மெக்கா ஒப்பந்தம் பாகிஸ்தானை வலுப்படுத்தி இந்தியாவை பின்தள்ளி விட்டதா? நிபுணர்கள் பார்வை

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மெக்காவின் கிராண்ட் மசூதியில் செளதி இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஜும்ஆ தொழுகையில் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், @SPA

படக்குறிப்பு, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மெக்காவின் கிராண்ட் மசூதியில் செளதி இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் தொழுகையில் பங்கேற்றனர்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

பாகிஸ்தான் கடந்த வாரம் செளதி அரேபியா மற்றும் துருக்கியுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதற்கு "மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், மத்திய கிழக்கில் உருவாகி வரும் புதிய பாதுகாப்பு அமைப்பில் பாகிஸ்தானின் நிலையை வலுப்படுத்துவதோடு, அந்தப் பிராந்தியத்தில் அதன் நலன்களை முன்னெடுக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு ஓராண்டுக்கும் குறைவான காலத்தில் மெக்கா ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மேலும் சில நாடுகளும் இந்த பாதுகாப்புக் கூட்டணியில் இணையக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளரும் மூத்த தூதருமான ஷியாம் சரண், 'தி வயர்' செய்தி தளத்துக்காக மூத்த பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு ஆகஸ்ட் 12ஆம் தேதி அளித்த நேர்காணலில், மெக்கா ஒப்பந்தம் மத்திய கிழக்கில் பாகிஸ்தானின் வியூகரீதியான முக்கியத்துவத்தையும் சர்வதேச தோற்றத்தையும் உயர்த்துவதாகக் கூறினார்.

மெக்கா ஒப்பந்தம் இந்தியாவை பின்தள்ளி விட்டதா என்று ஷியாம் சரணிடம் கரண் தாப்பர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த ஷியாம் சரண், "நான் அப்படிக் கூறமாட்டேன். ஆனால், இது பாகிஸ்தானுக்கு நிச்சயமாக ஒரு சாதகமான நிலையை அளிக்கிறது. இந்தியாவுக்கு எதிரான பெரிய தூதரக வெற்றியாக இதைப் பாகிஸ்தான் காட்ட முயலும். எனினும், இந்தியாவுக்கு எதிராக துருக்கி மற்றும் செளதி அரேபியா இணைந்து எந்த ராணுவ நடவடிக்கையிலும் ஈடுபட விரும்புகின்றன என்று நான் நினைக்கவில்லை. இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கு அந்த இரு நாடுகளுக்கும் தனித்தனியான காரணங்கள் உள்ளன" என்றார்.

கடந்த வாரம் செளதி இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பட மூலாதாரம், @SPA

படக்குறிப்பு, கடந்த வாரம் செளதி இளவரசர், துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பாகிஸ்தானுக்கு எவ்வளவு பலன்?

பாகிஸ்தானுக்கு துருக்கி மற்றும் செளதி அரேபியாவுடன் நீண்டகால ராணுவ உறவுகள் உள்ளன. இது புதிதான விஷயம் அல்ல.

ஷியாம் சரண் கூறுகையில், "புதிய விஷயம் என்னவென்றால் செளதி அரேபியா மற்றும் துருக்கி இடையிலான உறவுகள் மேம்பட்டு வருகின்றன. தற்போது பாகிஸ்தானின் முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இந்தியாவில் இருந்து அல்ல; ஆப்கானிஸ்தானில் இருந்துதான் வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக செளதி அரேபியா அல்லது துருக்கி பாகிஸ்தானுடன் சேர்ந்து போராடும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயமாக இல்லை" என்றார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

"எனது பார்வையில் பாகிஸ்தானுக்கு துருக்கியுடனான உறவு, சீனாவுடனான அவர்களின் கூட்டணியைப் போல அவ்வளவு ஆபத்தானது அல்ல. இது தவிர, நாம் கவலைப்பட வேண்டிய மற்றொரு விஷயம், அமெரிக்கா மீண்டும் பாகிஸ்தானுடன் நெருங்கிய ராணுவ உறவுகளைத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் ஆதரவும் கிடைப்பது, மெக்கா ஒப்பந்தத்தை விட இந்தியாவுக்கு அதிக கவலையளிக்கும் விஷயமாகும்" என ஷியாம் சரண் சொல்கிறார்.

அட்லாண்டிக் கவுன்சில் அமைப்பின் தெற்காசியாவுக்கான மூத்த ஆய்வாளரான மைக்கேல் குகெல்மேனும் இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் பாகிஸ்தானின் செல்வாக்கை அதிகரிக்கும் என்று கருதுகிறார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பாகிஸ்தானின் செல்வாக்கு மத்திய கிழக்கில் அதிகரிக்கும் என்பதை மைக்கேல் குகெல்மேனும் ஒப்புக்கொள்கிறார்.

"பாகிஸ்தான் தலைவர்கள், தங்கள் நாட்டை உலகம் ஒரு அபாயகரமான கூட்டாளியாக அல்லாமல் ஒரு செல்வாக்குமிக்க சக்தியாகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். மத்திய கிழக்கு, பாகிஸ்தானின் மூலோபாய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது. அதன் முக்கிய கூட்டாளிகளில் பலர் அங்கே உள்ளனர். அதன் பெரும்பாலான ஹைட்ரோகார்பன் இறக்குமதிகள் அந்தப் பகுதியிலிருந்தே வருகின்றன. மேலும், லட்சக்கணக்கான பாகிஸ்தானியர்கள் அங்கு வசிக்கிறார்கள்" என குகெல்மேன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தியா தொடர்பான விஷயத்தில் இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு பெரிய பலன் தராது என்றும் அவர் கூறுகிறார்.

"செளதி அரேபியா மற்றும் துருக்கியுடனான இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு அதன் சொந்த பிராந்தியத்தில் அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. பாகிஸ்தான் இந்தியாவுடன் பல போர்களில் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டின் மோதலும் அதில் ஒன்று. மேலும், ஆப்கானிஸ்தானில் தாலிபன் அரசுடன் காலங்காலமாக எல்லை மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், பாகிஸ்தானின் கூட்டாளிகள் அதன் சார்பாக போரில் இறங்குவார்கள் என்று கருதுவதற்கு வாய்ப்பு குறைவு" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியா, பாகிஸ்தானைத் தாக்கினால், செளதி அரேபியா இந்தியாவுக்கு எதிராக ஆயுதம் எடுக்கும் என்று நம்புவது கடினம். ஏனெனில் இந்தியாவும் செளதி அரேபியாவின் நெருங்கிய கூட்டாளி நாடாகும். தாலிபன் தொடர்பான விவகாரத்திலும் இதற்கான அறிகுறிகள் ஏற்கெனவே உள்ளன."

"செளதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதற்கு சிறிது காலத்துக்குப் பிறகு கடந்த அக்டோபரில் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் வன்முறை மோதல்கள் தொடங்கின. ஆனால், அந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதாக செளதி அரேபியா ஒருபோதும் அச்சுறுத்தவில்லை."

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவானுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்

'முஸ்லிம் நேட்டோ' உருவாகுமா?

முஸ்லிம்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நகரமான மெக்காவில், மூன்று முக்கிய முஸ்லிம் நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால், எதிர்காலத்தில் மேலும் பல முஸ்லிம் நாடுகள் இதில் இணையக்கூடும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

அதனால், இது ஒரு "முஸ்லிம் நேட்டோ"வாக உருவெடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மத்திய கிழக்கு சர்வதேச விவகாரங்களுக்கான கவுன்சில் அமைப்பின் மூத்த ஆய்வாளரான அலி பாகிர், எகிப்து, கத்தார், அசர்பைஜான், ஜோர்டான் மற்றும் சிரியா ஆகியவை இந்தக் கூட்டணியை விரிவுபடுத்த இயல்பாக இணையும் நாடுகளாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

துருக்கி நேட்டோவில் இரண்டாவது பெரிய ராணுவ சக்தியாக உள்ளது. பாகிஸ்தான், உலகின் ஒரே முஸ்லிம் பெரும்பான்மை அணு ஆயுத நாடாகும். செளதி அரேபியா, மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இருப்பதுடன், வலுவான நிதி வளங்களையும் நவீன மேற்கத்திய ஆயுதங்களையும் கொண்டுள்ளது. இந்த மூன்று சக்திகளும் ஒன்றிணைவது முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

இந்த புதிய கூட்டணி ஒரு தாக்குதலுக்கு எதிராக எந்த வகையான நடவடிக்கையை எடுக்க முடியும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என அட்லாண்டிக் கவுன்சிலின் குடியிருப்பு சாரா மூத்த ஆய்வாளர் டேனி சிட்ரினோவிச் நிக்கேய் ஆசியாவிடம் கூறினார். அவர் கூறுகையில், "சமீபத்திய ஹுத்தி தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான், துருக்கி மற்றும் செளதி அரேபியாவின் எந்தவொரு கூட்டு பதிலடி நடவடிக்கையையும் நாம் பார்க்கவில்லை" என்றார்.

கடந்த சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 8) சி.என்.என் துர்க்குடனான நேர்காணலில், துருக்கியின் துணை அதிபர் செவ்டெட் யில்மாசிடம், இந்த ஒப்பந்தம் செளதி அரேபியா மற்றும் இரான் அல்லது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மோதல் சூழ்நிலையில் துருக்கியை நடவடிக்கை எடுக்கக் கட்டாயப்படுத்துமா என்று கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "ஒற்றுமைக்கு பல வடிவங்கள் உள்ளன. இத்தகைய ஒப்பந்தங்களில் நாடுகளுக்கு இடையே ஒற்றுமையைக் காட்டுவதற்கு ஒரு செயல்பாட்டில் உடனடியாகவோ அல்லது தானாகவோ ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

கூட்டணியின் உறுப்பினர் நாடுகள் மற்ற இரு உறுப்பினர்களுடன் தொடர்புடைய ஆயுதமேந்திய மோதல்களில் உடனடியாகவும் நேரடியாகவும் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் மேம்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையிலான உறவுகள் சமீபத்திய ஆண்டுகளில் பெரிதும் மேம்பட்டுள்ளன.

பொதுவான எதிரி இல்லையெனில் என்ன ஆகும்?

பலதுருவ உலகில் நேட்டோ போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு முந்தைய கால அளவிலான முக்கியத்துவம் எதுவும் இல்லை என்கிறார், டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட தக்ஷஷிலா இன்ஸ்டிடியூஷன் என்ற சிந்தனைக் குழுவின் இயக்குநர் நிதின் பாய்.

"இருதுருவ உலகத்தில் நேட்டோ போன்ற பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கு அர்த்தம் இருந்தது. ஆனால் பலதுருவ உலகில் அவற்றை நடைமுறைப்படுத்துவது மிகவும் சிக்கலானது. உங்கள் கூட்டாளியின் எதிரி, உங்கள் எதிரி அல்ல என்றால், அவருக்கு எதிராக நீங்கள் போரில் இறங்குவீர்களா?" என எக்ஸ் தளத்தில் நிதின் பாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், "எனவே செளதி அரேபியா-பாகிஸ்தான்-துருக்கி ஒப்பந்தம் சிக்கலானதாக இருக்கும். செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் கடந்த ஆண்டும் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதே ஆண்டில் இரான் செளதி அரேபியாவைத் தாக்கியது. அப்போது அந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து பதற்றத்தைத் தணிக்க முயன்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.

"ராணுவ ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது ஒரு விஷயம்; அவற்றை செயல்படுத்துவது வேறு விஷயம். பலதுருவ உலகில் பல்வேறு தரப்புகளுடன் உறவுகளைப் பேணும் நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மிகவும் சிக்கலானவை. அவற்றின் திறன், மோதல் ஏற்பட்டால் கூட்டாளிகள் உண்மையில் களமிறங்குவார்கள் என்ற நம்பிக்கையை எதிரி எவ்வளவு கொண்டிருக்கிறது என்பதையே சார்ந்திருக்கிறது" என்றும் அவர் கூறுகிறார்.

அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் தூதராக இருந்த ஹுசைன் ஹக்கானியும், இந்த ராணுவக் கூட்டணியில் உள்ள நாடுகளுக்குப் பொதுவான எதிரி இல்லை என்றால் பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்கலாமே தவிர, கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்க முடியாது என்றே நம்புகிறார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் "கூட்டு பாதுகாப்பு என்பது பொதுவாக ஒரு பொதுவான எதிரிக்கு எதிராகவே அமைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட எதிரி இல்லையெனில் பாதுகாப்பு ஒத்துழைப்பு இருக்கலாம்; ஆனால் உண்மையான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் இருக்காது. பாகிஸ்தான், துருக்கி மற்றும் செளதி அரேபியாவின் எதிரிகள் வெவ்வேறானவர்கள். எனவே, இந்த ஒப்பந்தத்தின் மூலம் வளங்களின் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியில் ஒத்துழைப்பு அதிகரிக்கலாம். ஆனால் இது 'முஸ்லிம் நேட்டோ'வாக மாறாது" என எழுதியுள்ளார்.

"செளதி-துருக்கி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம் பெரும்பாலும் அடையாள ரீதியானது. பொதுவான எதிரி இருப்பதே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முதல் அடிப்படை. இங்கு அது இல்லை" என்றும் ஹக்கானி தெரிவித்துள்ளார்.

துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான், சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் ஆகியோர் 2026 ஆகஸ்ட் 7 அன்று சௌதி அரேபியாவின் மெக்காவில் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்துவான், சௌதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஆகியோர் 2026 ஆகஸ்ட் 7ஆம் தேதி சௌதி அரேபியாவின் மெக்காவில் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மூன்று நாடுகளின் பலமும் பலவீனமும்

தி ஹிந்து நாளிதழின் சர்வதேச விவகார ஆசிரியர் ஸ்டான்லி ஜானி, ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட்ட கட்டுரையில், இந்தக் கூட்டணியில் உள்ள மூன்று நாடுகளும் தங்களுக்கே உரிய பலன்களையும் பலவீனங்களையும் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

"பாகிஸ்தான், முஸ்லிம் உலகின் ஒரே அணு ஆயுத சக்தியாக உள்ளது. ஆனால் அதன் பொருளாதாரம் கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒன்றான செளதி அரேபியா, பெரிய நிதி வலிமையை கொண்டுள்ளது. ஆனால் குறிப்பாக இரான் மற்றும் ஹுத்தி அமைப்புகளிடமிருந்து தீவிர பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது" என ஸ்டான்லி ஜானி குறிப்பிட்டுள்ளார்.

"துருக்கியின் பாதுகாப்புத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அதில் நவீன ட்ரோன் உற்பத்தித் திறனும் அடங்கும். ஆனால் தனது அண்டை பிராந்தியத்தில் இஸ்ரேலின் அதிகரித்துவரும் ராணுவ செயல்பாடுகள் குறித்து அந்நாடு கவலை கொண்டுள்ளது. இந்த மூன்று நாடுகளுக்கும் இடையேயான கூட்டு பாதுகாப்பு ஏற்பாட்டின் பொருள், இரான் அல்லது ஹுத்திகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் ஈடுபடும் என்பதல்ல. அதேபோல், எதிர்கால இந்தியா-பாகிஸ்தான் மோதலில் துருக்கி நேரடியாக கலந்து கொள்ளும் என்றும் பொருளல்ல."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு