கண்ணாடி அணிபவர்கள் கண் தானம் செய்யலாமா? அறிவியல் உண்மைகள்

    • எழுதியவர், ஓம்கார் கரம்பேல்கர்
    • பதவி, பிபிசி நியூஸ் மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள்

அன்புக்குரிய ஒருவர் உயிரிழப்பது ஒரு குடும்பத்துக்கு மிகவும் சோகமான தருணம். ஆனால், அந்தத் தருணத்தில் எடுக்கப்படும் ஒரு முடிவு, மற்றொருவரின் வாழ்க்கைக்கு வெளிச்சம் தரக்கூடும்.

ஒருவர் இறந்த பிறகு அவரது கண்ணின் கருவிழியைத் தானமாக வழங்குவதே கண் தானம். கண்ணின் இந்த வெளிப்படையான பகுதியில் ஏற்படும் பாதிப்பால் பலர் பார்வையை இழக்கின்றனர். இத்தகைய நோயாளிகளுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் பார்வையை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற கருவிழிகளுக்கு அதிக தேவை உள்ளது. ஆனால், கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், பல நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

கண் தானம் குறித்துப் பல தவறான புரிதல்கள் இன்னும் சமூகத்தில் நிலவி வருகின்றன. வயதானவர்களாக இருந்தாலோ, கண்ணாடி அணிந்திருந்தாலோ, நீரிழிவு நோய் இருந்தாலோ அல்லது கண்புரை அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ கண்களைத் தானமாக வழங்க முடியாது என்று பலர் நம்புகின்றனர். ஆனால் உண்மையில், இத்தகைய பலரும் கண்களைத் தானமாக வழங்க முடியும்.

இறந்த சில மணிநேரத்திற்குள் கருவிழியைப் பெற முடியும். இதனால் இறுதிச் சடங்குகள் தாமதமாவதில்லை. கண் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் தேவைப்படும் கருவிழிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.

கருவிழி தொடர்பான பார்வையிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், போதுமான கண் தானம் இல்லாததால், பலர் ஆண்டுக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதற்கு கருவிழி தானம் செய்பவர்களின் பற்றாக்குறை மட்டுமின்றி, கண் தானம் குறித்த தவறான புரிதல்கள், ஒருவர் இறந்த பிறகு விரைவாக முடிவெடுப்பதில் உள்ள சிரமங்கள், கிராமப்புறங்களில் குறைவான வசதிகள் மற்றும் பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாதது ஆகியவையும் காரணங்களாக உள்ளன.

கண் தானம் என்றால் முழு கண்ணையும் அகற்றுவது அல்லது இறந்தவரின் முகத் தோற்றத்தை மாற்றிவிடுவது என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. ஆனால் உண்மையில், பயிற்சி பெற்ற நிபுணர்கள் மிகவும் கவனமாக கருவிழிகளைப் பெறுகின்றனர். இதனால் இறந்தவரின் முகத் தோற்றத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

மேலும், கண்ணாடி அணிபவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அல்லது கண்புரை அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களும் கண்களைத் தானமாக வழங்க முடியும். தேசிய கண் தான இரு வார விழா போன்ற முன்னெடுப்புகள் இதுபோன்ற தவறான புரிதல்களைப் போக்க முயல்கின்றன.

இந்தியாவில் கண் தானத்தின் நிலை குறித்து புனேவில் உள்ள ஏஎஸ்ஜி ஹாஸ்பிடல் லிமிடெட்டில் பாகோ, ரிஃப்ராக்டிவ் கார்னியா மற்றும் கண் மேற்பரப்பு நிபுணராகப் பணியாற்றும் மருத்துவர் ஹேமந்த் காம்ப்ளே விளக்குகிறார்.

அவர் கூறுகையில், "இந்தியாவின் கண் தான இயக்கம் உலகின் மிகப் பெரிய கண் வங்கி வலையமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1945ஆம் ஆண்டு சென்னையில் (Madras) நாட்டின் முதல் கண் வங்கி நிறுவப்பட்டபோது இந்த இயக்கம் தொடங்கியது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இன்று, இந்திய கண் வங்கி சங்கத்தின் (EBAI) பதிவுகள்படி, சுமார் 941 கண் வங்கிகள் மற்றும் கண் சேகரிப்பு மையங்கள் உள்ளன." என்றார்.

அவரது கூற்றுப்படி, "கடந்த 2017-18ஆம் ஆண்டில் சுமார் 71,700 நன்கொடையாளர்களிடம் இருந்து கருவிழிகள் சேகரிக்கப்பட்டன. இதுவே கண் தானத்தின் உச்சகட்டமாக இருந்தது. ஆனால், கோவிட் பேரிடர் இந்தத் திட்டத்தில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. ஈபிஏஐ மற்றும் அரசின் தரவுகள்படி, 2023-ஆம் ஆண்டில் 47,676 கருவிழிகள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் 29,057 கருவிழிகள் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டன. கொரோனா வருவதற்கு முந்தைய 2019ஆம் ஆண்டில் சேகரிக்கப்பட்ட 55,260 கருவிழிகளுடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது."

மருத்துவர் காம்ப்ளே கூறுகையில், "இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சம் கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. ஆனால், உண்மையில் கிடைக்கும் தானமாக வழங்கப்பட்ட கருவிழிகளின் எண்ணிக்கை இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை."

"மேலும், தானமாக வழங்கப்படும் ஒவ்வொரு கருவிழியும் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றதாக இருப்பதில்லை. தரம் மற்றும் பாதுகாப்பு பரிசோதனைகளுக்குப் பிறகே அவை பயன்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக, மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளில் ஒரு சிலருக்கே சரியான நேரத்தில் கருவிழி கிடைக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான புதிய நோயாளிகள் காத்திருப்போர் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறுகின்றனர்." என்றும் குறிப்பிட்டார்.

1. கண்ணின் எந்தப் பகுதி தானமாக வழங்கப்படுகிறது?

கருவிழி தான் கண் தானத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் மிக முக்கியமான பகுதி. கண்ணின் முன்புறத்தில் உள்ள வெளிப்படையான பகுதியே கருவிழி. ஒளியை சரியாகக் குவிப்பதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது.

கருவிழி சேகரிக்கப்பட்ட பிறகு, அது கவனமாகப் பரிசோதிக்கப்பட்டு கண் வங்கியில் பாதுகாப்பாகச் சேமிக்கப்படுகிறது.

மாற்று அறுவை சிகிச்சைக்கு கருவிழி பொருத்தமானது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு, கருவிழி பாதிக்கப்பட்டு அல்லது நோயால் பார்வையை இழந்துள்ள நோயாளிக்கு அது பொருத்தப்படுகிறது.

கண் தானம் செய்பவர் உயிரிழந்த பிறகு, அவரது குடும்பத்தினர் உடனடியாக அருகிலுள்ள கண் வங்கியைத் தொடர்புகொண்டு, அந்த நபர் கண் தானம் செய்ய விரும்பியதைத் தெரிவிக்க வேண்டும்.

அதன் பிறகு, கண் சேகரிப்புக் குழுவினர் மருத்துவ வரலாற்றைத் தெரிந்து கொண்டு, அந்த நபர் கண் தானம் செய்வதற்குத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிப்பார்கள். பின்னர் கருவிழித் திசு சேகரிக்கப்படும்.

2. ஒருவர் மரணித்து எவ்வளவு நேரத்திற்குள் கண் தானம் செய்யப்பட வேண்டும்?

மரணம் நிகழ்ந்தவுடனேயே கூடிய விரைவில் கண் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்.

கருவிழி சேகரிப்பு குறித்து மருத்துவர் ராஷ்மி பார்வே தகவல் அளித்துள்ளார். அவர், தானேவில் உள்ள கேஐஎம்எஸ் மருத்துவமனையின் கண் மருத்துவத் துறையில் ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.

"பொதுவாக 6 முதல் 8 மணிநேரத்திற்குள் கருவிழி சேகரிக்கப்படும். சேகரிப்புக் குழுவினர் வரும் வரை கண்ணைத் தனிமைப்படுத்தி வைத்திருப்பதும், சுத்தமான ஈரமான பஞ்சு அல்லது காஸ் துணியால் கண்ணை மூடி வைத்திருப்பதும், தலையைச் சற்று உயர்த்தி வைத்திருப்பதும் உதவியாக இருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

3. நான் என் கண்களை தானம் செய்யலாமா? ஏதேனும் வயது வரம்பு உள்ளதா?

கண் தானத்திற்குக் குறிப்பிட்ட வயது வரம்பு எதுவும் இல்லை. வயதானவர்களும் கண் தானம் செய்யக் கூடியவர்களாக இருக்கலாம். ஏனெனில், இறந்த பிறகு கருவிழித் திசு தானத்திற்கு ஏற்றதா என்பது பரிசோதிக்கப்படுகிறது.

சில மருத்துவ நிலைகள் அல்லது தொற்றுகள் இருப்பவர்களுக்கு கண் தானம் செய்யத் தகுதி இல்லாமல் போகலாம். கண் தானம் செய்பவரின் மருத்துவ வரலாற்றை ஆய்வு செய்து, சேகரிக்கப்பட்ட திசுவைப் பரிசோதித்த பிறகு, கண் வங்கியே இறுதி முடிவை எடுக்கும்.

4. கண் மாதிரிகளைச் சேகரிக்க எவ்வளவு நேரம் ஆகும்?

கண் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாகப் பல தவறான புரிதல்களும் அச்சங்களும் நிலவுகின்றன.

மருத்துவர் ராஷ்மி பார்வே கூறுகையில், "கண் தானம் என்பது ஒப்பீட்டளவில் குறுகிய நேரத்தில் முடிந்துவிடும் செயல்முறை. பொதுவாக, இது இறுதிச் சடங்குகளில் குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்தாது. பயிற்சி பெற்ற குழுவினர் மிகுந்த மரியாதையுடன் இந்த நடைமுறையை மேற்கொள்கின்றனர்."

"சூழ்நிலையைப் பொறுத்து, மருத்துவமனையிலோ அல்லது கண் தானம் செய்பவரின் வீட்டிலோ இந்த நடைமுறையை மேற்கொள்ளலாம். கண் தானம் செய்த பிறகு, குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளைத் தொடரலாம். எனவே, கண் தானம் செய்வதால் இறுதிச் சடங்குகளில் பாதிப்பு ஏற்படும் என்ற தவறான புரிதலை குடும்பத்தினர் கொண்டிருக்கக் கூடாது" என்றார்.

5. கண்ணாடி அணிபவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அல்லது கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் கண்களை தானம் செய்ய முடியுமா?

பல சந்தர்ப்பங்களில் அத்தகைய நபர்கள் தங்கள் கண்களை தானம் செய்ய முடியுமென நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கண்ணாடி அணிவது மட்டும் ஒருவரை கண் தானம் செய்வதில் இருந்து தகுதி நீக்கம் செய்யாது. அதேபோல, நீரிழிவு நோய் இருப்பது அல்லது கண்புரை அறுவை சிகிச்சை செய்திருப்பதும் ஒருவரைக் கண் தானம் செய்வதில் இருந்து தகுதி நீக்கம் செய்யாது.

ஒருவர் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்றவரா என்பதை அவரது மருத்துவ வரலாறு, கருவிழியின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கண் வங்கி தீர்மானிக்கிறது. எனவே, ஒருவர் கண் தானம் செய்யத் தகுதியற்றவர் என்று குடும்பத்தினர் தாங்களாகவே முடிவு செய்துவிடக் கூடாது.

மிகக் குறைவான அல்லது மிக அதிக பவர் கொண்ட கண்ணாடி அணிபவர்கள், நீரிழிவு நோய் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஏற்கெனவே கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆகியோர் கண்களைத் தானமாக வழங்க முடியாது என்பது தவறான புரிதல்.

மருத்துவர் ஹேமந்த் காம்ப்ளே, "கண்ணாடி அணிபவர்கள் கண்களைத் தானமாக வழங்க முடியாது என்பது மற்றொரு பெரிய தவறான புரிதல். அருகில் அல்லது தொலைவில் பார்ப்பதற்கான பார்வைக் குறைபாடு அல்லது ஆஸ்டிக்மாடிசம் காரணமாக கண்ணாடி அணிவதற்கும், கருவிழியை மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்துவதற்கும் நேரடித் தொடர்பு இல்லை. ஏனெனில், பார்வைக் குறைபாடு கண்ணின் வடிவத்துடன் தொடர்புடையது. மாற்று அறுவை சிகிச்சைக்கு கருவிழியின் வெளிப்படைத்தன்மையும் ஆரோக்கியமும் முக்கியம்" என்று விளக்கினார்.

"நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் அல்லது ஆஸ்துமா உள்ளவர்களும் கண்களைத் தானமாக வழங்கலாம். உயிரிழக்கும் நேரத்தில் அவர்களுக்கு தீவிரமான தொற்று நோய் அல்லது ரத்தத்தின் மூலம் பரவும் நோய் இல்லாவிட்டால், கண்களை ஏற்றுக்கொள்ள முடியும். அதேபோல, கண்புரை அறுவை சிகிச்சை செய்திருப்பதும் கண் தானத்திற்குத் தடையல்ல. ஏனெனில், கண்புரை அறுவை சிகிச்சை கண்ணின் லென்ஸில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கருவிழி கண்ணின் தனி பகுதி.

"கண்புரை அல்லது கண் அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்றிருந்தால் கண்களைத் தானமாக வழங்க முடியாது, கண் தானத்திற்கு வயது வரம்பு உள்ளது, இந்திய நன்கொடையாளர்களின் கருவிழிகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு தரம் குறைந்தவை போன்ற பிற தவறான புரிதல்களும் சமூகத்தில் உள்ளன. ஆனால், இவை எதுவும் உண்மையல்ல. கண் தானம் குறித்து சரியான தகவலும் விழிப்புணர்வும் அதிகரித்தால், இந்தப் பணியில் அதிகமானோர் பங்கேற்க முடியும்" என்றும் குறிப்பிட்டார்.

6. கண் தானம் முகச் சிதைவை ஏற்படுத்துமா?

கண் தானம் தொடர்பான முதல் முக்கியமான தவறான புரிதல், கண்களைத் தானமாக வழங்குவதால் இறந்தவரின் முகத் தோற்றம் மாறிவிடும் என்பதாகும். உண்மையில், இது முற்றிலும் தவறானது. கண் தானம் செய்யும் செயல்முறை மிகவும் கவனமாக மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் கண் இமைகள் மூடப்படுகின்றன. எனவே, முகத்தின் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

பாலினம், மதம், ரத்த வகை அல்லது பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், கிட்டத்தட்ட யார் வேண்டுமானாலும் கண்களைத் தானமாக வழங்கலாம்.

கண் தானத்திற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை. ஒரு வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் கண்களைத் தானமாக வழங்கலாம். கண் தானத்தில் வயதைவிட, கண் திசுக்களின் தரமும் ஆரோக்கியமுமே முக்கியம் என்பதே இதற்குக் காரணம்.

மருத்துவர் ஹேமந்த் காம்ப்ளே கூறுகையில், "சில குறிப்பிட்ட மருத்துவ நிலைகளில் கண் தானம் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எய்ட்ஸ், ஹெபடைடிஸ் பி அல்லது சி, ரேபிஸ், செப்டிசீமியா, தீவிர லுகேமியா, டெட்டனஸ், காலரா, மூளைக்காய்ச்சல் அல்லது மூளை அழற்சி போன்ற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் தானமாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதேபோல், கண்களில் தீவிரமான அழற்சி, ரெட்டினோபிளாஸ்டோமா அல்லது வீரியம் மிக்க மெலனோமா இருந்தாலும் கண்களைத் தானமாக வழங்க முடியாது" என்றார்.

7. கண் தானத்தால் எத்தனை பேர் பயனடையலாம்?

பொதுவாக, ஒரு கண் தானம் செய்பவரின் மூலம் இரண்டு பேருக்கு பார்வையை வழங்க முடியும். ஏனெனில், ஒவ்வொரு கண்ணிலிருந்தும் பெறப்படும் ஒரு கருவிழி வீதம், தலா ஒரு நோயாளிக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.

இதன் மூலம், ஒரு நன்கொடையாளரிடமிருந்து பெறப்படும் இரண்டு கருவிழிகளை, இரு வெவ்வேறு நபர்களுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

எனினும், நவீன மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் கருவிழிகளை மிகவும் திறமையாகப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள முறைகள் மூலம் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க முடியும்.

லேமெல்லர் மாற்று அறுவை சிகிச்சை அல்லது பகுதியளவு திசு மாற்று அறுவை சிகிச்சை போன்ற நுட்பங்கள் மூலம், ஒரு நன்கொடையாளரின் ஒற்றைக் கருவிழியில் இருந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நோயாளிகள் பயனடைய முடியும்.

இந்தியாவில் ஆண்டுதோறும் உயிரிழக்கும் சுமார் ஒரு கோடி பேரில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானோர் மட்டுமே கண்களை தானமாக வழங்க முடிவு செய்தாலும், கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்கான தேவைக்கும் கிடைக்கும் கருவிழிகளுக்கும் இடையிலான இடைவெளி சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துவிடும். இதனால்தான், குறிப்பாக தேசிய கண் தான இரு வார விழா போன்ற முன்னெடுப்புகள் உள்ளிட்ட விழிப்புணர்வு பிரசாரங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன.

8. கருவிழி மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதம் என்ன?

கருவிழி மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி, எந்தக் காரணத்திற்காக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்தே பெருமளவில் அமைகிறது.

ஒப்பீட்டளவில் குறைந்த ஆபத்துள்ள நோய்களில் இதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளன. உதாரணமாக, கெரட்டோகோனஸ் நோயாளிகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மாற்றப்பட்ட கருவிழி தொடர்ந்து செயல்படும் விகிதம் சுமார் 93 சதவிகிதமாக உள்ளது. அதேவேளையில், கருவிழி டிஸ்ட்ரோபி உள்ள நோயாளிகளில் இது சுமார் 89 சதவிகிதமாக உள்ளது என்று மருத்துவர் ஹேமந்த் காம்ப்ளே கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து பேசிய அவர், "சிக்கல்கள் இல்லாத மற்றும் குறைந்த ஆபத்துள்ள நோயாளிகளில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்பட்ட கருவிழி தொடர்ந்து செயல்படும் விகிதம் 95 சதவிகிதத்தை எட்டும். இதற்கு முக்கியக் காரணம், உடலிலுள்ள கருவிழிக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான 'நோய் எதிர்ப்பு சலுகை' (நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து ஒப்பீட்டளவில் பாதுகாப்பு) இருப்பதாகும். எனவே, மற்ற பல உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுடன் ஒப்பிடும்போது, கருவிழி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அதை உடல் நிராகரிக்கும் அபாயம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது" என்றார்.

இதுகுறித்து மருத்துவர் ஹேமந்த் காம்ப்ளே மேலும் கூறுகையில், "உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓராண்டில் மாற்றப்பட்ட கருவிழி தொடர்ந்து செயல்படும் விகிதம் சுமார் 88.6 சதவிகிதமாக உள்ளது. இந்த விகிதம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 72.8 சதவிகிதமாகவும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 61.2 சதவிகிதமாகவும் குறைகிறது."

"இருப்பினும், தீவிரமான தொற்றில் இருந்து கண்ணைக் காப்பாற்றுவதற்காக அவசர சிகிச்சையாக மேற்கொள்ளப்படும் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி, வேறுபட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முழுமையான பார்வையை மீட்டெடுப்பது இலக்காக இருப்பதில்லை, கண்ணைக் காப்பாற்றுவதே நோக்கமாக இருக்கும். அந்த வகையில், இத்தகைய அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் வெற்றிகரமாக அமைகின்றன."

"சமீபத்தில் உருவாக்கப்பட்ட லேமெல்லர் மாற்று அறுவை சிகிச்சை நுட்பங்களில், கருவிழியில் பாதிக்கப்பட்ட அடுக்கு மட்டுமே மாற்றப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகளுக்கு பார்வை விரைவாக மீட்கப்படுகிறது. மேலும், நீண்டகால வெற்றி விகிதம் முழு தடிமன் கொண்ட கருவிழி மாற்று அறுவை சிகிச்சையின் வெற்றி விகிதத்திற்கு சமமாகவோ அல்லது அதற்கு நெருக்கமாகவோ இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது." என்றார்.

9. கண் தானத்திற்கு எவ்வாறு பதிவு செய்வது?

கண் தானத்திற்குப் பதிவு செய்வது மிகவும் எளிதானது. கண்களைத் தானமாக வழங்க முடிவு செய்த ஒருவர், முக்கிய மருத்துவமனைகள் அல்லது கண் வங்கிகளில் கிடைக்கும் உறுதி மொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்யலாம் அல்லது ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதுதவிர, அரசின் NOTTO (National Organ and Tissue Transplant Organization) இணையதளம் மூலமாகவும் அல்லது அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கண் வங்கியிலும் பதிவு செய்யலாம்.

இந்த நடைமுறைக்கு முன்கூட்டியே எந்த மருத்துவப் பரிசோதனையும் தேவையில்லை. எந்தக் கட்டத்திலும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், பலர் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிடுகின்றனர். கண்களைத் தானமாக வழங்க முடிவு செய்த பிறகு, அதுகுறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிப்பது மிகவும் முக்கியம்.

ஏனெனில், ஒருவர் இறந்த பிறகு கண் தான அட்டை வைத்திருப்பது அல்லது பதிவு செய்திருப்பது மட்டும் போதுமானதல்ல. உண்மையில், கண் தானத்திற்கு நெருங்கிய உறவினர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் தேவைப்படுகிறது.

எனவே, உயிருடன் இருக்கும்போதே கண் தானம் செய்யும் முடிவை குடும்பத்தினரிடம் தெரிவித்துவிட்டால், இறந்த பிறகு அதைச் செயல்படுத்துவது எளிதாகிறது.

அதனால்தான், கண் தானத்திற்குப் பதிவு செய்வதைப் போலவே, அது குறித்து குடும்பத்தினரிடம் தெளிவாகத் தெரிவிப்பதும் முக்கியம். இதன் மூலம், உங்கள் விருப்பத்தை நீங்கள் இறந்த பிறகும் நிறைவேற்ற முடியும். மேலும், பார்வை தேவைப்படும் ஒருவரின் பார்வையை மீட்டெடுக்க உதவ முடியும்.

மருத்துவர் ராஷ்மி பார்வே, "கண்களைத் தானமாக வழங்குவது எளிதான முடிவாக இருந்தாலும், அது மற்றொருவரின் வாழ்க்கையில் நீடித்த நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் இறந்த பிறகும் மற்றொருவருக்கு மீண்டும் உலகைப் பார்க்கும் வாய்ப்பை வழங்க முடியும். எனவே, கண் தானம் குறித்து அனைவரும் சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு, அதுகுறித்து குடும்பத்தினருடன் கலந்துரையாடி, கண் தான உறுதிமொழி எடுப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். மிக முக்கியமாக, கண்களைத் தானமாக வழங்க வேண்டுமென்ற உங்கள் விருப்பம் குறித்து குடும்பத்தினர் அறிந்திருப்பது அவசியம்" என்றார்.

10. கண் தான இயக்கம் எதிர்கொள்ளும் முக்கிய தடைகள் யாவை?

கண் தானத்தை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததுதான். இன்றும், கண் தானம் செய்வதால் இறந்தவரின் உடல் தோற்றம் மாறிவிடும் அல்லது குறிப்பிட்ட மதத்தில் கண் தானம் செய்ய அனுமதி இல்லை போன்ற தவறான புரிதல்கள் பலரிடம் உள்ளன.

உயிருடன் இருக்கும்போதே கண்களை தானமாக வழங்க முடிவு செய்த ஒருவரின் குடும்பத்தினரிடமும் இதுபோன்ற தவறான புரிதல்கள் இருப்பது வழக்கமாக உள்ளது. இதனால், கண் தானம் செய்யும் நடைமுறை நடைபெறாமல் போகிறது.

இது தொடர்பாகப் பேசிய மருத்துவர் காம்ப்ளே, "கண் வங்கி அமைப்பில் உள்கட்டமைப்பு தொடர்பாக சில குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உள்ளன. கிராமப்புறங்களை ஒப்பிடும்போது, நகர்ப்புறங்களில் கண் தான சேவைகள் அதிகமாகக் கிடைக்கின்றன. பல கிராமப்புறங்களில் கண் சேகரிப்பு வசதிகள், பயிற்சி பெற்ற பணியாளர்கள் மற்றும் தேவையான கருவிகள் குறைவாக உள்ளன."

மேலும், "சில நாடுகளில் மருத்துவமனையில் ஏற்படும் ஒவ்வொரு மரணமும் கண் வங்கிகளுக்குத் தெரிவிப்பது கட்டாயமாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த நடைமுறை எல்லா இடங்களிலும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, கண் தானம் செய்யக்கூடிய பல சந்தர்ப்பங்களில், கண் தானம் செய்வதற்கான வாய்ப்பு குறித்து குடும்பத்தினருக்குத் தெரிவிக்கப்படுவதில்லை" எனத் தெரிவித்தார்.

அதோடு, "பெரிய மருத்துவ நிறுவனங்களுக்கு வெளியே, பயிற்சி பெற்ற கண் சேகரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள், துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள், கருவிழிகளைப் பாதுகாப்பாகச் சேமிப்பதற்கான நவீன வசதிகள் ஆகியவையும் குறைவாக உள்ளன. மேலும், கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சேகரிக்கப்படும் அனைத்து திசுக்களையும் சரியான நேரத்திலும் திறம்படவும் பயன்படுத்துவது எப்போதும் சாத்தியமாவதில்லை." என்று கூறினார் மருத்துவர் காம்ப்ளே.

ஆகையால் அவரது கூற்றுப்படி, கண் தானத்தை அதிகரிப்பதுடன், அதற்குத் தேவையான சுகாதார அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதும் சம அளவில் அவசியம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு