You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'ஜாக்கெட் திருடிவிட்டு சிங்கப்பூரை விட்டு சென்ற பிரிட்டன் நபர்' - 2 ஆண்டுகளுக்கு பிறகு கைதானது எப்படி?
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
சிங்கப்பூரின் விமான நிலைய ஷாப்பிங் மாலில் உள்ள ஒரு கடையில் இருந்து டெனிம் ஜாக்கெட்டை திருடியதாகக் கூறப்படும் பிரிட்டிஷ் நபர் மீது, அந்தச் சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிய பிறகு சிங்கப்பூர் அதிகாரிகள் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளனர்.
2024 ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாலை, சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பொம்மைக்கு அணிவிக்கப்பட்டிருந்த நீல நிற டெனிம் ஜாக்கெட் காணாமல் போனதை அங்கிருந்த விற்பனை உதவியாளர் கவனித்ததைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
கண்காணிப்பு கேமரா காட்சிகளில், ஒருவர் அந்த ஜாக்கெட்டை பொம்மையிலிருந்து அகற்றி, அதற்கான பணத்தை செலுத்தாமல் கடையை விட்டு வெளியேறியது பதிவாகியிருந்தது. சுமார் 350 சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள அந்த ஜாக்கெட்டை எடுத்துச் சென்ற நபரின் அடையாளத்தை அதிகாரிகள் கண்டறிந்த நேரத்தில், அவர் ஏற்கனவே சிங்கப்பூரை விட்டு வெளியேறியிருந்தார்.
தற்போது 26 வயதான அந்த பிரிட்டிஷ் நபர், இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்தில் மாறுவதற்காக இந்த விமான நிலையத்திற்கு அவர் வந்திருந்தார். பின்னர், செவ்வாய்க்கிழமை அவர் மீது அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
"கடைத் திருட்டு சம்பவங்களை காவல்துறை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது. சட்டத்தின்படி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குற்றம் செய்த பிறகு சிங்கப்பூரை விட்டு வெளியேறிவிட்டால் தங்களைக் கண்டுபிடிக்க முடியாது என்று குற்றவாளிகள் நினைக்கக் கூடாது," என்று சிங்கப்பூர் காவல்துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே அறிக்கையில், இந்த ஆண்டு ஜூன் 11 அன்று விமான நிலைய முனையங்களில் உள்ள கடைகளில் இருந்து இரண்டு வாசனைத் திரவிய பாட்டில்களை திருடியதாகக் கூறப்படும் 50 வயதான போலந்து நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு சற்று முன்பு, அந்தப் பெண் கைது செய்யப்பட்டார். செவ்வாய்க்கிழமை அந்தப் பெண் மீது இரண்டு திருட்டுக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சிங்கப்பூரில் திருட்டுக் குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு