You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேபாளம் - சீனா எல்லையில் பேரழிவை ஏற்படுத்திய திடீர் வெள்ளம் உருவானது எப்படி?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
- பதவி, இந்தியா செய்தியாளர்
- எழுதியவர், பனீந்திர தஹால்
- பதவி, பிபிசி நேபாளி
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
அந்தக் காணொளி சில விநாடிகள் மட்டுமே நீள்கிறது.
நேபாளம் - திபெத் எல்லையின் சீன பகுதியில் உள்ள கியிரோங் என்ற இடத்தில், கட்டடங்களுக்குப் பின்னால் இருந்து ஒரு கருமையான சுவர் தோன்றுகிறது. முதலில் அது ஒரு கருமேகத்தைப் போலத் தெரிகிறது.
பின்னர் அது வடிவமும் வேகமும் பெறுகிறது. தண்ணீர், சேறு, பெரிய பாறைகள், பனி மற்றும் கற்கள் பள்ளத்தாக்கு வழியாகக் கொந்தளித்துப் பாய்ந்து வருகின்றன. அந்த சிசிடிவி காட்சியின் நேரக் குறியீடு உள்ளூர் நேரப்படி 10:59:53 என்று காட்டுகிறது.
அதன் பின்னர் சில நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை இன்னும் துல்லியமாக மீட்டமைப்பது கடினமாக உள்ளது.
ஆனால் பேரழிவுக்கு முந்தைய மற்றும் பிந்தைய காணொளித் துணுக்குகள், செயற்கைக்கோள் படங்கள் ஆகியவை அழிவின் பரப்பளவை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளன.
எல்லைப் பகுதி வளாகத்தின் பெரும்பகுதி அடித்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது. பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் நெருக்கமாக இருந்த பல கட்டடங்கள் முற்றிலும் காணாமல் போயுள்ளன. ஆகஸ்ட் 26 அன்று தாக்கிய வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களில் கியிரோங் பகுதியும் ஒன்று.
எல்லையின் மறுபுறம், நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள ராசுவாகதியிலும் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டது. நேபாளத்தையும் சீனாவையும் இணைக்கும் "நட்புப் பாலம்" வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நேபாளத்தின் குடியேற்றம் மற்றும் சுங்க அலுவலகங்களும் அழிந்தன. எல்லைச் சாவடியைச் சுற்றி அமைந்திருந்த சிறிய வர்த்தகக் குடியிருப்பான டிமுரே கடுமையாகச் சேதமடைந்தது.
"இது காத்மாண்டுவுக்கும் திபெத்துக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணப் பாதை. ஆழமான பள்ளத்தாக்குகள், மிகுந்த வேகத்தில் பாயும் நதிகள், அதிகளவு வண்டல் மண்ணையும், பெரிய பாறைகளையும் கீழே கொண்டு வரும் இயல்புகள் காரணமாக இந்தப் பகுதி புவியியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது," என காத்மாண்டுவை சேர்ந்த நீரியல் நிபுணர் அஜய் தீக்ஷித் கூறுகிறார்.
இந்தப் பாதை இன்னும் நேபாளம் மற்றும் சீனாவுக்கு இடையிலான முக்கிய நுழைவாயிலாக உள்ளது. கைலாஷ் மலை நோக்கிச் செல்லும் யாத்திரிகர்கள், நேபாளம்-சீனா இடையே பயணிக்கும் வணிகர்கள், லாரி ஓட்டுநர்கள், சுங்க அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் எல்லைப் பகுதியில் வாழும் மக்களை இங்கு சந்திக்க முடியும்.
வெள்ளம் ஏற்பட்ட அன்று காலையில், 100க்கும் மேற்பட்ட இந்தியர்கள் எல்லைப் பகுதியில் அல்லது அதன் அருகில் இருந்திருக்கலாம். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி, குறைந்தது 275 இந்தியர்கள் இன்னும் நேபாளத்தில் காணாமல் போயுள்ளனர்.
பேரழிவுக்கு முந்தைய இறுதி மணிநேரங்களில் ராசுவாகதி வழியாக யார் யார் பயணித்தார்கள் என்பதை மீண்டும் தொகுத்தறிய நேபாள குடியேற்றத் துறை முயற்சி செய்து வருகிறது.
மின்னணு பதிவுகளின்படி, 89 நேபாள மற்றும் வெளிநாட்டு குடிமக்கள் நேபாளத்தில் இருந்து திபெத்துக்கு செல்ல குடியேற்ற அனுமதி பெற்றிருந்தனர். அதேநேரம் நான்கு பேர் நேபாளத்துக்குள் நுழைந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியேற்றப் பதிவுகளில் இறுதியாக 08:35:03 (நேபாள நேரம்) மணிக்கு ஒரு பரிவர்த்தனை பதிவு செய்யப்பட்டுள்ளது. திபெத் நேரப்படி அது 10:52 மணி. கியிரோங்கில் சிசிடிவியில் தெரிவதன்படி, வெள்ள ஓட்டம் தோன்றியதற்கு பத்து நிமிடங்களுக்கும் குறைவான இடைவெளிதான் இருந்தது.
ராசுவாகதி அலுவலகத்தின் தலைவர் உள்பட நான்கு குடியேற்ற அதிகாரிகள் வெள்ளத்தில் காணாமல் போனார்கள். அவர்களில் ஒருவரின் உடல் பின்னர் மிகவும் தூரத்தில் நதியின் பாதையில் கண்டுபிடிக்கப்பட்டது. இறுதி பதிவை மேற்கொண்ட பெண் அதிகாரி இன்னும் காணப்படவில்லை.
அன்றைய காலையில், நேபாளத்தில் இருந்து வெளியேறியவர்களில் 32 இந்தியர்கள், 12 சீனர்கள், 9 அமெரிக்கர்கள் மற்றும் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி ஆகிய நாடுகளின் குடிமக்களும் இருந்தனர். ராசுவாகதியில் மூத்த குடியேற்ற உதவியாளராகப் பணிபுரியும் டிகா ராம் போகரேல் மட்டுமே அந்த அலுவலகத்தில் இருந்து உயிர் பிழைத்ததாக அறியப்படுகிறது. அந்த நாளில் அவர் தேர்வொன்றில் பங்கேற்க காத்மாண்டுவுக்கு சென்றிருந்தார். ஆனால் அன்றைய காலை எல்லையில் நடந்தவற்றில் ஒரு பகுதியை மட்டுமே மின்னணுப் பதிவுகள் காட்டுவதாக அவர் கூறுகிறார்.
குடியேற்ற அலுவலகம் டிமுரேவில் இருந்து சுமார் 1.5 கி.மீ வடக்கிலுள்ள காத்தே கோலா பஜாரில் அமைந்திருந்தது. அங்கிருந்து திபெத் எல்லையைக் குறிக்கும் நட்புப் பாலம் மேலும் 2 கி.மீ தொலைவில் இருந்தது. அந்தப் பாதையில் கடைகள், விடுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் இருந்தன. பயணிகளும் வாகனங்களும் எல்லை தாண்டுவதற்கு முன் அங்கு காத்திருந்தனர்.
நேபாள குடியேற்ற அலுவலகம் காலை 08:00 மணிக்கு திறக்கப்பட்டதாக பொக்ரேல் கூறுகிறார். பயணிகள் குடியேற்ற சோதனையை முடித்தவுடன், அவர்கள் எல்லை நோக்கித் தொடரலாம் அல்லது எல்லையைக் கடப்பதற்கு முன் அப்பகுதியில் காத்திருக்கலாம்.
அன்று காலை 08:20 மணிக்கு பொக்ரேல் தனது சக ஊழியரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த எல்லைக் கடப்புப் பகுதி வழக்கத்திற்கு மாறாக மிகவும் கூட்டமாக இருப்பதாக அவரிடம் கூறப்பட்டது. நேபாளத்தில் இருந்து திபெத்துக்கு செல்வதற்காக சுமார் 300 முதல் 400 பேர் வரை காத்திருந்ததாகக் கூறும் அவர், அதே நேரத்தில் சீன பகுதியில் இருந்து வந்த வேறு சிலரும் அப்பகுதியில் இருந்ததாகத் தெரிவித்தார்.
