’இந்தியாவிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற நினைப்பவர் இந்து அல்ல’ - அமெரிக்காவில் மோகன் பகவத் பேசியது என்ன?

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதன் அவசியத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்தியாவில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதன் அவசியத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தினார்.
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர் மோகன் பகவத், சனிக்கிழமை நியூயார்க்கில் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போது, இந்தியாவில் இருந்து முஸ்லிம்களை "வெளியேற்ற வேண்டும்" என்று நம்பும் ஒருவர் இந்துவாக இருக்க முடியாது என்று கூறினார்.

மனிதகுலத்தின் ஒற்றுமை குறித்த இந்துத்துவக் கருத்தில், இவ்வாறு யாரையும் விலக்கி வைப்பதற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

நியூயார்க்கில் அஹெட் ஃபோரம் ஏற்பாடு செய்திருந்த மதத் தலைவர்கள் மாநாட்டில் பேசிய மோகன் பகவத், சமூக மற்றும் மத அமைப்புகள் பொதுக் கொள்கைகளிலும் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகின்றன என்றார். ஆனால், அதற்கான மாற்றத்தை அவர்கள் சமூகத்தில் இருந்தே தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஏனெனில், "அரசியல் தற்போது சுயநலத்துக்கான ஒரு விளையாட்டாக மாறிவிட்டது" என்று அவர் தெரிவித்தார்

மோகன் பகவத்தின் இந்தக் கருத்துக்கு அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். மோகன் பாகவத் கூறியதை நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மோகன் பகவத்தின் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே சர்ச்சையை எதிர்கொண்டது. நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி, இந்த நிகழ்ச்சிக்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தம் (சிலரை) ஒதுக்கும் தன்மை கொண்டதாகவும், நியூயார்க் நகரின் பன்மைத்துவக் கொள்கைக்கு முரணானதாகவும் உள்ளது என அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. அமெரிக்காவின் மதச் சுதந்திரத்துக்கான ஆணையமும் இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை ஈடுபாடு மற்றும் உரையாடலுக்கான அமெரிக்க இந்துக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

'பன்மைத்துவக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். பரப்ப வேண்டும்'

சமூகங்களுக்கு இடையே பதற்றத்தை உருவாக்குவதில் கடந்த காலத்தின் 'மரபு' ஒரு பங்காற்றியுள்ளது என்று மோகன் பகவத் தனது உரையில் கூறினார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மோகன் பகவத்

தனது உரையின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறுகையில், "ஒருமுறை நடந்த உரையாடலின்போது, முஸ்லிம்கள் என்னிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'இந்து ராஷ்டிரம்' என்ற கருத்து குறித்து கேட்டனர். அதற்கு, முஸ்லிம்களை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று அர்த்தமா என்று அவர்கள் கேட்டனர். நான், 'இல்லை, அது இந்துத்துவம் அல்ல' என்று கூறினேன். இந்தியாவில் முஸ்லிம்களே இருக்கக் கூடாது என்று ஓர் இந்து நினைத்தால், அவர் இனி இந்துவாக இருக்க முடியாது." என்றார்.

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

அவர் கூறுகையில், "அமெரிக்காவைக் குறிப்பிடும்போது, அடிக்கடி பேசப்படும் ஒரு வார்த்தை 'பன்மைத்துவம்'. இந்தியாவைக் குறிப்பிடும்போது, 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற மற்றொரு வார்த்தை அடிக்கடி பேசப்படுகிறது. ஒற்றுமையும் பன்மைத்துவமும் இந்தியாவின் மரபணுவிலேயே உள்ளன" என்றார்.

"நீங்கள் உங்களை இந்து என்று அழைத்துக்கொள்ள விரும்பினால், அனைத்து வழிகளும் ஒரே இறைவனை நோக்கியே செல்கின்றன என்பதை நம்ப வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் மரியாதையும் கண்ணியமும் உண்டு. மனிதர்களுக்குள் வேறுபாடு இல்லை" என்றார்.

அனைத்து மதங்களும் இறுதியில் இறைவனைத் தேடுவதற்கான பாதைகளே என்று இந்து மரபு கருதுவதாக மோகன் பகவத் கூறினார். வேறு இடங்களில் பாதுகாப்பு கிடைக்காத பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு வரலாற்று ரீதியாக இந்தியா அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், கடந்த காலத்தின் "சம்பவங்கள்" சமூகங்களுக்கு இடையிலான பதற்றங்களை உருவாக்குவதில் பங்கு வகித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வேற்றுமைகள் இருந்தாலும், அனைவருக்கும் இடையே அடிப்படையான ஒற்றுமை உள்ளது என்ற கருத்தை சமூகத்துக்குக் கொண்டு செல்வது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

"எனது தனித்துவமான அடையாளத்தை நான் எவ்வாறு பாதுகாக்கிறேனோ, அதேபோல் மற்றவர்களின் அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டும். வேற்றுமை என்பது இயற்கையின் விதி. ஒற்றுமை என்பது இயற்கைக்குப் பின்னால் இருக்கும் உண்மை" என்றார்.

"அதனால்தான் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம்"

நிகழ்ச்சிக்கு முன்னதாக நியூயார்க்கில் மோகன் பகவத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நிகழ்ச்சிக்கு முன்னதாக நியூயார்க்கில் மோகன் பகவத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டபோது

மோகன் பகவத் கூறுகையில், "கொள்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். போரைத் தடுக்க விரும்புகிறோம். அதனால்தான் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். ஆனால் அங்கிருந்து தொடங்க முடியாது. அரசியல் தற்போது சுயநலத்தின் விளையாட்டாக மாறிவிட்டது. 'நானும் என்னுடையதும்' என்று இருக்கும் இடத்தில் தீர்வு இல்லை. 'நாமும் நம்முடையதும்' என்பதுதான் தீர்வு." என்றார்.

1996-ஆம் ஆண்டு ஹரியானா வான்பரப்பில் சௌதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானமும் கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் விமானமும் மோதிய சம்பவத்தை மோகன் பகவத் நினைவுகூர்ந்தார். சம்பவ இடத்துக்கு முதலில் சென்றவர்களில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் இருந்ததாகவும், காயமடைந்தவர்களுக்கு அவர்கள் உதவியதாகவும் கூறினார். உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குகளை ஏற்பாடு செய்யவும் அவர்கள் உதவியதாகத் தெரிவித்தார்.

"அவர்கள் முஸ்லிம் என்று நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் அரசியலில் இருந்திருந்தால், ஒருவேளை இதைச் செய்திருக்க முடியாது" என்றார்.

"தவறான கதைகளால் தவறான புரிதல்கள் உருவாகின்றன. ஆனால் நீங்கள் எங்களுடன் பழகி, எங்களை நெருக்கமாகப் பார்த்தால், இந்தக் கருத்துகள் அனைத்தும் ஒரே நாளில் மறைந்துவிடும்" என்று மோகன் பகவத் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் நைஜீரியாவின் முக்கிய கத்தோலிக்க மதத் தலைவரும், 1994 முதல் 2019ஆம் ஆண்டு வரை அபுஜா பேராயராக இருந்தவருமான கார்டினல் ஜான் ஒலோருன்ஃபெமி ஒனாயேகனும் கலந்துகொண்டார். ஆப்ரிக்காவில் மத மோதல்கள் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக, மதமாற்றம் மற்றும் செல்வாக்குக்காக இஸ்லாமுக்கும் கிறிஸ்தவத்துக்கும் இடையே வரலாற்று ரீதியாக நிலவிய போட்டி இருந்ததாக அவர் கூறினார்.

"கடந்த காலத்திலிருந்து ஏராளமான மரபுகளை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம். அதை நாம் பின்னுக்குத் தள்ள வேண்டும்" என்றார்.

ஆப்ரிக்காவில் இஸ்லாமும் கிறிஸ்தவமும் பரவத் தொடங்கிய காலத்தில், தனது குடும்பத்திலேயே சிலர் கிறிஸ்தவர்களாகவும் சிலர் முஸ்லிம்களாகவும் மாறியதாக அவர் கூறினார்.

"இஸ்லாமும் கிறிஸ்தவமும் மதமாற்றம் மற்றும் ஆதிக்கத்துக்கான ஒருவித போட்டியாக ஆப்ரிக்காவுக்கு வந்தன. அந்தப் போட்டி இன்னும் முடிவுக்கு வரவில்லை" என்றார்.

"இப்போது நாம் அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், அடுத்து வேறு யாரை மதமாற்றம் செய்வது? இதனால்தான் தற்போது நமக்குள் மோதல்கள் ஏற்படுகின்றன" என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சிக்கு ஏன் எதிர்ப்பு?

நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிகழ்ச்சிக்கு முன்னதாக, ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் பதாகைகளை ஏந்தி, அதில் எழுதப்பட்டிருந்த முழக்கங்களுடன் அவர்கள் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

அவர்களில் சில சீக்கிய பிரிவினைவாத ஆதரவாளர்களும் காணப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வார தொடக்கத்தில் நியூயார்க் நகர மேயர் ஸோஹ்ரான் மம்தானி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் "(சிலரை) ஒதுக்கும் தன்மை கொண்ட" அணுகுமுறை, தான் வளர்ந்த பன்மைத்துவ மற்றும் மதச்சார்பற்ற இந்தியாவுக்கு முரணானது என்று கூறியிருந்தார்.

ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டுமா என்று அவரிடம் கேட்கப்பட்டபோது, "மோகன் பகவத்தின் நிகழ்ச்சியை நான் ஆதரிக்கவில்லை. ஆனால் தனியார் நிகழ்ச்சியை ரத்து செய்யும் அதிகாரம் (நியூயார்க்) நகரத்துக்கு இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது" என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் மத சுதந்திரத்தை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுக்குத் தடை விதிப்பது மற்றும் மோகன் பகவத்தின் விசாவை ரத்து செய்வது குறித்து அமெரிக்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்று புதன்கிழமை அமெரிக்க சர்வதேச மத சுதந்திர ஆணையம் வலியுறுத்தியது.

இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. அந்த ஆணையம் ஒருதலைப்பட்சமான, நம்பகத்தன்மையற்றதுமான அமைப்பு என்று அமைச்சகம் விமர்சித்தது.

மனித உரிமைகளுக்கான இந்துக்கள், இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் மற்றும் நியூயார்க் மதங்களுக்கு இடையிலான மையம் உள்ளிட்ட பல்வேறு மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை மற்றும் மனித உரிமை அமைப்புகள் செவ்வாய்க்கிழமை நியூயார்க் நகர மன்றத்துக்கு வெளியே செய்தியாளர் சந்திப்பு நடத்தி, நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

நியூயார்க்கில் மோகன் பகவத்தின் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நியூயார்க்கில் மோகன் பகவத்தின் நிகழ்ச்சிக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்றபோது

அமெரிக்காவுக்கான மோகன் பகவத்தின் பயணம், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிம்பத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய மக்கள் தொடர்பு பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.

ஹட்சன் இன்ஸ்டிட்யூட்டின் மூத்த ஆய்வாளரும் அமெரிக்கா-இந்தியா உறவுகள் தொடர்பான நிபுணருமான பில் டிரெக்சல், மோகன் பகவத் சமீப காலமாக தனது சில கருத்துகளின் தொனியை மென்மையாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

"சர்வதேச அளவில் பார்க்கும்போது, ஆர்.எஸ்.எஸ். இந்தியாவுக்கு மிகவும் முக்கியமான அமைப்பாக இருப்பதுடன், அதன் வரலாறும் மிகவும் சிக்கலானது. எனவே, அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பரிச்சயமான அரசியல் அல்லது மத இயக்கங்களுடன் அதை ஒப்பிடுவது கடினம்" என்றும் டிரெக்சல் கூறினார்.

அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் கூறியது என்ன?

மாநிலங்களவை  எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், மோகன் பகவத்தின் உரை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

பட மூலாதாரம், Kapil Sibal

படக்குறிப்பு, மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல், மோகன் பகவத்தின் உரை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவில் மோகன் பகவத் தெரிவித்த கருத்துக்கு இந்திய அரசியல் மற்றும் மதத் தலைவர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர்.

மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் சமூக வலைதளமான எக்ஸ் பக்கத்தில், "நியூயார்க்கில் மோகன் பகவத், 'வேற்றுமைதான் நமது அடிப்படை ஒற்றுமையின் அழகு; அது பாதுகாக்கப்பட வேண்டும்' என்கிறார். வெளிநாட்டில் இது ஞானம்; ஆனால் உள்நாட்டில் மௌனம். வார்த்தைகள் மட்டும் முக்கியமல்ல; அவை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ரஷீத் அல்வி கூறுகையில், "முதலில், இதைச் சொல்வதற்காக ஏன் அமெரிக்கா செல்ல வேண்டியிருக்கிறது? இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இதுபோன்ற பிரச்னை இல்லை என்றால், திடீரென அமெரிக்கா சென்று இதைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது? ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தனது பிம்பத்தை மேம்படுத்துவதற்காக ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்" என்றார்.

"அசாம் முதலமைச்சர் முஸ்லிம்கள் குறித்து என்ன கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியாதா? உத்தரப் பிரதேச முதலமைச்சர் முஸ்லிம்கள் குறித்து என்ன கூறுகிறார் என்பதும் அவருக்குத் தெரியாதா?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு