்பதற்கும் தொடர்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். ஒரு பகுதி அதிகமாக நகரமயமாக்கப்பட்டிருந்தால், அங்கு பயோஃபோபியாக்களும் அதிகமாக இருப்பதை அவர் கண்டறிந்தார்.
"இயற்கையில் அதிக நேரம் செலவிடுபவர்கள், இயற்கையுடன் அதிக அனுபவம் கொண்டவர்கள், தாங்கள் எதிர்கொள்ளக்கூடிய இந்த விலங்குகளைப் பார்த்து குறைவாகவே பயப்படுகின்றனர்," என்கிறார் அவர்.
இன்றைய உலகில் 80%-க்கும் மேற்பட்ட மக்கள் நகர்ப்புறங்களில் வசித்து வருவதால், விலங்குகள் தொடர்பான ஃபோபியாக்கள் அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
நமது பயங்களைப் போக்குவது
நமது ஃபோபியாக்களைப் போக்க முடியும் என்பதிலும், அதற்கான சிறந்த வழி நாம் பயப்படும் விஷயத்தைப் படிப்படியாக எதிர்கொள்வதுதான் என்பதிலும் பெரும்பாலான நிபுணர்கள் ஒருமித்த கருத்தில் உள்ளனர்.
"சில சூழ்நிலைகளில் உங்களுக்கு சற்று அசௌகரியமாக இருப்பதாகத் தோன்றினால், உங்களை நீங்களே கொஞ்சம் தைரியப்படுத்தி அதை எதிர்கொள்ள முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கலாம்," என்கிறார் ஹோல்.
சிறிய அளவில் தொடங்குமாறு லோபூ பரிந்துரைக்கிறார். உதாரணமாக, நீங்கள் பயப்படும் விஷயத்தின் புகைப்படங்களைப் பார்ப்பது, அதைப் பற்றிய நேர்மறையான தகவல்களைத் தெரிந்துகொள்வது போன்றவற்றில் தொடங்கி, பின்னர் படிப்படியாக அந்த விஷயத்தை நேரடியாக எதிர்கொள்ளும் அளவுக்கு முன்னேறலாம்.
ஆனால், ஃபோபியா தீவிரமானதாக இருந்து உங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினால், தொழில்முறை உதவியை நாடுவது சிறந்ததாக இருக்கலாம்.
ஸிடோவின் ஆய்வும், பயத்தைப் போக்குவதற்கு மட்டுமல்லாமல், முதலில் பயம் உருவாகாமல் தடுப்பதற்கும் ஒரு விஷயத்தை நேரடியாக எதிர்கொள்வது உதவக்கூடும் என்ற கருத்தை ஆதரிக்கின்றன.
"பயத்தை உருவாக்குவதில் தனிப்பட்ட அனுபவம்தான் மிக முக்கியமான காரணியாக உள்ளது. அந்த அனுபவம் நேர்மறையானதாக இருந்தால், குறிப்பாக குழந்தைப் பருவத்தில் அல்லது கல்வி போன்ற சூழலில் கிடைத்திருந்தால், அது பயம் உருவாவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்புக் காரணியாகச் செயல்படும்," என்கிறார் அவர்.
பயம் நம்மைப் பாதுகாக்கிறது என்றும், அது ஒரு நல்ல விஷயம் என்றும் லோபூ வலியுறுத்துகிறார். அதேபோல், நமது ஃபோபியாக்களை நாமே கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
"ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பார்த்து நீங்கள் பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது விதியல்ல. உங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பயம் இருந்தாலும், அதை மாற்ற விரும்பினால் அதற்கான தீர்வுகள் உள்ளன," என்கிறார் அவர்.
என்னைப் பொறுத்தவரை, எனது சிலந்திப் பயம் பெற்றோரிடமிருந்து கற்றுக்கொண்டதா, ஒரு திரைப்படத்தைப் பார்த்து ஏற்பட்டதா அல்லது சிலந்திகளைப் போதுமான அளவு சந்திக்காததால் உருவானதா என்பது எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை இவை அனைத்தின் கலவையாக இருக்கலாம். ஆனால், இந்தக் கட்டுரையை எழுதுவது அந்தப் பயத்தைப் போக்குவதற்கான முதல் படியாக இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு