You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாளத்தில் கடும் வெள்ளம் - நூற்றுக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன?
நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி 500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்ள முடியவில்லை.
காணாமல் போன சுற்றுலாப் பயணிகளில் 466 பேர் வெளிநாட்டினர். அவர்கள் 28 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கும்பகோணத்தை சேர்ந்த ஒரு சுற்றுலா நிறுவனம் கைலாஷ் யாத்திரரைக்கு 57 பயணிகளை அழைத்துச் சென்றுள்ளது. இதில் திருச்சி, சென்னை, சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், கும்பகோணம், தஞ்சாவூர், ஓசூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்
"மொத்தம் 57 பேர் சென்றுள்ளனர். அவர்கள் அங்கு 3 வாகனங்களில் சென்றுள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரின் தொலைபேசியும் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களைத் தொடர்புகொண்ட பிறகே எப்படி உள்ளார்கள் என்பது தெரியவரும்" என கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி கூறியுள்ளார்.
"கடந்த 23-ஆம் தேதி 57 பேர் கிளம்பினர். நேபாளத்தில் 3 பேருந்துகளில் அவர்கள் சென்றுகொண்டிருந்தனர். இன்று காலை ஒரு பேருந்தில் சென்ற ரகு என்பவர் போன் செய்து, 'திடீர் நில அதிர்வு ஏற்பட்டது. எங்கள் பேருந்து தப்பித்துவிட்டது. ஆனால், பின்னால் வந்த பேருந்து பள்ளத்தில் உருண்டு விழுந்ததைப் பார்த்தோம்' என்றார். இன்னொரு வண்டியின் நிலையும் என்னவென்று தெரியவில்லை'' என சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் சாதிக் கூறினார்.
"ஒரு பேருந்தில் பயணித்தவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை" என்று நேபாள வெள்ளத்தில் சிக்கியுள்ள திருமலைராஜனின் சகோதரர் செல்வராஜன் தெரிவித்துள்ளார்.
"சுற்றுலா சென்ற இரண்டு பேருந்துகளில் பயணித்த 20 பேர் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்து புகைப்படம் அனுப்பியுள்ளனர். ஆனால், மற்றொரு பேருந்து கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அதில் பயணித்தவர்கள் எங்கு உள்ளனர், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக சுற்றுலா ஏற்பாடு செய்த நிறுவனம் தெரிவித்து வருகிறது" என்று கூறியுள்ளார்.
'பின்னால் இருந்த பேருந்து கவிழ்ந்தது'
நேபாளத்தில் சிக்கியுள்ள ஓசூரைச் சேர்ந்த தமிழரான ரகு, அங்கு நடந்த நிகழ்வுகளை கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடியிடம் விளக்கினார்.
அவர் பேசுகையில், "எல்லையைச் சென்றடைய இன்னும் அரை மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில், திடீரென பெரிய சத்தத்துடன் தண்ணீர் வேகமாக வந்தது. வரிசையாக நின்றுகொண்டிருந்த மூன்று பேருந்துகளில் நாங்கள் நடுவில் இருந்தோம். தண்ணீர் சூழ்ந்தபோது, பின்னால் இருந்த பேருந்து கவிழ்ந்தது" என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் பேசுகையில், "பேருந்தில் இருந்தவர்கள் கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்தனர். வேகமாக வந்த தண்ணீரில் சுற்றியிருந்த குடியிருப்புகள் மூழ்கிக்கொண்டிருந்தன" என்று நேரில் பார்த்த வெள்ளப் பாதிப்பை விளக்கினார்.
மேலும் சென்னையை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த தனியார் ஆன்மிகச் சுற்றுலா நிறுவனம் மூலம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 49 ஆன்மிகப் பயணிகள் கடந்த 17-ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து நேபாளம் வழியாக கைலாஷ் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
சுமார் 10 நாட்களுக்கும் மேலாக நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், அங்கு இன்று திடீரென ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, அவர்களை உறவினர்களால் தொடர்புகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், அந்த 49 பயணிகளின் தற்போதைய நிலை என்னவென்று தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர்.
எங்கு வெள்ளம்?
ராசுவா மாவட்டத்தில் போட்டே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பிறகு 500 -க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது.
தொடர்புகொள்ள முடியாத சுற்றுலாப் பயணிகளில் அதிக எண்ணிக்கையிலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும் அந்த வாரியம் தெரிவித்துள்ளது.
வடக்கு நேபாளத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் உயிரிழப்புகளும் பெரும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த வெள்ளத்தில் பல கிராமங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதுடன், நீர்மின் அணை உள்ளிட்ட உள்கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.
தலைநகர் காத்மாண்டுவுக்கு வடக்கே, திபெத் எல்லையை ஒட்டியுள்ள ராசுவா பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்தப் பகுதி நேபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையிலான முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்துள்ளது.
திபெத்தில் இருந்து நேபாளத்துக்குப் பாயும் போட்டே கோஷி ஆற்றில் பனி உருகியதால் இந்த வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். திரிசூலி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள பல மாவட்டங்களில் அதிகபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலைமை குறித்து பிபிசியிடம் பேசிய ராசுவா மாவட்ட தலைமை அதிகாரி நரேந்திர பரியார், பெரும் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். சேதத்தின் முழு அளவைத் துல்லியமாக மதிப்பிடுவதற்கு இது மிகவும் ஆரம்பக்கட்டம் என்றும் அவர் கூறினார்.
வெள்ளத்துக்கு என்ன காரணம்?
இந்த ஆரம்ப கட்டத்தில் வெள்ளப்பெருக்குக்கான துல்லியமான காரணம் என்ன என்பதை உறுதியாகக் கூறுவது கடினம். இருப்பினும், சில தகவல்கள் தற்போது வெளியாகத் தொடங்கியுள்ளன.
"பொதுவாக திடீர் வெள்ளப்பெருக்கு என்பது கனமழையால் ஏற்படுகிறது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் நேபாளம், திபெத் போன்ற உயரமான மலைப் பகுதிகளில், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல இயற்கைப் பேரிடர் நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவும் இத்தகைய வெள்ளங்கள் ஏற்படலாம்," என்று பிரிட்டனின் ரீடிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லிஸ் ஸ்டீபன்ஸ் கூறுகிறார்.
இந்தச் சம்பவத்தில், பனிச்சரிவுதான் வெள்ளப்பெருக்கைத் தூண்டியிருக்கலாம் என்பதே தற்போது நிலவும் முக்கியக் கருத்தாக உள்ளது.
பெருமளவிலான பனியும் பாறைகளும் ஏற்கெனவே ஆற்றில் இருந்த நீருடன் கலந்ததால், ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்திருக்கலாம்.
மேலும், அந்தப் பனிச்சரிவு ஆற்றின் குறுகலான பகுதியை தற்காலிகமாக அடைத்திருக்கலாம். இதனால் இயற்கையாக ஒரு அணை உருவாகி, அதன் பின்னால் நீர் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது.
பின்னர் அந்த இயற்கை அணை உடையும்போது, "கீழ்ப்பகுதிகளில் திடீரென மிகப் பெரிய அளவில் நீரும் வண்டலும் பாய்ந்து பேரழிவை ஏற்படுத்தக்கூடும்" என்று பேராசிரியர் ஸ்டீபன்ஸ் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் ஏற்பட்ட அதே காலகட்டத்தில் அந்தப் பகுதியில் நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
இருப்பினும், அந்த நிலநடுக்கம் இந்தச் சம்பவத்தில் எந்த அளவுக்கு பங்கு வகித்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
உதவி எண்கள் அறிவிப்பு
நேபாளம் பெரு வெள்ளத்தில் சிக்கியிருக்கும் தமிழர்களுக்கு அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்ப உறுப்பினர்களோ தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலத்துறையின் 24/7 கட்டணமில்லா உதவி எண்களை தொடர்புகொள்ளலாம்.
அதன்படி அரசு அறிவித்துள்ள உதவி எண்கள்:
இந்தியாவிற்குள்: 1800 309 3793
வெளிநாடு: +91 80 6900 9900 ( Missed call )
தொடர்புக்கு: +91 80 6900 9901
தமிழ்நாடு இல்லம் புதுடெல்லி: 9289516712 ( கட்டுப்பாட்டு அறை )
பிரதமர் நரேந்திர மோதி இரங்கல்
"நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "இந்த இக்கட்டான காலகட்டத்தில் இந்திய மக்கள் நேபாளத்தில் உள்ள தங்களது சகோதர, சகோதரிகளுடன் தோள் கொடுத்து நிற்கிறார்கள். நேபாளத்திற்குத் தேவையான அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் எங்களது குழுக்கள் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் உத்தரவில் என்ன உள்ளது?
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட பல இந்தியர்கள் காணாமல் போயுள்ளதாக வெளியான செய்திகளை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "இந்த பேரிடரில் காணாமல் போன தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்தப் பதிவில், "இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக நேபாளம் சென்றுள்ளனர். அவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது" என்று அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற கோரிக்கையுடன் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுவரை 57 பேர் தமிழர்கள் என கண்டறிந்துள்ளோம். அதில் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்" என்றார்.
"தொடர்ந்து தகவல்களைச் சேகரித்து வருகிறோம். எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியானதும் அரசுக்கு அறிக்கையாக வழங்குவோம்" என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், "நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் தொடர்புகொண்டு விவரங்களை அறிந்து வருகிறோம்" என்றார்.
'முழு நாடும் அதிர்ச்சியடைந்துள்ளது' - நேபாள பிரதமர்
"நாட்டில் ஏற்பட்ட கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்குக்குப் பிறகு, தனது மனம் கனத்துப் போயுள்ளதாக" நேபாளப் பிரதமர் பலேந்திர ஷா தெரிவித்துள்ளார்.
"உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதத்தால் முழு நாடும் அதிர்ச்சியடைந்து, ஆழ்ந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளது" என்று சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் பேரிடர் "திடீரென ஏற்பட்டதாகவும்", "மிகப் பெரிய அளவிலானதாகவும்" உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களுக்கும், தங்களது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கும் அவர் "மனமார்ந்த அஞ்சலியையும்", "ஆழ்ந்த இரங்கலையும்" தெரிவித்துள்ளார்.
மீட்புப் பணிகளுக்காக அரசாங்கம் "எந்தவித தாமதமும் இன்றி தனது அனைத்து வளங்களையும் உடனடியாகக் களமிறக்கியுள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எச்சரிக்கை
நேபாளத்திற்குத் தெற்கே அமைந்துள்ள இந்தியாவின் பிகார் மாநில அதிகாரிகள், கண்டக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
பிகார் மாநில முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, மாநிலத்தின் பல மாவட்டங்களில் ஆற்றின் கரைகளைத் தொடர்ந்து கண்காணித்தல், இரவு நேர ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல் மற்றும் அவசரகாலக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று மீட்டர் உயரம் வரை அலைகள் எழக்கூடும் என்று எச்சரித்துள்ள செஞ்சிலுவைச் சங்கம், இன்று காலை அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், மாநிலத்தின் மூன்று மாவட்டங்களுக்கு அவசரகாலக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.
தேவைப்பட்டால் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கான திட்டத்தையும் இக்குழுக்கள் தயாரித்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு