சுறா தாக்கி உயிர் பிழைத்த இளம்பெண் கூறுவது என்ன?

    • எழுதியவர், லானா லாம்
    • பதவி, சிட்னி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பிரபலமான கடற்கரையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சுறா மீன் தாக்குதலுக்கு உள்ளான பெண், தனக்கு "வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாக"வும், அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போவதாகவும் கூறுகிறார்.

35 வயதான லியா ஸ்டீவர்ட், கடந்த ஜூன் மாதம் கூஜி கடற்கரையில் காலை நேரத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது சுறா மீன் தாக்குதலுக்கு இலக்கானார். அவரது கைகள் மற்றும் கால்களில் சுறா பலமுறை கடித்ததில் பலத்த காயம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக சுறா தாக்குதல்கள் நடந்த காலகட்டத்தில் இந்த சம்பவமும் நிகழ்ந்தது.

ஒரு குழந்தைக்குத் தாயான லியா ஸ்டீவர்ட், மருத்துவர்களால் செயற்கையாக கோமா நிலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டது.

திங்கட்கிழமை இணையத்தில் வெளியிட்ட பதிவில், தனக்காக 5.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலருக்கும் (3.94 லட்சம் அமெரிக்க டாலர்) அதிகமாக நிதி திரட்டிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். தனது உடல்நலம் தேறுவதற்கான பயணம் "மிகவும் கடினமாக இருந்ததாகவும்", ஆனால் தற்போது "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

"மிகவும் கடினமான சில மாதங்களுக்குப் பிறகு, நான் ஓரளவு சுயமாக செயல்படும் அளவுக்கு முன்னேறியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இத்தனைக்கும் பிறகு, இறுதியாக சிறிது வெளிச்சத்தைக் காண முடிகிறது."

"எனக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளதாக உணர்கிறேன். அந்த வாய்ப்பை நான் வீணாக்கப் போவதில்லை என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று ஸ்டீவர்ட் அந்த சம்பவத்துக்குப் பிறகு முதன்முறையாக வெளியிட்ட கருத்துகளில் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் "முற்றிலும் அறிமுகமில்லாதவர்களிடமிருந்தும்" கிடைத்த ஆதரவால் தான் "மிகவும் நெகிழ்ந்து போனதாக" ஸ்டீவர்ட் தெரிவித்துள்ளார்.

"நீங்கள் என்னை கசப்பானவராக அல்ல, சிறந்தவராக மாற வேண்டும் என்று ஊக்கப்படுத்தியுள்ளீர்கள்" என்றும் அவர் கூறியுள்ளார்.

தனக்காக நடத்தப்பட்ட ஆன்லைன் நிதி திரட்டும் முயற்சி நிறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திரட்டப்பட்ட பணம், வீட்டிலேயே இருந்து உடல்நலம் தேறுவதற்கும், "எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ சிகிச்சைகளுக்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கும் உதவும்" என்றும் அவர் கூறினார்.

"எனக்கு உடல்நலம் முழுமையாக தேறுவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். ஆனால், எனது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதிலிருந்தும் எனது குடும்பத்தையும் என்னையும் சூழ்ந்துள்ள அன்பு, ஆதரவு, பிரார்த்தனைகள் மற்றும் ஊக்கமே இதற்கு முக்கிய காரணம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடர்ச்சியாக சுறா தாக்குதல்கள் நடந்துள்ளன. ஜனவரி மாதத்தில் இரண்டு நாட்களில் நான்கு சுறா தாக்குதல்கள் நிகழ்ந்தன . இதில், 12 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டு, பின்னர் அதில் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்தான்.

மே மாதம், குயின்ஸ்லாந்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை சுறா தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மேற்கு ஆஸ்திரேலியாவில், 4 மீட்டர் (13 அடி) நீளமுள்ள சுறா தாக்கியதில் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான ஒருவர் உயிரிழந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு