You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இரு நாட்கள் உயிர் பயத்தில் இருந்தோம்' – நேபாளத்தில் இருந்து திரும்பியவர்களின் அனுபவம்
''எங்களுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஒரு பெண் பேருந்தில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளம் வந்துள்ளது. அவர்கள் இறங்கி மலை உச்சியில் ஏறித் தப்பிவிட்டனர். பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. அவரை நாங்கள் சந்தித்தபோதுதான் உயிர் பயம் என்றால் என்ன என்பதை உணர முடிந்தது. இங்கு இருந்திருந்தால் அதை ஒரு செய்தியாகக் கடந்திருப்போம். ஆனால் பாதிப்பை நேரில் பார்த்ததால் அதிலிருந்து மீள முடியவில்லை.''
நேபாளத்திற்கு ஆன்மிக யாத்திரை சென்று, வெள்ள பாதிப்பில் சிக்காமல் தப்பி கோவை வந்த ஒரு பெண், விமான நிலையத்தில் பிபிசி தமிழிடம் கூறிய வார்த்தைகள் இவை.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து ஒரு குழுவாக நேபாளத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்ட 39 பேர், வெள்ள பாதிப்பில் சிக்காமல் ஊர் திரும்பியுள்ளனர். தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல், முதலில் சென்ற குடியேற்ற அலுவலகம் ஆகிய இடங்கள் உருத்தெரியாமல் அழிந்துவிட்டதாக பிபிசியிடம் அவர்கள் கூறினர். இந்தக் குழுவினர் திட்டமிட்டபடியே தங்கள் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.
'கோவை மக்கள் பலர் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை'
தமிழகத்தில் இருந்து கைலாஷ் யாத்திரைக்காக நேபாளம் சென்ற பலர் பற்றி இதுவரை எந்தத் தகவலும் தெரியாத நிலையில், பேரிடர் நிகழ்ந்த நாளில் நேபாளத்தில் இருந்த பலரும் வெள்ளம் வந்தபோது கஷ்டப்பட்டு மலைகளில் ஏறியும், பலர் வேறு இடங்களில் இருந்ததாலும் உயிர் தப்பியுள்ளனர். அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் இருந்து நேபாள யாத்திரைக்குச் சென்ற பலர் பற்றியும் எந்தத் தகவலும் தெரியவில்லை. அவர்களுடைய பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அரசு மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற புற்றுநோய் நிபுணர் சுரேஷ் வெங்கடாசலம் மற்றும் அவரது மனைவி கைலாஷ் யாத்திரை சென்றிருந்தனர். அவர்கள் பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
பிபிசி தமிழிடம் பேசிய சுரேஷ் வெங்கடாசலத்தின் மகள் ஷிவாலி, ''இதுவரை அம்மா, அப்பா பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை, தொடர்புகொள்ளவும் இயலவில்லை. அரசிடம் இருந்து எந்தத் தகவல்களும் வரவில்லை. அவர்கள் கடைசியாக எங்கே இருந்தார்கள், என்ன ஆனது என்பது பற்றித் தெரியவில்லை. இப்போது வரை இருவரின் பெயரும் காணாமல் போனவர்கள் பட்டியலில்தான் உள்ளது'' என்றார்.
கோவை லிங்கனூரை சேர்ந்த சந்திரசேகரன் – புனிதா தம்பதியும் கைலாஷ் யாத்திரைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் பற்றியும் எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. அவர்கள் குடும்பத்தினர், அரசிடம் இருந்து ஏதாவது தகவல் வருமென்று காத்திருப்பதாகத் தெரிவித்தனர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர்களின் மகன் கார்த்திக், ''அப்பாவும், அம்மாவும் அவர்களுடைய நண்பர்கள் 3 பேரும் இணைந்து கைலாஷ் யாத்திரை சென்றிருந்தார்கள். ஆனால் இப்போது வரை அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. எனது தம்பி டெல்லி சென்று மத்திய அரசு அதிகாரிகளையும், தமிழக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோரையும் சந்தித்து உதவி கோரியுள்ளார். அவர்களும் பலவிதமான முயற்சிகளை எடுக்கிறார்கள். ஆனால் இன்று (செப்டெம்பர் 1) வரை ஒரு தகவல்கூடக் கிடைக்கவில்லை'' என்றார்.
இதேபோல, கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று நேபாளத்திற்கு கைலாஷ் யாத்திரைக்குச் சென்று, எந்தவொரு பாதிப்பிலும் சிக்காமல் ஊர் திரும்பியுள்ளனர். அவினாசியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் தலைமையில் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த 39 பேர், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று கைலாஷ் யாத்திரைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் அனைவரும் நேபாள வெள்ளத்தில் சிக்காமல் தப்பியுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக அவர்கள் சென்னை, கோவை விமான நிலையங்கள் வழியாக ஊர் திரும்பிவருகின்றனர். இன்று காலையில் இந்தக் குழுவைச் சேர்ந்த 28 பேர், கோவை வந்தடைந்தனர். இயற்கைப் பேரிடரில் சிக்காமல் உயிர் தப்பி வந்த அவர்களை வரவேற்க, அவர்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் கோவை விமான நிலையத்தில் பூங்கொத்துகளுடன் காத்திருந்து வரவேற்றனர்.
குழுவில் இடம் பெற்றிருந்த பலரும் தங்கள் நேபாள அனுபவங்களை அங்கிருந்த ஊடகங்களிடம் பகிர்ந்தனர். குழுவை வழி நடத்திச் சென்ற கிருஷ்ணகுமார், பிபிசி தமிழிடம் இதுபற்றி விரிவாக விளக்கினார். கடந்த ஆண்டில் 22 பேரை அழைத்துச் சென்றிருந்த அவர், இந்த ஆண்டில் 38 பேரை அழைத்துச் சென்றுள்ளார். அவர்களில் 34 பேர் இதுவரை தமிழகம் திரும்பி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய கிருஷ்ணகுமார், ''ஆகஸ்ட் 18 அன்று நாங்கள் இங்கிருந்து சென்றோம். எங்கள் பயணத்திற்கு 11 நாட்கள் அனுமதி கிடைத்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 21 அன்று, ராசுவா மாவட்டத்தில் சபர்பூஜி என்ற இடத்தில் நேபாள எல்லைப் பகுதியிலுள்ள குடியேற்ற அலுவலகத்தில் நாங்கள் இருந்தோம். அந்தக் கட்டடம்தான் ஆகஸ்ட் 26 அன்று உருத்தெரியாமல் அழிந்துவிட்டது'' என்றார்.
''சம்பவம் நடந்த நாளில் நாங்கள் அங்கிருந்து 600 கி.மீ. தொலைவிலுள்ள மானசரோவருக்கு சென்றுவிட்டோம். அன்று காலை 9:30 மணிக்கே எங்களுக்கு வெள்ளம் பற்றித் தகவல் வந்துவிட்டது. எங்களை வழிநடத்திச் சென்ற வழிகாட்டிகள், எங்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் அனுப்பிய வீடியோக்களை காண்பித்தனர். அப்போதுதான் அந்த வெள்ள பாதிப்பின் குரூரத்தை அறிய முடிந்தது'' என்றார் கிருஷ்ணகுமார்.
இரண்டு நாட்களாகத் தொடர்ந்த உயிர் பயம்
அதற்குப் பின்பு, இந்தக் குழுவினர் இருந்த இடத்தில் இருந்து யாரையும் தொடர்புகொள்ள முடியாத காரணத்தால், இவர்களைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது. பின்னர் தகவல் தொடர்பு கிடைத்த பிறகு, இவர்களுடன் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் தொடர்ந்து பேசி தேவையான உதவிகளைச் செய்ததாக இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பலரும் பிபிசியிடம் விளக்கினர்.
அங்கிருக்கும் வரை அச்சம் இருந்ததாகக் கூறிய கிருஷ்ணகுமார், ''வெள்ள பாதிப்புக்குப் பிறகு 2 நாட்களுக்குப் பெரிதும் உயிர் பயத்திலேயே இருந்தோம். அடுத்த வெள்ளம் வருவதாகத் தகவல் பரவியிருந்தது. ஆனால் சீனா, நேபாள அரசுகள் இனி எந்த ஆபத்தும் இல்லையெனக் கூறியதால் சற்று நம்பிக்கை வந்தது. மற்றபடி எங்களுக்கு உணவு, தங்குமிடம், பாதுகாப்பு எதற்கும் குறைவில்லை. எந்த பாதிப்பும் இல்லை'' என்றார்.
நேபாளத்தில் அடிப்படை வசதிகள் மோசமாக இருப்பதாகவும், சீனாவில் மிக அருமையாக இருப்பதாகவும் கூறிய அவர், உயிரிழப்பு குறித்து நேபாளத்தில் யாராலும் கணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார். அது குறித்து விரிவாகப் பேசிய கிருஷ்ணகுமார், "ராசுவாகதியிலுள்ள குடியேற்ற அலுவலகத்தில் மட்டுமே 500க்கும் மேற்பட்டோர் இருந்திருப்பார்கள். அவர்கள் யாருமே பிழைத்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல திரிசூலி ஆற்றை ஒட்டியுள்ள பல கிராமங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்தன'' என்றார்.
இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த ஓதிமலை முருகன் கோயில் அர்ச்சகர் சுவாமிநாதன், ''கைலாஷ் மலை உச்சியில் வடக்கு முகத்தில் தரிசனம் செய்து கொண்டிருந்தபோதுதான் இந்தத் தகவலை சீன அரசு அறிவித்தது. அதற்கு மேல் எங்கள் பயணத்தைத் தொடர அவர்கள் அனுமதிக்கவில்லை. கீழே இறங்கச் சொல்லி விட்டார்கள். திரும்பி வரும்போது வெள்ள பாதிப்பை கொஞ்சம் பார்க்க முடிந்தது. அதுவே பெரும் வேதனை தருவதாக இருந்தது. எங்களுக்குத் தெரிந்த இருவர், இந்த வெள்ளத்தில் இறந்துவிட்டனர்'' என்றார்.
திருப்பூரைச் சேர்ந்த அஜய், நேபாளத்தில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய தனது தாயார் மோகனாவை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தார். நேபாள வெள்ளம் பற்றி ஊடகங்களில் செய்தி வெளியானதும் குடும்பமே பெரும் பதற்றத்திற்கு உள்ளானதாகக் கூறிய அவர், தனது தாயாரிடம் இருந்து போன் வரும் வரை அனைவரும் பெரும் வேதனையில் இருந்ததாகத் தெரிவித்தார்.
பிபிசியிடம் பேசிய சேலத்தைச் சேர்ந்த மாரிமுத்து, ''கடந்த 20ஆம் தேதியன்று நாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் இருந்த இடமே தெரியாமல் அழிந்துவிட்டது. அந்த இடத்தைப் பார்த்தபோதுதான் வெள்ளத்தின் குரூர பாதிப்பை முழுமையாகப் புரிந்துகொண்டோம். நேபாளத்தைச் சேர்ந்த பலரும் தங்கள் குடும்பங்களில் பலரும் உயிரிழந்த நிலையிலும், எங்களைப் பத்திரமாக அழைத்துச் சென்றதை வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது'' என்றார்.
''திரும்பும்போது அனைத்து வாகனங்களும் ஒரே வழியில் திரும்ப வேண்டியிருந்ததால் 20 கி.மீ. தூரத்தை ஐந்தாறு மணிநேரம் கடப்பதுதான் பெரும் சிரமமாக இருந்தது. ஆனால் சீனா போலீசார் மிகவும் கவனமாகச் செயல்பட்டு எந்தவொரு பாதிப்பும் இல்லாத வகையில் வழி நடத்தினர். எங்களுக்கு மீண்டும் வெள்ளம் வருமென்ற அச்சம் இருந்தது. காத்மாண்டு விமான நிலையம் வரும் வரையிலும் பதற்றமும் பயமும் போகவில்லை. நாங்கள் டெல்லி வந்த பிறகே எங்கள் குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர்'' என்றார் மாரிமுத்து.
பிபிசியிடம் பேசிய திருப்பூரைச் சேர்ந்த அன்பரசி, ''இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது நாங்கள் திருக்கயிலாயத்தில் இருந்தோம். செல்லும்போது நல்ல பாதையில் சென்று விட்டோம். வரும்போது நைலம் வழியாகத் திரும்ப வேண்டியிருந்தது. அது மிகவும் கடுமையான பாதையாக இருந்தது. ஒரு பகுதியில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருந்தது'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு