நேபாள வெள்ளம்: 9 நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய இந்தியர் உள்பட 1,000 தொழிலாளர்களின் கதி என்ன?

நேபாளத்தில் சேறு நிறைந்த சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பட மூலாதாரம், Prime Minister's Secretariat

படக்குறிப்பு, நேபாளத்தில் சேறு நிறைந்த சுரங்கப்பாதையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • எழுதியவர், அசோக் தஹால்
    • பதவி, பிபிசி நேபாளி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் ராசுவாகதி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், அங்குள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றி வந்த சுமார் 1,000 பேரைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேபாள எரிசக்தி அமைச்சகத்தின் தகவலின்படி, பல்வேறு நீர்மின் திட்டங்களின் சுரங்கப் பாதைகளுக்குள் 400-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேசிய பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் (NDRRA) வெளியிட்ட தகவலின்படி, நீர்மின் திட்டங்களில் பணியாற்றிய 933 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன எல்லைக்கு அருகே உள்ள ராசுவாகதியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, அப்பகுதியில் உள்ள பல்வேறு நீர்மின் திட்டங்களில் பணியாற்றும் சுமார் 1,000 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று நேபாள எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நீர்மின் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, தொடர்பு துண்டிக்கப்பட்டவர்கள் மற்றும் சுரங்கப்பாதைகளுக்குள் சிக்கியிருப்பவர்களின் விவரங்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர்?

கொரிய முதலீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அப்பர் திரிசூலி-1 நீர்மின் திட்டத்தின் சுரங்கத்துக்குள் மட்டும் 400-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக, எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மோகன் ஷாக்யா தெரிவித்துள்ளார்.

"நீர்மின் திட்டங்களில் பணியாற்றும் 1,000-க்கும் மேற்பட்டோருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன" என்று மோகன் ஷாக்யா பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார்.

"அவர்களில் அதிகபட்சமானோர் அப்பர் திரிசூலி-1 திட்டத்தில்தான் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளனர். ஆரம்பக்கட்ட தகவலின்படி, அங்கு சுமார் 400 பேர் சுரங்கப் பாதைக்குள் சிக்கியுள்ளனர். சுரங்கப் பாதைக்கு வெளியே இருந்த மேலும் 176 பேரையும் தொடர்புகொள்ள முடியவில்லை" என்றார்.

உணவு, குடிநீர் பற்றாக்குறை

நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த பலர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Prime Minister's Secretariat

படக்குறிப்பு, நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த பலர் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி கிரி அதிகாரியின் தகவலின்படி, 10 கி.மீ. நீளமுள்ள திட்டச் சுரங்கப் பாதையில் மண் மற்றும் குப்பைகள் நிரம்பியுள்ளதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அவர் கூறுகையில், "இந்தச் சுரங்கப்பாதையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அவசரகால வெளியேற்றப் பாதைகளான துணைச் சுரங்கப்பாதைகள் மூடப்படவில்லை. எனவே, உள்ளே ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்காது என்றும் நம்புகிறேன். ஆனால் உணவு மற்றும் குடிநீருக்குப் பற்றாக்குறை உள்ளது. உரிய நேரத்தில் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டால், உள்ளே இருப்பவர்களைப் பாதுகாப்பாக மீட்க முடியும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

வியாழக்கிழமை 4 தொழிலாளர்கள் தாங்களாகவே சுரங்கப்பாதையிலிருந்து வெளியே வந்ததாக அவர் தெரிவித்தார். சுரங்கப்பாதைக்குள் சுமார் 400 பேர் இருந்ததாகவும் கூறினார். திட்ட அதிகாரிகளின் தகவலின்படி, அன்றைய தினம் சுரங்கப்பாதைக்குள் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையும் சுமார் 400 ஆக இருந்தது.

சுரங்கப்பாதைக்குச் செல்லும் அனைத்து பாதைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டதால், தற்போது குன்றின் விளிம்பில் ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் இறங்குவதுதான் சுரங்கப்பாதைக்குள் செல்வதற்கான ஒரே வழி என்று திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி பிபிசி நேபாளியிடம் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் நேபாள ஊழியர்களுடன் கொரியா, சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர். இதன் மொத்த மின் உற்பத்தித் திறன் 126 மெகாவாட்.

சுமார் 100 சீனத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தில் பணியாற்றி வந்ததாகவும், அவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியத் தொழிலாளர்கள் 40 பேர் மற்றும் கொரியத் தொழிலாளர்கள் எட்டு பேரை இன்னும் காணவில்லை என்றும் கிரி அதிகாரி கூறினார்.

சுமார் 80 சதவிகிதப் பணிகள் நிறைவடைந்துள்ள இந்தத் திட்டத்தில், வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு தினசரி வருகைப் பதிவின்படி 1,350 பேர் பணியாற்றி வந்ததாக அவர் தெரிவித்தார்.

இதுவரை 254 பேர் மீட்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மீட்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சுரங்கப்பாதைக்கு வெளியே இருந்தவர்கள் என்று திட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரி கிரி அதிகாரி கூறினார்.

சுரங்கப்பாதைக்கு வெளியே இருந்த சுமார் 200 பேரையும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்பு துண்டிக்கப்பட்ட சில ஊழியர்கள் திட்டப் பகுதிக்கு மேலே உள்ள கிராமங்களுக்குச் சென்றிருக்கலாம் என்றும், அதனால் அவர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

எந்தெந்த திட்டங்களில் எத்தனை பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை?

சுரங்கப்பாதை நுழைவாயிலில் இருந்து மக்கள் மீட்கப்பட்ட தருணம்

பட மூலாதாரம், Prime Minister's Secretariat

படக்குறிப்பு, சுரங்கப்பாதை நுழைவாயிலில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்ட தருணம்

ராசுவா மற்றும் நுவாகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஒன்பது நீர்மின் திட்டங்களில் பணியாற்றியவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று நேபாள எரிசக்தி அமைச்சர் பீராஜ் பகத் ஷ்ரேஷ்டாவின் ஆலோசகர் கணேஷ் கார்கி தெரிவித்தார்.

ராசுவாகதி நீர்மின் திட்டத்தில் 93 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக, எரிசக்தி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மோகன் ஷாக்யா தெரிவித்துள்ளார்.

அதேபோல், அப்பர் திரிசூலி 3ஏ திட்டத்தில் 43 பேரைக் காணவில்லை. அவர்களில் 30 பேர் சுரங்கப்பாதைக்குள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் தற்போது 11 பேருடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, நேபாள மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

பராமரிப்புப் பணிக்காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் வழியாக மின் உற்பத்தி நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, வெள்ள நீர் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கழ்வுப் பணிக்கான உபகரணங்களைப் பயன்படுத்தி, நேபாள ராணுவம் மற்றும் திறமையான தொழிலாளர்களின் உதவியுடன், குப்பைகள் மற்றும் மண் மூடியிருந்த நிலத்தடியில் உள்ள மின் நிலையத்துக்குச் செல்லும் கேபிள் சுரங்கத்தின் நுழைவாயிலைத் திறக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது" என்று மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

அப்பர் திரிசூலி 3பி திட்டத்தில் 158 பேரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் முகாம் அமைந்திருந்த பகுதி முழுவதும் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மற்றும் குப்பைகளால் புதைந்துவிட்டதாக மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

"மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கு இடையே மீட்பு மற்றும் அங்கு செல்வதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஹெலிகாப்டர் மூலம் திட்டப் பகுதியைத் தொடர்ந்து வான்வழியாக ஆய்வு செய்து நிலைமை மதிப்பிடப்பட்டு வருகிறது. அகழ்வுப் பணிகளுக்கான இயந்திரங்கள் உள்ளிட்ட தேவையான உபகரணங்கள் ஹெலிகாப்டர் மூலம் அங்கு கொண்டு செல்லப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன" என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

சிலிமே நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய எட்டு பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்கள் சுரங்கப்பாதைக்குள் இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சிலிமே நீர்மின் திட்டத்தின் மின் உற்பத்தி நிலையம் ஒரு சுரங்கப்பாதைக்குள் கட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், BBC/Ashok Dahal/File

படக்குறிப்பு, சிலிமே நீர்மின் திட்டத்தின் மின் உற்பத்தி நிலையம் ஒரு சுரங்கப்பாதைக்குள் கட்டப்பட்டுள்ளது.

தனியார் மின் உற்பத்தியாளர்கள் சங்கமான ஐபிபிஏன் ( IPPAN) தலைவர் மோகன் டாங்கியின் தகவலின்படி, லாங்டாங் நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்த 62 பேரில் 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் அந்தத் திட்டத்தில் இருந்து மீட்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.

போடேகோஷி-திரிசூலி பகுதியில் கட்டுமானப் பணிகள் மற்றும் செயல்பாட்டில் இருந்த 11 நீர்மின் திட்டங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளதாக, நேபாள மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சார ஆணையத்தின் துணை நிறுவனங்கள் மற்றும் தனியார் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்கள் வழங்கிய ஆரம்பகட்ட தகவலின்படி, மொத்தம் 470 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 15 கட்டுமான நிலையில் உள்ள நீர்மின் திட்டங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அப்பர் மேலுங் ஏ மற்றும் மேலுங் கோலா திட்டங்களில் தலா ஏழு பேர், லாங்டாங் போடேகோஷி திட்டத்தில் சீன தொழிலாளர்கள் இருவர் உட்பட நான்கு பேர், சென்ட்ரல் திரிசூலி திட்டத்தில் இருவர் என பலரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.

உதவி கோரிய தொழிலாளர்கள்

சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் ஒருவர்

பட மூலாதாரம், Prime Minister's Secretariat

படக்குறிப்பு, சுரங்கப்பாதை நுழைவாயிலில் ஒருவர்

சுரங்கப்பாதையின் நுழைவாயில் பகுதியில் சிக்கியிருந்தவர்கள் பிரதமர் அலுவலகத்தின் கீழ் செயல்படும் 'ஹலோ சர்கார்' என்ற உதவி மையத்தைத் தொடர்புகொண்டு உதவி கோரியதாக அதிகாரி சந்திரஷேர் ராணா தெரிவித்தார்.

216 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இந்தத் திட்டத்தில் சிக்கியிருந்தவர்கள் தங்களை மீட்குமாறு உதவி கோரியதாக ராணா கூறினார்.

"நாங்கள் சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் இருக்கிறோம். கைகளை உயர்த்திக் கொண்டிருக்கிறோம். ஹெலிகாப்டரை அனுப்ப வேண்டியது அவசியம் என்று எங்களுக்கு அழைப்பு வந்தது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அவர்கள் மீட்கப்பட்டுவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று ராணா கூறினார்.

'ஹலோ சர்கார்' கட்டுப்பாட்டு அறையின் தகவலின்படி, புதன்கிழமை காலை 11 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை வரை அந்த உதவி மையத்துக்கு 6,600-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

"பலர் தங்களது உறவினர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிலர் தங்களை மீட்க வேண்டும் என்றும், நிவாரண உதவி தேவை என்றும் அழைத்து தெரிவித்துள்ளனர்" என்று ராணா கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு