பாகிஸ்தான், சௌதி, துருக்கி ராணுவ கூட்டணியின் மொத்த பலம் என்ன? மூன்றில் சக்தி வாய்ந்த நாடு எது?

மெக்கா ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள மூன்று நாடுகளும் தனித்துவமான ராணுவ பலத்தைக் கொண்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், உமைர் சலீமி
    • பதவி, பிபிசி உருது
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

'மெக்கா ஒப்பந்தம்' மூலம் உலகின் மூன்று முக்கிய இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே கூட்டு பாதுகாப்பு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

மெக்கா ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள மூன்று நாடுகளும் தனித்துவமான ராணுவ பலத்தைக் கொண்டுள்ளன.

சர்வதேச வியூக ஆய்வுக் கழகம் (IISS) வெளியிட்டுள்ள ஓர் ஆய்வின்படி, இந்த ஒப்பந்தத்தின் அடையாள முக்கியத்துவம் என்பது பாகிஸ்தானின் அணு ஆயுத சக்தி, சௌதி அரேபியாவின் எரிசக்தி வளம் மற்றும் துருக்கியின் பாதுகாப்புத் துறை ஆகியவை ஒன்றிணைவதில் தான் உள்ளது.

மெக்கா ஒப்பந்தத்தின் அதிகாரப்பூர்வ ஆவணம் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், ஓர் உறுப்பு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த விதிமுறை நேட்டோவின் 5ஆம் பிரிவைப் போன்றது.

தெற்காசியாவில் போர் ஏற்பட்டால், சௌதி அரேபியாவும் துருக்கியும் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டிய நிலை ஏற்படலாம் என பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கருதுகின்றனர்.

அதேநேரத்தில், சிரியா அல்லது மத்தியத் தரைக்கடல் பகுதியில் இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே மோதல் ஏற்பட்டால், பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் துருக்கிக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

எனினும், மற்ற நாடுகள் நேரடியாக போரில் களமிறங்க வேண்டிய அவசியம் இல்லை என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆயுதங்கள், உளவுத் தகவல்கள் மற்றும் தூதரக ரீதியிலான ஆதரவை வழங்குவதன் மூலமும் உதவ முடியும்.

மத்திய கிழக்கு விவகார நிபுணர் ஸ்டீவ் ஏ. குக், வெளியுறவு உறவுகள் மன்றத்தில் வெளியிட்டுள்ள கட்டுரையில், கையெழுத்திடப்பட்ட 48 மணி நேரத்திலேயே மெக்கா ஒப்பந்தம் தனது முதல் சவாலை எதிர்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சௌதி அரேபியாவின் ஜசான் நகரில் உள்ள சௌதி அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்கினர்.

ஜூலை 13 முதல் சௌதி அரேபியா தொடர்ச்சியான ஹூத்தி தாக்குதல்களை எதிர்கொண்டு வந்தபோதிலும், அது தனது புதிய கூட்டாளிகளிடமிருந்து உதவியை நாடவில்லை.

ஸ்டீவ் ஏ. குக்கின் கூற்றுப்படி, மெக்கா ஒப்பந்தம் மத்திய கிழக்கில் மாறிவரும் பிராந்திய ஒழுங்கின் அடையாளமாக உள்ளது.

பல ஆண்டு காலமாக அமெரிக்கா வகித்து வந்த தலைமைப் பங்கு பலவீனமடைந்து வருவதையும் இந்த மாற்றம் சுட்டிக்காட்டுகிறது என அவர் கூறுகிறார்.

இந்த செய்தியில், பாகிஸ்தான், சௌதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை பலம் குறித்து பிபிசி ஆராய்ந்துள்ளது.

பாதுகாப்பு பட்ஜெட், ராணுவம் மற்றும் விமானப்படை

ஸ்டீவ் ஏ. குக்கின் கூற்றுப்படி, மெக்கா ஒப்பந்தம் மத்திய கிழக்கில் மாறிவரும் பிராந்திய ஒழுங்கின் அடையாளமாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images

குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் குறியீட்டின்படி, பாகிஸ்தானிடம் சுமார் 6,60,000 ராணுவ வீரர்கள் உள்ளனர்.

துருக்கியில் இந்த எண்ணிக்கை 481,000 ஆக உள்ளது. மறுபுறம், சௌதி அரேபியாவில் ஏறத்தாழ 247,000 பணியில் உள்ள ராணுவ வீரர்கள் உள்ளனர்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, சௌதி அரேபியா 2025-ம் ஆண்டில் பாதுகாப்புத் துறைக்காக 83 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளது. இது உலகின் 8-வது பெரிய பாதுகாப்பு பட்ஜெட்டாகும்.

துருக்கியின் பாதுகாப்பு பட்ஜெட் 30 பில்லியன் டாலர்களாக இருந்தது. பாகிஸ்தான் 11.9 பில்லியன் டாலர்களை செலவிட்டது.

பாதுகாப்பு பட்ஜெட்டைப் பொறுத்தவரை, துருக்கி உலக அளவில் 18-வது இடத்திலும், பாகிஸ்தான் 31-வது இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான்

பாகிஸ்தானின் ராணுவம் உலகின் மிகப்பெரிய தரைப்படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சீனாவுடனான அதன் பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகின்றன.

ஐஐஎஸ்எஸ்-ன் 'மிலிட்டரி பேலன்ஸ் ' அறிக்கையின்படி, பாகிஸ்தானிடம் 2,570-க்கும் மேற்பட்ட பிரதான போர் டாங்கிகளும், 4,600-க்கும் மேற்பட்ட பீரங்கி அமைப்புகளும் உள்ளன.

அதன் பிரதான போர் டாங்கிகளில் அல்-காலித், அல்-காலித்-1, அல்-ஸரார் மற்றும் டி-80யூடி ஆகியவை அடங்கும்.

அல்-காலித் மற்றும் அல்-காலித்-1 ஆகிய டாங்கிகள் பாகிஸ்தானிலேயே உருவாக்கப்பட்டவை.

விமானப்படையைப் பொருத்தவரை, உலகளாவிய தாக்குதல் திறன் குறியீட்டின் படி பட்டியலில் பாகிஸ்தானிடம் 331 போர் விமானங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மிலிட்டரி பேலன்ஸ் அறிக்கையில் இந்த எண்ணிக்கை 465 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முக்கிய போர் விமானங்களில் எஃப்-16, ஜேஎஃப்-17 தண்டர், ஜே-10சி, மிராஜ்-3 மற்றும் மிராஜ்-5 ஆகியவை அடங்கும்.

சமீபத்திய ஆண்டுகளில், ஜே-10சி மற்றும் ஜேஎஃப்-17 பிளாக்-3 ரக விமானங்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் அதன் வான் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மிலிட்டரி பேலன்ஸ் அறிக்கையின்படி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் விமானப்படைக்கு விரிவான போர் அனுபவத்தை அளித்துள்ளன.

சீனாவை பாகிஸ்தானின் "முக்கிய பாதுகாப்பு கூட்டாளி" என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், ஜே-10சி மற்றும் ஜேஎஃப்-17 பிளாக்-3 ரக விமானங்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் அதன் வான் திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

துருக்கி

துருக்கி, நேட்டோவில் உள்ள மிகப்பெரிய தரைப்படைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அந்நாட்டிடம் 2,300-க்கும் மேற்பட்ட பிரதான போர் டாங்கிகளும், 2,700-க்கும் மேற்பட்ட பீரங்கி அமைப்புகளும் உள்ளன.

அதன் பிரதான போர் டாங்கிகளில் ஜெர்மனியின் லெப்பர்ட் 2ஏ4 மற்றும் எம்60டி சேபர் ஆகியவை அடங்கும். துருக்கி தனது சொந்த அல்டே பிரதான போர் டாங்கியையும் உருவாக்கி வருகிறது.

கடந்த இருபது ஆண்டுகளில், உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்திக்கு துருக்கி அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அஸ்லாசன், ரோகட்சன் மற்றும் டாய் போன்ற முக்கிய பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் குறியீட்டின்படி, துருக்கியிடம் 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன.

மிலிட்டரி பேலன்ஸ் அறிக்கையின்படி , போர் விமானங்களின் எண்ணிக்கை 293 ஆகும்.

அதன் விமானப்படையின் முதுகெலும்பாக எஃப்-16 போர் விமானங்கள் விளங்குகின்றன.

துருக்கி, 'கான்' என்றழைக்கப்படும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தையும் உருவாக்கி வருகிறது.

துருக்கியின் மிகப்பெரிய பலங்களில் அதன் டிரோன்களும் அடங்கும்.

பேராக்டர் டிபி2, பேராக்டர் அகின்ஸி, அன்கா மற்றும் அக்சுங்குர் போன்ற ட்ரோன்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை.

சௌதி அரேபியா

சௌதி அரேபியாவின் ராணுவம் பாகிஸ்தான் மற்றும் துருக்கியின் ராணுவத்தை விட சிறியது.

ஆனால், அது நவீன மேற்கத்திய ஆயுதங்களைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

சௌதி அரேபியா ஏறத்தாழ 840 முதல் 1,100 வரையிலான பிரதான போர் டாங்கிகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் எம்1ஏ2 ஆப்ராம்ஸ் தான் அதன் பிரதான பீரங்கியாகும்.

சௌதி அரேபியாவின் மிகப்பெரிய ராணுவ பலமாக விமானப்படை கருதப்படுகிறது.

அந்நாட்டிடம் சுமார் 283 போர் விமானங்கள் உள்ளன.

எப்ஃ - 15எஸ்ஏ, எப்ஃ- 15சி/டி, யூரோஃபைட்டர் டைஃபூன் மற்றும் டொர்னாடோ ஐடிஎஸ் ஆகியவை அதன் முக்கிய போர் விமானங்களாகும்.

சௌதி அரேபியா சமீபத்திய ஆண்டுகளில் ஏவுகணைப் பாதுகாப்பு, வான்வழி கண்காணிப்பு மற்றும் ஆளில்லா விமானத் திறன்களிலும் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

பாகிஸ்தான் புராக், ஷாபார் மற்றும் ஷாபார்-2  போன்ற ட்ரோன்களைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில், உலகின் முன்னணி ட்ரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றாக துருக்கி கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

மிலிட்டரி பேலன்ஸ் அறிக்கையின்படி, யேமனில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகள், சௌதி ஆயுதப் படைகளுக்கு நடைமுறைப் போர் அனுபவத்தைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்கின.

எனினும், இந்த நடவடிக்கைகள் ராணுவ அமைப்புகள் மற்றும் திறன்களில் இருந்த பல குறைபாடுகளையும் வெளிப்படுத்தின. குறிப்பாக, துல்லியமான வான்வழித் தாக்குதல்களைப் பயன்படுத்துதல், வான்படை மற்றும் தரைப்படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, தளவாட மேலாண்மை ஆகியவற்றில் சவால்கள் இருந்தன.

சௌதி அரேபிய மண்ணில் நடத்தப்பட்ட க்ரூயிஸ் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள், அந்நாட்டின் வான் மற்றும் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளில் இருந்த பலவீனங்களையும் வெளிப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

2023-ம் ஆண்டில், டிரோன்களை வாங்குவதற்காக துருக்கியுடன் ரியாத் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

சௌதி விஷன் 2030 திட்டத்தின் கீழ், தனது மொத்த பாதுகாப்புச் செலவில் 50 சதவீதத்தை உள்நாட்டிலேயே ஆயுதம் வாங்குவதை உறுதி செய்வதை ரியாத் இலக்காகக் கொண்டுள்ளது.

டிரோன் திறன்

மூன்று நாடுகளும் டிரோன் தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகரித்துள்ளன. பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் துருக்கியிடம் இருந்து டிரோன்களை வாங்கியுள்ளன.

பாகிஸ்தான் புராக், ஷாபார் மற்றும் ஷாபார்-2 போன்ற டிரோன்களைப் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில், உலகின் முன்னணி டிரோன் உற்பத்தியாளர்களில் ஒன்றாக துருக்கி கருதப்படுகிறது.

அதன் பேரக்டார் மற்றும் அகின்ஜி டிரோன்கள் பல்வேறு மோதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சௌதி அரேபியா, சீனாவின் சிஎச்-4 மற்றும் விங் லூங் ரக ஆளில்லா விமானங்களையும் இயக்குகிறது.

விஷன் 2030 திட்டத்தின் கீழ், தனது டிரோன்களை நாட்டிலேயே தயாரிக்கவும் சௌதி அரேபியா முயற்சித்து வருகிறது.

சௌதி அரேபியா, சீனாவின் சிஎச்-4 மற்றும் விங் லூங் ரக ஆளில்லா விமானங்களையும் இயக்குகிறது.

பட மூலாதாரம், Getty Images

கடற்படை சக்தி

குளோபல் ஃபயர்பவர் இன்டெக்ஸ் குறியீட்டின்படி, மூன்று நாடுகளில் துருக்கி மிகப்பெரிய கடற்படை பலத்தைக் கொண்டுள்ளது.

துருக்கியிடம் 192 கடற்படை வளங்கள் உள்ளன.

பாகிஸ்தானிடம் 120 கடற்படை வளங்களும், சௌதி அரேபியாவிடம் 32 கடற்படை வளங்களும் உள்ளன.

துருக்கியிடம் 13 நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.

மூன்று நாடுகளில் ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலைக் கொண்டுள்ள ஒரே நாடு துருக்கி. டிசிஜி அனடோலுவும் அதன் முக்கிய கடற்படை திறன்களில் ஒன்றாக உள்ளது.

பாகிஸ்தானிடம் 8 நீர்மூழ்கிக் கப்பல்களும், 12 போர்க்கப்பல்களும் உள்ளன.

சமீபத்தில், பாகிஸ்தானின் முதல் ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் கராச்சியை வந்தடைந்தது.

சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் கீழ் இது உருவாக்கப்பட்டது.

சௌதி அரேபியாவிடம் 12 நவீன போர்க்கப்பல்கள் உள்ளன.

எனினும், அந்நாட்டிடம் நீர்மூழ்கிக் கப்பல் எதுவும் இல்லை.

பாகிஸ்தானிடம் 8 நீர்மூழ்கிக் கப்பல்களும், 12 போர்க்கப்பல்களும் உள்ளன.சமீபத்தில், பாகிஸ்தானின் முதல் ஹங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் கராச்சியை வந்தடைந்தது.

பட மூலாதாரம், Getty Images

அணு ஆயுதத் திறன்

இந்த மூன்று நாடுகளில், பாகிஸ்தான் மட்டுமே தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேட்டோவின் அணு ஆயுதப் பகிர்வு ஏற்பாட்டில் பங்கேற்கும் ஒரே நாடு துருக்கி.

சௌதி அரேபியா சமீபத்தில் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தியைப் பயன்படுத்தும் வகையிலான சிவில் அணுசக்தித் திட்டத்துக்காக அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

எனினும், ஆபிரகாம் ஒப்பந்தங்களில் இணைந்து இஸ்ரேலை அங்கீகரிப்பதற்கான நிபந்தனையாக இதை டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) வெளியிட்ட "உலக அணு ஆயுதப் படைகள் 2026"அறிக்கையின்படி, 2026 ஜனவரி நிலவரப்படி பாகிஸ்தானிடம் சுமார் 170 அணு ஆயுதத் தலைப்புகள் இருந்தன. அந்த அறிக்கையின்படி, பாகிஸ்தான் தனது அணுசக்தித் திறனின் தரை, வான் மற்றும் கடல் சார்ந்த கூறுகளை உள்ளடக்கிய 'அணுசக்தி மும்முனை' அமைப்பை படிப்படியாக விரிவுபடுத்தி வருகிறது.

அதன் தரை மற்றும் வான்வழி அணுசக்தித் திறன்கள் வலுவாக உள்ளன. ஆனால், கடலில் இருந்து அணு தாக்குதல் நடத்தும் திறன் இன்னும் மேம்படுத்தப்பட்டு, சோதனை செய்யப்படும் நிலையில் உள்ளது.

சிப்ரி கூற்றுப்படி, புதிய ஏவுகணை அமைப்புகளின் மேம்பாடு மற்றும் பிளவுபடும் பொருட்களின் கையிருப்பு அதிகரித்து வருவதால், வரும் ஆண்டுகளில் பாகிஸ்தான் தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கக்கூடும்.

அந்த அறிக்கையின்படி, பாகிஸ்தானின் முக்கிய அணுசக்தித் திறன் கொண்ட ஏவுகணைகளில் ஷாஹீன்-1, ஷாஹீன்-2, கௌரி, கஸ்னவி, நஸ்ர் மற்றும் பாபர் கிரூஸ் ஆகிய ஏவுகணைகள் அடங்கும்.

பாகிஸ்தான் 'அபாபீல்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணையையும் உருவாக்கி வருகிறது. பல்வேறு இலக்குகளை தனித்தனியாகத் தாக்கக்கூடிய அணு ஆயுதத் தலைப்புகளை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனினும், சிப்ரி -யின்படி, 2026 ஜனவரி நிலவரப்படி இது செயல்பாட்டில் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

பாபர்-3 கடலில் இருந்து ஏவப்படும் க்ரூயிஸ் ஏவுகணை மூலம் கடல்வழி அணுசக்தித் திறனைப் பெறவும் பாகிஸ்தான் முயற்சித்து வருகிறது.

துருக்கி அணு ஆயுத நாடு அல்ல. அதனிடம் தேசிய அளவிலான அணு ஆயுதக் கையிருப்பும் இல்லை.

எனினும், அது நேட்டோவின் அணு ஆயுதப் பகிர்வு ஏற்பாட்டின் ஒரு பகுதியாக உள்ளது. இதனால், அமெரிக்கா தனது அணு குண்டுகளை நிலைநிறுத்தியுள்ள கூட்டணியின் சில நாடுகளில் துருக்கியும் ஒன்றாக உள்ளது.

அந்த அறிக்கையின்படி, அமெரிக்காவின் சமீபத்திய பி61-12 அணு குண்டுகள் துருக்கி உட்பட ஐரோப்பாவில் உள்ள பல நேட்டோ தளங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆயுதங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவை துருக்கிக்கு சொந்தமானவை அல்ல.

எஃப்-35 திட்டம் மற்றும் நேட்டோவின் அணு ஆயுத ஏற்பாடுகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களின் பின்னணியில், துருக்கியின் விமானப்படை மேற்கத்திய அணுசக்தி பாதுகாப்புக் கட்டமைப்பின் ஒரு பகுதியாகத் தொடர்கிறது என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால், துருக்கியிடம் சொந்தமாக அணு ஆயுதங்களோ அணு ஏவுகணைகளோ இல்லை.

சௌதி அரேபியாவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, சௌதி அரேபியா ஒரு அணு ஆயுத நாடு அல்ல, மேலும் அந்நாட்டிடம் அறியப்பட்ட அணு ஆயுதங்கள் கையிருப்பில் இல்லை.

எனினும், பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியா இடையே அதிகரித்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் இரு நாடுகளும் மூலோபாய இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தானின் அணுசக்தித் திறன் சௌதி அரேபியாவுக்கு விரிவுபடுத்தப்படுவது குறித்து தெளிவான உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்று சிப்ரி கூறியுள்ளது.

ஆனால், பின்னர் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முஹம்மது ஆசிஃப் வெளியிட்ட சில கருத்துகள், இந்த சாத்தியம் குறித்த விவாதத்தை அதிகரித்தன.

பாகிஸ்தானின் அணுசக்தித் திறன் சௌதி அரேபியாவுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், இந்த விவகாரம் மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஐஎஸ்எஸ்-ன் ஓர் ஆய்வின்படி, அணு ஆயுதத் தடுப்பு தொடர்பான பாகிஸ்தானின் தெளிவற்ற நிலைப்பாடு, அதன் கூட்டாளிகளின் மூலோபாய நிலையை வலுப்படுத்துவதில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடும்.

சௌதி அரேபியாவிடம் வழக்கமான பாலிஸ்டிக் ஏவுகணைப் படை உள்ளது.

சிப்ரி கூற்றுப்படி, சௌதி அரேபியா கடந்த காலத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட டிஎஃப்-3 பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பெற்றுள்ளது. டிஎஃப்-21 ஏவுகணைகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், சௌதி அரேபியா அணு ஆயுத நாடாகக் கருதப்படவில்லை. அந்நாட்டின் தற்போதைய ஏவுகணைத் திறன், அதன் வழக்கமான பாதுகாப்புத் திறன்களின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

மூன்று நாடுகளின் பாதுகாப்பு பலவீனங்கள்

பிபிசி-யிடம் பேசிய ஸ்டிம்சன் மையத்தின் மூலோபாய விவகார நிபுணரான டேனியல் மார்க்கி, சௌதி அரேபியாவிடம் செல்வமும் நவீன தொழில்நுட்பமும் இருப்பதாகக் கூறினார்.

பாகிஸ்தானிடம் பெரிய ராணுவப் படை, போர் அனுபவம் மற்றும் அணுசக்தித் திறன் உள்ளது.

மறுபுறம், துருக்கியிடம் மேம்பட்ட பாதுகாப்புத் தொழில்நுட்பம், நேட்டோ உறுப்பினர் அந்தஸ்து மற்றும் நவீன ராணுவம் உள்ளது.

மார்க்கியின் கூற்றுப்படி, சௌதி அரேபிய ராணுவத்தின் மிகப்பெரிய பலவீனம், பயிற்சி பெற்ற மனிதவளம் மற்றும் நிறுவன ரீதியான வலிமை இல்லாதது தான் . பாகிஸ்தான் குறைந்த பட்ஜெட் மற்றும் வளங்கள் தொடர்பான சவாலை எதிர்கொள்கிறது.

எப்ஃ -35 திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதால், அடுத்த தலைமுறை போர் விமானங்களை துருக்கி எளிதாகப் பெற முடியாத நிலை உள்ளது.

எனினும், மூன்று நாடுகளின் பலங்கள் ஒன்றுக்கொன்று உள்ள பலவீனங்களை ஈடுசெய்கின்றன என்று மார்க்கி கூறுகிறார்.

இதன் காரணமாக, இந்தக் கூட்டணி மூலோபாய ரீதியாக ஒன்றுக்கொன்று துணைபுரியும் கூட்டணியாகத் தெரிகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு