ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் - திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இடையே நடந்த விவாதம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
ரேஷன் கடைகளில் தற்போது தரப்படும் அரிசிக்குப் பதிலாக சன்னரக அரிசி வழங்கப்படும் என்றும், அதற்காகவே அதன் உற்பத்தியைப் பெருக்க அதற்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாகவும் தமிழக அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், அரசு வழங்கும் ஊக்கத்தொகைக்காக டெல்டா விவசாயிகள் சன்னரக அரிசிக்கு மாறமாட்டார்கள் என்கிறார் விவசாயிகள் சங்க நிர்வாகி சுவாமிமலை விமலநாதன்.
ரேஷன் கடைகளில் அரிசி வாங்கிய பொதுமக்கள் சிலரிடம் பிபிசி பேசியபோது, பெரும்பாலானவர்கள் ரேஷன் அரிசியை இட்லிக்குப் பயன்படுத்துவதாகவும், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க அதைச் சாப்பிடுவதாகவும் தெரிவித்தனர்.
பாலிஷ் குறைவு என்பதால் ரேஷன் அரிசியைச் சாப்பிடுவதால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சற்று உதவலாம் என்கின்றனர் வேளாண் விஞ்ஞானிகள்.
இதுகுறித்து நீரிழிவு நோய் மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
ரேஷன் கடை அரிசியும் சட்டப்பேரவை விவாதமும்

பட மூலாதாரம், K.N.NEHRU/Instagram
தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 20 அன்று, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் பேசிய திமுகவைச் சேர்ந்த முன்னாள் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ''திமுக ஆட்சியின்போது நெல் மூட்டைகளை நனையாமல் பாதுகாத்ததால் தரமான வெள்ளை அரிசியை ரேஷன் கடைகளில் வழங்கினோம்.'' என்று பேசினார். கடந்த 3 மாதங்களாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்துள்ளதாகக் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த விவாதத்தின்போது பேசிய தவெக அரசின் மூத்த அமைச்சர் செங்கோட்டையன், ''ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கியதாகச் சொன்னார்கள். ஆனால் ரேஷன் அரிசியை வாங்குவோர் ஆடுகளுக்கும், கோழிகளுக்கும் அதைத் தீவனமாக வழங்குகின்றனர் என்பதே உண்மை. அதற்காகவே சன்ன ரக நெல்லை உற்பத்தி செய்ய ஊக்கத்தொகை அறிவித்துள்ளோம்.'' என்றார்.
அவருடைய கருத்தை மறுத்துப்பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, ''ரேஷன் அரிசியை யாரும் ஆடு, மாடுக்குக் கொடுப்பதில்லை. அதைச் சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும் என்று மருத்துவர் கூறியதால் நானும் அதைத்தான் சாப்பிடுகிறேன்.'' என்றார்.
தி.மு.க., ஆட்சியில் தரமான அரிசி வழங்கியதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் பாராட்டிய செய்தி வந்ததாகப் பேசினார் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் வேலு.
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜ், ''நானும் 9 ஆண்டுகள் உணவுத்துறை அமைச்சராக இருந்துள்ளேன். ரேஷன் அரிசியை செங்கோட்டையன் கொச்சைப்படுத்தக் கூடாது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இலவச அரிசியுடன் சேர்த்து பொது விநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.'' என்றார்.
இந்த கருத்துகளுக்கு விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, ''மனசாட்சிப்படி கூறினால் எந்த சட்டப்பேரவை உறுப்பினரும் ரேஷன் அரிசியைச் சாப்பிடுவதில்லை. அதை எல்லோரும் சாப்பிடுகிற அரிசியாகத் தர வேண்டுமென்று முதல்வர் அறிவுறுத்தியதால்தான் சன்னரக அரிசி வழங்க முடிவெடுத்து சன்னரக நெல் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.'' என்றார்.
டெல்டா பகுதிகளில் தாளடி பருவத்தில் மட்டுமே சன்னரக அரிசியை உற்பத்தி செய்யமுடியுமென்றும், மற்ற பருவத்தில் சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்காது என்றும் கே.என்.நேரு தெரிவித்தார். அதனால் வெளியிலிருந்து வேண்டுமானால் கொள்முதல் செய்து சன்னரக அரிசியைக் கொடுக்கலாம் என்றார் அவர்.
ஆனால் தமிழகத்திலேயே தேவையான அளவு அரிசி இருப்பதாக அமைச்சர் வெங்கட்ரமணன் கூறினார். அதுபற்றி விளக்கிய அவர், ''கடந்த 2025 செப்டம்பர் முதல் இன்று வரை, 64 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில், 38 லட்சம் டன் சன்னரக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சன்னரக நெல் கொள்முதலை அதிகரித்து வருகிறோம். வரும் தீபாவளிக்குள் மக்களுக்கு சன்னரக அரிசி வழங்கப்படும்.'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
சட்டப்பேரவையில் நடந்த இந்த விவாதம், தமிழகத்தில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசியின் தரம் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் இணையதளத் தகவல்களின்படி, தமிழகத்தில் தற்போது புழக்கத்திலுள்ள 2.28 கோடி குடும்ப அட்டைகளில் ஒரு கோடியே 14 லட்சம் முன்னுரிமை குடும்ப அட்டைகளுக்கு (PHH) தலா 20 கிலோ அரிசியும், அந்தியோதய அன்ன யோஜனா திட்டத்தின் (PHH-AAY) கீழ் 18 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து, அதிகபட்சம் 35 கிலோ அரிசியை மத்திய அரசு பொது விநியோகத் திட்டத்தில் இலவசமாக வழங்குகிறது.
2 பேர் மட்டுமே இருக்கும் குடும்பங்களுக்கு மத்திய அரசு 12 கிலோ மட்டுமே தரும் நிலையில், மீதமுள்ள 8 கிலோ அரிசியும் மாநில அரசால் வழங்கப்படுகிறது. இவை தவிர்த்து 1.14 கோடி குடும்ப அட்டைகளுக்கு அரிசி உட்பட எல்லாமே மாநில அரசே வழங்குவதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் தகவல் பகிர்கின்றனர்.
தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் பணியாற்றும் பெயர் கூற விரும்பாத ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், ரேஷன் கடைகளில் தற்போது அரிசி விநியோகத்தில் நடக்கும் பல விஷயங்கள் பற்றி விவரித்தார்.
''மொத்தமுள்ள 2.28 லட்சம் ரேஷன் கார்டுகளில் மாதத்திற்கு சராசரியாக 1.90 கோடிப் பேர் தான் ரேஷன் பொருட்களை வாங்குவார்கள். அதனால் மொத்தத் தேவையில் 90 சதவீதம் அரிசிதான் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி, 84 சதவீதம் பேர் ரேஷன் அரிசியை வாங்குகின்றனர்.'' என்றார் அந்த அதிகாரி.
'ரேஷன் அரிசி இட்லிக்கு; கடையரிசி மட்டுமே சாப்பாட்டுக்கு'

பட மூலாதாரம், Getty Images
துறை அதிகாரிகள் பகிரும் தகவலின்படி, தமிழக ரேஷன் கடைகளுக்கு தமிழகத்திருந்தே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளில் பற்றாக்குறை ஏற்படும்பட்சத்தில் மட்டுமே இந்திய உணவுக் கழகத்திடம் இருந்து வாங்கப்படுகிறது.
''ரேஷன் கடைகளில் விநியோகிப்பதற்கு ஆண்டுக்கு 42 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. இந்த ஆண்டில் நெல் விளைச்சலே 64 லட்சம் டன்னை எட்டிவிட்டது. அதில் 70 சதவீதம் என்று கணக்கிட்டால் 43 லட்சம் டன் அரிசி, நமது மாநிலத்தில் இருந்தே கிடைத்துவிடும். அதனால் வெளியே வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் இந்த ஆண்டில் குறுவை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சம்பா சாகுபடியும் பாதித்தால் அடுத்த ஆண்டில் இந்திய உணவுக் கழகத்தில் வாங்க வேண்டியிருக்கலாம்.'' என்றார் அந்த ஐஏஎஸ் அதிகாரி.
தற்போது நெல் பயிரிடப்படும் பரப்பளவு குறித்து பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையத்தின் (CPBG-Centre for Plant Breeding and Genetics) இயக்குநர் ரவி கேசவன், ''தமிழ்நாட்டில் 20–22 லட்சம் ஹெக்டேர் (54.34 லட்சம் ஏக்கர்) வரை நெல் சாகுபடி நடக்கிறது. இதில் பெரும்பகுதி (12 –13 லட்சம் ஹெக்டேர்) இரண்டாவது பருவமான சம்பா, தாளடி மற்றும் பிசானப் பருவங்களின் கீழ் வருகிறது; முதல் மற்றும் மூன்றாம் பருவங்களில் 4 லட்சம் ஹெக்டேர் வரை சாகுபடி நடக்கிறது.'' என்றார்.
''டெல்டா மாவட்டங்களில் முதல் பருவமான 'கார்' அல்லது 'குறுவை' மற்றும் மூன்றாம் பருவமான 'நவரை' அல்லது 'கோடை' ஆகிய பருவங்களில், ஏடிடி 59 (ADT 59), ஏஎஸ்டி 16 ( ASD 16), ஏஎஸ்டி 21 (ASD 21) மற்றும் டிபிஎஸ் 5 (TPS 50 போன்ற பொது ரகங்கள் 70 முதல் 80 சதவீதப் பரப்பளவை ஆக்கிரமித்துள்ளன. சம்பா பருவத்தில், டிஆர்ஒய் 3 (TRY 3), டிபிஎஸ் 3 (PS 3), சிஆர் 1009 (CR 1009) மற்றும் சிஆர் 1009 சப்1 (CR 1009 sub1) போன்ற பொது ரகங்கள் 2.5 முதல் 3.0 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன. இது இரண்டாவது பருவத்தின் (சம்பா, தாளடி மற்றும் பிசானம்) மொத்த நெல் சாகுபடிப் பரப்பளவில் 20 சதவீதம்.'' என்றார் ரவி கேசவன்.
இரண்டாவது பருவத்தில் மீதமுள்ள 10 முதல் 11 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நடுத்தர மெல்லிய மற்றும் மெல்லிய ரகங்கள் பயிரிடப்படுவதாகவும், இப்பருவத்தில், டெல்டா அல்லாத பகுதிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பரப்பளவில் மெல்லிய மற்றும் நடுத்தர மெல்லிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மகசூலைப் பொறுத்தவரை, மெல்லிய ரகங்களை விட தடித்த ரகங்கள் கூடுதல் பலன் தரக்கூடியவை என்றும் தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மைய இயக்குநர் ரவி கேசவன் கூறினார்.
இவ்விரு அரிசிகளுக்குமான வித்தியாசத்தை விளக்கிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் அரிசித் துறை தலைவர் மனோன்மணி, ''இட்லிக்குப் பயன்படுத்துவது மோட்டா ரகம் எனப்படும் பொதுரகம். அன்றாட சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவது சன்னரகம். ஆனால் விவசாயிகளுக்கு அதிக விளைச்சல் தரும் என்ற வகையில் பொதுரகத்தையே விவசாயிகள் அதிகம் பயிரிடுகின்றனர். சன்னரக நெல்லுக்கு அதிக ஊக்கத்தொகை கொடுத்தால் அதை அதிகம் விளைவிப்பார்கள் என்று கருதியே தற்போது அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் சன்னரகம் பயிரிடும் பரப்பு அதிகரிக்கக் கூடும்.'' என்றார்.

தமிழக அரசு இதுவரையிலும் பொதுரகம் மற்றும் சன்னரகம் இரு வகை நெல்லுக்கும் கிலோவுக்கு ரூ.159 கொடுத்து வந்துள்ளது. சன்னரகத்துக்கு கிலோவுக்கு 50 பைசா மட்டுமே அதிகம் கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. தற்போது சன்னரகத்துக்கான ஊக்கத்தொகையை மட்டும் ரூ.289 ஆக உயர்த்தியுள்ளது. இதனால் மத்திய அரசு தரும் குறைந்தபட்ச ஆதார விலையுடன் சேர்த்து பொதுரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2600 கிடைக்கும். அதேநேரத்தில் சன்ன ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.2750 கிடைக்கும்.
''ரேஷன் கடைகளில் தரப்படும் அரிசியில் பாலிஷிங் குறைவு. கடையில் வாங்கும் அரிசி அதிகமாக பாலிஷிங் செய்யப்படுவதால் ஊட்டச்சத்து குறையும். விரைவில் செரிமானம் ஆகிவிடும் என்பதால் ரத்தசர்க்கரை அதிகமாகிவிடும் வாய்ப்புள்ளது. அதனால் ரேஷன் அரிசி சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறைவதாகக் கருதி அதை பலரும் சாப்பிடுகின்றனர்.'' என்றார் பேராசிரியர் மனோன்மணி.
ரேஷன் கடைகளில் அரிசி வாங்கிய பொதுமக்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர்களில் பலரும் ரேஷன் அரிசியை இட்லி, தோசை போன்றவற்றுக்குப் பயன்படுத்துவதாகவும், சில நேரங்களில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க அதைச் சாப்பாட்டுக்குப் பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
ரேஷன் கடைகளில் விநியோகிப்பதற்காக சன்னரக நெல் விளைச்சலை அதிகப்படுத்தும் வகையில், சன்ன ரகத்திற்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது விவசாயிகளிடம் குறிப்பாக தஞ்சாவூர் விவசாயிகளிடம் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் குறுவையில் சன்னரகம் பயிரிட்டால் விளைச்சல் வராது என்றும், 2 நாள் தொடர்மழைக்கே தாங்காது என்றும் மோட்டா ரகம் 7 நாள் மழை பெய்தாலும் தாங்குமென்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பிபிசியிடம் கூறினர்.

பொதுரக அரிசி விளைச்சல் 120 மூட்டை கிடைக்குமிடத்தில் சன்னரகம் 100 மூட்டைதான் கிடைக்கும் என்பதுடன், பொதுரகம் விளைவதற்கான காலமும் சன்னரகத்தை விட 20 நாட்கள் குறைவு என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிபிசியிடம் பேசிய தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை விமலநாதன், ''விவசாயிகள் சன்னரகத்துக்கு மாறவாய்ப்பில்லை. பொதுரகம் எனப்படுகின்ற மோட்டா ரகத்தில்தான் மகசூல் அதிகமாக இருக்கும். இரண்டுக்கும் வெவ்வேறு விலை நிர்ணயம் செய்வதே தவறு என்பதே எங்கள் நிலைப்பாடு. ஏனெனில் இரண்டுக்குமான உற்பத்திச் செலவு ஒன்றுதான். விதை, தண்ணீர், இடுபொருள், உரம், இயந்திரச்செலவு உள்ளிட்ட செலவினத்தில் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.'' என்றார்.
''தட்பவெப்பநிலையைத் தாங்கும் தன்மை பொது ரகத்துக்கே அதிகம். பொது ரகத்தில் தாள், தானியம், வைக்கோல் அளவு எல்லாமே பெரிதாயிருக்கும். அதனால் விவசாயிகள் அதையே விரும்பிப் பயிரிடுவர். டெல்டா விவசாயிகளைப் பொறுத்தவரை 2 ஏக்கர் நிலமிருந்தால் ஒன்றரை ஏக்கர் பரப்பில் அதிக மகசூல் மற்றும் வருவாய்க்காக பொது ரகத்தையும், அரை ஏக்கரில் சன்னரகத்தையும் பயிரிடுவர்.'' என்றார் விமலநாதன்.
ரேஷன் அரிசி ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுமா?

பட மூலாதாரம், Getty Images
இந்த விவாதங்கள் ஒருபுறமிருக்க, மருத்துவரீதியாக ரேஷனில் விநியோகிக்கப்படும் அரிசியை சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையுமென்ற கருத்து குறித்தும் விவாதங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் எந்த வகை அரிசியாக இருந்தாலும் அது சாப்பிடும் அளவைப் பொறுத்தே, ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும் அல்லது குறையும் என்கிறார் நீரிழிவு நோய் மருத்துவர் கிருஷ்ணா சங்கர்.
பிபிசியிடம் பேசிய அவர், ''ரேஷன் அரிசிக்கும், கடைகளில் வாங்கப்படும் அரிசிக்கும் இடையில் ஜிஐ எனப்படும் கிளைசெமிக் இன்டெக்ஸ் பெரிய வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. அது ஆய்வு செய்து பார்த்தால்தான் தெரியவரும். ஆனால் ஒருவர் தன்னுடைய அன்றாட உணவில் எவ்வளவு அரிசியை எடுக்கிறார் என்பதைப் பொறுத்தே அவருடைய சர்க்கரை அளவில் மாற்றம் வரும். '' என்றார்.
அரிசி வகை உணவு அனைத்திலுமே கார்போஹைட்ரேட் அதிகம் என்பதால் அவற்றை எந்த வகையில் உட்கொண்டாலும் அதற்கேற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று விளக்குகிறார் நீரிழிவு நோய் மருத்துவர் குமார் கெம்பன்.
பிபிசியிடம் இதுபற்றி விளக்கிய அவர், ''ரேஷன் அரிசி சாப்பிடுவதால் சர்க்கரை அளவு குறையும் என்பது ஒரு விதமான நம்பிக்கையே தவிர, அதற்கான ஆய்வுப்பூர்வமான முடிவுகள் எதுவுமில்லை. ரேஷன் அரிசியில் பாலிஷ் குறைவு என்பதால் அதில், ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் குறியீடான 'கிளைசெமிக் இன்டெக்ஸ்' கொஞ்சம் குறைவாக இருக்கலாம். மற்றபடி அவை ஏற்படுத்தும் கலோரி அளவில் மாற்றமிருக்காது.'' என்றார்.
''கைக்குத்தல், மாப்பிள்ளை சம்பா போன்ற பாரம்பரிய அரிசி வகைகளில் மற்ற அரிசிகளை விட ஜிஐ அளவு சற்று குறைவாக இருக்கும். மற்ற அரிசிகளில் 200 என்றால் இந்த வகை அரிசிகளில் 160, 180 என்ற அளவில் இருக்குமே தவிர, எந்தவிதமான அரிசி உணவும் ஒரே அளவிலான கலோரியைத்தான் உற்பத்தி செய்யும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதற்கு, சரிவிகித உணவுமுறையே அவசியம்."
"கொஞ்சம் அரிசி சாதம், வேகவைத்த முட்டை, பாதி வேகவைத்த காய்கறிகள், சுண்டல் என சரிவிகித உணவை வயதுக்கேற்ற அளவில் எடுப்பதும், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை இணைந்து மேற்கொள்வது மட்டுமே சரியானது. எந்த உணவை எடுத்தாலும் அதைச் செரிமானம் செய்யும் அளவுக்கு உடல் உழைப்பு இருக்க வேண்டும். அதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை.'' என்றார் மருத்துவர் குமார் கெம்பன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































