சென்னையில் இன்றும் வாழும் ஆங்கிலோ இந்தியர்களின் தனித்துவமான வாழ்க்கை பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், sweetlin baker
- எழுதியவர், ஜா. ரோஸ்லின் அனிஷா
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்
1989ஆம் ஆண்டின் குளிர் கால மாலை வேளை...
பெரம்பூரின் பாக்சன் தெருவில் உள்ள வீடுகள் அப்பகுதியில் உள்ள மற்ற வீடுகளில் இருந்து தனித்துவமாய் தெரிகின்றன.
இளஞ்சிவப்பு நிற திரைச் சீலைகளுடன், திறந்திருக்கும் ஜன்னல் வழியே, உள்ளே இசைக்கப்படும் இசை காற்றில் மிதந்து வர, அப்பகுதியில் நடந்து செல்லும் மக்கள் ஒரு நிமிடம் நின்று அங்குள்ள வீடுகளை ஆர்வமாக கவனிக்கிறார்கள்.
ஒரு வீட்டின் உள்ளே, அந்த மாலைப் பொழுது கொண்டாட்டங்களால் களைகட்டியிருக்கிறது.
கோப்பைகளில் பிளாக் காஃபி ஊற்றப்படுகிறது. சூடான ப்ளம் கேக்குகள் பரிமாறப்படுகின்றன.
போனி எம்- இசைக்குழுவின் 'ராஸ்புடின்' , 'டாடி கூல்', 'ரிவர்ஸ் ஆஃப் பாபிலான்' போன்ற பாடல்கள் வரிசையாக ஒலிக்கின்றன. கவுன் அணிந்த பெண்களும், கோட் சூட் அணிந்த ஆண்களும் கைகோர்த்து, ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.
அந்தத் தெரு வழியாகப் பயணிக்கும் யாரும் அந்த வீட்டில் சுடச்சுடத் தயாராகும் ரொட்டித் துண்டுகளின் நறுமணத்தை நுகராமல், கேட்டவுடனே நடனமாட வைக்கும் ஜாஸ் இசையைக் கேட்காமல் கடந்து செல்ல முடியாது.
இத்தகைய காட்சியை அன்றைய சென்னையின் பல பகுதிகளிலும் காணலாம்.
அந்த வீடுகளில் வசித்த மக்கள் 'ஆங்கிலோ இந்தியர்கள்' என அழைக்கப்பட்டார்கள்.
தனித்துவமான ஆடைகள், ஐரோப்பிய - இந்திய பாரம்பரிய உணவு முறை, ஆங்கிலப் புலமை, ஜாஸ் இசை, நடனம் என கொண்டாட்டமான வாழ்வியலை கொண்ட ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் சென்னையின் பல இடங்களிலும் வாழ்ந்தன.
இன்றும் அவர்களின் தடயங்களை தெருக்களிலும், ரயில்வே காலனிகளிலும், தேவாலயங்களிலும், பழமையான வீடுகளிலும், அங்கு வாழ்ந்த மனிதர்களின் நினைவுகளிலும் சுமந்து கொண்டிருக்கிறது சென்னை மாநகரம்.

பட மூலாதாரம், sweetlin baker
"இன்று பல்வேறு காரணங்களுக்காக ஆங்கிலோ இந்தியர்கள் புலம் பெயரத் தொடங்கிவிட்டாலும், மெட்ராஸில் அவர்களது நினைவுகளைப் பறைசாற்றும் பல இடங்கள் உள்ளன"என்கிறார் சட்டைக்காரிகள், கறுப்பர் நகரம் போன்ற நூல்களை எழுதிய எழுத்தாளர் கரன் கார்க்கி.
கதைகள் வழியாகவும், திரைப்படக் காட்சிகளின் வழியாகவும் மட்டுமே இவற்றைக் கண்டுள்ள இன்றைய ஜென்-ஸி தலைமுறையினரோ, இது முற்றிலும் வேறு ஒரு நகரத்திற்குள் நுழைவது போன்ற உணர்வைத் தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராம் ரீல்களில் பதிவிடுகிறார்கள்.
அன்று மெட்ராஸ் என அழைக்கப்பட்ட சென்னை இன்று தனது 387வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. அதன் வயதும் ஒன்று கூடியிருக்கிறது, வரலாறும் கூடியிருக்கிறது.
ஆனால் ஆங்கிலோ இந்தியர்கள் வசித்த அந்த வீடுகளும், அவர்களின் தனித்துவமான வாழ்வியலும் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
யார் இந்த ஆங்கிலோ இந்தியர்கள்?
ஆங்கிலோ இந்தியர்களைப் பெரும்பாலான திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
ஓ மானே மானே (1984) தொடங்கி, ஆடுகளம் (2011), சார்பட்டா பரம்பரை (2021), பிரின்ஸ் (2022) முதல் சமீபத்தில் வெளியான அன்பே டயானா (2026) வரை பல படங்களில் ஆங்கிலோ இந்திய கதாபாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

பட மூலாதாரம், Five Star Films
"15-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் அதற்குப் பின்னரும், இந்தியாவில் வசித்த ஐரோப்பிய ஆண்கள் இந்தியப் பெண்களை மணந்தபோது, அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் 'லுசோ-இந்தியர்கள்' (Luso-Indians), 'டோபாஸ்கள்' (Topasses) மற்றும் 'மெஸ்டிசோக்கள்' (Mestiços) என்று அழைக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 'ஆங்கிலோ-இந்தியர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்" என்று 'த ஹிஸ்டரி ஆப்ஃ ஆங்கிலோ இண்டியன்ஸ்' எனும் நூல் கூறுகிறது.
'பிரிட்டிஷ் ஆண் - இந்திய பெண்ணுக்கு பிறந்தவர்கள் மட்டும் ஆங்கிலோ இந்தியர்கள் அல்ல'

பட மூலாதாரம், sweetlin baker
"பெரும்பாலான மக்கள் நினைப்பது போல, பிரிட்டிஷ் ஆணுக்கும் இந்தியப் பெண்ணுக்கும் பிறந்தவர்கள் மட்டும் ஆங்கிலோ இந்தியர்கள் அல்ல, ஐரோப்பியச் சமூகங்களைச் சேர்ந்த ஆண்களுக்கும் இந்தியப் பெண்களுக்கும் பிறந்தவர்களே ஆங்கிலோ இந்தியர்கள்" என்கிறார் ஆங்கிலோ இந்திய எழுத்தாளர் கீத் பட்லர்.
இவர் 'தி ஹிஸ்டரி ஆப்ஃ ஆங்கிலோ இண்டியன்ஸ்', 'தி சீக்ரெட் விண்டலோ' போன்ற நூல்களின் ஆசிரியர்.
1498 ஆம் ஆண்டில் போர்த்துகீசியப் பயணியான வாஸ்கோடகமா இந்தியாவிற்கான கடல் வழியைக் கண்டறிந்த பின்னர், போர்த்துகீசியர்கள் இந்தியாவில் வணிகம் செய்தனர்.
இங்கு வணிகம் செய்ய வந்த போர்த்துகீசிய ஆண்கள், கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட இந்தியப் பெண்களை திருமணம் செய்யத் தொடங்கினர்.
"போர்த்துகீசிய ஆண்களுக்கும் இந்தியப் பெண்களுக்குமான திருமணங்களை ஊக்குவிக்க, போர்த்துகீசிய அரசு கேரளத்தின் கொச்சின் கோட்டைக்குள் நிலம் மற்றும் வீடு, வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கியது. அதன் பிறகு 1636ஆம் ஆண்டில் கொச்சின் பகுதிக்குள் டச்சுக்காரர்கள் நுழைந்தனர். மெல்லமெல்ல அதிகாரம் டச்சுக்காரர்களின் கைக்குச் சென்றது"என்ற செய்தி 'த ஹிஸ்டரி ஆப்ஃ ஆங்கிலோ இண்டியன்ஸ்' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Keith butler
அக்காலத்தில் ஆங்கிலோ-இந்தியர்கள் மெஸ்டிசோக்கள் மற்றும் டோபாஸ்கள் என்று அழைக்கப்பட்டனர். மெஸ்டிசோக்கள் போர்த்துகீசிய கலாசாரத்திற்கும், டோபாஸ்கள் இந்திய கலாசாரத்திற்கும் நெருக்கமாக இருந்தனர்.