"அன்று காலை குடிவரவு நடைமுறைகளை முடித்தவர்களால், சீன பகுதியில் தங்களது குடிவரவுச் செயல்பாட்டை முழுமையாக முடிக்க முடிந்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை," என்று பொக்ரேல் பிபிசியிடம் தெரிவித்தார்.
நேபாள குடியேற்ற அலுவலகத்தில் இருந்து நட்புப் பாலம் வரை நடந்து செல்ல 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும் என்று அவர் கூறுகிறார். முந்தைய நாள் பிற்பகலில் தாமதமாக வந்த சிலர், சில நேரங்களில் மறுநாள் காலை எல்லை திறக்கும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். குழுவாக அல்லது பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் குடியேற்ற நடைமுறையை முடித்த பிறகு வழக்கமாக ஒன்றாகச் செல்வதற்காகக் காத்திருப்பார்கள். எனவே அந்த 89 பேர் வெள்ளம் ஏற்பட்டபோது சரியாக எங்கு இருந்தனர் என்பதை அறிவதை மிகவும் கடினமாக்குகிறது.
காலை 8:37 மணிக்கு, அதாவது குடியேற்ற அமைப்பில் இறுதி பதிவு செய்யப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குள், எல்லைக்கு மேலே உள்ள மலைப் பகுதியில் நில அதிர்வு கருவிகள் ஓர் இயக்கத்தைக் கண்டறிந்ததாக நேபாள நீரியல் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையம் தொகுத்த காலவரிசை கூறுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, வெள்ளத்தைத் தூண்டிய ஒரு பனிப்பாறையின் சரிவே அந்த சிக்னலுக்கு காரணம்.
வெள்ளத்தை உருவாக்கிய சேறு மற்றும் கற்கள் கலந்த பெருக்கெடுப்பு அதன் தொடக்கப் பகுதியில் இருந்து எல்லைச் சாவடிக்கு சுமார் ஏழு நிமிடங்களில் வந்தடைந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதியில் இருந்தவர்கள் சிலர் நட்புப் பாலத்தை நோக்கி நடந்து கொண்டு இருந்திருக்கலாம், சிலர் காத்தே கோலாவில் காத்து இருந்திருக்கலாம், மற்றவர்கள் சீன குடியேற்ற மையத்திற்குள் செல்லத் தயாராகி இருந்திருக்கலாம். ஒவ்வொருவரும் எந்த இடத்தில் இருந்தனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மேலும், காத்தே கோலா என்பது ஒரு காத்திருப்பு இடம் மட்டுமல்ல. அங்கு 50 முதல் 60 வீடுகள், விடுதிகள், உள்ளூர் வணிக நிறுவனங்கள், நான்கு நீர்மின் திட்ட அலுவலகங்கள் இருந்ததாக போகரேல் கூறுகிறார்.
அது காத்மாண்டுவில் இருந்து வரும் பேருந்துகளின் இறுதி நிலையமாகவும் இருந்தது. ஓட்டுநர்கள், உதவியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுங்க அனுமதிக்காக காத்திருந்த சரக்கு தொழிலாளர்களும் அங்கு தங்கியிருந்தனர். திபெத் செல்லும் பயணிகள் பலர் முந்தைய நாளில் இருந்தே அங்கு வரிசையில் நின்றிருந்தனர்.
"எனது 40 முதல் 50 நெருங்கிய நண்பர்கள் காணாமல் போயுள்ளனர்," என்று போகரேல் கூறினார். அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை அதிகாரபூர்வ தகவல்களைவிட மிகவும் அதிகமாக இருக்கலாம் என்று அவர் நம்புகிறார். "2,000 முதல் 2,500 பேர் வரை வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம்" என்று அவர் மதிப்பிடுகிறார். ஆனால் இந்த எண்ணிக்கை அவரது தனிப்பட்ட கணிப்பு மட்டுமே; சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.
குடியேற்ற அலுவலகம் நதிமட்டத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் உயரத்தில் அமைந்திருந்ததாக போகரேல் கூறுகிறார். ஆனால் வெள்ளத்தின்போது நீர்மட்டம் அதைவிட உயரமாக எழுந்ததாகத் தெரிகிறது. அவரது காணாமல் போன சக ஊழியர்கள் சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேய்ச்சல் நிலங்களுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று அவர் முதலில் நம்பினார்.
எல்லையில் இருந்த சில இந்திய பயணிகளுக்கு அந்த நாள் சாதாரணமாகத்தான் தொடங்கியது. அவர்கள் சீன குடியேற்ற அலுவலகம் திறப்பதற்காகக் காத்திருந்தபோது தங்கள் குடும்பத்தினருக்கு காணொளி அழைப்புகளும் குறும்படங்களும் அனுப்பி மலைகளைக் காட்டினர்.
அறுபதுக்கும் மேற்பட்டோர் கொண்ட குழுவுடன் பயணித்த தனது மனைவி சுப்ரஸ்ரீ சக்ரவர்த்தியிடம் இருந்து சுதிப்தோ பட்டாச்சார்யா தகவல்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். நேபாள நேரப்படி காலை 07:57 மணிக்கு, தனது கடவுச்சீட்டில் பதிக்கப்பட்ட வெளியேறும் முத்திரையின் படத்தை அவர் அனுப்பினார். "நேபாள குடியேற்ற நடைமுறை முடிந்துவிட்டது" என்பதே அதன் பொருள்.
ஆறு நிமிடங்கள் கழித்து, காலை 08:03 மணிக்கு, "நாங்கள் சீனாவுக்குள் நுழைவதற்காகக் காத்திருக்கிறோம்" என்று மற்றொரு செய்தியை அனுப்பினார். அதன் பிறகு எந்தச் செய்தியும் வரவில்லை.
சீன குடியேற்ற மையத்தில் இருந்தவர்களில், கைலாஷ் மலையில் இருந்து திரும்பி வந்த ஈஷா அறக்கட்டளையுடன் தொடர்புடைய 77 யாத்திரிகர்களும் இருந்தனர். அவர்களுடன் மூன்று பணியாளர்களும் இருந்தனர். வெள்ளத்திற்குப் பிறகு அவர்கள் அனைவரும் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.
ஆகஸ்ட் 28 அன்று 21 உறுப்பினர்களைக் கொண்ட சீன மீட்புக் குழு கியிரோங்கை வந்தடைந்தபோது, அதிலிருந்த ஒரு மீட்புப் பணியாளர் ராய்ட்டர்ஸிடம், "கண்ணுக்கெட்டிய தூரம் வரை இடிபாடுகள் மட்டுமே இருந்தன" என்று கூறினார்.
இந்த எல்லைச் சாவடி சமீபத்தில்தான் மற்றொரு பெரிய வெள்ளத்தில் இருந்து மீண்டிருந்தது. 2025 ஜூலை மாத வெள்ளம் காரணமாக ராசுவாகதி சுமார் ஆறு மாதங்கள் மூடப்பட்டு இருந்தது. பின்னர் சீனா ஒரு தற்காலிக பாலம் அமைத்ததைத் தொடர்ந்தது அது ஜனவரி 1 அன்று மீண்டும் திறக்கப்பட்டது.
அதன் பிறகு போக்குவரத்து மீண்டும் அதிகரித்தது. சீன எல்லை அதிகாரிகளின் தகவல்படி, ஜூன் மாதத்திற்குள் 100,000க்கும் மேற்பட்டோர் கியிரோங் வழியாகச் சென்றிருந்தனர். நேபாள குடியேற்றப் பதிவுகளின்படி, ஜூலை நடுப்பகுதியுடன் முடிவடைந்த ஒரு ஆண்டில் ராசுவாகதி வழியாக 53,742 வருகைகளும் புறப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த இரண்டு புள்ளிவிவரங்களும் வெவ்வேறு அறிக்கை காலங்கள் மற்றும் கணக்கெடுப்பு முறைகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதால், இவற்றை நேரடியாக ஒப்பிடுவது கடினம்.
நேபாள குடியேற்றச் சாவடியில் பதிவானவர்களில் அதிகமானோர் இந்தியர்கள். அவர்களைத் தொடர்ந்து நேபாளர்களும் சீனர்களும் உள்ளனர். கியிரோங், நேபாளம் மற்றும் சீனாவை இணைக்கும் முக்கிய வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகவும் மாறியுள்ளது.
ராசுவாகதி என்பது தாதோபானியுடன் சேர்ந்து நேபாளத்தின் இரண்டு முக்கிய சீன வர்த்தக நுழைவாயில்களில் ஒன்று என்கிறார் காத்மாண்டுவை தலைமையிடமாகக் கொண்ட "வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த தெற்காசிய கண்காணிப்பு அமைப்பு (SAWTEE)" அமைப்பின் முன்னாள் தலைவரான போஷ் ராஜ் பாண்டே. வடக்கு அண்டை நாடான சீனாவுடன் நேபாளம் மேற்கொள்ளும் 2.95 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வர்த்தகத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்குக்கு இது காரணமாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் சுமார் 60 முதல் 70 லாரிகள் இந்தப் பள்ளத்தாக்கு வழியாகச் சென்றன. அவை மின்னணு சாதனங்கள், இயந்திரங்கள், வாகனங்கள், பழங்கள், உடைகள் மற்றும் பிற பொருட்களை காத்மாண்டு கொண்டு சென்றன. மேலும் சீனாவில் இருந்து நேபாளத்திற்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார வாகனங்களில் சுமார் 80% இந்தப் பாதை வழியாகவே வந்ததாக பாண்டே கூறுகிறார்.
இந்தப் பாதை மூடப்பட்டதால் நேபாளம் தாதோபானி மீது அதிகமாகச் சார்ந்துள்ளது. ஆனால் நேபாளப் பகுதியில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாகக் கூறி சீன அதிகாரிகள் தற்காலிகமாக அந்தப் பாதையையும் மூடியுள்ளதாக காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே பாதை, நேபாளமும் சீனாவும் இணைந்து உருவாக்கத் திட்டமிட்டுள்ள இமயமலை கடக்கும் ரயில் வலையமைப்பின் ஒரு பகுதியாக, காத்மாண்டுவை இணைக்கும் முன்மொழியப்பட்ட ரயில் பாதையின் வழித்தடத்திலும் அமைந்துள்ளது.
"நேபாளம் சீனாவுடன் வர்த்தகம் செய்ய மாற்றுப் பாதை ஒன்றை உருவாக்க வேண்டும். ஒரே நதித் தொடரின் ஓரமாக அதிக அளவில் நீர்மின் திட்டங்களை அமைப்பது உள்ளிட்ட அதன் விரிவான வளர்ச்சி உத்திகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்," என்று பாண்டே கூறுகிறார்.
"எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைத்துவிட்டோம். மாற்று எல்லை வர்த்தக முனையம் ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம்."
எல்லையின் மறுபுறத்தில் இருந்த போகரேல், தற்போது காணாமல் போயுள்ள தனது சக ஊழியர்களுடன் நடந்த உரையாடல்களை நினைத்து வருந்துகிறார். முந்தைய ஆண்டின் வெள்ளம், ராசுவாகதி குடியேற்ற அலுவலக ஊழியர்களுக்கு ஆபத்தின் தீவிரத்தை உணர்த்தியிருந்தது.
இரவு நேரங்களில் சில நேரம் "அதிர்வுகளை உணர்ந்தோம், அப்போது வெளியே சென்று நதியைப் பார்த்தோம்" என்று அவர் கூறுகிறார். மீண்டும் வெள்ளம் ஏற்பட்டால் மலைமேல் ஏறி தப்பிச் செல்வது குறித்து அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் "தனது நண்பர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு