நேபாள வெள்ளப் பேரிடரில் 21 தமிழர்கள் மீட்பு - இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள தகவலில், "கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்காகப் பயணம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த 21 இந்தியர்கள் நேபாளத்தில் மீட்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 200 இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளதாகவும் அவர்கள் மீட்கப்பட காத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் 288 இந்தியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என இந்திய அரசும் தமிழக அரசும் தெரிவித்துள்ளன.

நேபாளத்தில் சிக்கிய 21 இந்தியர்கள் மீட்பு; 288 பேருடன் இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை

கயிலாய மானசரோவர் யாத்திரையின் போது நேபாள வெள்ளத்தில் சிக்கிய 21 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

அவர்களின் தகவலின்படி, மீட்கப்பட்டவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் தளத்தில் மீட்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலையும் குறிப்பிட்டுள்ளார்.

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 288 இந்தியர்களைத் தொடர்பொள்ள முடியவில்லை என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 73 பேர் 'திரிசூலி-1' மின் உற்பத்தித் திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தத் திட்டத்தின் தலைவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "இவர்களைத் தவிர, கயிலாய மானசரோவர் யாத்திரை சென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீட்கப்பட்ட 21 பேரை தவிர்த்து மற்றவர்களைதொடர்பு கொள்ள முடியவில்லை என்றார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராசுவா மாவட்டத்தின் திமுரே பகுதியில் இருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 பேரையும், கேரளாவைச் சேர்ந்த 33 பேர் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை" என்றார்.

இந்த வெள்ளப்பெருக்குக்குப் பிறகு, கயிலாய மானசரோவர் யாத்திரை சென்றுள்ள சுமார் 200 இந்தியர்கள் சீனாவின் பக்கமும் சிக்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் 332 பேர் உயிரிழந்ததாக நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த குறைந்தது 106 சுற்றுலா பயணிகள் நேபாளத்தில் சிக்கியுள்ளதாக சுற்றுலா ஏஜென்சிகள் கூறும் தரவுகள் தெரிவிக்கின்றன.

சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த மஹாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் ஆன்மீக சுற்றுலா நிறுவனம் மூலமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 ஆன்மீகப் பயணிகள் கைலாஷ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். அதேபோல, கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா நிறுவனத்தின் மூலம் 57 பேர் நேபாளம் சென்றுள்ளனர்.

அந்த சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியாத நிலை இருப்பதால் அவர்களது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில் கும்பகோண சுற்றுலா நிறுவனம் மூலம் பயணித்தவர்களில் 21 பேர் பாதுகாப்பாக இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

21 பேரில் நிலை என்ன?

இந்த 21 பேரும் இரண்டு குழுக்களாக 11 பேர் மற்றும் 10 பேர் எனத் தனித்தனியாக இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

திருச்சியைச் சேர்ந்த வள்ளிநாயகி, சிவரஞ்சனி, கற்பகம் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாகவும் விரைவில் காத்மாண்டு அழைத்து வரப்பட இருப்பதாகவும் வள்ளிநாயகியின் உறவினர் வசந்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் அவர், "இன்று காலை அவர்களிடம் வீடியோ காலில் பேசினோம். ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டதாகத் தெரிவித்தனர். மழை சில இடங்களில் பெய்து வருவதாகவும் இன்று மதியத்திற்கு மேல் அல்லது நாளை காத்மாண்டுவுக்கு வர இருப்பதாகவும் கூறினர்" என்றார்.

கும்பகோண சுற்றுலா நிறுவனம் மூலம் பயணித்தவர்களில் ஓசூரைச் சேர்ந்த ரகுநாதனும் ஒருவர். அவருடைய உறவினர் ஆகாஷ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "நேற்று மாலையே ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் திரிசூலி ராணுவ முகாமுக்கு அழைத்து வரப்பட்டனர். இங்கு 11 பேர் இருந்தனர். மற்ற குழுவினர் வேறு இடத்தில் உள்ளனர். அங்கிருந்து காத்மாண்டு வந்த பிறகு ஊருக்குத் திரும்புவது பற்றி முடிவெடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற தனியார் நிறுவனம் மூலம் 49 சுற்றுலாப் பணிகள் கடந்த 14-ஆம் தேதி கைலாஷ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து நேபாளம் வழியாக இவர்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஒன்பது நாட்களாக இவர்கள் நேபாளத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இவர்களின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை.

மகாதேவ் கைலாஷ் யாத்ரா நிறுவனத்தைச் சேர்ந்த மாரவேல் நாகப்பனிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "எங்கள் நிறுவனம் மூலமாக 49 பேர் கைலாஷ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர். வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் நேபாளத்தில் உள்ள குடியேற்ற அலுவலகத்தில் அவர்கள் அனைவரும் இருந்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, "இவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் இருந்து பரவலாகப் பலர் யாத்திரைக்குச் சென்றனர். அவர்களில் எவ்வளவு பேர் பாதுகாப்பாக உள்ளனர், அவர்களின் நிலை என்ன என்ற தகவலை இதுவரை எங்களால் கண்டறிய முடியவில்லை."

கும்பகோணத்தைச் சேர்ந்த சூப்பர் யாத்திரா ஏஜென்சி என்ற சுற்றுலா நிறுவனம் நேபாளத்தின் கைலாஷ் யாத்திரரைக்கு 57 பயணிகளை அழைத்துச் சென்றுள்ளது. அதன் உரிமையாளர் சையது சாதிக் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடைசியாக எங்களுக்கு நேபாளத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி, காத்மாண்டுவில் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர்கள் சில இந்தியர்களை மீட்டுள்ளன. ஆனால், அவர்கள் இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்னும் தெரியவில்லை" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "எங்கள் நிறுவனம் மூலமாக சுற்றுலா சென்றவர்களில் 30க்கும் மேற்பட்டவர்களை எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதில் எனது மகன் உமர் ஃபாரூக்கும் உள்ளார். அவர் கடைசியாக செவ்வாய்க்கிழமை இரவு, இந்த வெள்ளத்திற்கு முன்பாக என்னுடன் பேசினார். அவர் சுற்றுலா குழுவுக்கு வழிகாட்டியாகச் சென்றார்" என்றார்.

கும்பகோணம் கர்ணகொல்லை அக்ராஹாரத்தை சேர்ந்த சாய்நாத் சுப்பிரமணியம், தனது மனைவி ஜெயலக்ஷ்மி ராமநாதன், மகள் கேதார கௌரி ஆகியோருடன் நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்த மூவரின் நிலை குறித்து இன்னும் தகவல் தெரியவில்லை.

நேபாளத்திற்கு சுற்றுலா சென்றுள்ள தங்களது உறவினர்களின் நிலை குறித்து அறிந்துகொள்ள, பொது மக்கள் பலரும் கும்பகோணத்தில் உள்ள சுற்றுலா நிறுவனம் முன்பாகக் குவிந்துள்ளனர்.

கும்பகோணம் சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாளம் சென்றவர்களில் தருமபுரியைச் சேர்ந்த பிரேம வாணி, புஷ்பா ஆகியோரும் அடங்குவர். இவர்கள் நேற்று முன்தினம் மாலை அவர்கள் குடும்பத்தினருடன் பேசியுள்ளனர். அதன் பின்னர் அவர்களின் நிலை குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் புஷ்பாவின் குடும்பத்தினரை தருமபுரி வட்டாட்சியர் சுகுமார் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேரில் சந்தித்து புஷ்பா, பிரேம வாணி இருவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் அவர்களை வீட்டிற்கு அழைத்து வர அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். புஷ்பாவுடன் தொலைபேசியில் பேசுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென அவரது மகள் லட்சுமி பிரியா கோரிக்கை விடுத்துள்ளார்.

அதேநேரம், திருவாரூர் வட்டம் திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி, வடுவூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோரின் நிலை குறித்து தகவல் எதுவும் கிடைக்காமல் தவித்து வருவதாக அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இவர்களில் கலைச்செல்வி நேற்று காலை தனது மகன்கள் சுரேஷ்குமார், விஜயகுமார் ஆகியோரிடம் நேபாளத்தில் இருப்பதாகப் பேசியுள்ளார். அதன் பிறகு எந்தவிதத் தொடர்பும் இல்லை. இந்தத் தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் இளங்கோவன் நேரடியாக திருக்கண்ணமங்கை சென்று கலைச்செல்வி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

கும்பகோணம் பொற்றாமரை வடக்குப் பகுதியைச் சேர்ந்த திருமலை ராஜன் தையல்நாயகி தம்பதியினர் கும்பகோணம் சூப்பர் யாத்திரை ஏஜென்சி மூலம் நேபாளம் சுற்றுலா சென்றுள்ளனர். அவர்களின் நிலை குறித்து தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு தமிழகம் கொண்டு வர வேண்டுமென தையல்நாயகியின் உறவினர் மகேஸ்வரி வேண்டுகோள் விடுத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, நெய்வேலியைச் சேர்ந்த 15 பேர் கும்பகோணம் சுற்றுலா நிறுவனம் மூலமாக நேபாளம் சென்றனர்.

"அங்கு சீனா எல்லையில் உள்ள திமுரே என்ற இடத்தில் அனைவரும் தங்கினர். இதில் முத்து குமரேசன், மைதிலி, தியாகராஜன், கிருபாகிரி, நாவூ கபிர்தாஸ், விஜயா புவனேஸ்வரி, மாறன், சாந்தி ஆகியோர் சுற்றிப் பார்க்கச் செல்லாமல், அறையில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. மற்றவர்கள் அனைவரும் வேனில் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டனர். அவர்கள் சென்ற இரண்டு வேன்களும் நிலச்சரிவில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வேன்களில் இருந்தவர்களின் நிலை தெரியவில்லை" என்று அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இதற்கிடையில் புதுச்சேரியில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் பத்திரமாக இருப்பதாக பேரிடர் மேலாண்மைத் துறை தரப்பில் கூறப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளார்.

கீதா, அவரது மகள் வைஷ்ணவி, உறவினர் ஆனந்த சுந்தரி ஆகிய மூவரும் நேற்று அதிகாலை குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசியதாகத் தெரிவித்த கீதாவின் மகன் விஷ்ணு ராம், "நேற்று காலை 6.15 மணிக்கு என்னைத் தொடர்புகொண்ட அவர்கள், சீன எல்லைக்கு செல்ல இருப்பதாகவும் பாஸ்போர்ட் சரிபார்ப்பு முடிந்ததும் சீனாவுக்குள் சென்று விடுவோம்' எனவும் தெரிவித்தனர்" என்று கூறினார்.

அதன் பின்னர் செய்திகளைப் பார்த்துதான் நேபாளத்தில் இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்பட்டிருப்பது தங்களுக்குத் தெரிய வந்ததாகக் குறிப்பிட்ட விஷ்ணு ராம், "அதையடுத்து மாநில பேரிடர் மீட்புப் படையினர் எங்களைத் தொடர்புகொண்டு, எங்கள் உறவினர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகத் தெரிவித்தனர். அது ஓரளவு நிம்மதியளித்தது. இருப்பினும், இதுவரை அவர்களுடன் நேரடியாகப் பேச முடியவில்லை. அவர்களிடம் ஒருமுறை பேசினால்தான் எங்களுக்கு முழுமையான நிம்மதி கிடைக்கும்," எனக் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு