'சென்னைக்கு குடிநீர் வழங்கும் கூவம்' - நகரில் சாக்கடையாக மாறும் முன் சுத்தமாக ஓடும் கூவம் ஆற்றின் பயணம்

  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

சென்னை நகரவாசிகளுக்கு கூவம் என்ற சொல் கருப்பான, அடர்த்தியான கழிவுநீர் செல்லும் காட்சியை தான் நினைவுக்கு கொண்டு வரும். கூவம் என்றாலே சாக்கடை என்று கூறும் அளவு மக்களின் மனதில் பதிந்துள்ளது. ஆனால் இந்த கூவம் இன்றும் நல்ல நீர் ததும்பி ஓடும் ஓர் அழகிய ஆறு. சென்னைவாசிகளுக்கு நம்புவது கடினமாக இருந்தாலும், அதுவே உண்மை.

காவிரியாறு தலைகாவிரி என்ற ஊற்றிலிருந்து பிறப்பது போல, கூவம் ஆற்றுக்கு தனியாக ஊற்று கிடையாது. ஏரியிலிருந்து சென்னை நோக்கி வரும் ஆறாகவே உள்ளது கூவம்.

கூவம் நதியானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் ஏரியின் உபரி நீர் பாதையிலிருந்து உருவாகிறது. இது சென்னைக்குள் வந்து நேப்பியர் பாலம் வழியாக வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இடையில் கேசவரம் அணைக்கட்டில் இருந்து பழைய பங்காரு கால்வாய் வழியாக வரும் கொசஸ்தலையாறு ஆற்றின் உபரி நீர் கூவம் ஆற்றைச் சென்றடைகின்றது என சென்னை நதி சீரமைப்பு அறக்கட்டளை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கொரட்டூர் அணைக்கட்டில் இருந்து புதிய பங்காரு கால்வாய் வழியாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு கூவம் ஆறு நீரை வழங்குகிறது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி விளங்குகிறது.

கூவமாக பிறப்பெடுத்து ஓடும் ஆறு நகரத்துக்குள் நுழையும் முன் வரை சுத்தமான நீரையே ஏந்தி வருகிறது.

"கேசவர பகுதியில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் கரையின் அருகே சென்றுக் கொண்டிருந்த ஆற்று நீரின் டிடிஎஸ் நிலையை சோதனை செய்த போது அது 500க்கு சற்று அதிகமாக இருந்தது. ஆற்றின் நடுவே உள்ள நீரை எடுத்து சோதனை செய்தால் டிடிஎஸ் இன்னும் குறைவாக இருக்கும். ஆனால் சென்னை நகருக்குள் மாசு காரணமாக டிடிஎஸ் அளவு பல மடங்கு அதிகமாக இருக்கும்" என்கிறார் கூவம் ஆறு மாசடைதலை பற்றி கடந்த மூன்று ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, கூவம் ஆறு குறித்த தரவுகளை சேகரித்து வரும் திருவள்ளூரைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் துரைசாமி.

ஆனால், நகரமயமாக்கல் காரணமாக கூவம் ஆற்றில் கழிவுநீர் கலந்து மாசடைகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு