கார் விற்பனையாளர் இளவரசர் ஆனது எப்படி? - 26 வயது இளைஞரின் எதிர்பாராத அரச குடும்ப பயணம்

    • எழுதியவர், பால் கிர்பி
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பெல்ஜியத்தின் இளவரசர் லாரன்ட், 26 வயதான முன்னாள் கார் விற்பனையாளரான கிளெமென் வாண்டென்கெர்கோவை தனது மகனாகவும் வாரிசாகவும் சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளார்.

பெல்ஜிய பாடகி வெண்டி வான் வான்டனுடனான இளவரசர் லாரன்டின் உறவில் பிறந்தவர் கிளெமென். ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் பெரிய ஆரவாரமின்றி இளவரசர் லாரன்டின் குடும்பத்தில் இணைக்கப்பட்டார்.

ஆனால், அது தொடர்பான விவரங்கள் தற்போது தான் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் கிளெமென் அதிகாரப்பூர்வமாக இளவரசர் பட்டத்தைப் பெறுகிறார். எனினும், அவருக்கு அரச குடும்பத்தினருக்கான அரசுத் தொகை வழங்கப்படாது.

தனக்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த தந்தை இருப்பதை அறிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தனது தந்தையின் குடும்பப் பெயரான சாக்ஸ்-கோபுர்க் என்பதை ஏற்றுக்கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கிளெமென் கூறியுள்ளார்.

"நான் அதை ஏற்க விரும்பலாம். ஆனால், வாண்டென்கெர்கோவ் என்ற பெயரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அந்தக் குடும்பப் பெயரை விட்டுக்கொடுப்பது, என் தாய் எனக்காக செய்த அனைத்துக்கும் துரோகம் செய்வதாக இருக்கும்," என்று அவர் ஹெட் நியூஸ் பிளாடிடம் கூறினார்.

இளவரசி லூயிஸ் மற்றும் இளவரசர் ஆய்மெரிக், இளவரசர் நிக்கோலஸ் ஆகிய தனது ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளைப் போல கிளெமென் பெல்ஜிய அரியணையின் வாரிசு வரிசையில் இடம்பெற மாட்டார்.

அதேபோல், அவர் அரச குடும்பத்தின் பொது நிகழ்வுகளிலும் பங்கேற்க மாட்டார்.

கிளெமென் ஏற்கெனவே பெல்ஜிய மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒளிபரப்பான ஃப்ளெமிஷ் தொலைக்காட்சி ஆவணப்படம் ஒன்றில், தனது தந்தையை எவ்வாறு அறிந்துகொண்டார் என்பதை அவர் விவரித்திருந்தார்.

டிஎன்ஏ பரிசோதனை

இளவரசர் லாரன்ட், 2003-ஆம் ஆண்டு இளவரசி கிளேரை திருமணம் செய்வதற்கு முன்பு, வெண்டி வான் வான்டனுடன் உறவில் இருந்தார். வெண்டி வான் வான்டனின் இயற்பெயர் ஐரிஸ் வாண்டென்கெர்கோவ் என்பதாகும்.

2013-ஆம் ஆண்டு ஒரு வணிக வளாகத்தில் இளவரசர் லாரன்டை எதிர்பாராதவிதமாக சந்தித்ததாக கிளெமென் அந்தத் தொலைக்காட்சி ஆவணப்படத்தில் கூறினார். அப்போது அவர் யார் என்பதையோ கிளெமென் அறிந்திருக்கவில்லை.

தனக்கு 16 வயதாக இருந்தபோதுதான் தனது தந்தையின் அடையாளத்தை தாய் தெரிவித்ததாக கிளெமென் கூறினார்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தந்தையைத் தொடர்புகொள்ளும் தைரியத்தை அவர் பெற்றார். பல முறை தொலைபேசியில் பேசிய பின்னர் இருவரும் நேரில் சந்தித்தனர். அதன் பிறகு, டிஎன்ஏ பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று இளவரசர் லாரன்ட் பரிந்துரைத்தார்.

"நாங்கள் இருவரும் மருத்துவமனைக்குச் சென்றோம். நான் பதற்றமாக இருக்கக் கூடாது என்பதற்காக, 'நான் முதலில் பரிசோதனை செய்துகொள்கிறேன்' என்று அவர் கூறியது எனக்கு நினைவிருக்கிறது," என்று கிளெமென் தெரிவித்தார்.

பின்னர் ஆய்வகத்திலிருந்து அவருக்கு வந்த மின்னஞ்சலில், இருவருக்கும் இடையே 99.5% டிஎன்ஏ பொருத்தம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இளவரசர் லாரன்டின் டிஎன்ஏ பரிசோதனை, அவரது தந்தையும் முன்னாள் பெல்ஜிய மன்னருமான இரண்டாம் ஆல்பர்டின் விவகாரத்தை நினைவூட்டுகிறது.

நீண்டகால வழக்குக்குப் பிறகு, 2020-ஆம் ஆண்டு இரண்டாம் ஆல்பர்ட் , திருமணத்துக்கு வெளியேயான உறவில் தனக்கு ஒரு மகள் பிறந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் அந்தப் பெண்ணை தனது மகளாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தார்.

இரண்டாம் ஆல்பர்ட் 2013- ஆம் ஆண்டு மன்னர் பதவியில் இருந்து விலகினார். அந்தக் காலகட்டத்தில், அவரது மகள் தொடர்பான விவகாரம் அரச குடும்பத்துக்கு பெரும் சர்ச்சையாக மாறியிருந்தது.

பிரபல கலைஞரான டெல்பின் போயல், இந்த விவகாரம் தொடர்பான தனது சட்டப் போராட்டத்தில் இறுதியில் வெற்றி பெற்றார். இதையடுத்து, இளவரசி என்ற பட்டத்தைப் பெறும் உரிமையை அவர் பெற்றார். தற்போது அவர் தன்னை டெல்பின் டி சாக்ஸ்-கோபுர்க் என்று அழைத்துக்கொள்கிறார்.

2013-ஆம் ஆண்டு பெல்ஜிய சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில உறுப்பினர்களுக்கு மட்டுமே அரசுத் தொகை வழங்கப்படுகிறது. மன்னர் பிலிப், அவரது தந்தையும் முன்னாள் மன்னருமான இரண்டாம் ஆல்பர்ட், இளவரசர் லாரன்ட் மற்றும் இளவரசி அஸ்ட்ரிட் ஆகியோர் அந்தப் பட்டியலில் உள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு