You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காரில் 4 நாட்கள் மறைத்து வைக்கப்பட்ட பெண் உடல்: 'அசைவ உணவு' என கூறிய நபர் சிக்கியது எப்படி? பெண்ணின் தந்தைக்கும் தொடர்பா?
- எழுதியவர், பிரவீன் சுபம்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
(இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் விவரங்கள் உள்ளன)
காரின் டிக்கியில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், உயிரிழந்த பெண்ணின் காதலனை கைது செய்துள்ளதாக தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது.
'இந்தக் கொலைக்கு மறைமுகமாகத் தூண்டுதலாக இருந்தத உயிரிழந்த பெண்ணின் தந்தை' தலைமறைவாக இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
"உயிரிழந்த பெண்ணின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக, அவரை கொலை செய்து உடலை அப்புறப்படுத்த குற்றம் சாட்டப்பட்ட இருவரும் முடிவு செய்தனர்," என்று காசிபேட் ஏசிபி பிங்கலி பிரசாந்த் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
கொலை செய்யப்பட்ட தனது காதலியின் உடலை அப்புறப்படுத்த முயன்றபோது, காதலன் கைது செய்யப்பட்டதாக ஏசிபி தெரிவித்துள்ளார்.
வாரங்கல் காவல் ஆணையரகம் மற்றும் சில உள்ளூர் மக்களிடமிருந்து பிபிசிக்கு கிடைத்த தகவலின்படி, ஆகஸ்ட் 21-ஆம் தேதி, தெலங்கானாவின் ஹனம்கொண்டா மாவட்டம் எல்கதுர்த்தி பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து, உள்ளூர் மக்கள் பஞ்சாயத்து செயலாளரிடம் தகவல் தெரிவித்தனர்.
"பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் அளித்த தகவலின் அடிப்படையில் நாங்கள் அந்தக் காரிடம் சென்று சோதனை செய்தோம். அப்போது துர்நாற்றம் வீசியதை கவனித்தோம். அங்கு அருகில் யாரும் இல்லை. இதையடுத்து போலீஸாரிடம் புகார் அளித்தேன்," என்று எல்கதுர்த்தி கிராம பஞ்சாயத்து செயலாளர் வஜ்ஜேபள்ளி ஸ்ரீனிவாஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
காரில் நான்கு நாட்கள்
பஞ்சாயத்து செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், காரின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளர் தாமேரா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்தது.
ஆனால், சுரேந்தர் சிறிது காலத்துக்கு முன்பு ரூ.2 லட்சம் கடனுக்காக சம்மி ரெட்டியின் குடும்பத்திடம் காரை அடமானம் வைத்திருந்தார் என்பதும், தற்போது அந்தக் காரை அவரது இரண்டாவது மகனும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான யெட்டெல்லி வினோத் குமார் பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
"குற்றம் சாட்டப்பட்டவரின் செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால், காரின் உரிமையாளரிடம் இருந்து மற்றொரு சாவியைப் பெற்று காரைத் திறந்தோம். அதற்குள் படுக்கை விரிப்பால் சுற்றப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தோம். காரின் முன் இருக்கையில் கிடைத்த ஆதார் அட்டையின் அடிப்படையில், உயிரிழந்தவர் 35 வயதான அங்கட்டி மனசா என்பது தெரியவந்தது. பின்னர், விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்," என்று ஏசிபி பிரசாந்த் ரெட்டி தெரிவித்தார்.
எல்கதுர்த்தி கிராம பஞ்சாயத்துத் தலைவர் முனிகடப்பா லாவண்யா பிபிசியிடம், "முதலில் இது வெளியாட்களின் வேலையாக இருக்கும் என்றும், வேறு எங்காவது கொலை செய்துவிட்டு உடலை இங்கே கொண்டு வந்து விட்டுச் சென்றிருப்பார்கள் என்றும் நினைத்தோம்.
ஆனால், தனது வீட்டிலிருந்து வெறும் 10 மீட்டர் தொலைவில் இருந்த காருக்குள் உடலை மறைத்து வைக்கும் அளவுக்கு குற்றம் சாட்டப்பட்டவர் துணிச்சலாகச் செயல்பட்டிருப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காரிலிருந்து துர்நாற்றம் வருவது குறித்து கேட்டபோது, இரண்டு நாட்களுக்கு முன்பு டிக்கியில் அசைவ உணவு ஒன்றை வைத்ததாகவும், அது அழுகியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்," என்றார்.
இருவரும் சிறுவயது நண்பர்கள்
குற்றம் சாட்டப்பட்ட வினோத்தும் உயிரிழந்த மனசாவும் சிறுவயது முதலே ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்றும், இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்றும் ஏசிபி பிரசாந்த் ரெட்டி தெரிவித்தார்.
"இருவரின் தந்தையும் சிங்கரேணி நிறுவனத்தில் பணியாற்றியவர்கள். அவர்கள் கோதாவரிகனி பகுதியில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்தனர். அருகிலுள்ள சென்டினரி காலனியில் வசித்து வந்தனர். வினோத்தின் தந்தை சம்மி ரெட்டி ஓய்வு பெற்ற பிறகு, தனது சொந்த ஊரான எல்கதுர்த்தியில் குடியேறினார்," என்று பிரசாந்த் ரெட்டி தெரிவித்தார்.
"மனசாவுக்கு இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. தற்போது அவரது இரண்டாவது கணவருடன் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அவர் சென்டினரி காலனியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்."
மறுபுறம், வினோத் தனது பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, தற்போது கரீம்நகரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.
சமீப காலமாக மனசாவுக்கும் வினோத்துக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது எனவும் மனசா சென்டினரி காலனியில் உள்ள தனது வீட்டிலிருந்து கரீம்நகரில் உள்ள வினோத்தின் அறைக்கு அடிக்கடி சென்று வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
"மனசாவின் திருமண வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட நடத்தை குறித்து அவரது பெற்றோர் கவலையில் இருந்தனர். அறிவுரை கூறியபோதும் கேட்காமல் இருப்பது, பெற்றோரை உடல்ரீதியாகத் தாக்குவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டதாக எங்கள் விசாரணையில் தெரியவந்தது," என்று ஏசிபி கூறினார்.
மறுபுறம், திருமணம் செய்துகொள்ளுமாறு மனசா தன்னை தொடர்ந்து வற்புறுத்தி வருவதாக வினோத், மனசாவின் தந்தை ராஜேஷிடம் பகிர்ந்து வந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், இந்தப் பிரச்னையைத் தீர்க்காவிட்டால் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்படும் என்று இருவரும் நினைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 18-ஆம் தேதி நள்ளிரவில், கரீம்நகரில் உள்ள அறையில் வைத்து, வினோத் மனசாவைக் கொலை செய்ததாகவும், மனசாவின் தந்தை இதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
"அதன்பிறகு, தான் பயன்படுத்தி வந்த காரின் டிக்கியில் உடலை வைத்து சுமார் 70 கிலோமீட்டர் பயணம் செய்த வினோத், தனது சொந்த ஊரான எல்கதுர்த்தியில் உள்ள வீட்டின் அருகே காரை நிறுத்தினார்," என்று ஏசிபி பிரசாந்த் ரெட்டி விளக்கினார்.
"கொலைக்குப் பிறகு உடலை என்ன செய்வது என்று வினோத் குழப்பத்தில் இருந்தார். இறுதியில், தனது வீட்டைச் சேர்ந்த வயலில் உடலைப் புதைக்க ஏற்ற நேரத்தைத் தேடினார். இதனால், ஆகஸ்ட் 18 முதல் 21-ஆம் தேதி வரை சுமார் நான்கு நாட்கள் மனசாவின் உடல் காரின் டிக்கியிலேயே இருந்தது. இறுதியில், விசாரணையில் அவர் சிக்கினார்," என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த வழக்கு குறித்து பிபிசியிடம் பேசிய வினோத்தின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்,"எங்கள் குடும்பத்தில் இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இதற்கு மேல் எங்களால் எதுவும் கூற முடியாது," என்றார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக போலீஸார் அழைத்தபோது ஒருமுறை வந்திருந்த மனசாவின் தந்தை ராஜேஷம், பின்னர் தனது பெயரும் இந்த வழக்கில் வெளியாகிவிடும் என்ற அச்சத்தில் தலைமறைவாக இருப்பதாக ஏசிபி பிரசாந்த் ரெட்டி தெரிவித்தார்.
கொலை கரீம்நகரில் நடைபெற்றதால், இந்த வழக்கின் மேலதிக விசாரணை கரீம்நகர் ஒன் டவுன் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக மனசாவின் உறவினர்களிடம் பிபிசி பேச முயன்றது. ஆனால், அவர்களில் யாரும் பதில் அளிக்கவில்லை.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு