'இந்த எருமை என்னுடையது' - இருவர் உரிமை கோரல்; டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிட்ட போலீஸ்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மிர்சா ஏ. பி. பேக்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
மனிதர்களின் குடும்ப தொடர்புகள், அடையாளத்தை உறுதிப்படுத்துவது மற்றும் சில சமயங்களில் குற்ற விசாரணைகளுக்காக டிஎன்ஏ பரிசோதனை செய்வது இயல்பானது. ஆனால், பிகார் மாநிலத்தில் எருமை ஒன்றின் உரிமை தொடர்பான பிரச்னையைத் தீர்ப்பதற்காக அந்த எருமைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தின் பின்னணி என்னவென்றால், பிகாரின் சியோத்ரா கிராமத்தைச் சேர்ந்த சூரஜ் யாதவும், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் மாஞ்சியும் ஒரே எருமைக்கு உரிமை கோரி வருகின்றனர்.
இந்த விவகாரம் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், பிரச்னைக்கு விரைவில் அறிவியல் ரீதியாகத் தீர்வு காண காவல் துறை ஐ.ஜி. விகாஸ் வைபவ் உத்தரவிட்டார்.
இதையடுத்து, திருடப்பட்டதாகக் கூறப்படும் எருமைக்கும், அதன் குட்டி எனக் கூறப்படும் மற்றொரு எருமைக்கும் டிஎன்ஏ பரிசோதனை நடத்தி, உரிமை தொடர்பான சர்ச்சைக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
சூரஜ் யாதவ் என்பவர், தனது எருமை சில நாட்களுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகக் கூறுகிறார்.
இதுகுறித்து அவர் காவல்துறையில் புகார் அளிக்கவில்லை. மாறாக, எருமையைத் தானாகவே தேடத் தொடங்கினார். காணாமல் போனதாகக் கூறப்படும் அந்த எருமை ஈன்ற கன்று தன்னிடமே இருப்பதாகவும் சூரஜ் யாதவ் கூறுகிறார்.
எருமை காணமல்போன சில நாட்களுக்குப் பிறகு, அருகிலுள்ள கிராமத்தில் பிரகாஷ் மாஞ்சி என்பவரின் வீட்டில் அந்த எருமை கட்டப்பட்டிருப்பதாக சூரஜ் யாதவுக்குத் தெரியவந்ததாக உள்ளூர் போலீசார் கூறுகின்றனர்.
உடனே சூரஜ் யாதவ் அங்கு சென்று, எருமையை தனது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.
ஆனால், அந்த எருமை சட்டப்பூர்வமாகத் தனக்குச் சொந்தமானது என்றும், தானே அதன் உண்மையான உரிமையாளர் என்றும் பிரகாஷ் மாஞ்சி கூறுகிறார்.
இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு வந்தது எப்படி?
உள்ளூர் மக்கள் கூறுவதன்படி, எருமையை அவிழ்த்து விட்ட பிறகு அது சூரஜ் யாதவின் வீட்டுக்குச் சென்றுள்ளது. ஆனால் இந்த முடிவில் பிரகாஷ் மாஞ்சி திருப்தி அடையவில்லை. இதையடுத்து, அவர் இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்தார்.
உள்ளூர் காவல் நிலைய அதிகாரி அஜய் குமார், அந்த எருமை இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தார்.
அதன் பின்னர், சூரஜ் யாதவின் ஆதரவாளர்கள் அங்கு கூடி எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த எருமை சூரஜ் யாதவுக்குச் சொந்தமானது என்று கூறினர். இதையடுத்து, போலீசார் எருமையை அவரிடம் ஒப்படைத்தனர்.
பிபிசியிடம் தொலைபேசியில் பேசிய மகத் ரேஞ்ச் காவல்துறை ஐஜி விகாஸ் வைபவ், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை இரண்டு எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அவற்றில் ஒன்று, எஸ்.சி./எஸ்.டி. (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றொன்று, எருமையின் உரிமை தொடர்பான சர்ச்சை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
எருமையின் உரிமையாளர் யார் என்ற இந்த விவகாரம் விரைவிலேயே உள்ளூர் அரசியலின் ஒரு பிரச்னையாக மாறியது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அஜய் யாதவ், உள்ளூர் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து, சூரஜ் யாதவிடம் நியாயமற்ற முறையில் நடந்துகொள்ளப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
எருமையின் உரிமை தொடர்பான சர்ச்சைக்காக ஏழை ஒருவரை இவ்வளவு செலவு பிடிக்கும் சட்டப் பிரச்னையில் சிக்கவைப்பது சரியல்ல என்று அவர் கூறினார்.
மறுபுறம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷியாம்சுந்தர் சரண், பிரகாஷ் மாஞ்சிக்கு ஆதரவாக காவல்துறையினரைச் சந்தித்து, பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார்.

பட மூலாதாரம், X
டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு
மகத் ரேஞ்ச் காவல்துறை ஐஜி விகாஸ் வைபவ் பிபிசியிடம் கூறுகையில், இரு தரப்பினரும் தங்களது உரிமைக் கோரலில் உறுதியாக இருப்பதால், அறிவியல் ஆதாரங்களின் உதவியை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.
உரிமை கோரும் இரு தரப்பினரிடமும் பேசிய போலீசார், எருமை தொடர்பாக அவர்கள் வைத்திருக்கும் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளனர். இந்தப் பதிவுகளில், எருமையின் இனம் மற்றும் அதன் பரம்பரை தொடர்பான தகவல்கள் இருக்கலாம்.
இந்தச் சர்ச்சையின் மையப்புள்ளியாக இருக்கும் எருமையின் டிஎன்ஏ, அது ஈன்றதாகக் கூறப்படும் கன்றின் டிஎன்ஏவுடன் ஒப்பிடப்படும்.
இந்தச் செய்தி வெளியானதும், அது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. பயனர்கள் பலரும் இதுகுறித்து சுவாரஸ்யமான கருத்துகளைப் பதிவிட்டனர்.
"டிஎன்ஏ மூலம் ஒரு எருமையின் உரிமையாளரை நிரூபிக்கும் பிகார் போலீஸ், உலகிலேயே இதைச் செய்யும் முதல் காவல்துறையாக இருக்கலாம்!" என்று ஒரு பயனர் பதிவிட்டார்.
மற்றொருவர், "தான் இவ்வளவு பெரிய 'பிரபலமாக' மாறிவிட்டோம் என்பதே இந்த எருமைக்கு தெரியாமல் இருக்கலாம்!" என்று பதிவிட்டுள்ளார்.
இவ்வாறு பலரும் பலவிதமாக பதிவிட்டாலும், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகு, உரிமை உறுதிசெய்யப்படும் நபரிடம் அந்த எருமை ஒப்படைக்கப்படும்.
இந்த எருமை தொடர்பான விவகாரம் வினோதமாகத் தோன்றினாலும், விலங்குகள் தொடர்பான இதுபோன்ற சச்சரவுகளை பிகார் போலீசார் இதற்கு முன்பும் கையாண்டுள்ளனர்.
பிகாரின் பூர்ணியா மாவட்டத்தில், ஒருவர் ஒரு காளை மாட்டை "கைது" செய்ய வேண்டும் என்று கோரி காவல்துறையை அணுகியிருந்தார்.
அந்த காளை மாடு தன்னைத் துரத்தியதாகவும், கொம்புகளால் தாக்கி தரையில் தள்ளிவிட்டதாகவும், இதனால் தனக்குக் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார். இறுதியில், போலீசார் இரு தரப்பினரையும் - காயமடைந்தவரையும் காளையின் உரிமையாளர் தரப்பினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பிரச்னையைத் தீர்த்தனர். அதன்பிறகே புகார் திரும்பப் பெறப்பட்டது.
அதேபோல், பூர்ணியாவிலேயே மூன்று ஆடுகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