வணிகர்கள் மற்றும் ராணுவ வீரர்களாக வந்த ஐரோப்பியர்கள், உள்ளூர் பெண்களைத் திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்குப் பிறந்த கலப்பின சந்ததியினர் அனைவரும் பொதுவாக 'யூரேசியர்கள்' என்று அழைக்கப்பட்டனர்.
ஆங்கிலோ-இந்தியர்களுக்கு இந்திய மொழிகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றிய அறிவும் இருந்தது. அதனால் டச்சுக்காரர்கள் அவர்களை உள்ளூர் மக்களுக்கு மொழிபெயர்ப்பாளர்களாகவும் கலாசார ஆலோசகர்களாகவும் பயன்படுத்திக் கொண்டனர்.
"16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கிய காலனித்துவ காலம், பெரும்பாலும் டச்சு, பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் காலகட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த மூவருமே புதுச்சேரியை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர போராடினர். பிரெஞ்சுக்காரர்கள் இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்று, 1816 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை புதுச்சேரியை ஆண்டனர்" என எழுத்தாளர் கீத் பட்லர் குறிப்பிடுகிறார்.
புதுச்சேரியில் கப்புச்சின் பாதிரியார்கள் பராமரித்து வந்த பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவேடுகளைக் கண்டெடுத்த அறிஞர் சிவன், அதில் "ஆங்கிலோ இந்தியர்கள் பிரெஞ்சு ஆட்சியின் கீழும் வாழ்ந்தனர் என்பதை அந்த ஆவணங்கள் நிரூபிக்கின்றன" என சுட்டிக்காட்டியுள்ளார்.
1600-ஆம் ஆண்டு லண்டனில் உருவான வர்த்தக நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனி, இந்தியாவில் வலுவாக கால் பதித்தது.
ஜஹாங்கிர் போன்ற முகலாய அரசர்களுடன் கூட்டணி வைத்த கிழக்கிந்திய கம்பெனி அதன் போட்டியாளர்களான போர்த்துகீசியர்கள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களை வெற்றி கண்டது.
ஏறத்தாழ 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் அடித்தளங்களை நிறுவுவதற்காக, அது ஆங்கிலோ-இந்தியர்களை இன்னும் அதிகமாக நாடியது.
ஆங்கிலோ இந்தியத் திருமணங்களை ஊக்குவித்த கிழக்கிந்திய கம்பெனி, ஒவ்வொரு ஆங்கிலோ இந்தியக் குழந்தையின் தாய்க்கும் அவர்களின் ஞானஸ்நான நாளன்று ஒரு பகோடாவை (தங்க நாணயம்) பரிசாக வழங்கியது.
இவ்வாறு ஐரோப்பிய வாழ்க்கை முறையும், இந்திய வாழ்க்கை முறையும் ஒன்றிணைந்து ஆங்கிலோ இந்தியச் சமூகம் இந்தியா முழுதும் பரவியது.
சென்னையுடன் ஆங்கிலோ இந்தியர்களுக்கு உள்ள தொடர்பு

பட மூலாதாரம், sweetlin baker
சென்னையில், ஆங்கிலோ இந்தியர்களுக்கென்று ஒரு தனித்துவமிக்க வரலாற்று - கலாசாரப் பின்புலம் உள்ளது.
"சென்னைக்கும் ஆங்கிலோ இந்தியர்களுக்குமான தொடர்பு சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலானது. போர்த்துகீசியர்கள் முதன்முதலில் கோரமண்டல் கடற்கரைக்கு வந்த காலத்திலிருந்து இது தொடங்குகிறது" என்கிறார் ஆங்கிலோ இந்தியரான ரிச்சர்ட். இவர் சுங்கத்துறை உதவி ஆணையராகப் பணிபுரிந்து வருகிறார்.
பிரிட்டிஷ் காலத்தில் பரங்கி மலையில் குதிரைப்படை மற்றும் காலாட்படை உள்ளிட்ட ராணுவப் பிரிவுகள் பணியமர்த்தப்பட்டன. அவர்களுக்காக படைவீரர் குடியிருப்புகள், துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளங்கள், ராணுவ தேவாலயம், அதிகாரிகளுக்கான உணவகம் உள்ளிட்ட வசதிகளும் அமைக்கப்பட்டன.
"ஆனால், அதற்கு நீண்ட காலத்துக்கு முன்பே பரங்கி மலையில் கணிசமான எண்ணிக்கையில் ஆங்கிலோ-இந்தியர்கள் வசித்து வந்தனர்"என்று ரிச்சர்ட் குறிப்பிடுகிறார்.
கிழக்கிந்திய கம்பெனி மெட்ராஸில் கால் பதித்த தொடக்க காலத்திலேயே, தமிழ், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி பேசுவோருக்கு இடையே இடையே மொழிபெயர்ப்பாளர்களாக ஆங்கிலோ இந்தியர்கள் பணியாற்றினர்.
மெட்ராஸ் நகரம் வளர்ச்சியடைந்தபோது, 18-ம் நூற்றாண்டில் புதிய கிராமங்கள் நகரத்துடன் இணைக்கப்பட்டன.
சென்னை துறைமுக அறக்கட்டளை, சுங்கத்துறை அலுவலகம், இந்திய ரிசர்வ் வங்கி, மெட்ராஸ் பங்குச் சந்தை உள்ளிட்ட பல நிறுவனங்களிலும் ஆங்கிலோ-இந்தியர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றனர்.
ரயில்வே துறையில் அதிகளவிலான பணி வாய்ப்புகளைப் பெற்றிருந்த ஆங்கிலோ இந்தியர்கள் சென்னை மட்டுமின்றி, மதுரை, கோயம்பத்தூர், திருச்சி என தமிழகத்தின் பிற பகுதிகளிலும் குடியேறத் தொடங்கினர்.

பட மூலாதாரம், sweetlin baker
"முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் பெரும்பாலான நட்சத்திர விடுதிகளில் ஆங்கிலோ இந்திய இசைக் கலைஞர்களின் ஜாஸ் இசையைக் கேட்க முடியும். 1980கள் வரை, பரங்கி மலையில் ராணுவ வீரர்களுக்கென கட்டப்பட்ட தேவாலயத்தின் அருகே ஹாக்கி விளையாடிவிட்டோ, தற்போது ராணுவ கோல்ஃப் மைதானமாக உள்ள போலோ மைதானத்திலிருந்தோ வீடு திரும்பும் ஆங்கிலோ-இந்திய சிறுவர் சிறுமிகளால், அதிகாரிகள் பயிற்சி மையத்துக்குச் (The Officers Training Academy) செல்லும் வழியில் இருந்த சாலை எப்போதும் பரபரப்பாகக் காணப்படும்"என்கிறார் 'ஆங்கிலோஸ் இன் த விண்ட்' என்ற இதழின் ஆசிரியரும், சென்னையைச் சேர்ந்த கார்டூனிஸ்டுமான ஹாரி மெக்லோர்.
அதுமட்டுமின்றி, "கல்வி, ரயில்வே, செவிலியர் பணி, நிர்வாகம் எனப் பல்வேறு துறைகளில், மெட்ராஸின் வளர்ச்சிக்கு ஆங்கிலோ-இந்தியர்கள் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளனர்" என்கிறார் தமிழக சட்டசபையின் முன்னாள் நியமன உறுப்பினர், முனைவர் ஆஸ்கார் நிக்லி.
"சென்னை எங்களது தாய்மடி"

பட மூலாதாரம், sweetlin baker
"சென்னை என் மனதுக்கு நெருக்கமான நகரம். எனக்கு இங்கிருந்து செல்ல விருப்பமில்லை"என்கிறார் முப்பது வயதைக் கடந்த ஆங்கிலோ இந்தியரான ரிங்கு பிரான்சிஸ்.
"நாங்கள் கலாசார ரீதியாகத் தனிமைப்படுத்தப்படவில்லை. எங்களுக்கு நிறைய தமிழ் நண்பர்கள் உள்ளனர். சென்னை எங்களது தாய்மடி"என்று புன்னகையுடன் கூறுகிறார் ஹாரி மெக்லோர். இவருக்கு அறுபது வயதுக்கு மேலாகிறது.
இவர்கள் இருவரையும் போன்ற பல ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் சென்னையின் அங்கமாக தங்களைப் பெருமையுடன் கருதுகிறார்கள்.
மறுபுறம், சென்னையைச் சேர்ந்த தமிழ் மக்களும் ஆங்கிலோ இந்தியர்களுடன் நெருக்கமான பிணைப்பைக் கொண்டுள்ளனர்.
தமிழரான ஸ்வீட்லின், ஒரு ஆங்கிலோ இந்தியரைக் கரம் பிடித்திருக்கிறார்.
"ஆங்கிலோ இந்தியர்களின் கலாசாரம் வண்ணமயமானது, கொண்டாட்டங்கள் நிறைந்தது. ஆங்கிலோ இந்தியக் குடும்பங்களில் பெண்களுக்கு தனி முக்கியத்துவம் வழங்கப்படும். அவர்கள் மிகவும் மதிக்கப்படுவார்கள்" என்று பகிர்ந்து கொண்டார் ஸ்வீட்லின்.
சென்னையில் ஆங்கிலோ-இந்தியர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளில், அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவு மிகவும் சுவாரஸ்யமானதாகக் கருதப்படுகிறது. அவர்களின் வாழ்க்கை, சென்னையின் வளர்ச்சியுடனும், தமிழ் சமூகத்துடனும் இணைந்தே காணப்பட்டது.
"ஆங்கிலோ இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்" எனக் கூறுகிறார் எழுத்தாளர் கரன் கார்க்கி. தொடர்ந்து பேசிய அவர், "ஆங்கிலோ இந்தியர்களுடன் எனக்கு சிறுவயது முதலே நெருங்கிய தொடர்பு உள்ளது. அது எனது பல்வேறு படைப்புகளிலும் வெளிப்பட்டுள்ளது. ரொசாரியோ கதாபாத்திரம், மரப்பாலம் நாவலில் வரும் லூயிஸ் கதாபாத்திரம் போன்றவர்கள் எனது நிஜ வாழ்விலும் உண்டு. எனக்கு ஞானத்தாய் போன்று ஒரு பாட்டி இருந்தார். அவர் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்மணி.
இன்றும் பெரம்பூர் தெருக்களில் செல்லும்போது, நான் ஆறாவது வகுப்பு படிக்கும்போது ரிக்ஷாவில் கவுன் அணிந்து சென்ற வயதான பெண்ணின் முகம் என் மனதில் நிழலாடும். சென்னையின் வளர்ச்சிக்குப் பல்வேறு வகைகளில் பங்களித்து, இன்று சிறுபான்மை சமூகமாக மாறியுள்ள ஆங்கிலோ இந்தியர்களின் மரபைப் பதிவு செய்வது, சென்னையின் பன்மைத்துவதையும் சேர்த்தே வெளிப்படுத்தும்"என்று தெரிவித்தார்.
ரயில்வே மட்டன் கறி, டெவில்ஸ் சட்னி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

பட மூலாதாரம், anglos in the wind

பட மூலாதாரம், sweetlin baker
"உணவுக்கும் இசைக்கும் நாங்கள் அதிக முக்கியத்துவம் அளிப்போம்" என்கிறார் ரிங்கு பிரான்சிஸ். ஆங்கிலோ இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த சமையல் கலைஞரான ரிங்கு, தனித்துவமிக்க அவர்களது உணவுமுறை குறித்து விவரித்தார்.
"ரயில்வே மட்டன் கறி, புலாவ், பால் கறி, மிளகு நீர் , பிளாக் காஃபி, காரமும் புளிப்பும் மிகுந்த டெவில்'ஸ் சட்னி, பிரட் புட்டிங், கேரமல் கஸ்டர்ட் போன்றவை எங்களது சமூகத்தில் பிரத்யேகமாக தயாரிக்கப்படும் உணவுகள்" என பிரான்சிஸ் பட்டியலிட்டார்.
ஆங்கிலோ இந்தியர்களின் வரலாற்றில் உணவு ஒரு பாதி என்றால் இசையும் நடனமும் மறுபாதியாக விளங்குகின்றன.
"பெரும்பாலான ஆங்கிலோ-இந்தியர்கள் இயல்பாகவே இசை மற்றும் நடனத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பார்கள்"என்கிறார் எழுத்தாளர் கீத் பட்லர்.
1980, 90களில் சென்னையின் பெரும்பாலான நட்சத்திர விடுதிகளில் ஜாஸ் இசைக் கலைஞர்கள் ஆங்கிலோ இந்திய சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.
"நெவர் கோனா கிவ் யூ அப் – ரிக் ஆஸ்ட்லி, ஃபாரெவர் யங் – ஆல்ஃபாவில்லே, பில்லி ஜீன் – மைக்கேல் ஜாக்சன்" போன்ற பல பாடல்களை நாங்கள் ரசித்து கேட்போம் என்கிறார் ரிங்குவின் தாய் ஜெசிக்கா.

பட மூலாதாரம், anglos in the wind
ஆங்கிலோ இந்தியர்களின் பங்களிப்புகள்

பட மூலாதாரம், anglos in the wind
"ஆங்கிலோ இந்தியர்கள் தான் முதல் நவீன இந்தியர்கள்" என 'ஆங்கிலோ-இந்தியர்களுக்கான சர்வதேச இதழில்' வெளியான தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் பத்மஸ்ரீ விருது பெற்ற எழுத்தாளர் ஆலன் சீலி.
"கடந்த காலத்தில், ஆங்கிலோ-இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் மெட்ராஸ் காவல்துறையில் பணியாற்றினர். அதேபோல் ஹாக்கி விளையாட்டில் ஆங்கிலோ-இந்தியர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் ஆங்கிலோ-இந்தியர்களின் ஆதிக்கத்தில் இருந்த இந்திய தேசிய அணி, கடந்த நூற்றாண்டின் பல ஆண்டுகளுக்கு உலக ஹாக்கியில் தோற்கடிக்க முடியாத அணியாகத் திகழ்ந்தது" என்று குறிப்பிடுகிறார் ஹாரி.
அதுமட்டுமின்றி, ரயில்வே, தபால் மற்றும் தந்தித் துறை, சுங்கத்துறை, வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விமான நிறுவனங்கள், திரைப்படத் துறை போன்ற பணியிடங்களிலும், ஹோட்டல்கள், கிளப்புகள், விளையாட்டு மைதானங்கள், இசை மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல துறைகளுக்கும் ஆங்கிலோ இந்தியர்கள் பெருமளவில் பங்களித்துள்ளனர்.

பட மூலாதாரம், anglos in the wind
'மிஸ்ஸியம்மா, ஆப்பக்காரங்க, சட்டைக்காரி'
ஆங்கிலோ இந்தியப் பெண்களைக் குறிக்கும் பல்வேறு சொற்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.
"ஆசிரியப் பணியில் இருந்ததால் 'மிஸ்ஸியம்மா' என்றும், முதன்முதலில் சட்டை அணிந்ததால் 'சட்டைக்காரங்க' என்றும் அப்பெண்கள் அழைக்கப்பட்டார்கள். ஐரோப்பியர்கள் பாதி, இந்தியர்கள் பாதி என கலந்து அமைந்த ஆங்கிலோ இந்தியர்களின் பிறப்பைக் குறிக்கும் வகையில் ஹாப்ஃ (half) எனும் ஆங்கிலச் சொல்லாலும் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். அச்சொல் 'ஆப்' என தமிழில் மருவி, பின்னர் 'ஆப்பக்காரங்க' என திரிந்தது" என்று 'திரைப்படங்களினூடாகச் சமூகப் பண்பாட்டு வரலாறு' எனும் தனது நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
ஆனால், " 'பாதியும் பாதியும் சேர்ந்தால் மீண்டும் எப்படி பாதியாக முடியும்? அது ஒன்று தானே' என தனது தாய் கேள்வி எழுப்புவார்" எனக் கூறுகிறார் எழுத்தாளர் கீத் பட்லர்.
அதேபோல் இந்தியத் திரைப்படங்களில் தங்கள் சமூகப் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம் குறித்தும் ஆங்கிலோ இந்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், sweetlin baker
அரசியல் பிரதிநிதித்துவம்
இந்தியா 1947-ஆம் ஆண்டை நெருங்கியபோது, சுதந்திரக் காற்றை சுவாசிக்க மக்கள் தயாராகி வந்தனர். 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அரசாங்கத்தில் ஆங்கிலோ-இந்திய சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பதற்காக, அச்சமூகத்தைச் சேர்ந்த ஃபிராங்க் அந்தோனி, வைஸ்ராய் லின்லித்கோவால் பரிந்துரைக்கப்பட்டார்.
பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு, தங்கள் சமூகத்தினர் துரோகிகளாகக் கருதப்பட்டு தண்டிக்கப்படலாம் என சில ஆங்கிலோ-இந்தியர்கள் அஞ்சினர்.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அமலுக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஆங்கிலோ இந்தியர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கு முக்கிய அடித்தளமிட்டது.
அதுவரை லூசோ-இந்தியர்கள், கிழக்கிந்தியர்கள், யூரேசியர்கள் என பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த சமூகத்திற்கு, இந்திய அரசியலமைப்பில் 'ஆங்கிலோ-இந்தியர்' என்ற சொல்லுக்கான வரையறை வழங்கப்பட்டது.
ஆங்கிலோ இந்தியர் என்பதற்கு இந்திய அரசியலமைப்பின் 366(2) ஷரத்து பின்வருமாறு விளக்கம் அளிக்கிறது:
"தந்தை அல்லது தந்தை வழியில் வந்த முன்னோர் யாரேனும் ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். அந்த நபர் இந்தியப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும். தற்காலிக நோக்கத்திற்காக அல்லாமல், இந்தியாவில் நிரந்தரமாக வசிக்கும் பெற்றோர்களுக்குப் பிறந்தவராக இருக்க வேண்டும்".

பட மூலாதாரம், The history of anglo indians
ஆங்கிலோ-இந்தியர் புலம் பெயர என்ன காரணம்?
"1947 ஆம் ஆண்டில், மெட்ராஸில் ஆங்கிலோ-இந்தியர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது. இன்று அது 40,000-க்கும் கீழ் குறைந்துவிட்டது. நான் 1980களில் பள்ளியில் படித்தபோது, பெருமளவிலான ஆங்கிலோ-இந்திய மாணவர்கள் என்னுடன் படித்தனர். ஆனால், இன்று எனது மகன் படிக்கும் வகுப்பில் இருக்கும் ஒரே ஆங்கிலோ-இந்திய மாணவர் அவன் தான்" என்கிறார் ரிச்சர்ட்.
பொருளாதார தாராளமயமாக்கலுப் பிறகு வெளிநாடுகளுக்குச் செல்வது எளிதானதால் பல ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் நியூசிலாந்து, கனடா போன்ற நாடுகளுக்குப் புலம்பெயரத் தொடங்கினர்.
"ரயில்வே, சுங்கத்துறை போன்ற குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே ஆங்கிலோ இந்தியர்கள் பணிபுரிவார்கள் என்ற நிலை மாறி, இச்சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு வேலைவாய்ப்புகளைத் தேடி வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்." என்கிறார் ஹாரி.

பட மூலாதாரம், sweetlin baker
ஆனாலும், சென்னையைச் சேர்ந்த பல ஆங்கிலோ இந்தியர்கள் சென்னையை விட்டு வேறு எங்கும் செல்ல விரும்பவில்லை எனக் கூறுகிறார்கள்.
"நாங்கள் பிறந்து வளர்ந்த தாய் மண்ணான தமிழ்நாட்டில் வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தும் கனடாவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ செல்லவில்லை. நாங்கள் எப்போதும் சென்னையை விட்டுச் செல்லமாட்டோம்" என்கிறார் ஹாரி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































